பவித்ரன் தீக்குன்னி கவிதைகள் என அறியப்படுபவைகளில் சில..
தற்கால மலையாளக் கவிஞர்களில் முக்கியமானவர் என்று அறியப்படுபவர் பவித்ரன் தீக்குன்னி...... வடிவாக பிறந்ததால் பாலியல் தொழிலாளியக இச்சமூகத்தில் அறியப்பட்ட அவரது அம்மா, இதை நம்பிய அவரது அப்பாவின் மனப்பிறழ்வு இரண்டும் இவரை ஊர் ஊராய் துரத்தியது.
நினைவு தெரிந்த நாள் முதலாய் கிறுக்கனின் மகன் என்றே அழைக் கப்பட்டும், அம்மாவை
குறித்து கிடைக்கப் பெற்ற மோசமான தகவல்களால் எட்டு வயதில் ஊரை விட்டு ஓடியவர்
திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு அப்பா ஆன பின்னரும் ஊர் ஊராய் ஒடிக்கொண்டே
இருந்தார்.
பால்ய காலங்களில் பெற்றோர்களின் அன்பு
கிடைத்திராத அனாதரவான சூழலால் டீக்கடை, கல் உடைக்கும் வேலை, மரமேறும் வேலை, சாணி
அள்ளுதல், பிச்சை எடுத்தென இப்படியான
வேலைகள் செய்து கொண்டே படிப்பதும் காணாமல் போவதும் பின்னர் திரும்பி வருவதும்
அப்புறம் ஓடிப் போவதுமாய் அலைந்து சிக்கி சீரழிந்து எப்படியோ பி.ஏ.வை முடித்து
ஒருகட்டத்தில் தாங்கொணாத வறுமையால் பெற்ற குழந்தைகளை தண்டவாளத்தில் படுக்க வைத்து
கொன்று விட துணிந்து அதிலிருந்து மீண்டு, கவிஞன் என்பதை ஆதரிக்கும் அவ்வளவாக இன்னும்
கெட்டுப் போகாத சமூகத்தின் நல்ல மனதுகளால் அடையாளம் காணப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வரும்
தீக்குன்னி ஆயஞ்சேரி சந்தையின் மீன் வியாபாரி. கேரளம் அறிந்த பிரபல கவிஞர். சிறு வயதில்
பாடநூலில் படித்த புனலூர் பாலன் என்ற கவிஞரின் கவிதையே மனவலிமையோடு படிக்க
உத்வேகம் தந்தது என்கிறார்.
கேரள முற்போக்கு கலை இலக்கிய சங்கம் ஐநூறு பேரிடம் தலைக்கு இருபது ரூபாய் வசூலித்து
இவரின் ரத்தகாண்டம் என்கிற வெகுவாய் அறியப்பட்ட தொகுப்பை வெளியிட்டு கவிஞனென நிலை
நிறுத்தியது இதுவரை ஏழு தொகுப்புகள் வெளியிட்டிருக்கும் இவர் வயது 38. இவரின்
கவிதைகளை பவித்ரன் தீக்குன்னி கவிதைகள் என்று என்.டி.ராஜ்குமார் மொழிபெயர்ப்பில்
புதுஎழுத்து வெளியிட்டிருக்கின்றது. அதிலிருந்து சில கவிதைகள்.
1
பிறகு..........?
நீயும் குழந்தைகளும்
என்றென்றைக்கும்
என்னுடையவர்கள் மட்டும்தானென்று
நான் நம்பவில்லை
இது போன்ற துர்விதி என்னை
வேட்டையாடுமென்றால்
நாளை உங்களை ரட்சிப்பதற்கான
எனது கடைசி தந்திரமும் தவறிப்போகும்
பட்சத்தில்
உனக்கு விருப்பமில்லை என்றாலும்
உனது இதயம் வேறு ஒருவனுடைய சூடு
தேடிச் செல்லும்
அவன் பரிசாய் தருகின்ற
இனிப்பு பலகாரங்களிலும்
விளையாட்டு சாதனங்களிலும்
நமது குழந்தைகள் சந்தோசத்தில்
மூழ்கிப்போவார்கள்
பிறகு பிறகு
அர்த்தமற்ற இந்த வாழ்க்கையின்
வெள்ளரித் தோட்டத்தில்
நான் வெறும் சோளக்கொல்லை
பொம்மைதான்.
2
பாம்பு.....!
முதலில் பார்த்தது
அம்மாதான்
பின்வாசலிலுள்ள
சகதியில்
பிறகு
தெக்குப்புறம் திண்னையில்
சமையலறை ஓரத்தில்
கட்டிலுக்கடியில்
பிறகு பிறகு
பூஜையறையிலும்
நேற்று
அந்திநேரத்தில்
அழுதுகொண்டே வந்து
அம்மாவோடு தங்கை சொன்னாள்
அது இப்போது
அவளுடைய
அடிவயிற்றில்
சுருண்டுகிடக்கிறதென்று
3
நமக்கிடையில்.................!?
நமக்கிடையில் ஒரு நதியுண்டு
இடையிடையே மெலிந்தும்
மெலியும் போது தெளிந்தும்
கீழிருந்து மேல்நோக்கியும்
அது இப்பொது ஒழுகிக் கொண்டிருக்கிறது
நமக்கிடையில் ஒரு ஒட்டகமுண்டு
வறண்டுபோன எதிர்பார்ப்பில்
மிகப்பெரிய சுமைகளோடு
விட்டுக்கொடுக்கின்ற
ஊசிமுனை காதுவழி
அது இப்போதும் ஏறி இறங்குகின்றது
நமக்கிடையில்
என்றோ ஒரு காலத்தில்
சரிந்து விழுந்த
மண்ணின் அடியில்
ஒரு மாமரத்தின் வேர்களுண்டு
காய்ந்த பிறகும்
பசுமையின் மீதுள்ள ஆசை தீராமல்
மண்ணின் அடிவயிற்றில்
அது இப்போதும் வியர்த்துக்
கொண்டிருக்கின்றது
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தொகுப்பு
அன்பன்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தொகுப்பு
அன்பன்
இரா.தெ.முத்து
"வாழ்வின் மிச்சங்களை பேசுக்கிற தீக்குன்னி"அவரைப்பற்றி படிக்கையேலே சிலிர்க்கிறது.கவிதைகளும் நன்றாக இருக்கிறது.இப்படி ஒருவரை அடையாலம் கண்டவர்களுக்கும்,அவரது படைப்புகளை வெளிக்கொண்டு அந்த கேரள முறாபோக்கு கலைஇலக்கிய சங்கத்திற்கும் நன்றி.வாழ்வின் வலி மிகுந்த பக்கங்களை பேசிய நல்ல பாதிவு.வாழ்த்துக்கள்.
ReplyDeleteபுது எழுத்து இதழ் பவித்ரன் தீக்குன்னி கவிதைகளைத் தமிழில் புத்தகமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னேயே வெளியிட்டுள்ளது.மொழிபெயர்த்தவர் தோழர்.என்.டி.ராஜ்குமார்.
ReplyDeleteகிடைக்கும் முகவரி
புது எழுத்து
2/205, அண்ணா நகர்,
காவேரிப்பட்டிணம்-635112
கிருஷ்ணகிரி மாவட்டம்.
9042158667
9842647101