கல்வி மற்றும் மருத்துவம்:
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் இல்லாத காரணத்தால், கல்வியும் பெரிதளவில் பாதிக்கப்பட்டது. பேருந்துகளில் பயணித்து படிக்கச் சென்றுகொண்டிருந்த மாணவர்களால், பேருந்து நெருக்கடியால் படிப்பை நிறுத்த வேண்டிய நிலைவந்தது. அதனால், ஒவ்வொரு நகராட்சியின் எல்லைக்குள்ளும் பள்ளிகளையும் கல்லூரிகளையும் அமைத்தது கியூப அரசு. ஏராளமான புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்கியது. 80களில் 3 பல்கலைக்கழகங்கள்தான் இருந்தன. நெருக்கடிக்குப் பின்னர் அவற்றின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது. ஹவானாவில் மட்டுமே 7 பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நடந்தோ சைக்கிளிலோ சென்றடைகிற தூரத்திலேயே அனைத்து கல்வி நிறுவனங்களும் உருவாக்கப்பட்டன. ஒரு சில இடங்களில் பள்ளிக்களின் வளாகங்களிலேயே கல்லூரிகள் கட்டப்பட்டன. உதாரணத்திற்கு 'சேக்கர கூர்' என்கிற நகராட்சியில் இருந்த பள்ளிவளாகத்தில், இன்று மிகப்பெரிய மருத்துவப் பல்கலைக்கழகம் இயங்குகிறது. மருத்துவ மையங்களும் பள்ளிகளும் இல்லாத ஊர்களே இல்லை என்கிற நிலை உருவாகியிருக்கிறது.
பீக்
ஆயில் நெருக்கடியின் போதும், இலவச மருத்துவ வசதியையும் இலவசக் கல்வியையும் நாட்டுமக்களுக்கு தொடர்ந்து கொடுத்துவந்தது கியூப அரசு. இது உலகில் வேறெங்கும்
பார்க்கமுடியாத ஒன்று. மற்ற நாடுகளிலெல்லாம், பொருளாதார நெருக்கடி வந்துவிட்டால், அந்நாட்டு அரசுகள் முதலில் கைவைப்பது மக்களின் மருத்துவத்திலும் கல்வியிலுமாகத்தான் இருக்கிறது. இன்றைய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதார நெருக்கடியிலும் நாம் இதனை
கண்கூடாகப் பார்க்கமுடிகிறது. ஆனால் கியூபாவோ, கல்வியையும் மக்களுக்கான மருத்துவத்தையும் அரசு கைவிடக்கூடாது என்கிற கொள்கைமுடிவோடுதான் அனைத்து நெருக்கடிகளையும் சமாளித்தது.
உலகிலேயே கல்விக்காக மிக அதிக அளவிலான நிதியினை ஒதுக்குகிற நாடுகளின் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது கியூபா. எல்லாவிதமான படிப்புகளும் எல்லா மக்களுக்கும் இலவசமாக வழங்குதல், அனைத்து மாணவர்களுக்கும் உணவு மற்றும் சீருடை இலவசமாகக் கொடுத்தல், 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கிற விகித்தத்தை பின்பற்றுதல், மேல்நிலை வகுப்புகளில், ஆசிரியர்-மாணவர் விகிதம் 15 ஆக வைத்திருத்தல், நாட்டின் ஒட்டுமொத்த ஆசிரியர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் முதுகலை பட்டத்திற்கும் மேல் பெற்றவர்களாக இருத்தல், 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கியிருப்பது போன்றவை கியூபாவின் கல்வித்தரத்தையும், கல்வியறிவு பெற்றோரின் சதவீதத்தையும் மிக அதிக அளவில் (99.8%) உயர்த்தியிருக்கிறது.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போன்றோர்
தாங்கள் பணிபுரிகிற இடங்களுக்கு அருகிலேயே தங்கி சேவைசெய்கின்றனர். சராசரி கியூபர்,
அமெரிக்கரைவிட 8 இல் ஒரு பங்கு
அளவிற்குதான் எரிபொருளை பயன்படுத்துகிறார். ஆனால்,
வாழ்நாள் சராசரி மற்றும் குழந்தை இறப்புவிகிதம் போன்றவற்றில் அமெரிக்க குடிமக்களுக்கு இணையாக
இருக்கிறார்கள் கியூப குடிமக்கள். ஆக மொத்தத்தில், பொருளாதார நெருக்கடிக்குப்பின்னரும் கியூப மக்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் மேம்பட்டிருக்கிறது. அதிக அளவிலான சைக்கிள்
பயன்பாட்டினால், நீரிழிவு நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களின் எண்ணிக்கை தேசிய அளவில் வெகுவாக குறைந்திருக்கிறது. அதிக அளவில் விவசாயத்தில் ஈடுபடுவதால், கியூப மக்களின் உணவுமுறையும்
மாறியிருக்கிறது. ஏராளமான காய்கறிகளும் பழங்களுமே அவர்களது உணவுமுறையில் பங்குவகிக்கிறது. நெருக்கடி காலத்தின் துவக்கத்தில், வேறு வழியின்றி இவ்வுணவு முறைக்கு மாறியவர்கள், பின்னர் அதுவே உடலுக்கு ஆரோக்கியமானதாகவும்
மாறியபின்னர், விரும்பித்தொடர்கின்றனர்.
.
உலகின்
வளர்ச்சியடைந்த நாடுகளெல்லாம், ஆயுதங்களையும் அணுகுண்டுகளையும் உற்பத்தி செய்து மூன்றாமுலக ஏழை நாடுகளுக்கு விற்று காசு பார்க்கின்றன. ஆனால்,
கியூபாவோ ஆண்டுதோறும் மூன்றாமுலக
நாடுகளில் பல்லாயிரக்கணக்கானோரை மருத்துவர்களாக்கி அவர்களுக்கு உதவுகிறது. ஹோண்டுரஸ், வெனிசுவெல்லா, குவாட்டிமாலா, ஹெயிட்டி,
பொலிவியா மற்றும் பல ஆப்பிரிக்க
நாடுகளிலுள்ள மாணவர்களை மருத்துவர்களாக்கி அனுப்புகிறது கியூபா. இயற்கைச்சீற்றங்களாலும் போர்களாலும் பாதிக்கப்படுகிற
நாடுகளையெல்லாம் கியூபாவின் மருத்துவர்கள்தான் முதலில் சென்றடைகிறார்கள்.
அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளின் இராணுவ வீரர்கள் பல ஏழை நாடுகளில் துப்பாக்கியேந்தி அட்டூழியங்கள் செய்துகொண்டிருக்கும் அதே வேளையில், கியூபாவின் மருத்துவர்களோ மருந்துபெட்டியினை கையிலேந்தி நாடுநாடாகச் சென்று உதவிக்கொண்டிருப்பது, மிகப்பெரிய மனிதநேய முரண்தான்.
போக்குவரத்து:
கியூபாவின்
பீக் ஆயில் நெருக்கடி காலத்தில், மிகக்குறைந்த
எண்ணை இறக்குமதியே
சாத்தியமானதால், கார்கள் இயக்கம் நின்றுபோனது.
சாலைகள் வெறிச்சொடி கிடந்தன. ஒட்டுமொத்த மக்களின் போக்குவரத்து
தேவைகளை பூர்த்திசெய்யும்
வகையிலான ஒரு பொது போக்குவரத்து முறையினை உருவாக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது கியூபா. பழைய டிரக்குகள் எல்லாம்
மேற்கூரையிடப்பட்டு, பேருந்துகளாக
மாற்றப்பட்டன. பெரிய ஒட்டக வண்டிகளும் பயன்படுத்தப்பட்டன.
ஓரிடத்திற்கு
செல்லும் பலரும் ஒரே காரில் பயணிக்கிற வழக்கமும், சாலையில் நின்றுகொண்டிருக்கிற
யாரைப்பார்த்தாலும் உடனே வண்டியை நிறுத்தி அவர்களையும் வண்டியில் ஏற்றிக்கொண்டுசெல்வதுமாக ஒருவருக்கொருவர் உதவ ஆரம்பித்தனர் மக்கள். அரசு வாகனங்கள் அரசு வேலையாக செல்கிற வழியில்,
அந்த வழியாக பயணம் செய்ய
முற்படுகிற மக்களை ஏற்றிக்கொண்டுதான்
பயணிக்கவேண்டும் என்று கியூப அரசு
சட்டமே போட்டது. சிறு நகரங்களில் குதிரைகளையும் கழுதைகளையும் கூட குறுகிய தொலைவு பயணத்திற்கு பயன்படுத்தினர். நெருக்கடி காலத்திற்கு
முன்பு, கார்களையும் பேருந்துகளையும் பயன்படுத்திவந்த மக்கள்,
இப்போது சைக்கிள்களையே
நாடத்துவங்கினர். நெடுந்தூரப் பயணத்திற்கு
அரசு பேருந்துகளும் குறைதூர
பயணத்திற்கு சைக்கிள்களுமாக கியூப மக்களுடைய போக்குவரத்து
முறை, எரிபொருள் சேமிப்பு முறையாக மாறியது.
ஆற்றல்மிக்க
கார் மற்றும் பேருந்துகளை தயாரிப்பதில்தான் வளர்ச்சியடைந் த நாடுகளெல்லாம்
கவனம் செலுத்துகின்றன. ஆனால் ஒரு காரை உதாரணமாக எடுத்துக்கொண்டால், அதனை தயாரிப்பதற்கு பெருமளவிலான ஆற்றலும், எரிபொருளும் தேவைப்படுகிறது. அதன்பின்னர் அதன் ஆயுட்காலம்
முழுக்க இயக்குவதற்கு பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளும் பெருபளவில்
தேவைப்படுகிறது. ஆக, இப்பூமியில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு
காரும், எண்ணைவளத்தை பயன்படுத்தீர்க்கும் ஒரு
பொருள்தான். வளர்ந்தநாடுகள் என்று சொல்லப்படுகிற நாடுகள் இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை. எரிபொருள் தீர்ந்துபோகிற நாள்
வரும்வரை, இருப்பதை
பயன்படுத்தித்தீர்த்து எதிர்கால சந்ததியினருக்கு இல்லாமல்
செய்வது சரியாகாது. எரிபொருளை
சேமிப்பதற்கு சிறந்த வழி, குறைந்த எண்ணிக்கையிலான
பேருந்துகளை வைத்துக்கொண்டு பெரிய எண்ணிக்கையிலான மக்களுக்கு சேவை வழங்குவது
எப்படி என்பது குறித்துதான்
யோசிக்கவேண்டும். அதனை கியூபா
செய்துகாட்டியிருக்கிறது.
வீட்டுவசதி:
பீக்
ஆயில் நெருக்கடி துவங்கிய காலத்தில், கட்டுமானப் பொருட்களும் எந்திரங்களும் கிடைக்காததினால் புதிதாக வீடுகள் கட்டுவது சிரமமான ஒன்றாகவே இருந்தது. சிமென்ட் தயாரிப்பிற்கு ஏராளமான எரிபொருள்
தேவைப்படுமென்பதால், சிமென்ட் தயாரிப்பும் குறைந்துவிட்டது. ஆனால் ஏற்கனவே கியூபாவில் வாழ்வதற்கு எல்லோருக்கும் வீடிருக்கிறது. 85% மக்களுக்கு வசிப்பதற்கு சொந்தமாகவே வீடிருக்கிறது. பெரும்பாலான வீடுகள், எளிமையானதாகவும் குறைந்த
வசதிகளுடனும்தான் கட்டப்பட்டிருக்கின்றன. கிராமப் புற மற்றும் சிறு நகரங்களில்
உள்ள வீடுகளிலெல்லாம், தோட்டம் வைக்கிற அளவிற்கு நிறைய இடங்களும்
இருக்கின்றன. அங்கெல்லாம் பெரும்பாலும் அரிசியைத் தவிர
மற்றனைத்து காய்கறிகளையும் தங்களது வீட்டுத் தோட்டங்களில் விளைவதையே உண்கிறார்கள். ஹவான
நகரத்தில் இந்த அளவிற்கு வசதிகள் இல்லையென்றாலும், ஒரு குடும்பத்திற்குத்
தேவையான அளவிற்கு வசதிகள் வீடுகளாக இருக்கின்றன.
ஏராளமான மக்கள் வாழுமளவிற்கு
நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட நகரம் என்பதால், உலகின் பல பெரிய கட்டிட
வடிவமைப்பாளர்களும், ஹவானா நகரத்தை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். நகரத்தைப்
பொறுத்தவரையில், தனித்தனியாக
வசதிகளைப் பெருக்கிக்கொள்ள இடங்கள் இல்லாமையால், பொதுவான இடங்களை
விளையாடுவதற்கும், தோட்டங்களுக்கும்
எல்லா மக்களும் பகிர்ந்துகொண்டு
பயன்படுத்துகிறார்கள். குடியிருப்புகளுக்கு மிக அருகிலேயே பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வேலைவாய்ப்புகள்,
பணியிடங்கள் போன்றவற்றை அமைத்துக்கொடுத்து,
அதிக அளவிலான போக்குவரத்தை குறைத்திருக்கிறது கியூப அரசு.
(தொடரும்...)
அடுத்த பகுதியில்..... மின்சாரமும், மாற்று எரிபொருளும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலும்...
.
-இ.பா.சிந்தன்
0 comments:
Post a Comment