ஆட்சியை மாற்றிய தமிழக மக்கள் எதிர்பார்த்தது நிறைய. அளப்பரிய ஆதரவை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து, உள்ளாட்சியிலும் ஆதிக்கம் செலுத்தியதும் இனி தமிழக மக்களின் ஆதரவு தேவை இல்லை என்று தடி கொண்டு தாக்குதலை மக்கள் மீது தமிழக அரசு தொடுத்துள்ளது.
தமிழக அரசு பால் கட்டணத்தையும், பேருந்து கட்டணத்தையும் தாங்க முடியாத அளவுக்கு உயர்த்தி தமிழக மக்களை துயரத்தில் தவிக்க வைத்துள்ளதோடு, அடுத்தக்கட்டமாக மின்சாரத் துறை மூலமாகவும் தமிழக மக்களை தாக்குவதற்கு தமிழக அரசு தயாராகி இருக்கிறது.
மின்சார சட்டம் -2003 அமலாக்கலுக்குப் பின்னர் மின்சாரத் துறையில் அரசுகளின் ஆதிக்கத்தை விட ஒழுங்குமுறை ஆணையங்களின் ஆதிக்கமே மேலோங்கியுள்ள நிலையில் மின்சார கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம் ஒழுங்கு முறை ஆணையத்திடமே அடகு வைக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கு முறை ஆணையம் சர்வ வல்லமை படைத்த ஆணையமாக புறத்தோற்றத்திற்கு தோற்றமளித்தாலும், மாநில அரசுகளின் கண்ஜாடைக்கேற்ப செயல்படும் அமைப்புகளாக உள்ளன. அதனால்தான் தமிழக அரசு வருடத்திற்கு ரூ.10,000 கோடி அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்து விட்டு, அதை ஒழுங்கு முறை ஆணையம் மூலம் அரங்கேற்றுவதற்குண்டான நட வடிக்கை எடுத்துள்ளது. இன்றைய ஊட கங்கள், நாளிதழ்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி சுயேச்சையாக செயல்படும் என்று சொல்லும் ஒழுங்கு முறை ஆணையம் தமிழக அரசின் முடிவுக்கு தனது சம்பிரதாயமான முத்திரையைப் பதித்து நாடகத்தை துவங்கியுள்ளது.
அடுத்தக்கட்ட சீனாக ஒழுங்குமுறை ஆணையத்திற்கு ஆலோசனை வழங்கும் கமிட்டியிடம் ஒப்புதல் பெறுவது, மக்களின் கருத்துக் கணிப்பு போன்ற சம்பிரதாய சடங்குகள், சடங்குகளை முடித்து அம்மாவின் அசுர மின் கட்டண உயர்வை அமல்படுத்த உள்ளது.
இப்போது குறைந்த பட்ச கட்டணம் 75 காசு என்பது ரூ.2 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம் வீட்டு மின் நுகர் வோர்களை 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருப்பதை இன்று 3 பிரிவுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மானியம் பெறும் மின் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்படும். அதாவது வீட்டு மின் உபயோகிப்பவர்கள் அனைவருக்கும் மானிய விலையில் மின்சாரம் என்பது போய், 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிப்பவர்களுக்கு மானியமே இல்லை என்ற நிலைமை உருவாக்கியுள்ளது.
இந்த கடுமையான மின் கட்டண உயர்வுக்கு அரசு கூறும் காரணம், மின்சார உற்பத்திச்செலவு 5 ரூபாய் 31 காசு என்றும், விற்பனை விலை 3 ரூபாய் 81 காசு என்றும், இந்த இடைவெளியான 1 ரூபாய் 50 காசை மக்கள் தலையில் திணிப்பதற்கான ஆலோசனைதான் இந்த மின் கட்டண உயர்வு என்று சொல்லி தனது கட்டண உயர்வுக்கு நியாயம் கற்பிக்க முயல்கிறது. அரசு குறிப்பிட்டுள்ள இடைவெளி என்பது 1 ரூபாய் 50 காசு மட்டுமே. மின்சாரத்துறை ஒரு பொதுத்துறை, மக்களுக்கு சேவை செய்யும் துறை. இதில் லாப கண்ணோட்டத்தோடு பார்க்காமல் வருவாய் இடை வெளியை அரசு மானியமாக கொடுப்பதின் மூலம் இந்த இடைவெளியை ஈடுகட்ட முடியும். அதைத்தான் தமிழக அரசு செய்ய வேண்டுமே தவிர, வருவாய் இடைவெளியை காட்டி மின் கட்டணத்தை உயர்த்துவது சரியல்ல.
அதாவது 50 யூனிட் வரை 75 காசு என்றும், 51லிருந்து 100 யூனிட் வரை 85 காசு என்றும் இருந்தது. இன்றைக்கு ரூபாய் 2 ஆக உயரவுள்ளது.
201லிருந்து 500 யூனிட் வரை ரூ.2.20 காசு செலுத்தியவர்கள் கட்டண உயர் வால் ரூ.3.50 காசு செலுத்த வேண்டியுள்ளது.
தற்சமயம் 600 யூனிட்டுக்கு மேல் ரூ.4.05 காசு செலுத்தியவர்கள் கட்டண உயர்வுக்கு பின்னர் ரூ.5.75 காசுகள் வீதம் செலுத்த வேண்டியுள்ளது.
இதனால் தற்சமயம் 200 யூனிட் வரை மின்சாரத்தை நுகர்ந்தவர்கள் ரூ.230ஐ செலுத்தியவர்கள் உயரவுள்ள மின் கட்டண அடிப்படையில் ரூ.400 செலுத்த வேண்டியுள்ளது.
400 யூனிட் வரை மின்சாரத்தை நுகர்ந்தவர்கள் உயர்வதற்கு முன்பாக ரூ.670ஐ கட்டணமாக செலுத்தியவர்கள், உயர்வுக்கு பின்னர் ரூ.1,300ஐ இரட்டிப்பான நிலையில் செலுத்த வேண்டி யுள்ளது. 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை நுகர்ந்தவர்கள் கட்டண உயர்வுக்கு முன்னால் ரூ.1,100ம். கட்டண உயர்வுக்கு பின்னர் அவர்களே ரூ.2,375ஐ மின் கட்டணமாக செலுத்த வேண்டிய அதிரடி உயர்வை செல்வி. ஜெயலலிதா அரசு தமிழக மக்கள் மீது திணித்துள்ளது.
சதவீத அடிப்படையில் பார்க்கும் போது அரசு உயர்த்தவுள்ள உத்தேச ஆலோசனை 74 சதவீதத்திலிருந்து 110 சதவீதம் வரை மின் கட்டண உயர்வை மக்கள் மீது சுமத்த ஆலோசித்துள்ளது. அதாவது 1 கோடியே 40 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களில் 75 லட்சம் மின் நுகர்வோர்கள் 100 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரத்தை நுகர்பவர்களாக உள்ளனர். அவர்கள் இதுவரை 85 காசு மட் டுமே செலுத்தியவர்கள். ஜெயலல்தாவின் பரிசால் ரூ.2 மின் கட்டணமாக செலுத்த வேண்டி வரும். அதேபோல 30 லட்சம் மின் நுகர்வோர்கள், 100லிருந்து 200 யூனிட் வரை மின்சாரத்தை நுகர்வோர்கள் ரூ.1.50லிருந்து ரூ.2 ஆக வாரிய கட்டணத்தை செலுத்த வேண்டும் என உயர்த்தியது என்பது மக்களின் வலியறியா அரசு என்பதைத் தான் இந்த கட் டண உயர்வு நிரூபிக்கின்றது.
சில நாளிதழ்கள் மின் கட்டண உயர்வுக்கு, மின்வாரிய ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையாக சம்பளம், மின்சார வாரியத்தில் கூடுதலாக பணியாளர்கள் என்ற நச்சை விதைக்க முனைகின்றது. மின்வாரிய ஊழியர்களுக்கு ஏறுகின்ற விலைவாசியை ஈடு செய்யும் வகையில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்ற ஒப்பந் தங்களின் அடிப்படையில் தான் தமிழக அரசு ஊழியர்களுக்கு அளித்ததை போல் தமிழக அரசின் கவுரவத்தை உயர்த்துவதற்கு பாடுபடும் மின்வாரிய ஊழியர் களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டதே தவிர, தனியான ஊதிய உயர்வு, அதிக மான ஊதிய உயர்வு என்பதெல்லாம் தவறானது என்பதை ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல், உயர்ந்து வரும் மின் நுகர்வோர்களின் எண்ணிக்கைக்கேற்ப அவர்களுக்கு செய்யும் சேவையை மனதில் கொண்டு, ஒப்பந்தங்களின் அடிப்படையில் பதவிகள் அனுமதிக்கப்படுகின்றது என்பதை, அதிகமான ஊழியர்கள் நியமனம் என்று சொல்லும் ஊடகங்கள் புரிந்துகொள்ள வேண்டும். சில லட்சங்களாக மின் நுகர்வோர்கள் இருந்த போது தொழிலாளர்களின் எண்ணிக்கை லட் சத்து பத்தாயிரமாக இருந்தது. ஆனால் அது கோடிகளாக மாறிய பின்னர் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆயிரங்களாக குறைந்துள்ளது என்பது தான் உண்மை. சேவைத்துறையாம் மின் துறையில் வாரியம் அனுமதிக்கப்பட்ட பதவிகளில் பல்லாயிரம் இடங்கள் காலியாக இருக்கின்றபோதுதான் இருக்கின்ற பணியாளர்கள் தான் இல்லாதிருக்கின்ற பணியாளர்களின் பணிச்சுமையையும் ஏற்று பணியாற்றுகின்றார்கள் என்பதுதான் உண்மை நிலை.
மின் கட்டண உயர்வுக்கு அரசு கூறும் காரணம் மின்சார வாரியம் ரூ.42,175 கோடி கடன் வலையில் சிக்கியுள்ளது. அது இந்த ஆண்டு ரூ.53 ஆயிரம் கோடியாக மாற உள்ளது என்றும், அதை ஈடுசெய்யவே இந்த மின் கட்டண உயர்வு என்றும் பம்மாத்து பாடுகிறது. கடந்த 10 ஆண்டு காலமாக தேவைக்கேற்ற மின்சாரத்தை உற்பத்தி செய்யாதது, அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்கியது, இவைகளை ஈடு செய்வதற்காக அநியாய விலை கொடுத்து வாங்கியதால்தான் நட்டம் என்பதை அரசு உணர்ந்து, இந்த நட்டத் திற்கான முழு தொகையையும் தேவைக்கேற்ற திட்டமிடாத அரசே அபராத கட்டணமாக செலுத்தும் வகையில் இந்த நட்டத்தை முழுவதும் அரசே ஏற்று செலுத்த வேண்டும், அப்படி செலுத்துகின்ற போது இந்த மின் கட்டண உயர்வு அவசியமற்றதாகிவிடும். எனவே அரசு ஆலோசித்துள்ள மின் கட்டண உயர்வை பின்னுக்குத்தள்ள பாதிக்கப்பட்ட மக்களே திரண்டெழுவோம்!
- -எஸ்.எஸ்.சுப்பிரமணியன்
0 comments:
Post a Comment