கடந்த சில மாதங்களாக புகைந்து கொண்டிருந்த தமிழ்த்
திரைப்படத் தொழிலாளர் பிரச்சினை எரிய ஆரம்பித்திருக்கிறது.இயக்குநர்கள் முதல்
கேட்டரிங் ஊழியர்கள் வரை இருபத்து நான்கு சங்கத் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. பதினைந்தாயிரம்
தொழிலாளர்களைச் சார்ந்து இருக்கும் சுமார்
ஒரு லட்சம் பேர்களின் வாழ்க்கை இன்று வீதிக்கு வந்திருக்கின்றது.
தயாரிப்பாளர்கள்,தொழிலாளர்களின் காரசாரமான அறிக்கைப் போர் ஊடகங்களில்
நடைப்பெற்று கொண்டிருக்கிறது. மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை இரு தரப்பும் பேசி புதுப்பிக்கப்பட வேண்டிய சம்பள
ஒப்பந்தம்,ஆறு மாத காலமாக இழுத்துக் கொண்டு வருகிறது. ஜெயலலிதா முதல்வராகப்
பொறுப்பேற்று ஆறு மாதங்கள் ஓடி விட்டன. போன ஆண்டே பேசியிருக்க வேண்டிய விசயம் இது
சட்டம் ஒரு இருட்டறை,சாதிக்கொரு
நீதி,சிவப்புமல்லி,நான் சிவப்பு மனிதன் என்று படம் எடுத்த இயக்குநர்
எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பாளராகி, இன்று தயாரிப்பாளர்
சங்கத் தலைவரும் ஆகிவிட்டார்.. கடந்த தி.மு.க ஆட்சியில் இவரும் இவர் மகன் நடிகர் விஜய்யும்
தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டிருந்தும் , இன்று தானே முன் நின்று தீர்க்கப் படவேண்டிய விசயத்தை தீர்க்காமல்
முதலாளிகள் சங்கம் சார்பாக , தொழிலாளர்களைப் பார்த்து சவால் விடுகிறார்.
தொழிலாளர்
சங்கமும்(பெப்ஸி) ஒப்பந்தம் எட்டப்படாத வரை, படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு
தருவதில்லை என அறிவித்திருக்கிறது.. தாங்கள் சொல்லும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு வேலை செய்யும்
ஆட்களை வைத்து படப்பிடிப்பு நடத்தப் போவதாக தயாரிப்பாளர் சங்கம் மீண்டும்
அறிவித்திருக்கிறது.
மூன்றாண்டுகளுக்கு முன்பு வாங்கிய தினக்கூலி ரூபாய்
முன்னூற்று ஐம்பதிலிருந்து,நாற்பது சதம் உயர்த்தி நானூற்று தொண்ணூறு தரவேண்டும்
என்பது தொழிலாளர் கோரிக்கை. மனம் திறந்து பேசினால் சுமுகத் தீர்வை எட்டமுடியும். தொழிலாளர்களின் இந்த
கோரிக்கை அதிகமானது அல்ல.
கூலியைத்
தவிர்த்து வாடகைப்படி,மருத்துவ செலவு,ஓய்வூதியம் என்று எந்தச் சலுகையும் இல்லாத
சூழலில்,விலைவாசி பிரச்சினை,நகரின் மையப் பகுதிகளில் குடியிருக்க வேண்டிய
தொழிற்சூழல்,பிள்ளைகளின் கல்விச்செலவு என்று பார்க்கிற போது, ஐநூறு தினக்கூலி அதிகப்படியானதில்லை.
தயாரிப்பாளர்களுக்கும் சிக்கல்கள் இருக்கும்.
கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்து ,படம் ஓடுமா?ஓடாதா?என்கிற அச்சம். வாங்கிய பணத்திற்கான
வட்டி: நடிகர்கள், இயக்குநர்கள், தொழிற்நுட்பக் கலைஞர்களின்
அதீதமான சம்பளம், விளம்பரச்செலவு, வரி, அரங்க வாடகை என பலவற்றையும் பார்க்க வேண்டி இருக்கும்.
இந்தப் பிரச்சினையை தீர்க்க நல்ல கதைதான் அடிப்படையான தேவை., திறமையான ,அனுசரித்துப்
போகக்கூடிய கலைஞர்கள்: இவர்கள் புதியவர்களாகக்
கூட இருக்கட்டும். தேவையான குறைந்தபட்ச விளம்பரம்; ரசிகர்கள் பார்க்கக்கூடிய அளவிலான
கட்டணம்: படம்
வெளியாகி ஐம்பது நாட்கள் ஆன பிறகு படத்தை, தொலைக்காட்சி, டி.வி.டி வடிவில் வெளியிட்டு உரிய லாபத்தைப் பெறுவது என
திட்டமிட்டு பணியாற்றினால் இழப்பு என்பதில்லை.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு
,திரைப்படம் கலையும் தொழிலுமான ஒன்று என்பது பிடிபட மாட்டேன் என்கிறது.புதிய பார்வை,வாசிப்பு
என்பதும் பலரிடம் இல்லை.போட்டப் பணத்தை
எப்படியாவது ஈட்ட வேண்டும் என்கிற
வெறிதான் இருக்கிறது. மாறி வரும் ரசிகர்களின் மனம்,புதியச்சூழல் இதையெல்லாம்.
கணக்கில் கொள்ளாத மசாலாக்களாக இருந்து
விட்டு ,தொழிலையே சிக்கலுக்கு உள்ளாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அதோடு முதலாளிகள் என்கிற
மமதை வேறு.
பிரபல நடிகர்கள்,இயக்குநர்கள்,, முக்கிய தொழில்நுட்பக கலைஞர்களின்
ஒப்பந்தத்திற்கு உட்படாத பல கோடி அளவிலான சம்பளம் மொத்தத் தொழிலையே நாசம் செய்து
கொண்டிருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸின் இன்றைய சம்பளம் பதினைந்து கோடி., ரஜினி, சூர்யா, அஜீத், விஜய், இவர்களின்
சம்பளமும் தலா பதினைந்து முதல் இருபது கோடி என்றால் தயாரிப்பு செலவு முப்பது, நாற்பது கோடி ரூபாய் என
உயர்ந்து , நியாமான வணிகம் போய் சூதாட்டமும்,கட்டை பஞ்சாயத்துமாகத்தான் தன்மை
மாறும்.
சிக்கல்களை பல தரப்பும் அறிந்தே
வைத்திருக்கிறார்கள்.எனினும் விட்டுக் கொடுக்க மாட்டாத போட்டி,வணிகவெறி மொத்தத்
துறையையே கெடுத்து விடும் என்பதை தொழிலாளர்கள் அல்லாத ஏனையோர் சிந்தித்து பார்க்க
வேண்டும்.அரசு பார்வையாளராக அல்லாமல்
,மூன்றாம் முக்கியத் தரப்பாக இருந்து, தொழிலாளர்களின் சம்பளம், மற்றும் ஆரோக்கியமான தொழிற்சூழலை
கட்டமைக்க வேண்டும்., திரைப்பட தொழில்
வளர்ச்சிக் கழகம் ஒன்றை அமைத்து நிரந்தரமான, சீரான வளர்ச்சிக்கு
அடித்தளமிட வேண்டும்.
- இரா.தெ.முத்து
0 comments:
Post a Comment