தீபாவளி நேரத்தில் சுமார் பத்து படங்கள் தயாராகி வெளியாகக் காத்திருந்தன. ஆனால், பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான “வேலாயுதம்” மற்றும் “7ஆம் அறிவு” ஆகிய இரண்டு படங்களும் கிட்டத்தட்ட அனைத்துத் திரையரங்குகளையும் ஆக்கிரமித்துக் கொண்டன. மிஞ்சியிருந்த சில திரையரங்குகளை ஷாரூக் கான் நடிப்பில் வெளியான “ரா ஒன்” எடுத்துக் கொண்டது. இதனால் தீபாவளி நேரத்தில் பல படங்கள் வெளியாகவில்லை.
இப்போது முடங்கிய படங்கள் ஒவ்வொன்றாக வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் மற்ற படங்களை விட எந்தத் தயாரிப்பாளரால் திரையரங்குகளை கைப்பற்ற முடியும் என்பதுதான் தீர்மானிப்பதாக உள்ளது. முதலில், நடிகர் தனுஷ் மற்றும் நடிகை ரிச்சா நடிப்பில் உருவாகியுள்ள “மயக்கம் என்ன” என்ற படம் வெளியாகப் போகிறது. நவ.18 ஆம் தேதியன்று இந்தப்படத்தைத் திரையிடத் திட்டமிட்டுள்ளனர்.
அதாவது, எந்தெந்தத் திரையரங்குகளில் வேலாயுதம் மற்றும் 7ஆம் அறிவு ஆகிய படங்களை எடுத்துவிடப் போகிறார்களோ அங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த மாத இறுதி வரையில் வேறு பல திரையரங்குகளிலிருந்தும் இந்தப் படங்கள் வெளியேறும் வாய்ப்புள்ளது. அதைக்கணக்கில் கொண்டுதான் “வெயில்” மற்றும் “அங்காடித்தெரு” படங்களைத் தந்த இயக்குநர் வசந்த பாலனின் அரவான் படம் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் வெளியிடுவதற்கான வேலைகள் தற்போது நடந்து வருகின்றன.
இத்தகைய வாய்ப்புகளை நழுவவிட்டால் பொங்கலுக்கு மீண்டும் “நண்பன்” போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் வந்து திரையரங்குகளை ஆக்கிரமித்து விடும் என்ற நிலை உள்ளது. அதற்குள் வெளியாகாவிட்டால் அதன்பின்னர் பள்ளித்தேர்வுகள் என்று ஏப்ரல் மாதம் வரையில் தள்ளிப்போய்விடும் அபாயம் உள்ளது என்கிறார்கள் திரைப்படத்துறையினர்.
மதுரை அரிட்டாபட்டி மலையில் எடுக்கப்பட்ட அரவான் எப்போது வரும் என்று காத்திருக்கிறோம். மேலும், மதுரையை மையமாக கொண்ட காவல் கோட்டம் நாவலிலிருந்து எடுக்கப்பட்ட கதை என்பதாலும் ஆவலாயிருக்கிறது. பகிர்விற்கு நன்றி.
ReplyDelete-சித்திரவீதிக்காரன்