வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் என்று சொல்லப்பட்டாலும் இந்துஜா சகோதரர்களின் நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களாகவே அழைக்கப்படுகின்றன. போபோர்ஸ் விவகாரத்தில் அடிபட்ட அவர்கள், தற்போது ஆந்திரப்பிரதேசத்தில் சுமார் 171 கோடி ரூபாய் மக்கள் பணத்தை சூறையாடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவடா என்ற கிராமத்தில் 1,040 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய ஆலை ஒன்றை இந்துஜா அமைக்கப்போகிறது. நிலக்கரியைக் கொண்டு இந்த உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்களால் சுற்றுப்புறச் சூழல் மற்றும் நில அபகரிப்பு போன்ற பிரச்சினைகள் எழுப்பப்பட்டன.
இந்த எதிர்ப்புகளை மீறி ஆலை அமைப்பதற்காக மாநில காங்கிரஸ் அரசு அனுமதி அளித்துவிட்டது. காலியிடம் மற்றும் சொத்து ஆகியவற்றிற்கான வரி 171 கோடி ரூபாய் என்று அரசு மதிப்பிட்டது. விசாகப்பட்டினம் மாநகராட்சி இந்த வரியை செலுத்துமாறு இந்துஜா சகோதரர்களுக்கு நோட்டீசும் அனுப்பியது. ஆனால், மாநில காங்கிரஸ் அரசுடன் இந்துஜா குழுமம் “பேச்சுவார்த்தை” நடத்தியது. இதனால் அவ்வளவு வரியைச் செலுத்த முடியாத ஏழைகளாக இந்துஜா சகோதரர்கள் இருப்பதால் 120 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்து விட்டனர்.
ஆனால் அதோடு திருப்தியடையாமல் எங்களால் 19 லட்ச ரூபாய் மட்டும்தான் தர முடியும் என்று இந்துஜா சகோதரர்கள் முரண்டு பிடிக்கிறார்கள். அதற்கான வங்கி வரைவோலையையும் மாநகராட்சிக்கு அனுப்பிவிட்டனர். விசாகப்பட்டின மாநகர ஆணையர் பி.ராமன் ஆஞ்சநேயலு இதை உறுதிப்படுத்துகிறார். 51 கோடி ரூபாயை அனுப்பாவிட்டால் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்கிறார் அவர். ஆலை அமைப்பதற்கான நிலங்களை 12 ஆண்டுகளுக்கு முன்பே மாநில அரசும், விசாகப்பட்டின மாநகராட்சியும் கொடுத்துவிட்டது. அது இப்போது வரை பயன்படுத்தப்படாமல் காலியாகவே இருந்திருக்கிறது. இந்த இடத்திற்கு எந்தவிதமான வரியையும் அவர்கள் செலுத்தவில்லை.
1,122.38 ஏக்கர் நிலம் மின்னாலைக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. மாநில அரசில் தங்களுக்குள்ள செல்வாக்கைக் கொண்டு இந்துஜா சகோதரர்கள் பெரும் அளவில் சலுகையைப் பெற்றுவிட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. மாநகர ஆணையர் சொல்வது ஒருபுறம் இருந்தாலும், ஆலைக்கான பணிகள் துவங்கியுள்ளதால் ஒட்டுமொத்த 171 கோடி ரூபாயும் விழுங்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
இந்த ஆலை கடற்கரை ஒழுங்குமுறை முகமையின் கீழ்வரும் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கிறது. குறைந்த அளவில்தான் நிலங்களை எடுத்துள்ளோம் என்று நிறுவனம் கூறுவதை முன்னாள் மத்திய எரிபொருள் மற்றும் சுற்றுச்சூழல்துறை செயலாளர் இ.ஏ.எஸ்.சர்மா குற்றம் சாட்டுகிறார். ஆலைக்கு எதிரான போராட்டத்தை இவர் ஒருங்கிணைத்து வருகிறார். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் நிபந்தனைகளை மீறி இந்துஜா சகோதரர்கள் கட்டுமானப்பணிகளைத் துவக்கியுள்ளனர். இது தடைசெய்யப்பட்ட பகுதியில் உள்ளது என்கிறார் சர்மா. சுற்றுச்சூழல் அனுமதியை 1996 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் பெற்றிருக்கிறது. அந்த அனுமதி 2001 ஆம் ஆண்டோடு காலாவதியாகிவிட்டது. தங்கள் செல்வாக்கை நம்பி மீண்டும் 2009 ஆம் ஆண்டில் அனுமதி கேட்டனர். கடுமையான எதிர்ப்புகளை மீறி அனுமதி வழங்கப்பட்டது.
மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி, ஆலைக்கு இன்னும் வழங்கப்படவில்லை. அதற்குள் வேலையைத் துவங்கிவிட்டனர். இத்தகைய ஆலைகள் துவங்குவதற்கு முன்பாக பொது விசாரணை அப்பகுதியில் நடத்தப்பட வேண்டும். ஆனால் இதுவரை நடத்தப்படவில்லை. தேவடா, பரவடா, அப்பிகொண்டா மற்றும் பலவாலசா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவளித்துள்ளது.
1999 ஆம் ஆண்டிலேயே இந்த நிலத்திற்கு விதிக்கப்பட்ட மதிப்பு 22 கோடி ரூபாயாகும். அப்போது தெலுங்கு தேசக்கட்சியின் ஆட்சியாகும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபிறகு தங்களுக்கேற்றவாறு நிலைமையை இந்துஜா சகோதரர்கள் வளைத்துக் கொண்டுள்ளனர்.
இவர்கள் வரி கட்டினால் தான் ஆச்சரியம்
ReplyDeletehttp://mydreamonhome.blogspot.com