2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்நாட்டு வரலாற்றை சித்தரிக்கும் “பாலை” திரைப்படம் நவம்பர் 25 அன்று தமிழகம் முழுவதும் வெளியாகிறது. இதுவரை மன்னர்களின் வரலாறே தமிழ்நாட்டின் வரலாறு என்றிருந்த தமிழ்த் திரையுலகின் மரபுகளை உடைத்தெறிந்து, முதன் முறையாக 2000ஆண்டுகளுக்கு முந்தைய எளிய தமிழ் மக்களின் வாழ்வியலைப் பற்றி சித்தரிப்பதாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.
இத்திரைப்படத்தை தமிழ் உணர்வாளரும், ஆய்வாளருமான ம.செந்தமிழன் இயக்கியுள்ளார். அதோடு படத்தின் பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை சுமார் 6 ஆண்டுகள் ஆய்வு செய்து இத்திரைப்படத்தின் கருவை உருவாக்கி யுள்ளதாக அவர் கூறுகிறார். ஏ.ஆர்.ரகுமானிடம் இசைப் பயின்ற வேத் ஷங்கர், இசையமைத்துள்ள படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
தேசிய விருது பெற்ற “போஸ்ட் மேன்” குறும்படத்தின் ஒளிப்பதிவாளரான அபிநந்தன் இராமானுஜம் இப்படத்தின் ஒளிப்பதிவாளர். இவர் எல்.ஜி.பிரசாத் திரைப்பள்ளியின் மாணவர். படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் சென்னை திரைப்படப் பள்ளியின் முன்னாள் மாணவராவார். இவர் தொகுத்த பல படங்கள் கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளன.
தஞ்சை, புதுக்கோட்டை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பழங்குடித் தமிழர்களான இருளர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள் பலர் இத்திரைப்படத்தில் முதல் முறையாக திரையில் அவர்களாகவே தோன்றுகின்றனர். படத்தின் கதாநாயகன் சுனில் மற்றும் கதாநாயகி ஷம்மு ஆகியோர் தம் பாத்திரத்தை சிறப்புறச்செய்திருக்கின்றனர். இவ்விருவரைத் தவிர்த்து, படத்தில் நடிக்கும் அனைவரும் திரையுலகம் சாராத நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாகை தி.இரவி படத்தை தயாரித்துள்ளார்.
கடந்த மாதம் முக்கியப் பிரமுகர்களுக்காக திரையிடப்பட்ட படத்தின் விசேட காட்சியைக் கண்ட தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களான தங்கர் பச்சான், வெற்றிமாறன் ஆகியோர் படத்தை வெகுவாகப் பாராட்டினர். தமிழ் உணர்வாளர்களும், எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு திரைப்படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டினர்.
இயக்குநர் பாலு மகேந்திரா படக்குழுவினரை நேரில் தம் இல்லத்திற்கு அழைத்து அவர்களது முயற்சியை பாராட்டினார். தமது 45 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் இப்படியொரு திரைப்படத்தை இயக்கவில்லையே என்றும், இப்படம் உலக வரலாற்றுத் திரைப்படங்களின் வரிசையில் முக்கியப் படமாக அமையும் என்றும் அவர் படக்குழுவினரிடம் தெரிவித்தார்.
a .v. Samikkannu has left a new comment on the post "நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம் - ”பாலை” பட இயக்குநர்...":
ReplyDelete"முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை மலையாளிகளுக்குப் பிடுங்கித் தரும் படமாக இருந்தாலும் பரவாயில்லை...." ஏனிந்த வெறி தெறிக்கும் வார்த்தைகள் ? இத்தகைய பிரதேச வெறியைக்-- மலையாளியும் 'திராவிடன்' என்பதால் 'இன வெறி'எனக் குறிப்பிடவில்லை--கிளறிவிட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிற குடும்பத்தின் உடும்புப் பிடியில் சிக்கிக் கொண்டுள்ள தமிழ்த் திரையுலகில் அதே பாணியைக் கடைபிடிக்கிற உங்களைப் போன்றோர் நுழைந்து என்ன நல்லது நடக்கப் போகிறது ?
பி.கு.: இது 'பாலை'படத்தின் உட்கருத்து குறித்து அதன் இயக்குநரே தன் வலைத் தளத்தில் பதிந்துள்ளதற்கான எனது எதிர்வினை; படம் வெளி வரா நிலையில் அதன் மற்ற அம்சங்கள் பற்றியதன்று.