எல்லாமே வணிகமயமாகும் போது, தினங்கள் மட்டும் விதி விலக்காகி விட முடியுமா? அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம் வகையோடு, பெண்கள் தினமும் ஊடகங்களில் புரட்டி எடுக்கப்படுகிறது. எந்த உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்கள் பெண்களின் உழைப்பைச் சுரண்டுகின்றனவே, அவை, ஸ்பான்சர் செய்து, மகளிர் தினக் கொண்டாட்டங்களைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி மகிழ்கின்றன. தங்க, வைர நகைகள், பட்டுப் புடவைகளுக்கான விளம்பரங்கள் வலம் வருகின்றன. அர்த்தமற்ற, பொருத்தமற்ற நிகழ்ச்சிகள், பெண்ணுரிமை என்றால் கிலே என்ன விலை என்பவர்களின் பேட்டிகள்தான் பொதுவாக அன்றைய தினத்தை ஆக்கிரமிக்கின்றன. இடையிடையே, சில நல்ல நிகழ்ச்சிகளும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
அரசாங்க அலுவலகங்கள் முதல் கல்லூரிகள், தன்னார்வ அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் வரை, எங்கு நோக்கினும் பெண்கள் தினம் ஏதோ ஒரு விதத்தில் கடைப்பிடிக்கப்படுவது பரவாயில்லைதான். ஆனால், அந்தத் தினத்தின் போராட்ட வரலாறு வெளிக்கொண்டு வரப்படுகிறதா என்றால், பெரும்பாலும் இல்லை என்றுதான் கூற வேண்டும். கடந்த காலத்தை விட சற்று முன்னேற்றம் உருவாகியிருந்தாலும், உள்ளடக்கம் இன்னும் மேம்பட வேண்டியிருக்கிறது.
வரலாறு காட்டுவது என்ன?
20ம் நூற்றாண்டின் துவக்கத்தில், பெண்கள் பரவலாகத் தொழிற்சாலை களில் பணியாற்ற ஆரம்பித்தனர். அன்று நிலவிய படுமோசமான வேலை நிலைமைகளை எதிர்த்துத் தொழிற்சங்கங்கள் பற்பல போராட்டங்களைக் கட்டவிழ்த்துக் கொண்டிருந்தன. வீடுகளை விட்டு வேலைக்காக வெளியே வந்த பெண் தொழிலாளிகளும் போராட்டங்களில் இறங்கினர். அதே காலகட்டத்தில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், பெண்களுக்கு வாக்குரிமை என்ற அரசியல் கோரிக்கையும் எழ ஆரம்பித்தது. முதலாளித்துவ பெண்ணியவாதிகள், பெண்களுக்கு வாக்குரிமை என்பதை மட்டும் முன்வைத்த போது, கிளாரா ஜெட்கின் போன்ற சோஷலிஸ்டுகள், அனைவருக்கு வாக்குரிமை, அதில் பெண்களுக்கும் வாக்குரிமை என்ற கோஷத்தை எழுப்பினர். அன்றைய காலத்தில், சொத்து படைத்த ஆண்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதை மாற்றாமல், பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தால், சொத்து படைத்த பெண்கள் மட்டும்தானே வாக்களிப்பவர்களாக மாறுவார்கள் என்பது அவர்களின் சரியான வாதமாக அமைந்தது. இவ்வாறு ஒரு பக்கம் உழைப்புச் சுரண்டலை எதிர்த்தும், மறுபக்கம் அரசியல் உரிமைகளுக்காகவும் போராட்ட அலைவீசத் துவங்கியது.
இப்போராட்டங்களில் பெண்கள் முக்கியப் பங்கு வகித் தனர். உதாரணமாக, 1908ல் நியூயார்க் நகர பஞ்சாலை மற்றும் ஆடை நிறுவனங்களின் பெண் தொழிலாளர்கள், 8 மணி நேர வேலை, கூலி உயர்வு கோரிக்கைகளை முன் வைத்து, தெருக்களை நிரப்பினர். காவல் துறையின் அடக்குமுறையை சந்தித்தனர். 1909ல் கடும் பனியிலும், 3 மாத காலம் வேலை நிறுத்தம் செய்தனர். இத்தகைய சூழலில், 1910ல் கோபன் ஹேகனில், இரண்டாவது உலக சோஷலிசப் பெண்கள் மாநாடு நடந்தது. 17 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதில், ஜெர்மானிய கம்யூனிஸ்டு கிளாரா ஜெட்கினும், ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரா கொலந்தோயும் பெண்கள் பிரச்சனை கள் குறித்து வலுவாகப் பேசினர். அதன் முடிவில், பெண்கள் உரிமைகளைப் பேச, போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்க, ஒரு தினம் உருவாக்கப் பட வேண்டும், பணி நிலை மேம்பாடு, வாக்குரிமை, உலக சமாதானம் போன்ற கோரிக்கைகளுக்காக, அது உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற ஒரு பிரகடனத்தை, கிளாரா ஜெட்கின் முன்மொழிந்தார்.
அப்போது, மார்ச் 8 என்பது தீர்மானிக்கப் படவில்லை. பணி நிலை மேம்பாடு என்ற பெண் தொழிலாளிகளின் கோரிக்கையும், வாக்குரிமை என்ற அனைத்துப் பெண்களின் கோரிக்கையும், உலக சமாதானம் என்ற பொது கோரிக்கையும் அழுத்தம் பெற்றன என்பதைப் பார்க்கும் போது, பெண், உழைப்பாளியாகவும், குடிமகளாகவும் ஒடுக்குமுறைகளை அனுபவிக்கிறாள் என்கிற புரிதல் உருவானது தெளிவாகிறது. இந்தப் பின்னணியில்தான், 1911 முதல் உலகின் பல பாகங்களில் பெண்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக, இத்தினம் கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது. 1913ல் தான் மார்ச் 8 என்ற தேதி தீர்மானிக்கப்படுகிறது. ரஷ்யாவில் முதன் முறையாக, அந்த வருடத்தில் தான் பெண்கள் தினப் போராட்டங்கள் நடந்தன. 4 ஆண்டுகள் கழித்து, 1917 மார்ச் 8ல், ரஷ்யப் பெண்கள், உணவுக்கும், சமாதானத்துக்கும் குரல் கொடுத்து, வீறு கொண்டு பெட்ரோகிராடு நகரத் தெருக்களில், கடல் அலை போல் குவிந்தனர். நவம்பரில் ரஷ்யப் புரட்சி வெடித்தது. 1975ல் தான், ஐ.நா.சபை, மார்ச் 8, பெண்கள் தினமாக அனுசரிக்கப் பட அறைகூவல் விடுத்தது.
நளின போர்வைக்குப் பின்னே நஞ்சு
அன்றைக்கு எழுந்த பல கோரிக்கைகள் இன்றும் பொருத்தமானவையாகவே தொடர்கின்றன. வாக்குரிமை இருந்தாலும், தீர்மானிக்கும் மன்றங்களில் பிரதி நிதித்துவம் போதுமானதாக இல்லை. 33 சதவீத இடஒதுக்கீடு சட்டம் எட்டாக் கனியாகவே இருக்கிறது. இந்தியாவில் 93சதவீத தொழிலாளர்கள் முறைசாரா துறையில் உழைக்கிறார்கள்; அதில் கணிசமானவர்கள் பெண்கள். நவீன தாராளமயக் கொள்கைகள் காரணமாக, நிரந்தரப் பணிகள் உடைக்கப்பட்டு, ஒப்பந்த அடிப்படையில், காஷ¨வல் பணியாக உருமாற்றம் அடைந்த வண்ணம் உள்ளன. பணிப்பாதுகாப்பு இல்லாத, இன்றைய விலைவாசிக்கேற்ற குறைந்த பட்ச கூலி இல்லாத நிலை நீடிக்கிறது. விரிவடைந்து வரும் தகவல் தொழில் நுட்பத் துறையிலும் சில மட்டங்களில் வசதியான சம்பளம் கிடைத்தாலும், உரிமைகள் மறுக்கப்படும் சூழலே நிலவுகிறது. பன்னாட்டு நிறுவனங்களில் சங்கம் வைக்கும் உரிமை இல்லை. இது அத்தனையிலும் பெண் தொழிலாளர்களும் பாதிக்கப் படுகிறார்கள். பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல், பெண் தொழிலாளர்கள் சந்திக்கும் ஒரு பெரும் பிரச்சனையாக முன்னுக்கு வருகின்றது.
மொத்தத்தில், சர்வதேச நிதி மூல தனம் தங்கு தடையின்றி சுற்றி வருவதற்கு உலகமயமும், தாராளமயமும் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருப்பவர்களின் திசை வழியாகத் தொடர்கின்றன. ஆட்சி யாளர்கள், இக்கொள்கைகளை நடை முறைப்படுத்தும் போது, நளினமான திரை போட்டு, நஞ்சை உமிழ்கிறார்கள். சமீபத்தில், இந்தியத் தொழிலாளர் மாநாட்டில் பேசிய பிரதமர், இருக்கிற தொழிலாளர் நலச்சட்டங்கள், தற்போதுள்ள தொழிலாளர்களைப் பாதுகாக்கக் கூடுதல் அக்கறை காட்டுகின்றன, ஆனால், புதிய தொழிலாளர்கள் உருவாக்கப்பட தடையாக உள்ளன. எனவே, இவை பரிசீலிக்கப்பட்டு மாற்றப்பட வேண்டும் என்று பேசியது கவனிக்கத்தக்கது.
பெண்கள் மீதான வன்முறைகள், புதிய வடிவங்களில், முன்னைவிடக் குரூரமாகத் தாக்குகின்றன. கணவன் மற்றும் அவன் உறவினர்கள் கொடுமையால் மன உளைச்சலுக்கு உள்ளாகும் பெண்ணைக் காக்கக் கொண்டு வரப்பட்ட இபிகோ 498-ஏ பிரிவு, தளர்த்தப்பட உள்ளது. ஓங்கி உயர்ந்து வரும் விலைவா சிக்கு நடுவே, உணவுப் பாதுகாப்பு மசோதா, உள்ளதற்கே உலை வைக்கிறது. தண்ணீர் கூட இனி பணம் படைத்தவர்களின் நண்பனாக மாற ஏற்பாடுகள் நடந்து கொண்டுள்ளன.
முக்கியத்துவம் பெறும் கோரிக்கைகள்
இவற்றுக்கு நடுவே, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்த வருட பெண்கள் தினத்தில், விலை உயர்வு-உணவுப் பாதுகாப்பு, முறைசாரா துறையில் உழைப்புச் சுரண்டல், 33சதவீத இட ஒதுக்கீடு, பெண்கள் மீதான வன்முறை, குறிப்பாக 498-ஏ பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளின் அடிப்படையில் சகல பகுதி பெண்களும் திரட்டப் பட்டு, எழுச்சியாக வீதிகளுக்கு வர வேண்டும் என்று அறைகூவி அழைத்துள்ளது. நம்மைப் போன்ற முற்போக்கு அமைப்புகளுக்கு, பெண்கள் தினத்தின் போராட்ட பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்கும் முக்கிய வரலாற்றுப் பொறுப்பு உள்ளது. அன்றைய சோஷலிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும் முன்னெடுத்த போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும். ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பெண்களின் போராட்டம், சமூக மாற்றத்துக்கான போராட்டத்தின் ஒரு பகுதி என்கிற முறையில், மார்க்சிஸ்ட் கட்சி, அதன் சமரசமற்ற ஆதரவை, இப்போராட்டங்களுக்கு நல்குகிறது. பெண்கள் தினப் போராட்ட வாழ்த்துக்களையும் தெரிவித் துக்கொள்கிறது.
-------------------------------------------------------------- உ.வாசுகி
பெண்ணின் பெருமை உலகம் போற்றும் தினம் இன்று.. இதில் உங்கள் பதிவு மிக சிறப்பு....
ReplyDelete498a இன்று தவறாக பயன்படுத்தப்படுகிறது பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சம்மந்தப்பட்ட குடும்ப உறவுகள் மற்றும் நட்பு வட்டாரத்தில் சமரசம் செய்யப்பட்டு வெளியில் தெரியாமல் மறைக்கப்படுகிறது காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்கள் 80/போலியாக ஜோடிக்கப்பட்டு ஆண்களை பழிவாங்கும் நோக்கத்தோடு நடைபெறுகிறது என்பதையும் கட்டுரையாளருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்
ReplyDelete