சிறுகதை: பிர்தவ்ஸ் ராஜகுமாரன்
வெளி விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு ஜமாஅத் கூடியிருந்தது - பள்ளியின் உட்புறம் வடக்குப் பிரகாரத்தில். வெளிப்பிரகாரத்தையொட்டி முகப்பு பகுதி இது. எப்போதும் ஜமாஅத் நிர்வாகம் கூடும் இடம் இது. வெள்ளிக் கிழமை ஜீம்மா தொழுகைக்குப் பிறகு நிர்வாகிகள் வெளிப்பிரகாரத்தில்தான் கூடுவார்கள். அதே போல எதாவது முக்கியம் கருதி பகல்வேளைகளில் சபை கூடினாலும் இங்குதான் விவாதங்கள் அலசப்படும். இரவுகளில் கூடும் கூட்டம் மட்டும் எப்போதும் உட்புறம்தான்.
முத்தவல்லி மீரான்ராவுத்தர் நடுநாயமாக உட்கார்ந்தி ருக்க, வலதுபுறம் ஜமாஅத் தலைவர் அஹமது சாஹிப்பும் இடதுபுறம் செகரட்டரி அமீதும் அமர்ந்திருந்தார்கள். மற்ற நிர்வாகிகள் கொஞ்சம் தள்ளி குசுகுசுவென காதைக்கடித்துக் கொண்டிருந்தார்கள். செயலாளர் என்பதைவிட ‘செகரட்டரி’ என்று சொல்வதையே எல்லா ஜமாஅத் நிர்வாகங்களும் வழக்கமாக கொண்டிருக்கின்றன. லெட்டர்பேடு களில் கூட செகரட்டரி என்றுதான் அச்சிடப்பட்டிருக்கும். செகரட்டரி அமீது கையில் இரண்டு மூன்று பேப்பர்கள் வைத்திருந்தார்.
நான் நிர்வாக சபை மெம்பராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஒருவருடத்தில் நடக்கும் பத்தாவது நள்ளிரவுக்கூட்டம் இது. அப்போதுதான் வந்து சேர்ந்த காஜா உசேன் தயங்கியபடி வெளியே நிற்க “உள்ளார வாப்பா” என்றார் முத்தவல்லி.
“எங்க உம்பொஞ்சாதி...?” தலைவர் காஜா உசோனைப் பார்த்துக் கேட்க, சபைக்கு அஸ்ஸலாமு அலைக்கும்... சொல்வதைக் கூட மறந்தவனாக...” வருவாங்கி. என்றான் மெதுவாக...
“அப்பிடி உக்காரு....” செகரட்டரி ஆணையிட கவனிப்பதை விட முத்தவல்லியைத்தான் கவனித்தேன். சபிக்கப்பட்ட ஒரு ஜமாஅத் இது“ என்பதாக அவருக்குள் ஒரு எண்ணம் கொஞ்சநாட்களாகவே ஓடிக்கொண்டிருப்பதை நான் அறிவேன். பலமுறை இதை என்னிடம் சொல்லியிருக்கிறார். “இப்பிடின்று தெரிஞ்சிருந்தா இந்தப் பதவிக்கு நா வந்திருக்கவே மாட்டேம்ப்பா...” ஒவ்வொரு நள்ளிரவு கூட்டத்திற்குப் பிறகும் என்னிடம் தனியாகப் புலம்புவார்.
இந்த மொஹல்லாவில் மட்டும் ஏன் இப்படியான சங்கதிகள் தொடர்ந்து நடக்கிறது என்பது குறித்து எனக்குள் ளும் கேள்விகளும் - அதிர்ச்சியும் இருக்கத்தான் செய்கிறது. தீர்ப்பு சொல்லிவிட்டு கிளம்பும் ஒவ்வொரு நள்ளிரவுகளிலும் முத்தவல்லி மீரான்ராவுத்தர் மனம் புழுங்கிக் கொண்டேதான் செல்வார். ஆனாலும் அவரால் தீர்ப்பை மாற்றிச் சொல்ல முடி யாது. எந்த ஒரு முத்தவல்லியாலும் தன்னிச்சையாக தீர்ப்பைச் சொல்ல முடியாது என்பதை நான் அறி வேன். முத்தவல்லி என்பவர் ஜமாஅத்தின், மொஹல்லாவின் நாட்டாண்மைதான். ஆனாலும் அவர் ஜமாஅத் தலைவருக்கு கட்டுப் பட்டவர். தலைவரை மீறி அவரால் எதுவும் செய்துவிட முடியாது. தீர்ப்பு சொல்வதற்கு முன் நிர்வாகம் கூடி முடிவு செய்யும். பெரும் பாலும் தலைவரின் தீர்ப்பே முடிவானதாக இருக்கும். எல்லா ஜமாஅத் தலைவர்களும் ஞானம் மிக்கவர்கள் அல்ல. ஓதிப் படித்தவர்களாக வும் இருக்கமாட்டார்கள். ஷரீஅத் சட்ட திட்டங்களும் அவர்களுக்குத் தெரியாது. பள்ளி இமாமின் கருத்தைத்தான் நாடுவார்கள். மார்க்கம் தெரிந்த பள்ளி இமாம்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது. எல்லாம் எதுவும் தெரியாத தலைவர்களுக்கு கட்டுப்பட்டவர்கள்.
சபிக்கப்பட்ட பெண்களின் சாபம் அல்லது பாவம் எப்போதும் முத்தவல்லியை தொடர்வதாக அவருக்குள் ஒரு நெருடல் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த மொஹல்லாவே சுற்றிப்படர்ந்திருப் பதாக எனக்குள் எண்ணம் அலையடித்துக்கொண்டிருக்கிறது. நள்ளி ரவுகளில்அழுது புலம்பும் பெண்களின் கண்ணீர் கதைகள் பள்ளி யின் சுவர்களிலெல்லாம் படிந்து வழிவதாகத் தோன்றும். ஆமினா வின் கதறல் இன்னும் பள்ளி பிரகாரங்களில் எதிரொலித்துக் கொண்டே இருப்பதாக எனக்குள் எழும் பிரம்மையை தவிர்க்க முடிய வில்லை. இத்தனை ஆண்டுகளுக்கு மத்தியில் வேதனை படிந்த அவளின் கண்ணீர் யாரையும் கலங்கடிக்கவில்லை.
“எனக்கு வேண்டாங்க. இவளோட வாழப்பிடிக்கல...” பிடிவாத மாக நின்றிருந்த அவள் கணவன் ஜாஹிர் உசேன் வேறு ஒருத்தியுடன் இப்போது சந்தோஷமாக வாழ்கிறான் என்று தெரியாது. ஜமாஅத்துக்கும் இதுபற்றிய கவலை இல்லை.
அது எனக்கு முதல் கூட்டம். மகாசபை கூடி புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஜமாஅத்துக்கு வந்த முதல் புகார் கொடுமையாக இருந்தது. எனக்கு புதிய அனுப வம். முத்தவல்லி வற்புறுத்தி கேட்டுக்கொண்டதிற்கிணங்கி 12 கமிட்டி மெம்பர்களில் நானும் ஒருவனாகத் தேர்வு செய்யப்பட்டேன். வெளியிலிருந்து நிறைய கதைகளைக் கேட்டிருக்கி றேன். மிகைப்படுத்துகிறார்களோ என்று சந்தேகம் தோன்றும். ஜமாஅத் கூட்டங்களில் கலந்துகொள் ளும் ஆசை அப்போதெல்லாம் தோன்றும். இதுபோன்ற கூட்டங் களில் நிர்வாகிகள் மட்டுமேதான் கலந்துகொள்ள முடியும். நிர்வாகத் திற்குள் நுழையும் ஆசை அப்போது எழும். என் நேரம் பாதிக்கப் படும் என பிறகு பின்வாங்கிவிடுவேன்.
பழைய நிர்வாகிகள் இருக்கும்போதே ஆமினாவின் புகார் ஜமாஅத்துக்கு வந்துவிட்டது. இரண்டுமுறை சபை கூடியும் தீர்வு கிட்டவில்லை. ‘அபாண்டமான புகார்.... நாங்க மறுபடி விசாரிச்சு.... அப்புறம் முடிவு சொல்றோம்....’ என்று ஒத்திப்போடப்பட்டது. நிர்வாக சபையின் மூன்றாண்டு கால வரம்பு நிலை முடிவடைந்த நிலையில் மகாசபை கூட்டத் திற்குப் பிறகு மறுபடி இந்தப் பிரச்சனையை எடுத்துக் கொள்ளலாம் என்றும், அதற்கு இருவரும் ஒத்துப்போகவும் ஏதுவாக இருக்கும் என நிர்வாகம் கருதி இந்த நல்ல முடிவை எடுத்தது. ஆனால் ஜாஹிர் உசேனின் மனம் மாறவில்லை. ஆமினாவின் நடத்தை சரியில்லை என்றே திரும்பத்திரும்ப கூறினாள். புதிய நிர்வாக சபையின் முதல் கூட்டத்திலும் இதையே வலியுறுத்த, சில நிர்வாகிகள் ஆவேசப்பட்டனர்.
“நீயே உம் பொண்டாட்டி மேல இப்படி பழி போடுறியேப்பா... அப்பிடியென்ன உங்களுக்குள்ள பிரச்சன...? புதிய முத்தவல்லி யான மீரான் ராவுத்தரின் முதல் கேள்வி இப்படியாக இருந்தது.
“கல்யாணமாயி அஞ்சு வருஷமாச்சுங்க. இன்னும் எங்களுக்கு குழந்த பொறக்கல...”
“அதுக்கு பொண்டாட்டியோட நடத்த சரியில்லேங் குறது என்னப்பா நியாயம்?” தலைவர் வாயைத் திறந்தார் கோபத்துடன்.
“நானும் மொதல்ல நம்பலங்க. எப்பப் பாத்தாலும் கண்ட ஆம்பளைங்ககிட்டயும் சிரிச்சுப் பேசிட்டேயிருப்பா....”
“ஆம்பளைங்ககிட்ட சிரிச்சுப் பேசினா, தப்பானவானு அர்த்தமா, கொழந்தயில்லேனா, டாக்டரப் பாக்க வேண்டியது தானே...” செகரட்டரி அமீது கேட்க, “பாத்தங்க” என்றான் ஜாஹிர் உசேன். சபை ஸ்தம்பித்தது.
மறுவாரம் அவன் மனைவி ஆமினாவை நேரில் வரச் சொல்லி விசாரித்து ஜமாஅத். அபாண்டமா பொய் சொல்றாங்க என்று கண்ணீர் விட்டாள். “கொழந்தயில்லேன்னு வேண்டாம்னு சொல்லாமல்ல. அதுக்கு ஏன் எம்மேல வீணா மோசமானவள்னு பழி போடணும். ஊரே என்னக் காறித் துப்புது...” கதறி அழுதாள். அவளுடன் சேர்ந்து தாயும் கதறினாள். ஜாஹிர்உசேனின் தாயும் இதற்கு சாட்சியாக இருக்க, ஜமாஅத்துக்கு வேற வழி தெரியவில்லை. கேரளாவில் இரண்டாம் கட்டு, மூன்றாம் கட்டுக்கெல்லாம் பணத்துடன் பெண் கொடுக்க காத்திருக்கிறார்கள்.
எம் பெருமானார் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸை உதாரணம் கட்டி ஆமினாவுக்கு ‘தலாக்’ வழங்கப்பட்டது. சுலபமாக. அவளின் கதறல் இன்னும் என் செவிப்பாறைகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஆமினாவின் குடும்பம் மொஹல்லாவை விட்டு வெளியேறியது. பிறகு எல்லோரது நினைவுகளிலிருந்தும் ஆமினா மறைந்து போனாலும் அவ்வப்போது அவளின் நடத்தை குறித்து மொஹல்லாவுக்குள் கிசுகிசுக்கப்பட்டுக் கொண்டேதானிருக் கிறது. பெண்களின் நடத்தை குறித்த பேச்சு மட்டும் கதை கதையாக விலாவாரியாக அலசப்பட்டுக் கொண்டுதான் வருகிறது. காலகாலமாக எங்கும்.
தொடர்ச்சியாக இப்படியான புகார்கள் வந்துகொண்டே இருந் ததில், என் சமூகம் குறித்து எனக்கு அவமானமாக இருந்தது. ஏன் நம் மொஹல்லாவில் மட்டும் இப்படியான நிகழ்வுகளும், ஜமா அத்துக்கு தாக்கீதுகளும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன? எங்கு அல்லது எதில் தவறு? ஐவேளை தொழுகை தொழுகையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்று எதிலும் அக்கறை யின்றி ஆண்கள் இருக்கும் நிலைதான் இந்த அவலங்களுக்கு கார ணமா? இல்லை ஜமாஅத் நிர்வாகங்களும் இதற்கு காரணகர்த்தாக் களா? எது எப்படியோ அதன் பிறகு சில கூட்டங்களுக்கு நான் செல்ல வில்லை. நிர்வாக சபை கூட்டங்களில் கமிட்டி மெம்பர்கள் கலந்து கொள்ளாதது குறித்து விளக்கம் கேட்கப் பட்டது. தவிர்க்க முடியாத வேலைப்பளு என்று காரணம் கூறி என் இயலாமைக்கு சப்பை கட்டினேன். இப்படித்தான் அவரவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள் சமூக ஒழுக்கநெறி முறைகளிலிருந்தும் இன்ன பிறவகைகளிலிருந் தும் என்பதாகவும் எனக்குள் எண்ணம் ஓடியது. நாங்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே. ஆமா இல்லை என்று தலையாட்டிக் கொள்ளலாம்.
சுவாரஸ்யம் மிக்கதாக ஜமாஅத் கூட்டங்கள் இரவுப் பொழுது களில் நீள்கின்றன என்பதாக காஜா உசேனின் மனைவி கொடுத்த புகார் உண்மையிலேயே சுவாரஸ்யம் மிக்கதாக இருந்தது. அவள் கணவனைக் குறித்து நிறைய குற்றம் குறைகளைச் சொல்லி கடைசியில் அவனுடன் வாழப் பிடிக்கவில்லை என்று கூறி இருந்தாள். இதனால்தான் காஜா உசேன் கூனிக்குறுகி உட்கார்ந்திருக்கிறான் என்று நினைத்துக் கொண்டேன். இவன் குற்றம் சுமத்தியிருந்தால் இப்படி உட்கார்ந்திருக்கமாட்டாள். நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ஆணவமாக உட்கார்ந்திருப்பான். இப்படிப்பட்ட புகார்களை எப்போதும் ஆண் கொடுப்பான். இம்முறை பெண் கொடுத்திருக்கி றாள். அவனுடன் எனக்கு வாழப்பிடிக்கவில்லை, ‘குலா’ (பெண்கள் கேட்கும் மணவிலக்கு) வேண்டும் என்று. வரவேற்கப்பட வேண்டிய மாற்றம். படிப்பறிவில்லாத பெண்களிடம் ஆக துணிச்சல். மாற்றம் ஏற்படுகிறது. பெண்களை அளவுக்கு அதிகமாக அடக்கி வைக்கப் படுவதால் எழும் விடுதலை வேட்கை இது. சிறிது நேரத்தில தாய், தந்தையுடன் குழந்தையுடன் குழந்தையும் கையுமாக வந்து சேர்ந் தாள் காஜா உசேனின் மனைவி ஹைரூன். பர்தா அணிந்திருந் தாள். துணிச்சல்காரியாக எல்லோருக்கும் தோன்றினாள். அவள் உள்ளே நுழையும்போதே முபாரக், சையதுபாட்சாவிடம் எதோ கிசுகிசுத்தான். சையது பாட்சாவின் சிரிப்பிலிருந்து அவள் நடத்தை குறித்தானதாய் தான் முபாரக் சொல்லியிருப்பான் என யூகித்துக் கொண்டேன்.
கடிதத்தில் தெரிவித்திருந்த புகாரை அப்படியே ஒப்பித்தாள் முத்தவல்லியை பார்த்தவாறு. செகரட்டரி அமீது தன் கையில் வைத்தி ருந்த தாள்களைப் புரட்டி மறுபடி படித்தார் சரிபார்ப்பதைப் போல.
“ஏம்ப்பா குடிக்குறது ஹராம்னு உனக்குத் தெரியாதாக் கும்..?” முத்தவல்லி, அவனைப் பார்த்துக் கேட்டார்.
“சத்தியம்மா நா குடிக்குறதேயில்லங்க. பொய் சொல்றா...” என்றான் அவன் தலை குனிந்தபடி. ஒரு பெண் இத்தனைபேருக்கு முன் தன்னை நிறுத்தி அதுவும் ஜமா அத்தார் முன்பு நிறுத்தி தன்னை கேவலப்படுத்துவதை அவன் அவமானமாக கருதியிருக்கலாம். அவன் தலை நிமிராமல் இருப்பது இதை நன்கு உணர்த்தியது.
“சும்மாவாச்சும் எந்தப் பொஞ்சாதியாச்சும் தன் புருசன் மேல இப்பிடி ஜமாத்துல வந்து பொய் சொல்லுமாப்பா” என்றவாறு சிரித்தார் தலைவர்.
“ஒழுங்கா நா செலவுக்குப் பணம் குடுக்கிறதில்லேன்னு எம்மேல அவளுக்கு வெறுப்பு. அதனால குடும்பத்துல எல்லாத்துட்டி யும் நா குடிச்சுட்டு ஊர் சுத்தறதா சொல்லிட்டி ருக்காங்க. இப்ப ஜமாத்துலயும் சொல்லிட்டா என்னப்பத்தி உங்களுக்கெல்லாம் தெரியும். நா அந்தமாதிரி ஆள் இல்லேங்குறது...”
முத்தவல்லி கொஞ்ச நேரம் அவனையே கூர்ந்து பார்த்தார். அவர் முகத்தை எதிர்கொள்ள முடியாதவளாக மறுபடியும் குனிந்து கொண்டான் காஜாஉசேன். கூட்டம் சுவாரஸ்யமாக போய்க் கொண்டி ருப்பதாகப்பட்டது எல்லோருக்கும். ஏனென்றால் தூக்க கலக்கமின்றி எல்லோரும் உட்கார்ந்திருந்தனர்.
ஹைரூனின் உம்மாவும், வாப்பாவும் எதுவும் பேச வில்லை. ‘அவனுடன்தான் நீ வாழ்ந்தாகனும்னு’ ஜமா அத்தோட தீர்ப்பு அமைந்துவிட்டால், பிறகு மருமகனை எதிர்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுவிடும். எனவே, அவர்கள் வாயைத்திறக்கவில்லை. முத்தவல்லியும் அவர்களிடம் எதுவும் கேட்கவில்லை. குழந்தை உம்மாவின் மடியில் தூங்கிக் கொண்டிருப்பதை இங்கே நடப்பது எதுவும் அறியாமல்.
முத்தவல்லி ஹைரூனைப் பார்க்க, தலையில் போட்டிருந்த ஷாலின் ஓரத்தை எடுத்து மெல்ல கண்களைத் துடைத்துக் கொண்டாள். “எல்லாம் பொய்ங்க. எங்கத்தாகிட்ட கேட்டுப்பாருங்க. உங்கவூட்டுல போயி பணம் வாங்கிட்டு வாடீன்னு தெனம் அடிச்சுத் தொறத்துவாருங்க. நா சாதாரண ஆளுன்னுதானே உங்கூட்லருந்து எதும் செய்யமாட்டேங்கு றாங்க... தரமாட்டேங்குறாங்கனு கண்டபடி எங்காத்தாவ திட்டு வாருங்க. நா எதாச்சும் பதில் பேசினா என்னடி ஒப்பத்துப்கொப்பம் பேசுறேனு அடிப்பாருங்க. நாலஞ்சு வருசமா இந்தாளோட இதே ரோதனையாப் போச்சுங்க. இனியும் என்னால அடி உதை வாங்கிட்டு இந்தாளோட வாழ முடியாதுங்க. நா எங்கும்மா கூடயே இருந்துக்கறங்க... ” சொல்லி விட்டு உடைந்து அழுதாள் ஹைரூன். சுவாரஸ்யம் இழந்து போனது கூட்டம். எதுவும் தெரியாத வனாட்டம் உட்கார்ந்தி ருந்தான் காஜாஉசேன். இதற்கு என்ன தீர்ப்பு சொல்லப் போகிறார் முத்தவல்லி என்பதிலேயே இப்போது என் கவனம் குவிந்திருந்தது. நேரம் ஒரு மணியைத் தாண்டிவிட்டது. ஆமினா பிரச்சனை சுபஹூ தொழுகை வரை நடந்தது நினைவுக்கு வந்தது.
“நீ என்னப்பா சொல்றே..?” முத்தவல்லி தான் கேட்டார்.
“ஜமாத்தோட முடிவுக்கு நா கட்டுப்படுறங்க” என்றான். ஆக, அவன் ஒரு முடிவோடுதான் வந்திருக்கிறான் என்பது உறுதியானது. ஜமாஅத்தின் எந்த தீர்ப்புக்கும் கட்டுப்படுவான். அவளுடன்தான் நான் வாழ்வேன் என்றும் சொல்லவில்லை. ஜமாஅத் எது சொன் னாலும் அதன்படி நடக்கத் தயாராக இருக்கிறான். வேண்டாம் என்று சொல்லும் மனைவியுடன் நீ சேர்ந்து வாழத்தான் வேண்டும்... என்று ஜமாத் தீர்ப்பளித்தால்... சரி வாழ்ந்துவிட்டுப்போகிறேன் என்பவனை எதுவும் செய்யமுடியாது.
தலைவரும், முத்தவல்லியும் கலந்தாலோசித்தார்கள்.
கஜா உசேனின் முடிவு குறித்து ஹைரூன் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை.
“சரி மூணு மாசத்துக்கு ரெண்டு பேரும் பிரிஞ்சிருங்க. அதுக்கப்புறம் ஜமாத் தீர்ப்பு சொல்லும்.... என்ன?” என்றார் முத்தவல்லி.
அவன் தலையாட்டினான். ஹைரூன் வாப்பாவைப் பார்க்க, அவர் தலையை மட்டும் ஆட்டினார். நாடகம் முடிந்தது.
நாங்க எழுந்துகொண்டோம்.
“அஸ்லாமு அலைக்கும்...” என்று கூட்டத்தை நிறைவு செய்தார் செகரட்டரி அமீது.
முத்தவல்லியுடன் நடந்து வரும்போது, “நம்ம மொஹல்லாவுல மட்டும் ஏன் இந்த மாதிரி....” என்று கேட்டேன்.
“..........................”
“இல்லாதவங்க, ஏழைபாளைங்க வசிக்குற பகுதி நம்ம மொஹல்லா. அதனால இப்பிடித்தா.... இருக்கும். இதுக்கு எதும் செய்ய முடியாது. பணக்கார ஏரியாவாயிருந்தா எதுவும் வெளில வராது...” என்று சிரித்தார் முத்தவல்லி மீரான் ராவுத்தரான என் மாமா. உண்மை சுட்டது. எதுவும் பேசாமல் நடந்தேன்.
இதுக்கு எதும் செய்ய முடியாது. பணக்கார ஏரியாவாயிருந்தா எதுவும் வெளில வராது...”
ReplyDeleteநிஜம் தான்.
அருமையான பதிவு.