விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் ஏராளமான அளவில் நன்கொடைகளை திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு அளித்துள்ளார் என்று பல செய்திகள் கூறுகின்றன. தங்க ஆபரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த நன்கொடைகள் பற்றிய விபரங்களைத் திரட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் திணறிக்கொண்டிருக்கிறார்கள். நன்கொடை வழங்கப்பட்ட பொருட்களின் பட்டியல் எதுவும் கோவில்களில் இல்லை. இது இல்லாத நிலையில், எவ்வளவு தங்க ஆபரணங்கள் இந்தக் கோவில்களுக்கு கிருஷ்ணதேவராயரால் வழங்கப்பட்டது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது மட்டுமல்ல, வேறு பல மன்னர்களால் தரப்பட்ட நன்கொடைகளுக்கும் இதுதான் நிலையாக இருக்கிறது.
இது போதாதென்று ஆந்திர மாநில தொல்பொருள்துறை புதிதாக ஒரு குற்றச்சாட்டுடன் வந்திருக்கிறது. திருப்பதி வெங்கடாசலபதி தேவஸ்தானத்தின் வசம் இருப்பதாகச் சொல்லப்படும் மதிப்புமிக்க பொருட்களின் அளவுக்கும், கல்வெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று ஆதாரங்களில் சொல்லப்பட்டவற்றின் மதிப்புக்கும் இடையில் பெரும் வேறுபாடு இருக்கிறது என்பதுதான் அது. முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் கோவில் சொத்துக்களான தங்கம் மற்றும் ஆபரணங்களின் கதி பற்றி கோவில் சொத்துப் பாதுகாப்புக்குழுவினர் அபாயம் குறித்து எச்சரிக்கிறார்கள். கோவில்களின் சொத்துக்கள் காணாமல் போய்விடுவதற்கான அனைத்து வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால் ஒரு உயர்மட்டக்குழுவை நியமித்து அதன் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்பது அவர்களின் கருத்தாகும்.
500 ஆண்டுகளுக்கு முன்பான பல கல்வெட்டுகளை ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இந்தக் கல்வெட்டுகளில் தெலுங்கிலும், தமிழிலும் ஏராளமான விபரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆந்திராவின் அஹோபிலத்தில் உள்ள நரசிம்மர் கோவில், ஸ்ரீகாளஹஸ்தி கோவில், ஸ்ரீசைலத்தில் உள்ள மல்லிகார்ஜூனா கோவில், தரணிக்கோட்டையில் உள்ள அமரேஸ்வரர் கோவில் மற்றும் சிம் ஹாசலத்தில் உள்ள லட்சுமிவராஹநரசிம்மசுவாமி கோவில் ஆகியவற்றோடு திருப்பதி வெங்கடாசலபதி கோவிலும் கிருஷ்ணதேவராயர் நன்கொடையைப் பெற்ற பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இது பற்றிக் கருத்து தெரிவிக்கும் அறநிலையத்துறையின் முன்னாள் அதிகாரி ஒருவர், நன்கொடைகள் பற்றிய விபரங்களை முழுமையாகத்தொகுக்காமல் அரசு அதிகாரிகள் விட்டுவிட்டது உண்மைதான். கோவில்களில் உள்ள ஆபரணச்சொத்துக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனவா, இல்லையா என்பது பதில் கிடைக்காத கேள்விதான் என்கிறார்.
1970 ஆம் ஆண்டிலிருந்துதான் சொத்துக்கள் அடங்கிய பட்டியலை மாநில அறநிலையத்துறை பராமரித்து வருகிறது. நிச்சயமாக கிருஷ்ணதேவராயர் வழங்கிய நன்கொடைகள் அந்தப் பட்டியலில் இருக்கப்போவதில்லை. இத்தனைக்கும் ஆபரணங்களைச் சோதிக்கும் பிரிவு ஒன்று தனியாக அறநிலையத்துறையில் இயங்கி வருகிறது. மன்னர் காலக் கல்வெட்டுகள், பல்வேறு நன்கொடைகள் பற்றிக் குறிப்பிட்டாலும், கிருஷ்ணதேவராயர் காலத்தில் வந்த நன்கொடை பற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியாது என்கிறார்கள் அறநிலையத்துறையினர். தனது தாயார் நாகாளம்பாவின் பெயரில் நிலங்களையும், ஆபரணங்களையும் கிருஷ்ணதேவராயர் அளித்துள்ளார். 91 முத்துக்கள் அடங்கிய நெக்லஸ் ஒன்றும் அவரால் வழங்கப்பட்டிருக்கிறது.
ஆபரணங்கள் இருப்பதை அறநிலையத்துறை அதிகாரிகள் ஒப்புக் கொண்டாலும் முறையான சரிபார்க்கும் பணி எதுவும் இதுவரை நடக்கவில்லை. முறையான சொத்துப்பட்டியல் தயாரிக்காதவரை, மன்னரால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஆபரணங்களைஉறுதிப்படுத்த முடியாது என்கிறார் ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் துறைப் பேராசிரியரான கிரண் கிராந்த். அவர் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருள் வல்லுநர்கள், விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் ஆயிரம் தங்கக்காசுகள், ஒரு முத்து நெக்லஸ், மரகதம் பதிக்கப்பட்ட வைரப் பதக்கம், அஹோபிலக் கோவிலுக்கு தங்கத்தட்டு என்று நீண்ட நன்கொடைப்பட்டியலை வாசிக்கிறார்கள்.
ஒருவேளை நன்கொடைகளின் உண்மையான மதிப்பைக் கண்டுபிடித்து, மாயமானதோடு ஒப்பிட்டால் உலகிலேயே பெரும் மோசடி வெளிப்பட்டாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் தொல்பொருள் வல்லுநர்களில் சிலர்.ஆண்டுக்கு ரூ.650 கோடி வருமானம்திருப்பதி வெங்கடாசலபதி கோவில்தான் உலகிலேயே பணக்காரக் கோவில் என்று கருதப்பட்டது. திருவனந்தபுரம் அனந்தபத்மநாபர் கோவிலின் சொத்துக்கள் பற்றிய விபரங்கள் கிடைக்கும்வரை இந்த அந்தஸ்து தொடர்ந்தது. தற்போது இரண்டாவது இடத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் இந்தக் கோவிலின் ஆண்டு வருமானம் சுமார் 650 கோடி ரூபாயாகும். நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் இந்த கோவிலுக்குச் சொந்தமான தங்கத்தின் அளவு 3 ஆயிரம் கிலோ என்று கூறப்படுகிறது. ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வைப்புத்தொகையாகவும் வங்கிகளில் இந்த கோவிலுக்குச் சொந்தமான பணம் வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 300 கோடி ரூபாய், 350 கிலோ தங்கம் மற்றும் 500 கிலோ வெள்ளியை நன்கொடையாக இந்தக் கோவில் பெறுகிறது. இந்தக் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில்தான் மன்னர் காலத்தில் தரப்பட்ட நன்கொடைகள் பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை.
மன்னர்களால் தானமாக கொடுக்கப்பட்ட சொத்துக்கள் பெரும்பான்மையானவை தற்கால மந்திரிகளால் ஆக்கிறமிக்கப்பட்டு பலபேர் கைமாறியிருக்கும். எல்லாம் அந்த பெருமாளுக்கே வெளிச்சம்
ReplyDeleteஉண்மைதான் ஒத்துக்குரேன் ஆனால் இது கடல்ல கறைத்த பெருங்காயம் மாயிற்றே கடவுளுக்கு தான் வெளிச்சம்
ReplyDelete