டேவிட் மான், ஒரு நடுத்தரவயது மிண்ணனுப் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபரி. வியாபர நிமித்தமாக தனது பிளைமவுத் வேலியண்ட் காரை கலிபோர்னிய பாலைவனத்தின் இருவழிப்பாதை நெடுஞ்சாலையில் ஓட்டிச் செல்லும்போது டேவிட் மானின் மனநிலையை பயங்கர முகங்கொண்டு துருபிடித்த பீட்டர்பில்ட் 281 டேங்கர் வண்டியோட்டி தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்து டேவிட்டின் மனதை கசக்கிப்பிழிந்து சின்னாபின்னமாக்கும் காட்சிகளைப் பதிவு செய்து ஏதுமறியா அந்த மனிதனின் மனஉலைச்சலின் உச்சியை வெளிப்படுத்திக் காட்டும் நிகழ்பதிவானது, ஸ்பீல் பெர்க் (1971) முதன் முதலில் இயக்கிய முழு நீலத்திரைப்படம், “டூயல்“. இது பார்வையாளர் கனவில் நிச்சயம் வெகுநாள் குடியிருப்பதற்குரிய அனைத்துத் தகுதிகளையும் கொண்ட படம். ரிச்சர்ட் மெதீசன் எழுதிய சிறுகதையை முழுநீளத் திரைப்படமாக எடுத்திருக்கிறார். கென்னடி படுகொலை செய்யப்பட்ட அன்று ரிச்சர்ட் மெதீசன் கோல்ப் விளையாடிவிட்டு திரும்பும்போது ஒரு ட்ரக் லாரியின் போக்கினால் அனுபவித்ததை கதையாக்கியிருந்தார்.
கார், காரோட்டி, டேங்கர். அவ்வளவுதான் படம். அவ்வப்போது வந்து போகும் ஓட்டல், பெட்ரோல் பங்க், பள்ளி வேன், ஒரு ஜோடி கிழட்டுத் தம்பதியர். அவ்வளவுதான்.
வீட்டைவிட்டு வெளியே நெடுஞ்சாலைக்கு வந்த டேவிட் மான், டேங்கரின் மிகக்குறைந்த வேகத்திலும் தன்னை முந்திச் செல்ல விடாததால் சங்கடப்படுகிறான். இருந்தாலும் அமைதியாக போய்க்கொண்டிருந்த டேவிட் மானுக்கு டேங்கர் ட்ரைவர் (கைகள் மட்டும் தெரிகிறது) கடந்து போக வழிவிடுகிறார். முந்தலாம் என சிறிது வேகமெடுக்கும் போது எதிரிலிருந்து ஒரு வேன் வேகமாக வந்து அவனைக் கடந்து போகிறது. கவனிக்காதிருந்தால் டேவிட் மான் விபத்தில் சிக்கியிருக்கக்கூடும். அப்போதே டேங்கர் லாரி டிரைவின் மனதை கனித்துவிட்டான் டேவிட். இனி இந்த டிரைவரிடம் தாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று. பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் டேங்கரைக் கடந்துவிடுகிறான். சிறிது தூரம் அமைதியாக டேங்கரின் பூகை மற்றும் ஹாரனினால் இம்சையின்றி பயணித்துக்கொண்டிருக்கும் டேவிட்டுக்கு வந்துவிடுகிறது கஷ்ட்டக்காலம். டேங்கள் டேங்கருக்கு மதம் பிடித்துப் போனதோ, அல்லது கொலைவெறி பிடித்து அலைகிறதோ, அல்லது நல்ல சிவப்புக்காரைப் பார்த்தால் அதைவிரட்டிவிரட்டி அது அலறியடித்து ஓடுவதைக்கண்டு ரசிக்கும் விநோத மனநோயில் டேங்கர் இருக்கிறதோ தெரியாது. டேவிட் மான் முன்னே போனால் பின்னால் வந்து இடிக்கும், வேகத்தை அதிகரிக்கச் செய்யும். பார்ரங் பார்ரங்...... என காதைக் கிழிக்கும் முரட்டு மிருகத்தின் கரகரத்த அதன் மிரட்டல் கர்ஜனை பிளைமூத்தை பதறியடித்து ஓட செய்யும் ஒவ்வொரு காட்சியிலும் நம்மை யாரோ பின் தொடர்ந்து விடுகிறாற்போன்ற பயம் பற்றிக்கொள்ளும்.
டேவட் மான், ஒருமுறை டேங்கரை வேகவேகமாக முந்திச் சென்று ஒரு மறைவிடத்தில் மறைந்துகொள்கிறான். டேங்கர் கடந்து போய்விடுகிறது. ஆசுவாசப்படுத்திக்கொண்டு வேகுநேரத்திற்குப்பின் காரைக் கிளப்பி சிறிது தூரம் வந்தால் அங்கே வளைவில் டேங்கர் அவனுக்காகக் காத்திருக்கிறது. நிற்கிறான். அதுவும் அசைவற்றுக்கிடக்கிறது. மெல்ல வண்டியை கிளப்புகிறான். அதுவும் கிளம்புகிறது. சிறிது தூரம் வருகிறான். அதுவும் மெல்ல மண்பகுதியிலிருந்து ரோட்டுக்கு வருகிறது. இனி சரிபட்டுவராது என்று முடிவு செய்த டேவிட் மான் காரைவிட்டு இறங்கி, டேங்கரை நோக்கி நடக்கிறது. டேங்கர் மெல்ல கிளம்புகிறது. அவன் நெருங்க நெருங்க வேகமெடுக்கிறது. அதைப் பிடிக்க ஓடுகிறான். அவனுக்கு அகப்படாமல் நகர்கிறது. நிற்கிறான். அதுவும் நிற்கிறது. டேவிட் மானின் கண்களில் ரௌத்திரம். ஆத்திரம் கூடுகிறது. அப்போ, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி அதிலிருந்து வயோதிகத் தம்பதியினரிடம் நடந்ததைக் கூறி உதவி கேட்கிறான். போலீஸ் நிலையம் வரை தன்னை அழைத்துப் போகும்படி கேட்கிறான். அவர்கள் அதற்கு மறுத்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர்களது காரை நோக்கி டேங்கர் வருவதைப் பார்க்கின்றனர். பயந்தடித்துக்கொண்டு காரை பின்னாலேயே ஓட்டி வந்தவழியே போய்விடுகின்றனர்.
டேங்கரை அவனால் எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறது. இனி வேறு வழியில்லை என்ற முடிவில் துரத்தும் பூனையிடமிருந்து எல்லா சாக்திகளையும் பயன்படுத்திப் பார்த்துவிட்டு சுவற்றின் மூளைக்கு வந்தபின் அதற்குமேல் தப்பிப்பதற்கு வழியில்லாத சூழலில் பூனையை நேருக்கு நேராக தாக்குவதற்குத் தயாராவதைப் போல் டேவிட் மான், காரில் அமர்ந்தான். தீர்க்கமாக. சீட் பெல்டைப் போட்டுக்கொண்டான். ஒரு தெளிவான முடிவுக்கு வந்தவனாக டேங்கரை ஒரு முறை உற்று பார்த்தான். கிளம்பினான். ஒரு மலை உச்சிக்கு டேங்கரைக் கொண்டுபோய் காரின் ஆக்சிலேட்டரில் தனது சூட்கேசை வைத்து டேங்கரை நோக்கி ஸ்டீரிங்கைத் திருப்பிவிட்டு, ஓடும் காரிலிருந்து அவன் வெளியே குதிக்க, கார் டேங்கரில் மோதி வெடித்து பள்ளத்தாக்கில் விழுந்து நெருங்குகிறது. டேங்கர் லாரியின் டிரைவரை கடைசி வரை காட்டாத இயக்குநர் அவன் இறந்துவிட்டான் என்பதை டேங்கரின் ஸ்டீரிங்கிலிருந்து சொட்டும் குருதியில் வெளிப்படுத்துகிறார்.
இருவரும் ஒருவருக்கொருவர் பரிட்சயமில்லாதவர்கள். ஒருவரையொருவர் எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாதவர்கள். ஒரே ஒரு ஒற்றுமைதான். இருவரும் மனிதர்கள். ஆனால் இந்த விரோதம் எப்படி ஏற்பட்டது? எனக்கும் அந்த நட்சத்திரக்குள்ளாக்காரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
பிறகு ஏன் என் இனத்தையே அவன் அழிக்க வரவேண்டும். என் நிலத்திற்கும் அவனது நிலத்திற்கும் எந்த பிணைப்பும் இல்லை. அவன் யாரோ எங்கோ எப்படியோ வாழ்ந்துகொண்டிருக்கிறான். ஏன் என் மக்களின் உழைப்பைத் திண்ணத் துடிக்க வேண்டும். நமது ஈட்டியைத் திருடிச் சென்று விஷம் தடவி நம்மீதே ஏன் பாய்ச்சுகிறான்.
இதுபோலத்தான் அந்த டேங்கருக்கும் ப்ளைமூத் காருக்கும். இரண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எந்த விரோதமும் இல்லை. ஆனால் டேங்கரின் குணம், தன்னை யாரும் முந்திவிடக்கூடாது என்பதுதான்.
தான் தான் அந்த நெடுஞ்சாலையை ஆளவேண்டும். எனக்குக் கட்டுப்பட்டுத்தான் அனைத்து வாகனங்களும் பயணிக்கவேண்டும். அது சதாம் ஹூசேன் வாகனமாக இருந்தாலும், கடாபியினுடையதாக இருந்தாலும், டேங்கர் அவர்கள் மீது ஏறும் அது மமதை பிடித்த டேங்கர். அதற்கு யாரெல்லாம் பிடிக்கவி்ல்லையோ... அதாவது அதன் போக்கிற்கு ஒத்துவராதவர்கள் யார் யாரே அவர்கள் மீதெல்லாம் போய் முட்டும் மோதும். பர்ரங் பர்ரங் என தன் பயங்கர ஹாரனை ஒலிக்கச் செய்யும்.
I rule the road என்ற மமதையினால் எலியைச் சீண்டிவிட்டது டேங்கர். என்ன ஆயிற்று இப்போ டேங்கர் பள்ளத்தாக்கில் சரிந்துவிட்டது. பாட்டு கேட்டுக்கொண்டு அமைதியான பயணம் செய்த அந்த மின்னணுப் பொருள் வியாபாரி கொலைசெய்ய, டேங்கர் டிரைவரின் முகமற்றக் குருதிதான் இருதிக் காட்சியில் சொட்டிக் கொண்டிருந்தது. நட்சத்திரக்குள்ளாக்காரனின் சரித்திரமும் வெற்றுத் தாளாக படபடப்பதுபோல.
மேலும், ஜடப்பொருட்கள் காட்சியின் அமைப்பின் சாதுர்யத்தால் உயிர்த்தன்மை பெறும் என்பதற்கு டூயலின் ஒவ்வொரு காட்சியும் சாட்சி. ஆறுமுகம், வேலுசரவணன், முருகபூபதி ஆகியோரின் நாடகங்களில், பொருட்களின் நிகழ்த்துத் தன்மையைக் காணமுடியும். அவற்றின் அசைவில் பொருள்பொதிந்த கனவுகள் திறப்பதை உணரலாம்.. துணி, கயிறு, பானை, ஏணி, பிளாஸ்டிக் குழாய்கள் – கோளங்கள், சுரகுடுக்கை, வைக்கோல் பிரி என பல்வேறு பொருட்களை அவர் நாடகக் கதைக்குத் துணையாகக் கோர்த்து நெய்த நாடகங்கள் பார்வையாளர்களிடம் பிரம்மிப்பை ஏற்படுத்துவதோடு ஜடப்பொருட்கள் நாடகத்தினை நிகழ்த்தும் தன்மைவாய்தவை என்பதை உறுதிசெய்கிறது. நடிகனின் முகம் பொருட்களுள் இயங்கும். இங்கு டேங்கரும் ப்ளைமூத்தும் நிகழ்த்தும் காட்சியடுக்களில் ப்ளைமூத்து டேவிட் மானின் கட்டுப்பாட்டில் இயங்குவதால் ஜடநிலையிலேயே நிற்கலாம். ஆனால் டேங்கரின் ட்ரைவர் கடைசி வரை திரையில் காட்டப்படாமல் முடிவடைவதால் அந்த டேங்கரே யோசிக்கிறாற் போல பார்வையாளர்க்குப் பதிவாகிறது.
எனக்கு இந்த டேங்கர் அறிமுகமாகிவிட்டது. நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள், பயணத்தைக் கவனமாக மேற்கொள்ள.
ஜாக்கிரதை – டூயல்.
அன்புடன்
மகிழி
0 comments:
Post a Comment