கொல்கத்தாவின் ஏழு அடுக்குமாடி அம்ரி தனியார் மருத்துவமனையில் விடியற்காலை ஏற்பட்ட தீவிபத்தில் 90 நோயாளிகள் மரணம். கார்ப்பரேட் மருத்துவமனைகளின் லாபவேட்டைக்கு பணம் மட்டுமல்ல, உயிரும் பலியாகியது. இந்த விபத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்து 8 பேரின் உயிரை காப்பாற்றிய கேரளத்தின் தியாகச் செல்விகள் வினிதா , ரம்யா ஆகிய இருவரும் கூலித்தொழிலாளர்களின் மகள்கள். மற்றொரு விஷயம் 8ம் வகுப்பு சிறுவன் சுஜித்காயல் காப்பாற்றிய 6 நோயாளிகள். மருத்துவமனைக்கு பின்புறமுள்ள குடிசைவாசி. உயிர்களை பறிக்கும் நவீன தாராளமயம். நேர் எதிராக தங்கள் உயிரை அர்ப்பணிக்க தயங்காத ஏழை, எளிய சாதாரண மக்கள். இதுதான் சுரண்டுபவர்களுக்கும் சுரண்டப்படுவோருக்கும் இடையிலான முரண்பாட்டின் குணாம்சம்.
நடுங்க வைக்கும் குளிரில் காகித தாள்களை போர்வையாக்கி நகரத்து வீதிகளில் ஏழைகள் படுத்துறங்கும் நிலைமையில் இவ்வுலகம் 21ம் நூற்றாண்டில் பயணித்துக் கொண்டிருக்கிறது. மறுபுறமோ, தினசரி பல ஆயிரங்கோடி ரூபாய் அளவில் பணப்புழக்கம். அமெரிக்காவின் நடவடிக்கைகளின் காரணமாக ஊகபேர வணிகம் இரண்டாயிரம் மடங்காக உயர்ந்துள்ளது. விழிபிதுங்கும் விலைவாசி. இனி என்னாகுமோ என்று நிம்மதியற்ற மக்கள். எல்லாம் நவீன தாராளமயத்திற்கே வெளிச்சம்.
20 ஆண்டுகளாக செயல்படும் நவீன தாராளமய, உலகமய நெறிகளும் கொள்கைகளும் புவியில் பேராதிக்கம் பெற்றுள்ளது. சந்தைப்பொருளாதாரம், தனியார் நிறுவனங்கள் , தனியார்மயம், அரசு கட்டுப்பாடற்ற வர்த்தகம் அதன் தாரகமந்திரம். ஒரு சிலர் பெரும்செல்வங்களைக் குவிக்கின்றனர். மக்களின் பிழைப்பு சாதனங்கள், உடைமைகள் பறிக்கப்பட்டு மூலதனமாகிறது. மூலதனக் குவியல் வரலாறு காணாத வகையில் நடைபெறுகிறது. அதன் வழியில் குறுக்கிடக்கூடிய அனைத்தையும் அடித்து நொறுக்கி தள்ளிட சகல விதத்திலும் தனது பேராற்றலை பிரயோகிக்கிறது.
மூன்றாம் உலக நாடுகளில் வறுமையும், வேலையின்மையும் தலைவிரித்தாடுகிறது. ஆனாலும் கட்டற்ற வர்த்தக மண்டலங்களை ஏற்கிறார்கள். உலகமயம் மூன்றாம் உலகநாடுகளின் சுயசார்பை இல்லாமல் செய்துவிடுகிறது. பன்னாட்டு நிறுவனங்கள், நிதியாதாரங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் மக்களின் ஆன்மாவைத் தவிர அனைத்தையும் விலைக்கு வாங்குகின்றன. இயற்கை வளங்கள், ஆலைகள், ஒட்டுமொத்த தகவல் தொடர்பு சாதனங்கள், சேவைப் பிரிவுகள் இன்னும் பலவற்றையும் விலை கொடுத்து வாங்கிக்கொள்கிறார்கள். இந்த வியாபாரத்தை உலகெங்கிலும் நடத்திவருகிறார்கள். சமமற்றவர்கள், சக்தியற்றவர்கள் பன்னாட்டு நிறுவனங்களுடன் போட் டியிடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதுதான் நடக்கிறது. இந்தப் பாதை வளர்ச்சிக்கு வழிவகுக்குமா?
நம்மிடையே இருந்த சிறப்பு வாய்ந்த அறிவியலாளர்கள் எங்கே ? ஏழை நாடுகளிலிருந்து வேலைக்கு எடுத்து அழைத்துச் செல்கிறார்கள். சந்தைகளில் அடிமைகளை விலைக்கு வாங்குவதைப்போல. செல்வந்த நாடுகளின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அதேநேரத்தில், குறைந்த ஊதியத்தில் பணியாற்றக்கூடிய தொழில் நுட்ப பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து உருவாக்குவதே பல்கலைக்கழகங்களின் தலையாயப் பணியாக இருக்கிறது. செல்வந்த நாடுகளிலும் வேலையின்மை என்பது தீவிரத்துவம் வாய்ந்த பிரச்சனையாக இருந்து வருகிறது. ஒரு பக்கம் முதலீடுகளை அதிகரித்து, தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகையில், மறுபுறம் அதிக அளவில் மக்கள் வேலையின்மைக்கு ஆளாகிறார்கள். இத்தகைய முரண்பாட்டை உள்ளடக்கியதாகவே இந்த அமைப்பு இருக்கிறது. மனித சமூகத்திற்கு இதனால் என்ன பயன் ?.
சந்தை என்பதே வழிபாட்டுக்குரிய தெய்வமாகிவிட்டது. எல்லா நேரங்களிலும் இவை பற்றிய புனிதவேதங்கள் ஓதப்பட்டு வருகின்றன. நுகர்வு சமூகத் தில் நிலவிவரும் ஆடம்பர மோகமும், சந்தை பொருளாதாரத்தின் ஆதாயங்கள் பற்றிய அபத்தமான கருத்தோட்டமும் மக்களை பாதிக்கிறது. ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒருமுறை வர்த்தக விளம்பரம் காட்டப்படுகிறது. கருத்துப் பிரச்சாரம் மூலம் மக்கள் மனதில் விஷவித்தை விதைக்கிறார்கள். வளராத சூழலில் இரட்டிப்பான வாகன உற்பத்தி என்பது ஏற்க முடியாத முன்மாதிரிகள். பலகோடி விளைநிலங்கள் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்படும். இதன் விளைவு, நெல் மணி விளைவிக்க ஒரு சாண் இடம்கூட மிஞ்சாது. சமூக மேம்பாட்டிற்கான நிதியாதாரங்களை இதுபோன்ற வழிகளில் விரயமாக்கி, மூன்றாம் உலக நாடுகளின் அழிவிற்கே வகை செய்கிறது. இது கருத்துக்களின் விளைவேயன்றி வேறல்ல.
இயற்கை வளங்களை அழித்துவருவதன் வாயிலாக சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள கேடுகள் மனித வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக வளர்ந்துள்ளது. காற்றும், நிலத்தடி நீரும், நதிகளும், கடலும் ஏன் பிரபஞ்சமே சுற்றுச்சூழலால் மாசடைகிறது. முன்கூட்டி அறியமுடியாத வகையில் பருவகால மாறுபாடுகள் நிகழ்கின் றன. இன்றைய தினம் மனித இனத்திற்கே கடுஞ்சோதனையான கட்டமாகும். மனித சமூகத்தின் மனசாட்சியை அசைய வைக்கிறது. முதலாளித்துவத்தால் ஏற்பட்ட கேடு இவை. இதை யாராலும் மறுக்க முடியுமா?
விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில கோடீஸ்வரர்களால் உலகெங்கிலும் பொருளாதாரப் பேரழிவினை ஏற்படுத்த முடிகிறது என்றால், என்னவிதமான பொருளாதார நிலை தற்போது நிலவி வருகிறது?. அதேநேரத்தில் சிக்கல் வலுக்கும்போது, மயக்கமளிக்கும் வகையில் பொய்யாலும், பேச்சுத்திறனாலும் மக்களை மோசடி செய்கிறார்கள். எல்லாம் சரியாகவே இருக்கிறது. பொருளாதாரம் சீரான நிலையில் தங்கு தடையின்றி செல்கிறது. இந்த வாசகத்தைதான் அவர் கள் அடிக்கடி சொல்கிறார்கள். உண்மையில் உலகெங்கிலும் மக்களின் தூக்கத்தை கெடுத்துவிட்டார்கள்.
தவறான கருத்தோட்டங்களை, துவேஷத்தை மாற்றிட பெரும் முயற்சிகளை மேற்கொண்ட போதும் இனபேத உணர்வு வெகு ஆழமாக கூடுதலாகவே மக்கள் மனதில் குடிகொண்டுள்ளது. இதுபோன்ற நஞ்சினை ஆள்வோர் ஊட்டியிருக்கின் றனர். பகுத்தறிவுக்கு சற்றும் பொருந்தாத கட்டுக்கதைகளை உருவாக்கியுள்ளனர். மிகவும் மோசமான இனப்பாகுபாட்டு கலாச்சாரம் மக்கள் மனதில் திணிக் கப்பட்டதன் விளைவே இது.
தற்போதைய காலச்சூழலில் நெறி முறை மற்றும் கலாச்சார உணர்வுகளை சித்தரிக்கக்கூடிய திரைப்படங்களை காண்பது அரிது. பாலுணர்வு, அடியாள் கும்பல், வன்முறைகள் ஆகியவற்றை பிரத்யேகமாக சித்தரிக்கக்கூடிய திரைப்படங் களிலிருந்து மீள்வது எப்படி? வர்த்தக உணர்வு, கலாச்சாரத்தில் தகாதமுறை யில் ஊடுருவியுள்ளது. தனித்துவம், ஒருமைப்பாடு ஆகிய அம்சங்களை கலாச்சாரம் கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது பழமைவாத மதப்பிரிவுகள் ஊடுருவுகின்றன. அவர்கள் நாட்டை பல துண்டுகளாக்க முயற்சிக்கிறார்கள். கலாச்சாரம் பற்றி பேசும் போது அரசியல் கலாச்சாரத்தை மறந்துவிடுவதற்கில்லை. மேம்பாடு, கலாச்சாரம் தேவைப்படும் நிலையில் இருக்கிறது என்றால் அது அரசியலே.
அநீதி, அசமத்துவம், நவீன தாராள வாதம், நுகர்வு கலாச்சார சமூகத்தின் ஊதாரித்தனம் என பல்வேறு சமூக மற்றும் மனிதகேடுகள் யாவுமே இன்றைய பொருளாதார அமைப்பு முறையினால், அவற்றை நம்மீது திணிக்கும் அமைப்புகளினால்தான் நேரிடுகிறது. 300 ஆண்டுகால முதலாளித்துவத்திற்குப் பின்னர் இவ்வுலகில் 80 கோடி பேர் பசியும் பட்டினியுமாக உள்ளனர்.
அனைத்துவிதமான பிரச்சாரமும், உலகமெங்கும் பரவி நிற்கும் ஊடகங்களும் புரட்சிகர நடைமுறைகளுக்கு எதிராக சித்தாந்த ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் யுத்தத்தை நடத்துகின்றன. இதனை எதிர்த்து முதலாளித்துவ அமைப்புமுறை தவிர்க்க முடியாத வகையில் வீழ்ச்சியடையும் என்று இடதுசாரிகள் நிரூபிக்க விரும்புகிறார்கள். மனிதஇனம் இப்பிரபஞ்சத்தில் அளப்பரிய சக்தி பெற்றதாகும். ஆனால் இன்றைய தினம் மனிதகுலம் ஒரு மாபெரும் சிக்கலுக்குள்ளாகியிருக்கிறது.
இத்தகைய மாபெரும் சிக்கலில் இருந்துதான் மகத்தான தீர்வுகள் பிறக்கக்கூடும். ஒரு கம்யூனிஸ்ட் மனித இனம் அனைத்திற்காக போராடுகிறான். இல்லாமைக்கும், வறுமைக்கும் எதிராக விநியோக நீதிக்கான தொடர்ச்சியான நீடித்த போராட்டங்களை நாம் நடத்தியாகவேண்டும். பிறரின் ரொட்டியை சார்ந்து வாழும் காலம் நமக்கு வரவேக் கூடாது. மிச்சமீதியை பொறுக்குவது சிலருக்கு பழக்கமான ஒன்றாக இருக்கலாம். ஆனால் புரட்சியாளர்கள் ஒருபோதும் இந்த ஈனத்தை ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
ஒரு நாட்டை, அதன் சுதந்திரத்தை, நேர்மையை தேசாபிமானிகளாலும் , புரட்சியாளர்களாலும், தைரியமான ஆண்களாலும், பெண்களாலும் மட்டும்தான் காக்க முடியும். கருத்துக்களுக்கான யுத்தத்தை நடத்தி வருகிறோம். உண்மையிலேயே நீதியும், நியாயமும் மிக்க உலகை அடை வது என்பதே நிகழக்கூடியதே. அப்போது மனிதகுல விடுதலை என்பது சுலப மடைகிறது.
(கட்டுரை, தோழர் பிடல் காஸ்ட்ரோ உரைகளைத் தழுவியது)
-கே.பாலச்சந்தர்
அனைத்தும் உண்மை! ஆனால்இந்த பிரச்சனைகளை உணர்ந்த நாம் இன்றும் இந்த ஏகாதி பதிய முதலாளித்துவ அமைப்போடு சமரசம் செய்து கொண்டு பாராளுமன்றிதின் வாலாகவோ அல்லது இடது தீவீரமாகவோ தான் இருகிறோம் > நம் கண்களால் உலகை காணும் அதே நேரம் சமூகத்தின் புறநிலையை சரியாக ஆய்வு செய்து அதன் வழிநிற்போம் பொத்தாம் பொதுவாக இடது சாரி என்று பேசுவது வேலைக்கு ஆகாது !
ReplyDelete