குலைத்து தீரா மௌனம்
கருத்த மண் படர்ந்த
காட்டின் மையத்தில்
திரண்ட மக்காச்சோளக் கதிரென நிற்பாள்
தெனவு தீர்க்கவென்பான் வழிப்போக்கன்
களவு காதலுக்கென்பான் மற்றொருவன்
வெறித்த பார்வையில் பலரும்
வேள்வியிட்டிருந்தனர்
இசை உயிராய் மீட்கப்பட்டது
கரைந்தொழுகியது கானம்
கவிதை உரத்து வாசிக்கப்பட்டது
மேலாடை களைந்தொருவன்
தேகவளம் காட்டினான்
சிலம்பும் கோல்களும் உரசிக்கொள்ள
அதிர்ந்தடங்கியது ஒலி
களைப்பின் மிகுதியில்
யாவரும் களைந்துபோன பின்னும்
கால்கடுத்தோய
நின்றபடியே இருக்கிறாள் அவள்
ஆதிக்கத்தில் வழிந்த எச்சில்....
புல் என்றாள்
அமரும் பனித்துளியென்றேன்
மலை என்றாள்
பற்றிக்கிடக்கும் கொடியென்றேன்
பாறை என்றாள்
செதுக்கிய ஓவியமென்றேன்
மரம் என்றாள்
சுவைக்க அமரும் பறவையென்றேன்
கடல் என்றாள்
நிரப்பும் மழையென்றேன்
வாய்க்கால் என்றாள்
பாயும் நீரென்றேன்
கொழிக்கும் வயல் என்றாள்
பருவம் தவறா அறுவடையாளனென்றேன்
வைக்கோல்போர் என்றாள்
தின்று பெருக்கும் மாடென்றேன்
வெட்டுக்கிளி என்றாள்
வீழ்த்தும் பூச்சிக்கொல்லியென்றேன்
வெளிறிய காகிதம் என்றாள்
தீற்றும் கோடென்றேன்
வெடுக்கென எழுந்தவள்
துப்பிச் சென்றாள்...
வெறும் வார்த்தைகளிலும்
விழத் தயாரில்லாதவனென...
முகம் பூத்த நிறங்கள்
கோடைக்குப் பின்னான
முதல் துளிர்ப்பின் தயக்கத்தில்
வரையத் தொடங்கினாள் சிறுமி
தன் வளையலால் வட்டத்தை
அருகமர்த்திய இரு மலைகளிடையே
மற்றொருத்தி சூரியனை திணித்துக்கொண்டிருந்தாள்
மேலும் சிலரோ
கட்டங்களில் வீட்டையும்
ந-இட்டு காகத்தையும்
எப்படியேனும்
சுதந்திரக்கொடியை பறக்கவைத்துவிட கம்பத்தையும்
ஐந்தில் நாயையும் வரைந்து
காய்ந்த ஜவ்வரிசிக் கஞ்சியை
உடைத்துடைத்து ஒட்டி
பூசிய நிறங்களால்
பளிங்குச் சிலையென தகதகக்க
திருப்தியின் கீற்றுகள் வழிந்தன
முகமெங்கும் வர்ணங்களாக...
பசியாற்றுபவள்
மழைக்குப் பின்னான நாளின்
காலைப்பொழுதொன்றில்
உண்டு உறைவிடப்பள்ளி மைதானத்தில்
இட்லி ராகி குஷ்காவென
குழுமியிருந்த சிறார்களிடையே
உலர்ந்த இலையைப்போல கைவிரித்து
பிச்சைக் கேட்டவனிடம்
தேநீர் கோப்பையை பொதித்து
கணத்தை நிஜமாக்கினாள்...
ஒழிச்சியெழ...
நதியில் மூழ்கியெழ கரைந்தொழுகுமெனில்
போய்வந்திடலாம் சிரமம் பார்க்காது
பரிகாரம் செய்திடப் போகுமெனில்
ரிஷிகளிடம் சரணடையலாம்
மேலும் வசதிதான்
மாத்திரைகளாக கிடைத்துவிட்டால்
எதுமற்றிருக்க
என்னால் என்னுள் இருப்பதை
தொலைக்க இயலாது
கவசகுண்டலமாக போர்த்தியிருக்கு
உடலேறிய கூச்சங்கள்.
அருமை
ReplyDelete