இராக் போரின்போது போர்க்குற்றங்களை செய்தார்கள் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் பிரிட்டன் முன் னாள் பிரதமர் டோனி பிளேர் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மலேசிய போர்க் குற்ற விசாரணை நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.
2003 ஆம் ஆண்டு இராக்கிற்குள் படைகளை அனுப்பி மனிதகுலத்திற்கு எதிரான கொடூர நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டனர் என்று ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட நீதிபதிகள் குழு முடிவுக்கு வந்துள்ளது. பேரழிவு ஆயுதங்களை குவித்து வைத்திருக்கிறார் என்று சதாம் உசேன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை எழுப்பி, சர்வதேச சட்டங்களை மதிக்காமல் படையெடுத் துச் சென்றனர் என்று இந்த இருவரின் மீதும் குற்றச் சாட்டுகள் எழுப்பப்பட்டன.
இதுகுறித்துத் தங்கள் தீர்ப்பில் கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள், இராக்கிற்கு எதிராகப் போர் தொடுப்பது என்ற இரண்டு முன்னாள் தலைவர்களின் முடிவு சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியதாகும். ஏராளமான இராக்கியர்களைப் படுகொலை செய்வதில் போய் முடிந்தது. குண்டு மழை பொழிவதும், வேறு பல வன்முறை நடவடிக்கைகளும் இராக்கில் நிகழ்வது அன்றாட வாடிக்கையான அம்சமாக மாறிவிட்டது. இராக்கின் வசம் பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன என்பதற்கு ஆதாரமாக மோசடியான ஆவணங்களை அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் சர்வதேச சமூகத்தின் முன் வைத்தார்.
ஆனால், இத்தகைய பேரழிவு ஆயுதங்கள் இராக்கில் இல்லை என்பது பின்னால் தெரியவந்தது. இது அமெரிக்க மற்றும் பிரிட்டன் தலைவர்களுக்கும் தெரிந்தே இருந்தது. இந்தப் படையெடுப்பின்போது, சுமார் பத்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர்.
போர்க்குற்றங்கள் தொடர்பாக ரோம் விதிகளில் கையெழுத்திட்டுள்ள அனைத்து நாடுகளுக்கும் இந்தத் தீர்ப்பை அனுப்பி வைக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். அந்த விதிகள்தான் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
போர்க்குற்றவாளிகள் பதிவேட்டில் ஜார்ஜ் புஷ் மற்றும் டோனி பிளேர் ஆகிய இருவரும் இடம் பெற வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
0 comments:
Post a Comment