தானே புயல் புதுவை மற்றும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் குறிப்பாக, கடலூர், விழுப்புரம் மற்றும் காவிரி டெல்டாப் பகுதி மாவட்டங்கள் பெருமளவு சேதமடைந்துள்ளன. புயலுக்குப் பலியானோர் எண் ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தானே புயல் தாக்கி 4 நாட்களான பிறகும்கூட, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பவில்லை. இன்னமும் பல இடங்களில் மின்சாரம் சீரமைக்கப்படவில்லை. ஏராளமான இடங்களில் மின்கம்பங்கள் உடைந்து விழுந்துள்ளன. பல இடங்களில் மின்மாற்றிகளும் பழுதடைந்துள்ளன.
பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். அவர்களில் பலர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
அறுவடை செய்யும் நிலையிலிருந்த சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா நெற்பயிர்கள் புயல் மற்றும் மழையால் பாதிப்படைந்துள்ளன. இந்த ஆண்டு மேட்டூர் அணை குறிப்பிட்ட காலத்தில் திறக்கப்பட்டதால் விவசாயிகள் நம்பிக்கையுடன் விவசாய சாகுபடியில் ஈடுபட்டனர். பயிர்கள் பால்பிடிக்கும் நிலையில் வெள்ளத்தில் மூழ்கி சேதமாகியுள்ளன. முந்திரி மற்றும் உணவு தானியப் பயிர்களும் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளன. தென்னை, மா, பலா, வாழை, பூச்செடிகள், காய்கறி என விவசாயம் முற்றாகப் பாழாகியுள்ளது.
மீனவர்களின் படகுகள், வலைகள், என் ஜின்கள் பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. இதனால் புயல் பாதிப்பிலிருந்து மீண்டாலும் தங்கள் தொழிலைத் துவக்க முடியாமல் மீனவர்கள் தவிக்கின்றனர்
பூர்வாங்க மதிப்பீட்டின்படி தமிழ்நாட்டில் ரூ.1000 கோடி அளவிற்கும், புதுவையில் ரூ.2000 கோடி அளவிற்கும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
நிவாரணப் பணிகளைப் பொறுத்தவரை தமிழக அரசின் அறிக்கையில் இருக்கும் வேகம் நடைமுறையில் இல்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடலூர் மாவட்டம் குறிப்பாக கடலூர் நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தானே புயலால் வீடுகளை இழந்த மக்கள், நிலைகுலைந்து நிற்கின்றனர். மொத்தத்தில் தானே புயல் புதுவை மற்றும் கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர் மாவட்ட மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுள்ளது.
தமிழக மற்றும் புதுவை அரசுகள் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கான பணிகளில் முனைப்புக் காட்ட வேண்டும். குறிப்பாக மின்சாரம், தண்ணீர், பால் விநியோகத்தை முறைப்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும்.
புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், மீனவர்களுக்கு முழு இழப்பீடு வழங்கவேண்டும். வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள், தங்கள் வாழ்வை புனரமைத்துக்கொள்ள உரிய உதவிகளை தாராளமாகச் செய்யவேண்டும். மத்திய அரசு குழுக்கள் அனுப்பி சேதத்தை மதிப்பீடு செய்வதாக காலம் கடத்தாமல் தமிழக, புதுவை அரசுகளுக்கு உடனடியாக உதவி செய்யவேண்டும். சேத மதிப்பீடு முடிந்தபிறகு முழு உதவிகள் வழங்கப்பட வேண்டும்.
புயல் தனது வேகத்தை காட்டிவிட்டுப் போய் விட்டது. அரசுகள் தங்களது வேகத்தைக் காட்ட வேண்டிய நேரமிது.
0 comments:
Post a Comment