Saturday, December 10, 2011

இந்திய அறிவியல் = ராமன் விளைவு?


ஒரு விதத்தில் இந்திய அறிவியல் என்பதே ராமன் விளைவாக இருக்குமோ என சொல்லுமளவு சி.வி. ராமனின் ஆளுமையும் ஈகோவும் புகுந்து விளையாடி இருப்பதை சமீபத்திய இரண்டு இந்திய அறிவியல் நூல்கள் நமக்குத் தம்மையும் அறியாமல் முன்வைக்கின்றன. இந்திய அறிவியல் நூல்களை வாசிக்க நமக்கு ஏகத்திற்கு பொறுமை வேண்டும். அது பற்றி பிறகு பார்ப்போம். இந்தியாவில் அறிவியலின் வரலாறு (A conscise history of science of India), யுனிவர் சிட்டி பிரஸ் வெளியீடு வெகுஜன அறிவியல் வெளியீடு (Popular science) விஞ்ஞானி பி.வி.சுப்பராயப்பா, டி.எம்.போஸ் மற்றும் எஸ்.என். சென் ஆகியோர் இணைந்து எழுதி இருக்கிறார்கள் என அட்டையில் இருந்தாலும் உள்ளே பெரும்பாலும் அது பி.வி. சுப்பராயப்பாவின் எழுத்து வடிவிலேயே புனையப்பட்டுள்ளது.

அடிப்படையான இந்திய அறிவியலின் சரித்திரம் அறிய இந்த நூலைப் பரிந்துரைப்பேன். பிரிட்டிஷ் ஆட்சி இந்திய விஞ்ஞானிகளை ஒடுக்கிடச் செய்த பல சதிகள் தகுடிதித்தங்களை புத்தகம் (மறைமுகமாக) சுட்டுகிறது. ஏற்கெனவே இந்திய அறிவியல் குறித்த ஜகதித் சிங்கின் யெமினென்ட் இந்தியன் சைன்டிஸ்ட்ஸ் (Eminent of indian scientists) பார்த்தசாரதியின் கிளிம்சஸ் ஆஃப் இண்டியாஸ் ஸ்டாடிஸ்டிக்கல் ஹெரிட்டேஜ் (Glimps of Indian Statistical heritage) ஆகிய புத்தகங்களையும் ஜி.வெங்கடராமன் எழுதிய இந்திய அறிவியல் குறித்த ஆறு புத்தக வரிசை (யுனிவர்சிட்டி பிரஸ் வெளியீடு)யையும் நான் அவ்வப்போது கிடைத்த சந்தர்ப்பங்களில் வாசித்திருக்கிறேன். அதிலும் ... நாலு பெட்டிச் செய்திகளுடன் வெங்கட்ராமன் எழுதிச் சென்ற வழி தனிவழி.

இந்திய அறிவியலைப் பற்றி பேசுபவர்கள், நமது பாரம்பரியமாக ஆகிப்போன ஆயுர்வேதம் முதல் சித்தர் மருத்துவம், திப்புசுல்தானின் நேனோ வாள் என்பதிலிருந்து தொடங்குகிறார்கள். சிந்து சமவெளி ராஜராஜசோழன் வள்ளுவரில் மருத்துவம் இதெல்லாம் பி.எச்.டி.யில் இன்று வெளுத்து வாங்கும் தலைப்புகள் என்றாலும் (அவை வேண்டாம் என்று சொல்லவில்லை) நவீன அறிவியலின் இந்திய எழுச்சியைத் தொடங்கி வைத்தவர் மஹேந்திரலால் சர்க்கார்.

1889ல் அறிவியல் திறன் வளர்ச்சிக்கான இந்திய மன்றம் எனும் அர்த்தத்தில் இன்டியன் அசோசியேஷன் ஃபார் கல்டிவேட்டிங் சயின்ஸ் (Indian Association for cultivating Science) எனும் அமைப்பை கல்கத்தாவில் ஏற்படுத்தினார். எம்.டி. (முதுகலை மருத்துவம்) படித்தவர். கல்கத்தாவின் மாகாண கவுன்சிலில் மக்கள் பிரதிநிதியாய் இருந்தவர். சிறந்த தேசபக்தர். அமைப்பை அவர் எவ்வளவோ முயன்றும் ஆங்கிலேய அரசு பதிவுசெய்ய விடவில்லை. பதிவு பெறாத அறிவியல் அமைப்புகளால் எவ்வளவு முயன்றாலும் சர்வதேச அறிவியல் மன்றங்களான லண்டன் ராயல் கல்வியகம் போன்றவற்றோடு ஒன்றிணைந்து செயல்பட முடியாது.

இந்தியாவிலிருந்து அறிவியல் ஆய்வுகள் செய்ய வசதியான வீட்டுப்பிள்ளைகள் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு என கப்பல் ஏறிய அந்தநாட்களில் நமது நாட்டின் முதல் ஆய்வுக் கூடத்தை மஹேந்திரலால் சர்க்கார் மிகவும் கடினப்பட்டு 1891ல் அறிவியல் மன்ற அலுவலகத்தில் கட்டமைத்தார். வெள்ளைக்கார அரசாங்கம் அந்த இடத்தை கிட்டத்தட்ட மாதம் இருமுறை ரெய்டு விட்டபடி இருந்த அந்த கடினமான காலங்களில் அறிவியல் விழிப்புணர்வுக் கூட்டங்கள் அங்கே நடத்தப்பட்டன. இளைஞர்கள் ஒரு நாள் கட்டாயம் இந்த ஆய்வுக் கூடத்தில் இந்திய அறிவியலின் மைல்கற்களை நடுவார்கள் எனும் ஆழ்ந்த நம்பிக்கையை மட்டும் தவற விடாமல் சர்க்கார் விரைவில் காலமானார். சர்க்கார் கட்டிய அறிவியல் ஆய்வகத்திற்கு தாராள நிதி உதவி அளித்தவர் விழியநகர மகாராஜா என்று குறிப்பிடுகிறார் பி.வி.சுப்பராயப்பா. இந்த விஷயம் ஆங்கிலேயர்களின் உளவுத்துறை லெட்ஜர்களில் உள்ளது.

1907ல் அறிவியல் மன்றத்தின் துயரமான மழை ஞாயிறு ஒன்றின் மதியம் ஆஷூ பாபு என்பவரும் சர்க்கார் மகன் அம்ரித்லால் சர்க்காரும் இருந்த ஒன்றிரண்டு புத்தகங்களை வாசித்தபடி வாசல் கதவு தட்டப்படுவதைக் கேட்டனர். என் பெயர் ராமன்.. நான் உங்க ஜில்லாவின் அக்கவுண்ட் ஜெனரல் என்று சொல்லியபடி நின்றார் அந்த இளைஞர். ஆரம்பித்தது இந்திய அறிவியலின் உண்மையான அத்தியாயம். கிட்டத்தட்ட கலெக்டர் பதவி வகித்த ராமன் தனது அறிவியல் கல்வி ஆர்வத்தை புதைத்துவிட்டு தன் தந்தையின் நச்சரிப்புத் தாங்காமல் எஃப்.சி. எஸ். தேர்வு எழுத இந்தியாவிலேயே முதலிடம் பெற்று அப்போதுதான் பணி நியமனம் பெற்றிருந்தார். அப்பாவுக்காக அரசுப் பணி, தனக்காக அறிவியல் என பிடிவாதமாக ராமன் செயல்படத் தொடங்கினார். ஆரம்பத்தில் ஜில்லாவின் உயர் மட்ட அதிகாரியான அவர் மீது அரசுக்கு சந்தேகம் வரவில்லை. ஆனால் 1908ல் லண்டன் ராயல் கல்வியகத்தின் பிரதான அறிவியல் சஞ்சிகையில் ராமனும், ஆஷூபாபுவும் சேர்ந்து எழுதிய அறிவியல் ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளிவந்து அவரை காட்டிக் கொடுத்துவிட்டது. பிரிட்டிஷ் அரசு முதலில் ராமனை ரங்கூனுக்கும் பிறகு நாக்பூருக்கும் பந்தாடியது. 1917வரை அவர் பலமுறை பல ஊர்களுக்கு தூக்கி எறியப்பட்டார். இந்திய அறிவியலின் உலகளாவிய முகவரியை சிதைக்க வெள்ளையர்கள் மேலும் பலவித சூழ்ச்சிகளில் ஈடுபட்டதையும் பார்க்க முடிகிறது. ஜெகதீஷ் சந்திரபோஸின் வானலைகள் குறித்த கண்டுபிடிப்பை மார்கோணி ‘சுட்டதும்‘ சத்யேந்திரநாத்போஸ் டாக்கா பல்கலைகழகத்தில் மற்ற (வெள்ளை) பேராசிரியர்களைவிட 70 சதவீத குறைவான சம்பளத்தில் மனஉளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டதும் பதிவு பெறாத அவலங்கள். இவை எதேச்சையாக நடந்த சம்பவங்கள் அல்ல.

முடிவாக ஜில்லா கணக்காயர் வேலையை விட்ட ராமன் கல்கத்தா அறிவியல் கல்லூரியில் அஸ்தோஷ் முகர்ஜி மூலம் விரிவுரையாளர் ஆனார். சம்பளம் கணக்காயர் வேலையைவிட பாதி மடங்கு குறைவு என்றாலும் அதை அவர் பெற்றார். எப்படியாவது இந்தியர்களின் பங்களிப்பை அறிவியலில் பதிவு செய்யும் மஹேந்திரலால் சர்க்காரின் கனவு ராமனின் அறிவியல் மன்ற ஆய்வுக்கூட வேலைகளைத் தொடரவைத்தது என்றே சொல்ல வேண்டும்.

  • நோபல் பரிசு கிடைத்ததை அறிவிக்கும் நோபல் கமிட்டியின் தந்தி ராமனுக்குப் போய் சேராமல் இரண்டு நாட்களுக்கு வைஸ்ராய் நிறுத்தி வைத்திருக்கிறார். தனது அயல்நாட்டு சகாக்கள் மூலம் ராமன் தனக்குப் பரிசு கிடைத்ததை அறிகிறார்.

  • நோபல் பரிசை (தாகூர் போலவே) நேரில் பெற வேண்டாம் என முதலில் வெள்ளை அரசு ஆலோசனை வழங்குகிறது. பிறகு நோபல் ஏற்புரை வழங்க ராமனுக்குத் தடை விதிக்கிறது.

ஆனால் தடையை மீறி பரிசைப் பெற்றுக் கொள்ளும்போது ராமன் பேச அனுமதி கேட்டு, பரிசை இந்தியச் சிறையில் வாடும் ஆய¤ரக்கணக்கான சுதந்திரப் போர் வீரர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என முழங்கியதை வாசிக்கும்போது நமது ரத்த நாளங்கள் சூடேறி கண்கள் பூத்துப்போகின்றன. ராமன் நோபல் பெறுவதை படம் பிடித்து அதை யாருமே சேமிக்கவில்லை.

சமீபத்தில் வெளிவந்துள்ள மற்றொரு குறிப்பிடத்தக்க அறிவியல் நூலான கரியமாணிக்கம் ஸ்ரீநிவாச கிருஷ்ணன் ஹிஸ் லைப்ஃஅண்டு ஒர்க், (kariamanikkam srinivasa krishanan in his life and work), பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தின் வானியல் பேராசிரியர்கள் டி.சி.வி. மாலிக்கும், எஸ்.சாட்டர்ஜியும் சேர்ந்து எழுதிய நூல். விருதுநகரில் வார்தாவில் பிறந்த கே.எஸ். கிருஷ்ணன், ராமனோடு இணைந்து அறி­வியலில் பெரிய அளவு பங்காற்றி மிகச்சிறிய அளவே பாராட்டுப் பெற்ற துரோக வரலாற்றின் பதிவு. கே.எஸ். கிருஷ்ணன் ராமன் விளைவைக் கண்டு பிடித்த இருவரில் ஒருவர் என்றாலும் ராமன் விளைவு என்றே அது பெயர் பெற்றதும் ராமனுக்கே நோபல் கிடைத்ததும் அதை அங்கீகரித்தபடி கே.எஸ்.கே. தனது அடுத்த அறிவியல் பங்களிப்புகளுக்குத் தாவியதையும் அதன் பின்னணிகளையும் இந்த புத்தகம் சொல்லிச் சென்றாலும் ராமனுக்கு அவமதிப்பு செய்து விடக்கூடாதே என்று ரொம்ப அடக்கி வாசித்திருக்கிறார். கே.எஸ். கிருஷ்ணனைப் பற்றி எழுதப்பட்டுள்ள ஒரே புத்தகம் இதுதான். கே.எஸ்.கே. ஒரு விஞ்ஞானி என்பதற்கும் மேல் கல்கத்தா. பெங்களூரூ என வாழ்ந்தும் தமிழ் இலக்கியத்தின் பால் ஆழ்ந்த ஈடுபாடும் பற்றும் கொண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததை வாசிக்கும்போது ஆச்சரியமாய் இருக்கிறது.

இரு புத்தகங்களுமே இந்திய அறிவியல் பற்றிய பொதுவான என் பல சந்தேகங்களைத் தீர்த்து வைப்பவையாக உள்ளன.

  • 1934ல் (இயற்பியலை விடுத்து) பொறியியல்துறையில் முதல் பி.எச்.டி. முடித்த இந்தியரான ஹோமிஜகாங்கீர் பாபா, ஜெர்மனியில் காஸ்மிக்அலை கண்டுபிடிப்பின் மூலம் பிரபலமடைந்தார். பிறகு மேசான் துகள்களையும் ஜெர்மனியிலிருந்தபடியே கண்டுபிடித்தார். உலகப் பிரசித்தி பெற்றார். பின் இந்தியாவிற்கு ஏன் வந்தார் என எனக்கு விளங்காமல் இருந்தது. அது ‘ராமன் விளைவு‘! விடுமுறையில் மும்பை வந்த பாபாவை 1938ல் ராமன் சந்தித்து, தனது பெங்களூர் கல்வியகத்திற்கு ‘உலக யுத்தத்தை காரணம் காட்டி’ இணைத்தார்.

  • அறிவியல் உலகமே ஐரோப்பாவைக் குறிவைத்து நகர்ந்தபோது இந்தியாவை விட்டுச்செல்ல மறுத்து பல்வேறு இந்திய இளைஞர்களை இந்திய மண்ணிலேயே ஆய்வுகள் நடத்த ராமன் நிர்பந்தித்ததும் தொடர்ந்தது. பிரிட்டிஷ் அரசு ஹர்கோவிந்த் கொரானா, சுப்பிரமணிய சந்திரசேகர் என்பவரை இங்கிலாந்திற்கு இந்திய அரசு உதவித் தொகை (Govt of india fellowship) என்ற பெயரில் அனுப்பி¤யது. ஹர்கோவிந்த கொரானாவைப் போக வேண்டாமென்று ராமன் நேரில் சந்தித்துப் பேசி இருக்கிறார். ராமன் விளைவு எடுபடவில்லை.

  • அடுத்தது விக்ரம் சாராபாய். இங்கிலாந்திற்கு வெள்ளை அரசின் பெல்லோஷிப் பெற்று அங்கேயே செட்டிலானவர். எப்படி இங்கே வந்தார் என பலமுறை யோசித்திருக்கிறேன். 1939ல் ராமனே நேரில் போய் செயிண்ட் ஜான்ஸ் கல்லூரியிலிருந்து விக்ரம் சாராபாயைக் கையோடு இந்தியாவுக்கு அழைத்தே வந்து விட்டார்.

சென்னையில் ஒரு புள்ளியியல் நிறுவனமும், அகமதாபாத்தில் ஒரு வானியல் நிறுவனமும், திருவனந்தபுரத்தில் விண்ணியல் ஆராய்ச்சியும் மும்பையில் அணு ஆய்வுக்கழகமும் வருவதற்கான ஆரம்ப வேலைகளை அதற்கு பல்வேறு..... பங்களிப்புகள் இந்த இருநூல்களிலுமே பதிவாகின்றன. இந்திய தொழிற் நுட்ப கல்வியங்கள் (ஐஐடி) வருவதற்கு நேருவோடு நேரடியாக கே.எஸ்.கிருஷ்ணன் மோதியதை வாசிக்கும்போது வெளியே தெரியாத எவ்வளவோ பேரின் பங்களிப்புகள் எப்படி இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டன என ஆத்திரப்படாமல் இருக்க முடியவில்லை. ஹரீஷ் சந்திரா எம்.கே. வாய்னுபாபு, ஜி.என்.ராமச்சந்திரன் என முற்றிலும் வெளியுலகம் புறக்கணித்த அறிவியலாளர்களையும் நாம் அறிகிறோம்.

  • ஆனால் ராமன் கல்கத்தாவை விட்டு ஏன் பெங்களுருக்கு வந்தார்? அதன் பின்னணியில் ராமனின் ஈகோ, தான் மற்றவரிடம் ஆலோசிக்காமல் பிடிவாதமாக சிலவற்றை செயல்படுத்துதல் போன்ற பின்னடைவுகளைப் பார்க்கிறோம். 1933ல் அவர் கல்கத்தாவிலிருந்து கிட்டத்தட்ட விரட்டப்பட்டார் என்பதே உண்மை. அமிர்தலால் சர்க்கார் இறந்தபின் அறிவியல் மன்ற கவுரவ செயலாளராக பொறுப்பேற்ற ராமனை, ஒரு உறுப்பினர் தேர்தலில் தோற்கடித்து, கல்கத்தா பல்கலைக்கழக இயக்குநர் தேர்விலும் முற்றிலும் தனிமைப்படுத்தி பதவி இறக்கம் செய்தவர் இந்திய இயற்பியலின் இன்னொரு ஜாம்பவானான மெக்னாட்சாகா! இளைஞர்களோடு ராமன் இப்படித் தன் காலத்தில் அடிக்கடி மோதியும் இருக்கிறார்.

ஆனால் ஜெர்மனியின் விஞ்ஞானி மாக்ஸ் பார்னை எப்படியாவது (அமெரிக்கா போக விடாமல்) இந்தியாவில் ஆய்வுப் பேராசிரியர் ஆக்கி அறிவியல் செயல்பாட்டின் உலகமையமாய் இந்தியாவை ஆக்கிட ராமன் முயற்சித்தது தான் அவருக்கு ஏராளமான அதிருப்தியாளர்களை உருவாக்கிவிட்டது. ஒரு கட்டத்தில் அவர் ஹிட்லருக்கு உளவு பார்ப்பதாகக் கூறி கைது செய்ய அரசும், மற்ற நாட்டவரை இங்கே வேலைக்கு வைப்பதா என சொந்த அறிவியல் நண¢பர்களுமே அவருக்கு எதிராகத் திரும்புகிறார்கள். எது எப்படியோ தனது நோபல் பரிசுத் தொகையின் ஒரு பகுதியை சுதந்திரப் போராட்ட நிதியாய் வழங்கிய ராமன், தான் கல்கத்தாவிலிருந்து பெங்களூருக்கு சி.வி.ராமன்அறிவியல் கல்வியகம் அமைத்துக்கொண்டு கவுரவமாய் போய் இணைந்ததையும் பார்க்கிறோம். இந்திய அறிவியல் என்பதும் பெரும் போராட்டத்திற்கிடையே கட்டமைந்து வளர்ந்த சரித்திரத்தை தன்னகத்தே கொண்டுள்ளன. இந்த புத்தகங்கள் நமக்கு உணர்த்தி நிற்கின்றன.

இந்த இருநூல்களையும் வாசிக்கும் நமது எதிர்கால சந்ததியர் இந்தியா எனும் ஒரு தேசத்தில் 2000வரை (ஏன் இப்பவும்) ஆண்கள் மட்டுமே அறிவியலாளர்களாக வாழ்ந்தார்கள். பெண்களுக்கும் அறிவியலுக்கும் சம்பந்தமே இல்லை என்றுதான் நினைப்பார்கள். அந்த அளவிற்கு இந்திய அறிவியல் ஆணாதிக்கத்தின் மொத்த செயல்பாடாக உள்ளது என்பது மிக கசப்பான உண்மை.

தமிழக மக்கள் அறிவியலாளர் ஜி.டி. நாயுடுவின் மகள் திருமணத்தின்போது தமிழகம் வந்த சி.வி.ராமன் தமிழில் அறிவியல் பேருரை ஒன்று நிகழ்த்தியதையும் அந்தக் கூட்டத்தில் கே.எஸ்.கிருஷ்ணனும் பங்கெடுத்ததையும் தோழர் சிங்கார வேலரைப்பற்றி தனது பேச்சில் கிருஷ்ணன் குறிப்பிட்டதையும்கூட புத்தகம் பதிவு செய்தாலும், இக்கட்டுரை அளவிற்குகூட அவை சுவையாக வார்க்கப்படவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டியுள்ளது.

இந்திய அறிவியல் நூல்களை வாசிக்கும்போது அய்யோ போதும்.. வைத்துவிடலாமா எனும் எண்ணம் மேலோங்கும் அளவு நடை சுவாரசியமே இல்லாதபடி உள்ளது. நாம் விட்டுத் தப்பிவந்த பள்ளி கல்லூரி பாட புத்தகம் படிப்பது மாதிரியே பத்துமார்க் ஆறுமார்க் கேள்வி பதில் போலவே பத்திகள். இவற்றை எழுதுகிறவர்கள் இந்திய அரசுத்துறையிலேயே பணிபுரிகிறவர்கள் என்பதால் விமர்சனப்பூர்வமாய் எதுவுமே எழுதுவதில்லை. எஃப்.எம். ரேடியோ மூலம் எல்லாரும் எல்லாவற்றையும் மனம் விட்டுப் பேசி எஞ்சாய்(?) பண்ணும் ஒரு காலத்தில் அந்தக் கால இந்திய வானொலியின் அறிவியல் அறிவோம் மாதிரியே ஏழுநாள் துக்க- வாத்திய இசையாய் இவை தகவல்களால் அழுது வடிகின்றன.

இன்றைய இந்திய அறிவியலின் முகம் இது. உப்பு புளி மிளகாய் எதுவுமே போடாத தாளிக்காத மோர்க் குழம்பு ரக- எழுத்தாய் அவர்களது பி.எச்.டி. ஆய்வு போலவே அவை ஏன் இருக்க வேண்டும் என்பது பற்றி வாய்ப்புக் கிடைத்தால் தனி புத்தகம் எழுதி பேராசிரியர் பெருமக்களுக்கு மெயிலில் அனுப்ப உத்தேசிக்கிறேன். ஏனெனில் அவர்கள் மெயில் தவிர வேறு எதுவுமே வாசிப்பது இல்லை என, திகாருக்கு தனது முகவரியை மாற்றிக்கொண்டு போகாமல் மிச்சமிருக்கும் மத்திய மந்திரிகளில் ஒருவரான திருவாளர் கபீல் சிபெல் சமீபத்தில் கூறியுள்ளார்.

- இரா. நடராசன்

5 comments:

  1. http://jayabarathan.wordpress.com/

    http://jayabarathan.wordpress.com/2010/02/26/sir-c-v-raman/.

    Dear Natarajan

    I learnt some new information from your article on Sir C.V. Raman.

    Regards,
    Jayabarathan

    ReplyDelete
  2. தோழர் நடராஜன் அவர்களே!" Raman a seeker of truth"என்ற தலைப்பில் அவருடைய மாணவர் டாக்டர்.ஜுகுடே ,பெராசிரியர் .(வெதியல்)( நாகபுரி பல்கலையில் பணியாற்றுகிறார்.)22-11-11 அன்று "ஹிதவாதா" என்ற ஆங்கிலப்பத்திரிகையில் எழுதியிருந்தார். அதில் கிருஷ்ணன் பற்றியும் குறிபிட்டுள்ளார்.மறைந்த எம்.ஆர். வெங்கடராமன் (சி.பி.எம்) அவர்களின் பெரியப்பா மகன் தான் சி.வி.ராமன். "கடவுளை டெலஸ்கோப்பால் தேடுங்கள்-சி.வி ராமன் " என்ற என் இடுகையை முடியுமானால் பாருங்கள். (kashyapan.blogspot.com).வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்

    ReplyDelete
  3. //ராமனோடு இணைந்து அறி­வியலில் பெரிய அளவு பங்காற்றி மிகச்சிறிய அளவே பாராட்டுப் பெற்ற துரோக வரலாற்றின் பதிவு//

    இவ்வளவு நல்ல மனிதருக்கெதிராக துரோகம் என்பது தவறான வார்த்தை பிரயோகமாகப்படுகிறது. நோபல் பரிசு பெறும் விழாவில் தன்னோடு ராமன் விளைவில் பணியாற்றிய அனைவருக்கும் credit வழங்கியுள்ளார் ராமன். மேலும் ஆந்திரா பல்கலைகழக துணைவேந்தருக்கு எழுதிய KSKவிற்கான சிபாரிசு கடித்தில் 1930க்கான நோபல் பரிசு 1921க்கு பின் நடந்த ஒளிச்சிதறல் குறிந்தான ஆய்வுக்காக அல்லாமல் 1928க்கு பிறகு நடைபெற்ற ஆராய்ச்சியை மட்டும் கணக்கிலெடுத்து வழங்கபட்டிருந்தால், பரிசு KSKவுக்கும் கிட்டியிருக்கும் என்றாராம் ராமன்!

    Ref:
    http://www.vigyanprasar.gov.in/scientists/KS_Krishnan/KariamanikkamSKrishnan.htm

    ReplyDelete
  4. சிறப்பான பதிவு//

    ReplyDelete
  5. மிகவும் பயனுள்ள செய்தி..ராமன் விளைவு என்றால் என்ன என்பது தெரியும்..ஆனால் அதற்குள் இத்தனை விபரங்கள் இருப்பது இப்போதுதான் அறிந்து கொண்டேன்..
    ஆ.ஈசுவரன்/திருப்பூர்.

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)