ஒவ்வொரு ஊருக்கும் ஒரு திருவிழா இருக்கும். அந்தத்திருவிழா அந்த ஊருக்கான பெருமையை உலகெங்கும் கொண்டு சேர்க்கும். அத்தகைய திருவிழாக்களின் குறை என்னவென்றால், அவை ஏதாவது ஒரு சாதி அல்லது ஏதாவது ஒரு மதத்தால் முன்னெடுப்பதால் அந்தந்த சாதி அல்லது அந்தந்த மதத்தினரால் மட்டுமே கொண்டாடப்படும், இந்த வகையில் பகுத்தறிவாளர்களும் முற்போக்கு சிந்தனையாளர்களும் ஏற்றுக்கொள்கிற திருவிழா என்று ஒன்று இல்லை என்றே சொல்லலாம்.
ஆனால், எல்லா சாதியினராலும், எல்லா மதத்தினராலும், ஏன் பகுத்தறிவாளர்களாலும் முற்போக்கு சிந்தனையாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது மட்டுமல்ல அனைவராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிற திருவிழாவாகவே மாறிப்போனதுதான் திருப்பூர் புத்தகக்கண்காட்சி.
ஒவ்வொரு புத்தகக் கண்காட்சி முடிந்ததுமே, அடுத்த புத்தகக் கண்காட்சி எப்போது வருமோ என்கிற ஏக்கத்தையும், ஆண்டு துவங்கும்போதே ஆஹா.. புத்தகக் கண்காட்சி வந்துவிட்டது என்கிற ஆர்வத்தையும் வயது வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் ஏற்படுத்துகிற, வயதில் மூத்தவர்களைக்கூட குழந்தைகள் ஆக்குகிற ஆற்றல் வாய்ந்த திருப்பூர் புத்தகக்கண்காட்சி வந்தே வந்து விட்டது.
பாரதி புத்தகாலயமும், பின்னல் புக் டிரஸ்டும் இணைந்து நடத்துகிற 9வது திருப்பூர் புத்தகக் கண்காட்சி வருகிற 25ம் தேதி தொடங்கி அடுத்த 5ம் தேதி வரை நடக்கவுள்ளது.
வெறுமனே மகிழ்ச்சிக்கொண்டாட்டங்களுக்கு மட்டுமல்ல, ஒத்த சிந்தனையாளர்களை ஒரே இடத்தில் சந்திக்கப்போகிறோம் என்பது மட்டுமல்ல, கவிஞர் இன்குலாபின் வரிகளில் சொல்வதானால், “இனியும் இச்சமூகம் ஒரு நொடி கூட இப்படியே நீடிக்கக்கூடாது” என்று இச்சமூகம் என்றைக்காவது ஒரு நாள் மாறிவிடாதா என்ற கனவையும் அதற்கான உழைப்பையும் தேக்கி வைத்திருக்கிற சமூக மாற்றத்தை தன்னைக்காட்டிலும் அதிகமாக நேசிக்கிற ஒரு மக்கள் தொகுப்பை ஒரே இடத்தில் சந்தித்து அளவளாவப்போகிறோம் என்கிற எண்ணமே எதிர்பார்ப்புக்கான அடிப்படைக்காரணமாக அமைந்து விடுகிறது.
இன்றைக்கும் பெரும்பாலான சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுகிறோம். சமூக ஏற்றத்தாழ்வுகளின் வெளிப்பாடுகளுக்கு எதிராகப் போராடுகிறோம். உதாரணமாக, சமூக ஏற்றத்தாழ்வுகளின் வெளிப்பாடான தீண்டாமை, வன்கொடுமை, வறுமை, வேலையின்மை போன்றவற்றுக்கு எதிராகத்தான் போராடுகிறோம். ஆனால், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு அடிப்படையாக இருக்கிற மக்களின் அறியாமையை அகற்ற நம்மால் முடிவதில்லை. வன்கொடுமை தீண்டாமையின் வெளிப்பாடு என்றால், தீண்டாமை சாதியின் வெளிப்பாடு. சாதி அறியாமையின் வெளிப்பாடு. அறிவு இருக்கும் இடத்தில் கண்டிப்பாக சாதிக்கு இடமில்லை.
வழக்கறிஞர்களை உருவாக்குகிற சட்டக்கல்லூரி இங்குண்டு. மருத்துவர்களை உருவாக்குகிற மருத்துவக்கல்லூரிகள் இங்குண்டு. பொறியாளர்களை உருவாக்குகிற பொறியியல் கல்லூரிகள் இங்குண்டு. ஆனால் மனிதர்களை உருவாக்குகிற கல்லூரி எங்கே என்று தேடினால், தேடாமலே கிடைப்பதுதான் புத்தகக்கண்காட்சி.
இன்றைக்கு சொல்லணா வேதனையாக, பள்ளிக்கூடங்களில் சாதி சங்கங்கள் உருவாகின்றன. மாணவர்கள் சாதிரீதியாகப் பிரிந்து சண்டையிட்டுக் கொள்கின்றனர். அவ்வாறான மாணவர்களை பிரம்பால் அடிக்கக்கூட ஆசிரியர் பெருமக்கள் தயார் ஆக இருக்கிறார்கள் ஆனால், மாணவர்களின் உள்ளத்தில் சாதி உணர்வு வராமல் இருக்கும் வகையில் சொல்லித்தரலாமே என்கிற கேள்விக்கு எளிதாக வருகிற பதில், “அது எங்க சிலபசில இல்ல சார்” என்பதுதான்.
மாணவர்களின் மனதை உழுது பண்படுத்தி மனிதர்களாக வெளியே அனுப்ப வேண்டிய பள்ளிக்கூடங்கள் அதன் கடமைகளைச் செய்யாத நிலையில், அந்த கடமையைச் செவ்வனே செய்கிற ஒரே பழக்கம் புத்தக வாசிப்புத்தான் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது. அத்தகைய புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்துகிற உற்சாகப்படுத்துகிற புத்தகக்கண்காட்சியை வெற்றிபெறச்செய்வது சமூக மாற்றத்தை நேசிப்பவர்களின் கடமையாகும்.
- நீலவேந்தன்
புத்தகங்கள் பூத்த நந்தவனத்தில் உலவி வந்த இணையத் தேனீக்களுக்கு, அன்பான மரியாதை ... வரும் சன.19 ஆம் தேதி, திருப்பூர், கே.ஆர்.சி சிட்டி சென்டரில் ”புத்தகக் கண்காட்சியும் புதிய ஊடகமும்” எனும் தலைப்பில் விவாத அரங்கம் நடக்க உள்ளது. வாய்ப்புள்ள நட்புக்கள் வருக ...!
சொல்வது எளிது! செயல்படுவது அரிது.
ReplyDeleteஅதுவும் பித்தலாட்டமும் போலிகளும் நிறைந்த உலகத்தில்...........