(உலகம் முழுவதிலும் மக்களால் நிராகரிக்கப்பட்ட நவீன தாராளமயக் கொள்கைகளை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. இந்தக் கொள்கைகளை அமலாக்குவதற்காக இந்திய தேசத்தை மிகவும் மோசமான முறையில் நாசமாக்கி வருகிற சூழலில்...
காலம் விடுத்துள்ள சவால்களும், இடதுசாரிகள் முன்னுள்ள இலக்குகளும் - கொல்கத்தாவில் நடைபெற்ற சிறப்புக்கருத்தரங்கில் பிரகாஷ் காரத் பேசிய உரையை இங்கே கொடுத்துளோம்.)
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பொருளாதார நெருக்கடி மேலும் மேலும் தீவிரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. நிதி மூலதனத்தால் இயக்கப்படும் உலகமயப் பொருளாதாரக் கொள்கை நீடித்து நிலைப்பதற்கு கடுமையான முறையில் திணறிக் கொண்டிருக்கிறது. பைனான்சியல் டைம்ஸ் போன்ற ஏடுகளில் எழுதக் கூடிய, பேட்டியளிக்கக்கூடிய வங்கியாளர்கள் கூட இன்றைக்கு இந்த உலகம் மார்க்ஸ் குறிப்பிட்ட நெருக்கடிக்கு பலியாகிக் கொண்டிருக்கிறது என எழுதுகிறார்கள். நூறாண்டுகளுக்கு முன்பே மாமேதை கார்ல் மார்க்ஸ் தீர்க்கதரிசனத்துடன் குறிப்பிட்ட முதலாளித்துவ நெருக்கடி இன்றைக்கு உண்மையாகிக் கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
நவீன தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்தால் இந்தியாவில் சுரண்டல் என்பது மிகக்கடுமையான முறையில் அதிகரித்துள்ளது. தொழிலா ளர்களுக்கு வழங்கப்படும் மொத்தக் கூலியுடன் ஒப்பிடும் போது முதலாளிகளின் மூலதனத்திற்கு கிடைக்கும் லாபத்தின் மதிப்பு 1980களில் 20 சதவீதம் என்ற அளவிலேயே இருந்தது. தொழிலாளர்கள் பெற்ற கூலியின் மதிப்புடன் ஒப்பிடும் போது இந்த லாபத்தின் உண்மை மதிப்பு குறைவானதாகவே இருந்தது. 1990களில் இதன் மதிப்பு 30 சதவீதமாக அதிகரித்தது. இன்றைக்கு 60 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது முதலாளித்துவ சுரண்டலின் விகிதம் மேலும் கடுமையான முறையில் அதிகரித்துள்ளது என்பதன் பிரதிபலிப்பே ஆகும். இந்த காலகட்டத்தில் புதிய புதிய வகையிலான தொழிலாளர்கள் உருவாகியுள்ளனர். அவர்கள் அனைவரையும் சுரண்டும் விதத்தில், சுரண்டலும் புதியபுதிய வடிவங்களை எடுத்திருக்கிறது.
இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இடதுசாரிகள் முன்புள்ள முதல் சவால் என்பது, நாடு முழுவதும் பரவிப்படர்ந்துள்ள முறைசாரா தொழிலாளர்களை மிகப்பெரிய அளவிற்கு அணி திரட்ட வேண்டும் என்பதே. இன்றைக்கு நாட்டிலுள்ள தொழிலாளர்களிலேயே ஈவி ரக்கமின்றி சுரண்டப்படுகிற, அரசின் கொள்கைகளால் தாக்கப்படுகிற உழைக்கும் மக்களாக முறைசாரா தொழிலாளர்கள் இருக்கிறார்கள். நவீன தாராளமயக் கொள்கைகள் விடுக்கும் சவால்களை மிகவும் தீரத்துடன் எதிர்கொள்ள இந்த இலக்கை நாம் எட்டியே தீரவேண்டும், இந்த விதத்தில் சமீபகாலத்தில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை கட்டுவதற்கு பணியாற்றிக்கொண்டிருக்கின்றன என்பதைப் பார்க்கிறேம். அது வரவேற்கத்தக்கது. அனைத்துத் தொழிற் சங்கங்கள் ஒன்றுபட்டு பிப்ரவரி மாதம் நடத்தவுள்ள நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளில் காண்ட்ராக்ட் தொழிலாளர்களின் பணி மற்றும் சமூகப் பாதுகாப்பு குறித்த கோரிக்கையும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
நவீன தாராளமயக் கொள்கைகள் இந்திய விவசாயத்தில் வரலாறு காணாத சேதத்தை, பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இடுபொருட்களின் விலை வானளாவ உயர்ந்துள்ளது. அரசின் உதவி இல்லாததால் 2.66 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். மேற்குவங்கத்திலும் இடது முன்னணியின் ஆட்சி தற்போது இல்லாத நிலையில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டிருக்கிறது. கடந்த நான்கே மாதங்களில் இந்த மாநிலத்தில் 21 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள். கேரளத்தில் இடதுஜனநாயக முன்னணி ஆட்சிக் காலத்தின் போது வயநாடு மாவட்டத்தில் விவசாயிகளின் தற்கொலை தடுக் கப்பட்டிருந்தன. ஆனால் இப்போது கடந்த ஒரு மாத காலத்திற்குள் ஏழு விவசாயிகள் பலியாகியுள்ளனர். இந்தப் பேரழிவு மனிதர்களால் உருவாக்கப்பட்ட அழிவு; நாசகரக்கொள்கைகளை பின்பற்றும் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் தலைமையிலான அரசுகளால் உருவாக்கப்பட்ட அழிவு, நாடு முழுவதும் விவசாயிகள் மிகப்பெரும் அளவில் அணிதிரட்டப்படுவதன் அவசியத்தை இது உணர்த்துகிறது, தொழிலாளர்-விவசாயி ஒற்றுமையை மேலும் மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறது.
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை எப்படியேனும் கொண்டுவந்துவிட வேண்டுமென ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு துடியாய்த்துடிக்கிறது, இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு இந்திய அரசு அடிபணிந்து கொண்டிருக்கிறது. இந்தியாவிற்குள் எப்படியேனும் அமெரிக்காவின் வால்மார்ட் கம்பெனியை கொண்டுவருவதே இப்போதைக்கு மன்மோகன் அரசின் முன்னுரிமைப் பணியாக இருக்கிறது. எந்தவிதத்திலும் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை இடதுசாரிக் கட்சிகள் அனுமதிக்க மாட்டார்கள்.
0 comments:
Post a Comment