தண்ணீரே! உன் விலை என்ன?
கடந்த 31.1.2.12 அன்று நகல் தேசிய நீர்க்கொள்கை, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 29-ம் தேதிவரை இக்கொள்கையின் மீது பொதுமக்கள், அமைப்புகள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். இதற்கு முன்னர் 1987 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் தேசிய நீர்க்கொள்கைகள் உருவாக்கப்பட்டன. நீர் பயன்பாடு குறித்த சட்டங்கள் தேசிய அளவில் இல்லை. சில மாநிலங்களில் நிலத்தடி நீர் பயன்பாடு குறித்த சட்டங்கள் உள்ளன. தமிழகத்தில் 2007-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு நிலத்தடி நீர் (மேம்பாடு மற்றும் நிர்வாகம்) சட்டம் -2003 அறிவிக்கை வெளியிடப்படாததால் அமலுக்கு வரவில்லை. மஹாராஷ்டிராவில் 2005-ம் ஆண்டு நீராதார ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டது. பொதுவாக தேசிய நீர்க்கொள்கையே இந்த இயற்கை வளம் குறித்த வழி காட்டுதலாக இதுகாறும் இருந்து வந்தது. கொள்கையை மாற்ற வேண்டிய தேவை என்ன?
இப்போது தேசிய நீர்க்கொள்கை- 2002க்கு மாற்றாக புதிய கொள்கையின் நகல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மக்களின் நலன் என்கிற நோக்கிலிருந்து இந்த மாற்றம் செய்யப்படவில்லை. 2005-ம் ஆண்டு உலக வங்கி வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக நீர் - நான்காவது உலக நீர் அமைப்பின் ஓர் கருத்து ஆவணம் என்கிற தலைப்பில் ஒரு ஆவணத்தை வெளியிட்டது. அந்த ஆவணம் பாசனம், தண்ணீர் மற்றும் சுகாதார சேவைகள் ஆகியவற்றிற்காகவும் அவற்றிற்குள்ளும் சந்தைக்கான போட்டியை தூண்டி விடவேண்டும் என்கிறது. காலால் இடப் பட்ட இந்த ஆணையை இந்திய அரசு சிரமேற்கொண்டு செயல்பட்டிருக்கிறது. தேசிய நீர்க்கொள்கை -2002 பொது நீரா தாரங்களில் பயன்பாட்டிற்கான முன்னுரிமையை தீர்மானித்திருக்கிறது.
1) குடிநீர்,
2) விவசாயம்,
3) நீர் மின்சாரம்,
4) சுற்றுச்சூழல்,
5) விவசாயம் சார் மற்றும் விவசாயம் சாரா தொழில்கள்,
6) போக்குவரத்து மற்றும் இதர பயன்பாடுகள் என்பதுதான் அந்த முன்னுரிமை வரிசை.
இப்போது முன்னுரிமை தீர்மானிக்கப்படவில்லை. இதன்பொருள் என்னவெனில், விவசாயப்பயிர்கள் கருகிக்கொண்டிருந்தாலும் தொழிற்சாலைக்கு தண்ணீர் கொடுக்க முடியும். யாரும் கேள்வி கேட்க முடியாது.
களவாடப்படும் மாநில உரிமை
இந்திய அரசியல் சட்டத்தில் அதிகாரம் குறித்த பிரிவுகளில் மத்திய பட்டியல், மாநில பட்டியல், இரு அரசாங்கங்கள் பட்டியல் என்ற மூன்று பகுதிகள் உள்ளன. இதில் மாநில பட்டியலில் 17-வது பிரிவில் பாசனம், கால்வாய்கள், நீர்தேக்கம், நீர் மின்சாரம் ஆகியவை அடங்கியுள்ளன. புதிய கொள்கை இதை மறுத்து ஒரு சட்டம் உரு வாக்கப்பட வேண்டுமென்கிறது. அதேபோல 1882-ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய சொத்துக்களின் மீதான உரிமை கட்டுப்பாடு சட்டம் திருத்தப்பட்டு, நிலத்தடி நீரின் மீது நிலச் சொந்தக்காரருக்கு உரிமையில்லை என்று மாற்றவேண்டுமென்கிறது புதிய கொள்கை. நீரையும் விட்டு வைக்காத லாபப்பசி குடிதண்ணீர், சுகாதாரம் தவிர இதர அனைத் துப்பயன்பாட்டிற்கும் பொருளாதாரப் பண்டம் என்று தண்ணீரைப் பார்க்க வேண்டுமாம். அதாவது குளத்து நீரோ, ஆற்றுநீரோ, நிலத்தடி நீரோ விவசாயத்திற்கு வேண்டுமென்றால் காசிருந்தால்தான் வாங்கலாம். ஐயோ! பாவம்!!
குடிநீரை விட்டு விட்டார்களே என்று அவசரப்பட்டு மகிழ்ந்துவிட முடியாது. குடிநீர் பயன்பாடு குறித்து இந்த நகல் கொள்கையின் 3.1 மற்றும் 3.3 பாராக்களில் சொல்லப்படுகிறது. 3.1 - மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி கள் அனைத்து குடிமக்களுக்கும் வீட்டி லிருந்து மிக அருகில் குடிப்பதற்கும் சுத்தம் சுகாதாரத்திற்கும் அத்தியாவசியமான குறைந்தபட்ச அளவை உத்தர வாதப்படுத்த வேண்டும். (இப்போது இத் தேவைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள அளவு நபருக்கு நாளென்றுக்கு கிராமப்புறங் களுக்கு 45 லிட்டரும் நகர்ப்புறங்களுக்கு 90 லிட்டரும் பெருநகரங்களுக்கு 135 லிட்டரும். இது கிடைப்பதில்லை என்பது வேறு விஷயம். ஆனால், இதை குறைப்பார்களாம்) 3.3. - மனிதன் பிழைத்திருப்பதற்கு (ளுரசஎஎயட) குறைந்தபட்ச தேவையையும், சுற்றுச் சூழல் தேவையையும் பூர்த்தி செய்த பிறகு தண்ணீர் பொருளாதாரப்பண்மாக பாவிக்கப்பட வேண்டும். இப்படி பிழைத்திருப்பதற்கு, அத்தியாவசியமான, குறைந்தபட்ச அளவைக்கூட உத்தரவாதப்படுத்துவது பற்றி எவ்வித சட்டப்படியான பாதுகாப்பும் சொல்லப்படவில்லை.
விலையில்லா தண்ணீரா? இலவச தண்ணீரா?
மத்திய-மாநில, உள்ளாட்சி நிர்வாகங்கள் இதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டு, தண்ணீர் தொடர்பான சேவைகள் அனைத்தும் சமுதாயம் அல்லது தனியார் வசம் உரிய பொது - தனியார் பங்கேற்பு வகையில் மாற்றப்பட வேண்டும் என்கிறது நகல்கொள்கை. தண்ணீர் சேவை தனியார் வசம் இருக்குமாம். ஆனால், மத்திய-மாநில, உள்ளாட்சி அமைப்புகள்தான் பிழைத்திருக்கத் தேவையான குறைந்தபட்ச அளவை உத்தராதப்படுத்த வேண்டுமாம். அதாவது அரசு பணம் கொடுத்து தண்ணீர் வாங்கிக் கொடுக்க வேண்டும். விலையில்லா தண்ணீரா, இலவச தண்ணீரா, ஆம் ஆத்மிக்கான பாசமா என்ன பெயர் வைப்பதென்பது மட்டும் அரசாங்கத்தின் கையில் இருக்கும். அரசாங்கத்திற்கு வேலையே இல்லையா? அது மரியாதை இல்லை; அது மரியாதை இல்லை என்று அழுத்திச்சொல்கிறது நகல் கொள்கை. பாரா 13.4-ல் அரசு எப்படி செயல் பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சேவையளிப்பவர் என்னும் அரசின் பாத்திரம் படிப்படியாக மாற்றப்பட வேண்டும். நீர் ஆதாரங்களை திட்டமிட்டு, அமல்படுத்தி நிர்வகிக்கும் அமைப்புகளை (தனியாரை) வலுப்படுத்த ஒழுங்குபடுத்துவது மற்றும் உதவி செய்வது என்ற பணியைச்செய்ய வேண்டும். நான் வேடிக்கை பார்க்கச் சம்மதிக்கிறேன்.. என்றும் நீ கொள்ளையடிக்க உருவாக்கும் நிறுவனத்தை வலுப்படுத்துவேன் என்றும் உளமார உறுதிகூற முன்வந்திருக்கிறது அரசாங்கம்.
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் போன்று நீர் ஒழுங்குமுறை ஆணையம் ஒன்று அமைக்கப்படுமாம். அது கட்டண நிர்ணயம், நீர் ஒதுக்கீடு, செயல்பாட்டை கண்காணித்தல், கொள்கை மாற்றம் குறித்து ஆலேசனை வழங்குதல் ஆகியவற்றை செய்யுமாம். பெட்ரோல் விலையை கம்பெனிகளே நிர்ணயிக்கும். மின்சார கட்டணத்தை ஒழுங்குமுறை ஆணையும் நிர்ணயிக்கும். தண்ணீர் கட்டணத்தை ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும்.
என்ன விலை நீரே
தண்ணீரின் விலை? அதிகமில்லை ஜென்டில்மேன்! என்கிறது நகல் கொள்கை. தண்ணீர் விலை என்பது யாதெனில் நீர் திட்டங்களின் நிர்வாகம், செயல்பாடு, பராமரிப்பு ஆகியவற்றை முழுமையாக வசூலிக்கிற வகையில் கட்டணம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்கிறது. (பாரா 7.2) ஆட்டையும் மாட்டையும் கடித்தால் போதுமா? தொடர்ச்சியாக மனிதனைக் கடித்துத்தானே ஆக வேண்டும். பாரா 7.5 இப்படி கடிக்கிறது. மின்சாரத்திற்கு மிகக்குறைவாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் மின்சாரமும் தண்ணீரும் விரயமாக்கப்படுகின்றன. எனவே, இது மாற்றப்பட வேண்டும்.
இந்த லாபம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?
ஒரு நிறுவனம் தனது தொழிற்சாலைக் கழிவுகளை பிரித்தெடுக்க வேண்டியது அதன் கடமை இல்லையா? நீ சாதாரண பொதுஜனம் என்றால் கடமையைச்செய், பலனை எதிர்பாராதே என்கிறார்கள். ஆனால், நீ முதலாளியாய் இருந்தால் கடமையைச் செய், மானியமும் ஊக்கத்தொகையையும் பெறுவாய் என்கிறது நகல் கொள்கை. 12.8-ல் தொழிற்சாலை கழிவுகளை பிரித்தெடுப்பதற்கும், தண்ணீரின் மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாட்டிற்கும் ஊக்கத்தொகை மற்றும் மானியங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்கிறது. மக்களுக்காக மக்களால் மக்களே நடத்தும் ஜனநாயக அரசின் லட்சணம் இதுதான்.
ஆனால், முதலாளித்துவம் தன் நலனுக்கான எந்த ஒரு கொள்கையையும் தன் நலனுக்கானது என்று சொல்லாது. அது மக்களின் நலன், தேசத்தின் நலன், உலகத்தின் நலன் என்று தம்பட்டம் அடிக்கும், மக்களை நம்பச்செய்யும். இந்த நகல்கொள்கையின் ஆரம்பத்திலும் தண்ணீர் இயற்கை வளம்; உயிர் வாழ்வாதாரம், உணவுப்பாதுகாப்பு, நீடித்த வளர்ச்சி அனைத் திற்கும் அடிப்படை. அப்படிப்பட்ட நீர் பற்றாக்குறையாகி வருகிறது. உலக மக்கள் தொகையில் நாம் இந்தியர்கள் 17 சதவீதம் பேர். ஆனால், மீளக்கிடைக்கும் நீர் உலக ஆதாரத்தில் வெறும் 4 சதவீதம்தான். நாம் இருக்கும் நிலப்பரப்பு உலகின் பரப்பில் வெறும் 2.6 சதவீதம்தான். ஜனத்தொகை உயர்ந்துகொண்டே போகிறது, புவி வெப்ப மாகிக் கொண்டே இருக்கிறது, மனித தேவை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது என்றெல்லாம் கவலையோடு ஆரம்பிக்கிறது நகல் கொள்கையின் முன்னுரை. இதையெல்லாம் படித்து மக்கள் கண்ணீரில் நீர் ஒழுக நின்று கொண்டிருக்கும் போது, அழாதே இதற்கெல்லாம் தீர்வு கண்டு விட்டேன். பேசாமல் இந்த இயற்கை வளத்தை விற்றுவிடுவேம் என்கிறது அரசு. இந்தக் கொள்கை அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டால் குடிநீரும் பாசனநீரும் கானல்நீராகும். காசுள்ளவனுக்கு மட்டும் சாத்தியமாகும். உரத்தும் ஒன்றுபட்டும் இதற்கு எதிராக போராட வேண்டும்.
-க. கனகராஜ்
how to show our disagree to govt?
ReplyDelete