இந்தியாவில் தொலைத்தொடர்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு பெரும் நிறுவனமான வோடாபோன் நிறுவனம், இந்தியாவில் தொழில் நடத்துவது குறித்து வெளிநாட்டில் செய்துகொண்ட பேரத்திற்கு, இந்திய வருமான வரித்துறையிடம் வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று புதிரான ஒரு தீர்ப்பினை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. இதனால் சட்டச்சிக்கலும் எழுந்துள்ளது. இதற்கு எப்படித் தீர்வு காண்பது என்பது குறித்து மத்திய சட்டத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் ஆலேசனை நடத்தி வருகின்றனர்.
பிரிட்டனை மையமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டுத் தொலைத் தொடர்பு நிறுவனம் வேடாபோன் இண்டர்நேஷனல் ஹேல்டிங்ஸ். இந்நிறுவனம், கடந்த 2007ம் ஆண்டு மே மாதம், இந்தியாவில் தொலைத் தொடர்புத் தொழிலில் ஈடுபட்டு வந்த ஹட்ச்சன்-எஸ்ஸார் லிமிடெட் (எச்இஎல்) நிறுவனத்திடமிருந்து 67 சதவீதப் பங்குகளை 11.2 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கியது. ஹட்ச்சன் - எஸ்ஸார் லிமிடெட் நிறுவனம் ஹாங்காங் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் இந்தியாவில் செல்போன் தொலைத்தொடர்புத் தொழிலில் ஈடுபட்டு பிரபலமானது. நாடு முழுவதும் பரவலான வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த நிறுவனத்திடமிருந்து 67 சதவீதப் பங்குகளை வேடாபோன் நிறுவனம் வாங்கியதால், ஹட்ச் செல் போன் இணைப்புகள் அனைத்தும் வேடாபோன் இணைப்புகளாக பெயர் மாற்றம் பெற்றன. ஹட்ச் நிறுவனத்தின் பங்குகளை வேடாபோன் நிறுவனம், நெதர்லாந்திலும் கேமேன் தீவிலும் இயங்குகிற தனது இரண்டு கிளை நிறுவனங்கள் மூலமாக ஹாங்காங்கில் நடைபெற்ற ஒரு பேரத்தின் போது கைமாற்றிக் கொண்டது.
வருமானவரி நோட்டீஸ்;
இந்நிலையில், இந்தியாவில் பெரிய அளவிற்கு தனது கிளைகளை வேடாபோன் நிறுவனம் பரப்பியது. இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை வேடாபோன் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. ஹட்ச் நிறுவனத்திடமிருந்து வேடாபோன் நிறுவனம் விலைக்கு வாங்கிய தொலைத்தொடர்பு இணைப்புகள் என்ற மூலதனத்தால் கிடைத்த வருமானத்திற்கு உரிய வரியை செலுத்த வேண்டும் என அந்த நோட்டீஸில் கூறியிருந்தது. இதன்படி மொத்தம் ரூ.11 ஆயிரம் கோடி வருமான வரி செலுத்த வேண்டுமென கூறப்பட்டது. ஆனால், இந்திய அரசுக்கு நியாயமாக செலுத்த வேண்டிய ரூ.11 ஆயிரம் கோடி வருமான வரியை செலுத்தாமல் தப்பிப்பதற்கான வழிகளில் வேடா போன் நிறுவனம் இறங்கியது. இது தொடர்பான வழக்கு மும்பை உயர்நீதி மன்றத்திற்கு 2008ம் ஆண்டு சென்றது.
இந்த வழக்கில், வேடாபோன் நிறுவனம் ஹட்ச் நிறுவனத்துடன் செய்து கொண்ட பேரத்தின் மூலமாக இந்தியாவில் பெருமளவிற்கு லாபம் அடைந்திருப்பதால், அதன்மீது வரி விதிப்பது நியாயமானது என்றும் அந்த வரியை அந்நிறுவனம் செலுத்தியே தீரவேண்டும் என்றும், வருமான வரித்துறைவாதிட்டது. ஆனால் வேடாபோன் நிறுவனம், ஹட்ச் நிறுவனத்துடனான தனது பேரம் இந்தியாவிற்கு வெளியில் நடந்தது என்பதால், இந்திய வருமான வரித்துறைக்கு வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று வாதிட்டது. எனினும், இந்த பேரத்தின் மூலமாக வேடாபோன் நிறுவனம் இந்தியாவிலேயே தொழில் நடத்துகிறது; அந்த தொழிலின் மூலம் லாபம் ஈட்டுகிறது. எனவே வரி செலுத்துவது அவசியம் என்று மீண்டும் வருமான வரித்துறை தனது கருத்தில் உறுதியாக நின்றது. இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், வருமான வரித்துறைக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து வேடாபோன் நிறுவனம் செய்த மேல்முறையீட்டை 2008 டிசம்பரில் மும்பை உயர்நீதிமன்றம் நிராக ரித்தது.
உச்சநீதிமன்றம்
இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் வேடாபோன் நிறுவனம் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்தது. வேடாபோன் நிறுவனத்தின் பேரத்தின் மீது வரி விதிக்க சட்டவிதிகளின்படி வருமான வரித்துறைக்கு அதிகாரம் உண்டா என்பது குறித்து தெளிவு படுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், 2010ல் இடைக்காலத் தீர்ப்பாக, ரூ.11 ஆயிரம் கோடி வரியில் ரூ.2 ஆயிரத்து 500 கோடியை மட்டும் முதல்கட்டமாக செலுத்துமாறு வேடாபோன் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இவ்வழக்கில், மேற்கண்ட நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு அமைந்தால், இந்தப்பணத்தை வட்டி யோடு திருப்பிச் செலுத்த வேண்டுமென்றும் வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டது.
தீர்ப்பு
இந்நிலையில், இவ்வழக்கில் வேடாபோன் நிறுவனத்திற்கு சாதக மாக வெள்ளியன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. வருமான வரித்துறையின் வாதத்தை மறுத்து, வெளிநாட்டில் செய்துகொண்ட பேரத்தின் மீது இந்திய வருமான வரித்துறை வரிவிதிப்பதற்கு அதிகாரமில்லை என்று தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது. நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஸ்வதந்தர் குமார் ஆகியோர் தனித்தனியாக தீர்ப்பை எழுதியுள்ளனர். எனினும் இருவரும் ஒரே கருத்தையே பிரதிபலித்துள்ளனர். எனவே தீர்ப்பு வேடாபோன் நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்தது.
தீர்ப்பை வெளியிட்ட நீதிபதிகள், வேடாபோன் நிறுவனத்திற்கு விதிக்கப் பட்ட ரூ.11 ஆயிரம் கோடி வருமான வரியை ரத்து செய்வதாகவும், ஏற்கெனவே அந்நிறுவனம் செலுத்திய ரூ.2 ஆயிரத்து 500 கோடியை 4 சதவீத வட்டியுடன் 2 மாத காலத்திற்குள் அரசு திருப்பிச் செலுத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டனர்.
வருமான வரித்துறையின் வரம்பு குறித்தும், இந்தியாவில் தொழில் நடத்தும் ஒரு நிறுவனம் இந்தியாவில் லாபம் சம்பாதிப்பதற்காக, வெளிநாட்டில் செய்துகொள்ளும் ஒரு பேரத்தின் மீது வரி விதிக்க முடியாதா என்பது குறித்தும் இத்தீர்ப்பால் சட்டச்சிக்கல் எழுந்துள்ளது. இது குறித்து மத்திய அரசு ஆலேசிக்கிறது
வொடொபோன் கம்பெனியைப் பயன் படுத்தும் வாடிக்கையாளர்கள் அதன் சேவை வேண்டாம் என்று மறுத்து பாரத் சஞ்சார் நிறுவனத்திற்கு போவொம் என்று ஒட்டுமொத்தமாக கூற முடியுமா? ---காஸ்யபன்
ReplyDelete