மத்திய வேளாண்மைத்துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் கூட்டாளியுமான சரத் பவாரை இன்று ஹர்வீந்தர்சிங் என்னும் இளைஞர் கன்னத்தில் அறைந்திருக்கிறார். விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற பிரச்சினைகளால் கொதித்துப் போனவர், தனது கோபத்தை இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார்.
காங்கிரஸ் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் இதனைக் கடுமையாக கண்டித்திருக்கின்றன. சரத்பவாரின் கட்சியினர் கோபமுற்று புனேவில் பந்த் நடத்த அழைப்பு விடுத்திருக்கின்றன. மன்மோகன்சிங்கோ, இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடாது என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். இந்த நாடு எங்கே போய்க்கொண்டு இருக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அச்சம் தெரிவித்திருக்கிறார். அந்த இளைஞரைத் தண்டிக்க வேண்டும் என முலாயம்சிங் தீர்ப்பு வழங்கியிருக்கிறார். கவலைப்படவேண்டியவர்கள் கவலைப்பட்டிருக்கிறார்கள்.
இவைகளுக்கு நடுவே ஆள் ஆளுக்கு தங்கள் அரசியலை இந்த சம்பவத்தோடு பொருத்திப் பார்த்து, எதிரிகளை வஞ்சம் தீர்க்கிற படலங்களும் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பா.ஜனதா கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையும் இந்த சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரஷீத் ஆல்வி குற்றம்சாட்டியிருக்கிறார். அதாவது இந்தச் சம்பவத்துக்கு பின்னணியில் ஒரு அரசியலும், பா.ஜ.க என்னும் அரசியல் கட்சியும் இருப்பதாக அவரது பேச்சு இருக்கிறது.
அந்த இளைஞரின் அரசியல் சார்பு, இந்தச் சம்பவத்தின் பின்னணி எல்லாம் முழுமையாக தெரியாதுதான். ஆனால், அவரது இந்த செய்கைக்கான காரணத்தில் நியாயம் இருக்கிறதா என இந்த தேசத்து மக்களிடம் கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் இந்த ஆட்சியாளர்கள் அனைவருக்குமே மரண அடியாக இருக்கும்.
இந்த சம்பவத்தைக் கிண்டல் செய்திருப்பவர், ‘திடீர் காந்தியவாதி’ அன்னா ஹசாரே! ஒரு அடிதான் அடித்தாரா என்று அவர் கேட்டிருக்கிறார். தான் முன்வைத்து பிரபலப்படுத்திக்கொண்டு இருக்கும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் , இளஞர்களிடம் ஓரளவு போய்ச் சேர்ந்திருக்கிறது என்று சந்தோஷப்படும் தொனி அதில் புதைந்து இருக்கிறது. ஆனாலும் வன்முறையை தாம் ஆதரிக்கவில்லை, அந்த இளஞரை தண்டிக்க வேண்டுமெனத் தன் ‘காந்தியத்தை’ காப்பாற்றிக்கொள்ளவும் அவர் தவறவில்லை.
அன்னா ஹசாரேவை விட முக்கியமான, அர்த்தமுள்ள இரண்டு கேள்விகள் தோன்றுகிறது நமக்கும்.
ஒன்று, “ஒரே ஒருவர்தான் அறைந்தாரா?”
இன்னொன்று “ஒரே ஒருவரைத்தான் அறைந்தாரா?”
உங்கள் கட்சி தலைவர்களும் தான் இதை கண்டித்திருக்கிறார்கள்.
ReplyDeleteஆமாம் superlinks! சீதாராம் யெச்சூரி, ”ஜனநாயகத்தில் இது ஏற்றுக்கொள்ளக் கூடிய செயல் அல்ல. இது சரியான தீர்வும் அல்ல” என்று சொல்லிவிட்டு, ”அதேவேளையில் விலைவாசி உயர்வுக்கும், ஊழலுக்கும் எதிராக மக்கள் கோபம் கொண்டு இருக்கின்றனர் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்” என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ReplyDelete///ஆமாம் superlinks! சீதாராம் யெச்சூரி, ”ஜனநாயகத்தில் இது ஏற்றுக்கொள்ளக் கூடிய செயல் அல்ல. இது சரியான தீர்வும் அல்ல” என்று சொல்லிவிட்டு, ”அதேவேளையில் விலைவாசி உயர்வுக்கும், ஊழலுக்கும் எதிராக மக்கள் கோபம் கொண்டு இருக்கின்றனர் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்” என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்./// - இதுவும் அன்னா ஹஸாரே சொன்னதுபோலத்தானே இரண்டு கருத்துக்களைக் கொண்டுள்ளது?
ReplyDelete