மீண்டும் தர்ம யுத்தத்தைத் துவங்கி விட்டார் அன்னா ஹசாரே! நாளை முதல் மூன்று நாட்கள் அவருக்கு மிகவும் பிடித்தமான அதே உண்ணாவிரதம்தான். ஆனால் இந்த தடவை டில்லிக்குப் பதிலாக ‘பாலிவுட்’ நகரமான மும்பையை மிகப் பொருத்தமாகத் தேர்ந்தெடுத்து இருக்கிறார். பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா குறித்து விவாதம் நடக்கிறபோது இந்த உண்ணாவிரதம் எதற்கு என்று, ஹசாரேவின் கதர்க்குல்லாயைத் தூக்கி அவரது மண்டையில் ஒரு குட்டு வைத்தது மும்பை உயர்நீதிமன்றம். அந்த வீக்கத்தை மறைக்க கதர்க்குல்லாயை மீண்டும் தலையில் வைத்துக்கொண்டு நாடுகாக்க புறப்பட்டுவிட்டார். நாடாளுமன்றம், நீதிமன்றமெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டில்லை!
பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ‘அந்த மசோதாவே ஒரு சோதா’ என்று அன்னா ஹசாரே கொதித்து எழுந்தார். அந்த (ம)சோதாவிலேயே ஆயிரம் நொள்ளைகள் சொல்லின எதிர்க் கட்சிகள் எல்லாம் சேர்ந்து. பிரதமரை விசாரிப்பது, சி.பி.ஐயையும் இதன் வரம்பிற்குள் கொண்டு வருவது, அமைப்பில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு செய்வது என பல விஷயங்களில் முரண்பட்டு நின்றன. ஆனால் கிட்டத்தட்ட ஒரு விஷயத்தில் ஒருமித்த கருத்து இருந்தது. அது, லோக்பால் அமைப்பு நாடாளுமன்றத்துக்கு கட்டப்பட்டதாக இருக்கும் என்பது. அன்னா ஹசாரேவினர் இந்த அடிப்படையான விஷயத்தில் முற்றிலும் மாறுபடுகின்றனர். லோக்பால் அமைப்பு யாருக்கும் கட்டுப்படாத சுயேச்சையான அமைப்பாக இருக்க வேண்டும் என்கின்றனர். அதாவது, அன்னா ஹசாரே குழுவினரைப் போல!
சீரியஸாக பேச வேண்டுமென்றால், இந்த முரண்பாடு என்பது தீர்க்கப்படக் கூடியது அல்ல. நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்ட அரசியலமைப்பில், அன்னா ஹசாரேவின் இந்த கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு இருக்காது. அன்னா ஹசாரேவுக்கும் இது தெரியும். ஆனால் இதை வைத்துக்கொண்டு, தனது அம்பறாத்துணியிலிருந்து அம்புகளை விட்டுக்கொண்டேயிருப்பார். டெல்லியில் உண்ணாவிரதமிருப்பார். மும்பையில் உண்ணாவிரதமிருப்பார். சிறை நிரப்புவோம் என குதிப்பார். இவையனைத்தும் ஊழலில் அம்மணமாகி நிற்கும் காங்கிரஸுக்கு எதிராகவும், பா.ஜ.கவுக்கு ஆதரவாகவும் மக்களின் மனநிலையை தகவமைக்கும் என்பதுதான் அவரது வியூகம். அல்லது அவரை ஏவிவிட்டவர்களின் வியூகம்.
இதனைப் புரிந்துகொண்டதால்தான் காங்கிரஸ் ‘அன்னா ஹசாரேவுக்கும் ஆர்.எஸ்.எஸுக்கும் தொடர்பு இருக்கிறது’ என அன்னாவின் தோலை உரிக்கப்பார்த்தது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் நானாஜி தேஷ்முக்குடன் அண்ணா ஹசாரே இருந்த புகைப்படத்தை ஒரு இந்தி நாளிதழ் வெளியிட்டதையொட்டி, ஹசாரேவுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது என்று திக்விஜய் சிங் கூறிவந்தார். இதனால், அவருடைய ஊழலுக்கு எதிரான போராட்டம் உள்நோக்கம் கொண்டது என்று காங்கிரஸ் தெரிவித்தது. உடனே நானாஜி தேஷ்முக்குடன் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் உரையாடும் படத்தை வெளியிட்டு, அப்துல் கலாம் ஆர்.எஸ்.எஸ்காரரா என்று கேள்வி எழுப்பினார்கள் அன்னா ஹசாரேவினர். அதே நானாவுடன் திக்விஜய்சிங் உட்கார்ந்திருக்கும் படத்தை கிரண்பேடி வெளியிட்டு, திக்விஜய்சிங்குக்கும் ஆர்.எஸ்.எஸ்சுக்கும் தொடர்பு உண்டு என்று டேபிளைத் திருப்பினார். நான் மத்தியப்பிரதேச முதலமைச்சராய் இருந்தபோது ஒரு நிகழ்வில் எடுத்த படம் அது என வேகவேகமாக முகத்தைத் துடைக்க வேண்டிய நிர்ப்பந்தம் திக்விஜய்க்கு வந்தது. “நீ பைத்தியம்”, “இல்லை நீ பைத்தியம்” என ஒருவரையொருவர் சட்டையைக் கிழித்துக்கொண்ட அழுகுணித்தனங்களுக்குப் பிறகு நாளை உண்ணாவிரதம் ஆரம்பமாகிறது.
‘உண்ணாவிரதத்திற்கு அனுமதி இல்லையென்றால் சிறையில் உண்ணாவிரதமிருப்பேன், ‘போராட்டத்திற்கு நன்கொடையாக காசோலைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்’, ‘ஒரு லட்சம் பேர் அவரோடு போராட்டத்தில் கலந்து கொள்ள கையெழுத்திட்டு விட்டனர்’ என மாறி மாறி செய்திகளால் ஒருவாரமாக புழுதி கிளப்பிக்கொண்டு இருந்த ஊடகங்கள் கடைசியாக ‘அன்னா ஹசாரேவுக்கு உடல்நலமில்லை’ என ஒரு வெடிகுண்டையும் துக்கிப் போட்டன. கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் விளையாடாவிட்டால் ரசிகர்கள் துடிதுடித்துப் போவது போல நாடே இதயத்தைப் பிடித்து பார்த்துக்கொண்டு இருந்த நிலையில், இன்றைக்கு வந்த செய்தி எல்லோர் நெஞ்சிலும் பாலை வார்த்திருக்கிறது. ஆமாம், அன்னா ஹசாரேவுக்கு உண்ணாவிரதம் இருக்க முழுத் தகுதியிருக்கிறது என மருத்துவர்கள் உடல் தகுதிச் சான்றிதழ் அளித்துவிட்டனர். அப்பாடி, ஆட்டம் உண்டு! மகாத்மாவின் பஜனைகளோடு நிகழப்போகும் ஒரு காவியத்திற்கு இணையான காட்சிகளை அப்படியே மக்களுக்குக் காட்டுவதற்கு காமிராவை எந்த இடங்களில் வைக்கலாம் என ஊடகங்கள் உற்சாகமாக மண்டையை உடைத்துக்கொள்ளலாம்.
உண்ணாவிரதம் இருப்பதற்கு அன்னா ஹசாரே அவரது கிராமத்தில் இருந்து ‘தரை வழியாக மும்பைக்கு வருகிறார்’, ‘தரை வழியாக மும்பைக்கு வருகிறார்’ எனச் சொல்லி ‘தரையை’ ஒரேயடியாக தேய்த்தார்கள். வானத்துத் தேவன், தரை வழியாக வருவது சாதாரணமான விஷயமா,என்ன? இப்போது , தரை வழியாக வரும் அவருக்கு ராயல் என்பீல்டு இருசக்கர வாகனங்கள் சூழ பாதுகாப்பு அரணாய் வருமாம். அண்மையில் வந்திருக்கும் அடுத்த செய்தி இது. பல்லாண்டு, பல கோடி ஆண்டு என்பீல்டு நிறுவனம் வாழ்க. நாட்டில் ஊழலை அடியோடு ஒழிப்பதற்கு இவர்கள் எல்லோரும்தான் எவ்வளவு துடிக்கிறார்கள். ஒரு 36 ருபாய் கையில் இல்லாமல் வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கும் இழவெடுத்த இந்தியனுக்கு இதன் அருமையும், பெருமையும் என்ன தெரியும்?
இதோ அன்னா ஹசாரே மேடையேறுகிறார். ரெடி ஸ்டார்ட் காமிரா!
தொடர்புடைய பதிவுகள்
|
//அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்துக்கு வெளியே எதிர்பார்த்த கூட்டம் சேராமல், சோர்வுற்று காய்ச்சலில் உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹசாரேவும் இதனை ஆதரிக்கவில்லை.
ReplyDelete// ஹசாரேவோட ஒன்னா மேடையில கல்லாக் கட்டிய பிருந்தா கரத், பரதனையும் சேத்துதானே சொல்றீங்க?