இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க அந்நாட்டு அரசு முன்வரும் என்று நம்புவதாக இந்திய அரசு தெரிவித் துள்ளது.
இலங்கைப் பிரச்சனையைப் பொறுத்தவரை, நம்பிக்கையை புதுப்பிப்பதையே மிகப்பெரிய காரியமாக மத்திய அரசு செய்து வருகிறது. தன்னுடைய நம்பிக்கை பொய்த்துப்போவது குறித்து அது ஒருபோதும் தளர்ச்சியடைவது இல்லை.
இலங்கையில் இறுதிகட்ட மோதலின்போது ராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான எந்தவொரு விசாரணைக்கும் தன்னை உட்படுத்திக்கொள்ள இலங்கை அரசு தயாராக இல்லை. “படிப்பினைகளும், மறுபரிசீலனை குழுவும்” என்ற பெயரில் இலங்கை அரசு நியமித்தது. அந்தக் குழுவின் அறிக்கை டிசம்பர் 16ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதோடு பொதுமக்கள் பார்வைக்கும் வெளியிடப்பட்டது.
தற்போது நிலவும் சூழலில் தமிழர்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதன் மூலமே அங்கு நிலவும் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றும், அதன் மூலமே புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வழிவகை ஏற்படும் என்றும் அந்தக் குழு தனது அறிக்கையில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை விரைவாக மறுகுடியமர்த்த வேண்டும் என்றும், நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தவேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது. இதை ஏற்பது குறித்து இலங்கை அரசு எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச தரத்திலான விசாரணை வேண்டும் என்று நிர்ப்பந்தம் எழுந்ததாலேயே இலங்கை அரசு இந்தக்குழுவை அமைத்தது.
இந்தக் குழுவின் அறிக்கை அடிப்படையில் இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக இந்திய அரசின் அயல்துறை செய்தித் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இந்திய தரப்பில் வலியுறுத்தப்படுவது இது முதன்முறையல்ல. சர்வதேச அளவில் இலங்கை அரசு சிக்கலில் மாட்டிக் கொண்டால், அந்நாட்டு அரசை மீட்கக் காட்டும் அக்கறையில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட, முள்வேலி முகாம்களில் சிக்கியுள்ள தமிழ் மக்களை மீட்பதற்கு இந்திய அரசு காட்டுவதில்லை என்பது உறுத்தும் உண்மையாகும்.
தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும். தமிழ் மொழிக்கு உரிய அங்கீகாரம் வழங்கவேண்டும். அனைத்து அலுவலகங்களிலும் தமிழ்பேசும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளை நியமிக்கவேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். அவர்களை மறுகுடியமர்த்த வேண்டும் என்றெல்லாம் இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தக் கோரிக்கைகள் மிகவும் அடிப்படையானவை.
ஆனால் அறிக்கைவிட்டதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக மத்திய அரசு கருதக் கூடாது. ராஜீய ரீதியில் ராஜபக்சே அரசுக்கு உரிய நிர்ப்பந்தம் கொடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
0 comments:
Post a Comment