ஜெயலலிதா பதவியேற்ற இந்த ஆறுமாத காலத்திற்குள் அவரது அரசு செய்திருக்கும் அட்டூழியங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. தலைமைச் செயலக மாற்றம், சமச்சீர் கல்வியை ஓரங்கட்டியது, பரமக்குடியில் ஏழு தலித்களை சுட்டுக்கொன்றது, அண்ணா நூலக இடமாற்றம், 13500 மக்கள் நலப் பணியாளர்கள் டிஸ்மிஸ் என இதுவரை அரங்கேறியிருக்கிறது.
ஈவிரக்கமில்லாமல் 13,500 மக்கள் நலப் பணியாளர் வீடுகளின் விளக்குகளை ஊதி அணைத்திருக்கிறார் ஜெயலலிதா. அவர் பதவிக்கு வரும்போது ஒவ்வொரு முறையும், இப்படியாக ஆயிரக் கணக்கில் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்யும் குரூர மனோபவம் கொண்டவராக இருக்கிறார். அந்த சாதாரண, உழைத்து வாழும் எளியவர்கள் அதிர்ச்சியடைந்து, கதறுவதைப் பார்ப்பதில் என்ன திருப்தியோ, தெரியவில்லை.
தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் இந்த அடாவடித்தனத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. சி.பி.எம். சி.பி.ஐ, தி.மு.க, பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க என பல கட்சிகளும் ஜெயலலிதாவின் அராஜகத்தைச் சாடியிருக்கின்றனர். சி.ஐடியூ, விவசாயிகள் சங்கம், அரசு ஊழியர் சங்கங்களும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கின்றன.
பத்திரிகையில் செய்தி பார்த்து நேற்று மக்கள் நலப் பணியாளர்கள் கொதித்து வீதிக்கு வந்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். ஈரோட்டில் காளியம்மாள், “வேலை போய்விட்டதே. குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுவேன்” எனத் தரையில் உருண்டு கதறியிருக்கிறார். திண்டுக்கல்லில் நாகலட்சுமி, “ஒவ்வொருமுறையும் எங்களை டிஸ்மிஸ் செய்து அவமானப்படுத்துகிறது அரசு. நாங்கள் மக்களுக்குத்தானே பணியாற்றினோம். எங்களைத் தூக்கில் போடுங்கள் அல்லது வீட்டுக்குள் புகுந்து குடும்பத்தோடு வெட்டிக் கொல்லுங்கள்.” எனக் கண்ணீர் வடித்திருக்கிறார்.
அமலோற்பவம் என்னும் பணியாளர், “ஏசுவைக்கூட ஒருமுறைதான் சிலுவையில் அறைந்தார்கள். எங்களை இந்த அரசு மூன்றுமுறை சிலுவையில் அறைந்து விட்டது” என்றார். மாநிலப் பொருளாளர் ரங்கராஜன், “எங்களில் அனைவரும் ஐம்பது வயதைக் கடந்து விட்டோம். இனி நாங்கள் எங்கு சென்று எந்த வேலை பார்க்க முடியும். எங்களை நம்பியுள்ள குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது.” என்றார்.
பாசிசத்திற்கும், அதிகாரத் திமிருக்கும் ஏழையின் கண்ணீர் ஒரு பொருட்டல்ல. சாமானியர்களின் துயரங்களையும், , வலிகளையும் அது ரசிக்கவேச் செய்யும். ஆனால் இன்னும் நான்கரை வருடங்கள் கழித்து பொறுத்திருப்போம் என்றிருக்காமல், மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினால், உடனடியாகவே கணக்குத் தீர்க்க முடியும்.
0 comments:
Post a Comment