மண்வாசனை
நூறாயிரம் வீரர்கள் தொடர
சென்றிருக்கிறாய்
குதிரைகளோடும் யானைகளோடும் வீரர்கள்
வாட்களையும் வேல்களையும்
ஏந்திப் பின் தொடர்கிறார்கள்
உன் உடல் கவசங்களால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது
உன் கண்களில் நிலத்தின் மீதான வெறி சுடர்கிறது
புழுதியால் காற்று நிரம்புகிறது
எதிரிகளின் நிலம் அதிர்கின்றன
நான் அறிவேன்
நீ விரும்பிய நிலத்தை வென்று திரும்புவாய் என
உனது நிலத்தில்
உன்னுடையவள் மண்வாசனை பூக்க விரிந்திருக்கிறாள்
மழையற்று வறண்ட நிலம் பிளந்திருக்கிறது
இந்த மண்வாசனை
நீ நுகர்கையில்
இந்த நிலத்தின் சுனை பெருகத்தொடங்கும்
அதில்
பேச மறந்த நாம் மிதந்து கொண்டிருப்போம்.
மணலில் அலையும் தனிமை
பாலை நிலத்தை கடந்து கொண்டிருக்கிறேன்
பெயரறியாத விலங்குகளின் அசைவுகள்
பறவைகளின் சிறகடிப்புகள்
தொடர்ந்து கொண்டிருக்கின்றன
அகன்ற நிலவெளியை நிலவு நிறைத்துக் கொண்டிருக்க
காட்டுச்செடிகளின் நிழல்
இருண்மையை கவிழ்த்துகிறது மனதில்
இது
ஒரு நீண்ட பயணம்
இரவும் பகலும் அச்சம் தந்து கொண்டேயிருக்க
முடிவற்றுப் போய்விடும் காலம்
முன்னும் பின்னும் எவருமில்லையென்கிறபோது
தனிமை மணலில் புகும் பாம்பாய் நெளிகிறது.
நினைவெனும் பெருவெளி
பனிக்கால வெயில்
உன் நினைவுகளிலிருந்து எழுப்புகிறது என்னை
பூக்களுக்கு நிறத்தைத் தூவியபடி நகர்கிறது வெயில்
கொடியது
இப்பனி அல்ல
பனிக்காலத்தில் வரும் உன் நினைவுகள்தான்
அந்த நினைவுகள் அக்கினிக்காலத்து சூரியஒளியைப்போல
சுட்டெரித்துக் கொண்டிருக்கின்றன
பறவைகளை
கோடையில் தண்ணீருக்கென அலையச் செய்வதுபோல
பனியிலிருந்தோ
அந்தக்காலத்தின் துயரம் மிகுந்த சம்பவங்களிலிருந்தோ
விடுபட அலைகிறேன்
அந்தப் பருவம் முழுக்க
வெற்றுப் பாதங்களோடு
பளிங்குக்கற்களை மிதித்து நடந்து செல்கிறேன்
நேற்றிரவு
நீ நடந்து சென்ற பாதை
அனலென சுட்டெரிக்கிறது
கடந்தோ
மிதித்தோ
செல்வது எப்படியென தயங்குகிறேன்
என் முன் விரிந்திருக்கிறது
உன் நினைவெனும் பெருவெளி
நினைவின் சுவை
வண்டுகள் ரீங்காரிக்கும் இவ்விரவில்
அறியப்படாத சுவையொன்று
நாவில் ஊறியபடி இருக்கிறது
இரவுக்குப் முந்திய பகல்
நலிவைத் தருவதாதாக இருந்தது
மழை பெய்து குளிர்ந்த தினைச்செடிகள் செழித்திருக்க
மலைச்சரிவில்
மூங்கிலின் நிழலும்
வெயில் படிந்த அவன் முகமும்
எனக்குள் விம்மியடங்குகின்றன
நீள்மலைத் தொடர் காட்டில்
உறங்காதிருக்கும் வண்டுகள்
இசைத்துக்கொண்டிருக்கின்றன நலிவின் பாடலை
இரவெல்லாம்
மூங்கிலைத் தாலாட்டும்
தென்றலின் பாதையை
துளையிடும் வண்டுகள்
மழையில் நனைந்த தினைச்செடிகளில் மலரும் சிரிப்பை
அவனிடம்
நினைவூட்டினால்தான் என்ன.
நெருப்பு
காய்ந்த கிளைகளைச் சேர்த்து தீயிடுகிறேன்
எரிந்தடங்குகிறது
பூந்தோட்டத்தைக் கடக்கிற பொழுதை
கணக்கிட்டுக் காத்திருந்த நேற்றைய நினைவுகள்
அதிகாலை மார்கழியில்
குளிர்காயும் சிறுமிகளுடன் சேர்ந்து கொள்கிறேன்
காய்ந்தக் கிளைகள் தன் பட்டைகள் வெடிக்க எரிகிறது
கூடவே பற்றியெறிவது
மலராத சில பூக்களும்தான்
- சக்திஜோதி
மிகவும் அருமை
ReplyDelete