Saturday, December 10, 2011

புலம்பல், பெரும் புலம்பல்!

1913-ஆம் ஆண்டில் ரவீந்திரநாத் தாகூர் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றார். அவர்தான் நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர். அவர் வங்காளம் ஆங்கிலம் ஆகிய இரண்டுமொழிகளிலும் எழுதி வந்தார். நோபல் பரிசு பெற்ற கீதாஞ்சலி என்ற கவிதைத் தொகுப்பு அவரே ஆங்கிலத்தில் எழுதியது. வங்க மொழியில் அவர் எழுதிய கவிதைகள் கீதாஞ்சலியில் ஆங்கிலத்தில் இருக்கிறது. எனவே வங்கமொழி மொழிபெயர்ப்பு என்று சொன்னார்கள். கீதாஞ்சலி நோபல் பரிசு பெற்றதும், தமிழர்களுக்குப் பெறாமை பிடித்துக் கொண்டு விட்டது. தாகூரைவிட பாரதியார் பெரிய கவிஞர். சுதந்திரப் போராட்ட வீரர். ஆனால் ஆள் பிடிக்கத் தெரியாதவர்; அவசியம் இல்லாதவர். ஆனால் தாகூர் பெரிய பணக்காரர். ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர்.

ஆங்கிலேயர்களோடு நல்லுறவு கொண்டிருந்தார். பல ஆங்கில எழுத்தாளர்களின் அறிமுகம் இருந்தது. அதனால் ஆள் பிடித்து பரிசு வாங்கிவிட்டார். அவர் கவிதைகள் அப்படியொன்றும் உயர்வானவை இல்லை என்று தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழர்களுக்கு ரவீந்திரநாத் தாகூர் கவிதைகள் சிறந்த, அசலான கவிதைகளாகப் படாதது ஆச்சரியமே இல்லை. ஏனெனில் அவர் கவிதைகளை விட மேலான தரமான உயர்வான கவிதைகள் தமிழில் உள்ளன. ஆனால் நோபல் பரிசுக் குழுவினர் தமிழ்க் கவிதைகளை பாரதியார் எழுதிய கவிதைகளை ஒப்பிட்டு ஆராய்ந்து தாகூர் கவிதைகள்தான் சிறந்தவை என்று பரிசு கொடுக்கவில்லை. தங்கள் பார்வைக்கு வந்த கீதாஞ்சலி கவிதைத் தொகுப்பைப் படித்தார்கள். அவரின் வேறு இலக்கியப் பங்களிப்பையும் பார்த்தார்கள். ஆள், இலக்கிய ஆசாமி என்று தோன்றியது. நோபல் பரிசு கொடுத்து விட்டார்கள்.

ஒரு நூற்றாண்டிற்கு மேலாக ஸ்வீடன் நாட்டில் நோபல் பரிசு கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது அந்த நாட்டின் பரிசு இல்லை. ஆல்பர்ட் நோபல் என்ற வெடிமருந்து தயாரித்து விற்றுப் பெரும் பணம் ஈட்டியவரின் அறக்கட்டளை கொடுக்கும் பரிசு. பல்வேறு துறையினர்க்கும் தொடர்ந்து நோபல் பரிசு வழங்கி வருகிறார்கள். தரம் கவனிக்கப்படுவதால் பரிசு மதிப்படைகிறது. ஒவ்வொருவரும் அதனை அடைய விரும்புகிறார்கள். ரசாயன பூச்சிக் கொல்லி மருந்து கண்டு பிடித்த ஹெர்மன் பால் முல்லர் என்ற கெமிஸ்ட்டுக்கு, மருத்துவத்திற்கான துறையில் நோபல் பரிசு கொடுத்தார்கள். ஆனால் அவர் மருத்துவம் பார்க்காதவர். அறிவியல், மருத்துவத் துறைகளில் நோபல் பரிசு கொடுக்கப்படும் போது எழுதப்படும் விமர்சனங்கள் துறை சார்ந்து நின்று விடுகின்றன. அவை பொது மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது இல்லை. சமாதானத்திற்கு கொடுக்கப்படும் நோபல்பரிசு பற்றி அதிகம் விமர்சமனிக்கப்படுகிறது. ஆனால் இலக்கியத்திற்குக் கொடுக்கப்படும் நோபல் பரிசு எப்பொழுதும் பெரும் விமர்சனத்திற்குக் காலம் காலமாக ஆளாகி வருகிறது. ஏனெனில் அது மொழி சார்ந்தது. பலரும் படிக்கிறார்கள். படித்தவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

சோவியத் ரஷ்யாவில் மகோன்னதமான எழுத்தாளரான டால்ஸ்டாய், மக்கள் எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி இருந்தபோது ஐவான்புனின் என்ற எழுத்தாளர்க்கு நோபல் பரிசு கொடுத்தார்கள். ரஷ்யர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள இலக்கிய அபிமானிகள் நோபல் பரிசுக் கமிட்டியை விமர்சித்துக் கொண்டே வருகிறார்கள். அந்தக் கண்டனத்தில் இருந்து நோபல் பரிசுக் குழுவினர் தப்பிக்கவே முடியாது.

இலக்கியப் படைப்பிற்கும் பரிசுக்கும் சம்பந்தம் கிடையாது. பரிசு பெறுவதால் ஒரு படைப்பு பிரபல்யம் அடைவதில்லை; பரிசுபெறாமல் போவதால் ஒரு படைப்பு அதற்கான மதிப்பைப் பெறாமல் போவதில்லை. அது சரித்திரமாக இருந்து வருகிறது.

ரவீந்திர நாத் தாகூரும், சுப்பிரமணிய பாரதியாரும் ஒரே காலத்தில் வாழ்ந்தார்கள். ஆனால் இருவருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை இல்லை. தாகூர் ஜமீன்தார் ஒருவரின் பதினான்காவது மகன். அவரது பெரியண்ணன் இந்தியாவின் முதல் ஐ.சி.எஸ். அதிகாரி. இன்னொரு அண்ணன் பத்திரிகை ஆசிரியர். ககனேந்திர நாத் தாகூர், அபினேந்திர நாத் தாகூர் என்ற இரண்டு சித்தப்பாக்களும் ஓவியர்கள். கல்கத்தா ஓவிய சிற்பக் கல்லூரி ஆசிரியரான இ.பி. ஹேவல், கலை விமர்சகரான ஆனந்த குமாரசாமியுடனெல்லாம் பால்ய காலத்திலேயே பழக சந்தர்ப்பம் இருந்தது. அவற்றால் ஒரு கலைஞராகத் தன்னை ஸ்தாபித்துக்கொள்ள முடிந்தது. நோபல் பரிசு பெற இவையெல்லாம் உதவியது என்று சொல்வது, நிந்தனை செய்வது தான்.

ரவீந்திரநாத் தாகூர் இளம் பருவத்தில் இருந்தே இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை நாடகம், இசைப்பாடல்கள், ஓவியம் என பலதுறைகளிலும் தன் அக்கறையைச் செலுத்தி எழுதினார். அவர்தான் தன் காலத்தில் நிறைய எழுதிய எழுத்தாளர். நான் தாய்மொழியான வங்காள மொழியிலோ ஆங்கில மொழியிலோ புலவர் இல்லை என்று சொல்லிக் கொண்டார். மொழிப் புலமைக்கும் இலக்கியப் படைப்பிற்கும் சம்பந்தம் இல்லை என்பதுதான் அது. கலை மொழிவழியாகச் சொல்லப்படுகிறது; சாகித்தியம் சங்கீதத்தில் சேர்க்கப்படுகிறது. காட்சிகள் வண்ணத்தில் தீட்டப்படுகின்றன. எல்லாம் கலைஞன் என்னும் படைப்பாளியின் ஆளுமை பங்களிப்புதான்.

அரசியலில் தாகூர் நேரடியாக ஈடுபட்டுக் காரியங்கள் செய்யாவிட்டாலும், தேச விடுதலையின் பற்றாளராகவே இருந்தார். மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு ஆகியோரிடம் மதிப்புக் கொண்டார். தான் ஒரு படைப்பு எழுத்தாளராக இருந்தாலும் மற்ற எழுத்தாளர்கள் படைப்புக்களையும் படித்து வந்தார். ஜவகர்லால் நேருவின் சுயசரித்திரம் லண்டனில் வெளியிடப்பட்டதும் அதனைப் படித்துவிட்டு சிந்தனா பூர்வமாக கவர்ச்சிகரமான நடையில் எழுதப்பட்டு இருக்கிறது என்று எழுதினார். நாட்டு நிகழ்வுகளில் கவனமும் அக்கறையும் கொண்டு இருந்தார். ஜாலியன் வாலாபாக்கில் நடைபெற்ற படுகொலையை வெகுவாகக் கண்டித்தார். தன் எதிர்ப்பைக் காட்டும் விதமாக அரசாங்கம் கொடுத்திருந்த பட்டத்தைத் திருப்பி அனுப்பி விட்டார். இவையெல்லாம் இலக்கியம் - படைப்பு சம்பந்தப்பட்டவை இல்லை, என்பதுதான் சரி. ஆனால் அவர் தன் வாழ்நாள் முழுவதும் படைப்பு எழுத்தாளர். அற்புதமான சிறுகதைகள் எழுதி இருக்கிறார். அதன் வழியாக இந்திய மரபை நிலைநாட்டியிருக்கிறார்.

ரவீந்திரநாத் தாகூர், சுப்பிரமணிய பாரதியார்க்கு கிடைக்க வேண்டிய நோபல் பரிசைத் தட்டிக் கொண்டு போனவர் இல்லை. இருவரும் தனித்தனியான ஆள்கள். அசல் இலக்கியவாதிகள். ஒரே காலத்தில் என்ன நடக்குமோ அதே நடந்து இருக்கிறது. நோபல் பரிசுபெற்றதால்தான் ஒருவர் புகழ் அடைகிறார் என்பது இல்லை. பரிசுபெறாமல் சிறப்படைய முடியும் என்பதற்குச் சாட்சியாக பாரதியார் இருக்கிறார். கவிஞரான பாரதியார், தாகூர் சிறுகதைகளை மொழி பெயர்த்து இருக்கிறார்; கவிதைகளை மொழி பெயர்க்க வில்லை.

இந்தியாவில் பெரிய இலக்கியப் பரிசு ஞான பீடம். அது தனியார் அறக்கட்டளை கொடுப்பது. ஓரளவு இலக்கியத்தரமாகவும், ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் வருகிறது என்பதாலும் அதைப் பெற போட்டி இருக்கிறது. முப்பதாண்டுகளுக்கு மேலாக ஞானபீடம் தொடர்ந்து பரிசளித்து வருகிறது. இந்தி, மராத்தி, வங்காளி, கன்னடம், மலையாள மொழி எழுத்தாளர்கள் அதிகமான எண்ணிக்கையில் பரிசு பெற்று விடுவது கண்டு, தமிழ் எழுத்தாளர், தமிழ் இலக்கிய அனுதாபிகள், விமர்சனர்கள் புலம்புகிறார்கள். எத்தனை முறைகள் அவர்களின் மொழிக்கே பரிசு கொடுப்பது. தமிழ் எழுத்தாளர்கள், அவர்களின் படைப்புக்கள் கண்களில் படவில்லையா என்று கேட்கிறார்கள்.

இந்திய அரசின் இலக்கியப் பரிசான சாகித்ய அகாதெமி விருது தரமானவர்களுக்குப் போவதில்லை. தரமற்ற ஆசாமிகள் அகாதெமியை ஆக்கிரமித்துக் கொண்டு தங்களைப் போன்ற தகுதியற்ற ஆள்களுக்கே பரிசு கொடுத்துக் கொள்கிறார்கள் என்று ஒரு புலம்பல் தொடக்கத்தில் இருந்தே கேட்டுக் கொண்டிருக்கிறது. அவர்கள் சாகித்ய அகாதெமியின் முதல் பரிசு பெற்ற ரா.பி.சேதுபிள்ளையின் தமிழின்பத்தை எடுத்து முன்னே வைக்கிறார்கள். முதல் கோணல் தொடர்கிறது என்பது வாதம்.

இலக்கியப் படைப்பிற்கும் பரிசுக்கும் சம்பந்தம் கிடையாது. பரிசு பெறுவதால் ஒரு படைப்பு பிரபல்யம் அடைவதில்லை; பரிசுபெறாமல் போவதால் ஒரு படைப்பு அதற்கான மதிப்பைப் பெறாமல் போவதில்லை. அது சரித்திரமாக இருந்து வருகிறது.

சாகித்ய கர்த்தாக்கள், அசல் எழுத்தாளர்கள் பெற வேண்டிய சாகித்ய அகாதெமி விருதை சம்பந்தம் இல்லாதவர்கள் அடித்துக் கொண்டு போய்விடுகிறார்கள் என்று தொ.மு.சி.ரகுநாதன் குரல் இரண்டு தலை முறைக்குப் பிறகும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நோபல் பரிசு, ஞானபீடம், சாகித்ய அகாதெமி - இலக்கியப் பரிசு கொடுக்கும் நிறுவனங்கள் எல்லாம் தொலைவில் இருக்கின்றன. அவற்றில் யார் யாரோ பொறுப்பில் இருக்கிறார்கள். அவர்களை எதிர்த்து, ஆவேசமாகப் பேசவும், எழுதவும் புலம்பவும் முடிகிறது.

அது நல்லதுதான். அழுதால்தான் பால் கிடைக்கும்.

தமிழ்நாடு அரசு திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர், பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க. என்று பல பெரியவர்கள் பெயரில் சமூக சேவைக்கும், இலக்கியப் பங்களிப்பிற்கும் பரிசு கொடுக்கிறதே அவையெல்லாம் தகுதி, தரம் கொண்டதா? அவர்களை ஞானபீடம், நோபல் பரிசு பெற முன்னே நிறுத்த முடியுமா?

அவ்வளவு ஏன்? தமிழ்ச் செம்மொழி உயராய்வு மத்திய நிறுவனம் செம்மொழி பரிசு கொடுத்து இருக்கிறதே அதற்கு என்ன சொல்வது? எங்கே போய்ப் புலம்புவது?

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உயிரோடு இருக்கும் படைப்பு எழுத்தாளர்க்கு மாமன்னன் ராஜராஜன் விருது என்று ஒன்றைத் தொடங்கியதே, அது என்ன ஆயிற்று? ஏன் அது முடங்கிப் போனது?

ஓர் எழுத்து எவ்வாறு சமூக அங்கீகாரம் பெறுகிறது? அது சமூகத்தின் சகல பரிமாணத்தோடும் இணைந்து பொதுத்தன்மை பெற்று இருக்கும் போது என்று சொல்லிவிடலாம். ஆனால் அது ஒற்றை இழை இல்லை. ஒன்றுக்குள் ஒன்றாக பல்வேறு இழைகள் தெரிந்தும் தெரியாமலும் இருப்பதுதான்.

மாநில அரசு, பல்கலைக் கழகங்கள், அறக்கட்டளைப் பரிசுகள், விருதுகள் பற்றி புலம்ப முடியாதவர்கள் சர்வதேச, இந்தியப் பரிசு நிறுவனங்கள் பற்றி புலம்புகிறார்கள்.

புலம்பியது போதும். உங்கள் படைப்புக்களை அறிந்து பாராட்டவும், பரிசளிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்.

அசலான, தரமான எழுத்துக்கள் பத்திரிகையின் விற்பனைக்கு உதவாது என்று ஒதுக்கி விட்டார்கள்.

தொலைக்காட்சி தொடர்கள் வந்ததும், தொடர் கதை படிக்க ஆளில்லை என்று தள்ளி விட்டார்கள். ஆனால் அசல் எழுத்தாளர்கள் எழுதியபடியே இருக்கிறார்கள்.

ஐநூறு ஆண்டுகள் சரித்திரம் கொண்ட மலையாள மொழி எழுத்தாளரான கே. சச்சிதானந்தன் கவிதைகள் நோபல் பரிசு இறுதிப் பட்டியலுக்குப் போகிறது. இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான தமிழ்மொழி எழுத்து தமிழ் நாட்டிற்குள்ளேயே அங்கீகாரம் பெற முடியவில்லை என்பது எழுத்தாளர்கள் சம்பந்தப்பட்டது இல்லை. தமிழ்ச் சமூகம் சார்ந்தது.

தமிழின் நெடிய மரபின் தொடர்ச்சியாக எல்லாக் காலம் போல இக்காலத்திலும் எழுதி வருகிறார்கள். உரைநடையில் புதுமைப்பித்தன், கு.ப. ராஜ கோபாலன், மௌனி, க.நா. சுப்ரமண்யம், கு.அழகிரி சாமி. தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி என்றால், ஜீவிதமாக உள்ளவர்களில் ஜெயகாந்தன், அசோகமித்ரன் நீலபத்மநாபன், ஆ. மாதவன், பிரபஞ்சன், வாஸந்தி, மா.அரங்கநாதன், தோப்பில் மீரான், சோ. தர்மன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், அம்பை, ஜோ.டி.குருஸ் என்று ஒரு பட்டியல் கொடுக்கலாம்.

எழுதுவதுதான் கலைஞர்களான எழுத்தாளர்களின் பணி. அதனை அவர்கள் பூரணமாகச் செய்து வருகிறார்கள். அவர்களின் படைப்புகளின் ஆழத்தையும், பரப்பையும் அறிந்து கொள்வதும், அறிந்து கொண்டதை அறிந்து கொண்ட விதமாகச் சொல்லி நிலைநாட்டுவதும் சமூகத்தின் வேலை. அதனை பலநாடுகளிலும் அரசும், பல்கலைக் கழகங்களும், அறக்கட்டளைகளும் திறமையுடன் செய்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் அரசும், அதன் அபிலாசைகளும் சார்ந்து இருக்கிறது.

பொது அமைப்புகளில் இடம் பெறும் ஆள்கள் தன் சகபேராசிரியர்களுக்கும், தன்னிடம் படித்த மாணவ மாணவிகளுக்கும் விருது வழங்கிப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள் என்றும், வேறுசிலர் தன் சிநேகிதிகளுக்கும் நண்பர்களுக்கும் பரிசு கொடுத்துப் பரவசம் அடைகிறார்கள் என்றும், மற்றும் சிலர் தன் சாதி, சமயம் சார்ந்தவர்களாகக் கண்டு பிடித்து விருது கொடுத்து குதூகலிக்கிறார்கள் என்றும் புலம்புகிறார்கள். அதற்காக ஆதாரங்களையும் எடுத்துக்காட்டுகிறார்கள். இது இருபத்தொறாவது நூற்றாண்டு சமூக அவலம்.

புலம்பித் தீர்க்க முடியாது.

- சா.கந்தசாமி

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)