கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 7ம் தேதி அதிகாலை நொய்யல் ஆறு மற்றும் திருப்பூர் நகரின் மையப் பகுதியில் ஓடும் ஜம்மனை மற்றும் சங்கிலிப்பள்ளம் ஆகிய இரு ஓடைகளில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளில் தண்ணீர் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கி 9 பேர் அடித்து செல்லப்பட்டனர். இதில் 6 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
அன்றைய தினம் இரவே அமைச்சர்கள் ஆய்வு பணிக்கு வருவார்கள் என தெரிவிக்கப்பட்டது. செய்தி தொடர்பு அலுவலகம் மூலம் பத்திரி கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அமைச்சர் வருவது ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 8ம் தேதி அமைச்சர்கள் வரக்கூடும் என கூறப்பட்டது. ஆனால் அன்றைய தினம் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற கலெக்டர், மேயர், எம்.எல்.ஏ.க்களை பொதுமக்கள் முற்றுகை யிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் நிவாரண தொகை வழங்குவதற்கான பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் அமைச்சர்கள் வரவில்லை.
வெள்ளப்பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு மாநகராட்சி பள்ளிக்கூடங்கள், மண்டபங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். திங்களன்று மதியம் குடியிருப்பு பகுதியினுள் புகுந்த வெள்ளம் முழுமையாக வடிந்த நிலையில், பலர் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். வீடுகளை இழந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முகாம்களில் தொடர்ந்து தங்கியுள்ளனர். ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாததால் அங்குள்ள மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வேளாண் துறை அமைச்சர் எஸ். தாமோதரன் ஆகியோர் வெள்ளசேதங்களை பார்வையிட நேற்று (நவம்பர் 9) திருப்பூர் வந்தனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் மதிவாணன், மாநில பேரிடர் சேத தணிப்புக்குழு கண்காணிப்பாளர் ராஜேஷ் லக்கானியா மற்றும் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். நிவாரண பணிகள் தொடர்பாக அவர் கேட்டறிந்தார்.
தொடர்ந்து வெள்ள சேத பணிகளை பார்வையிட சென்றார். வெள்ளத்தில் சிக்கி குடும்பத்துடன் அடித்து செல்லப்பட்ட அபுதாஹீர் குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர்கள் ஆறுதல் கூறினர். அமைச்சர் களிடம் பேசிய உறவினர்கள், ‘‘எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். ஆனால் சடலத்தை தேடி எடுக்க கூட யாரும் உதவி செய்யவில்லை. நாங்களாகவே நொய்யல் ஆற்றங்கரை யில் நடந்து சென்று சடலத்தை மீட்டு வருகிறோம். 3 பேரின் சடலங்கள் கிடைத்து விட்டது. இன்னும் 2 பேரின் சடலங்கள் கிடைக்கவில்லை. அதையாவது கண்டு பிடித்து தாருங்கள்,’’ என கண்ணீர் விட்டு கதறினர். இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் கூறினர்.
தொடர்ந்து காயிதேமில்லத் நகர் மற்றும் சத்தியா நகர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட அமைச்சர்கள் சென்றனர். இங்கு அடுத்தடுத்து 3 இடங்களில் அமைச்சர்களை அப்பகுதியினர் முற்றுகையிட்டனர். ‘‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தும், உடைமைகளை இழந்தும் நாங்கள் நிற்கிறோம். ஆனால் கடந்த 3 நாட்களாக யாரும் இங்கு வரவில்லை. எந்த பணிகளும் நடக்கவில்லை. அனைத்தையும் இழந்து நிற்கும் நாங்களே எங்கள் பணிகளை செய்து வருகிறோம். இப்போது மட்டும் ஏன் வந்தீர்கள். நிவாரண உதவியாக ரூ.1000 கொடுப்பதாக கூறுகிறீர்கள். அதுவும் எங்களுக்கு வேண்டாம். எங்களை காப்பாற்றிக் கொள்ள எங்களுக்கு தெரியும். சாக்கடைகளை அள்ளுவது முதல் தண்ணீர், உணவு எனஎங்களுக்கானதேவைகள் எதுவும் அரசு செய்யவில்லை. கண்காட்சியை பார்வையிடுவது போல பார்த்து செல்லவா நீங்கள் வருகிறீர்கள். ஓட்டு கேட்டு வரும்போது எத்தனை முறை வந்தீர்கள். இப்போது வர கஷ்டமாக இருக்கிறதா,’’ என கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து திலகர் நகர், சங்கிலிப்பள்ளம் பகுதியை பார்வையிட்ட அமைச்சர்கள், ஆய்வை முடித்துக் கொண்டு திரும்பினர்.
0 comments:
Post a Comment