அ.இ.அ.தி.மு.க. தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்து 6 மாதங்கள் கடந்துவிட்டன. கடந்த மே மாதம் தேர்தல் நடந்தபோது மீண்டும் தி.மு.க. ஆட்சி வருமா அல்லது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிலமருமா என்ற கேள்வி ஊடகங்களில் வலுவாக எழுந்தன. தி.மு.க. தலைமையோ, மீண்டும் தாங்கள் தான் ஆட்சியில் அமர்வோம் என்று நம்பிக்கையோடுதான் இருந்தனர். தங்களது இலவசங்களும், ஒரு சில நலத் திட்டங்களும், திருமங்கலம் பார்முலாவும் தங்களுக்கு கை கொடுக்கும் என்று நம்பினர். ஆனால் அந்த நம்பிக்கையைத் தகர்த்து எறிந்த தமிழக மக்கள், தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டினர். அ.இ.அ.தி.மு.க மீண்டும் ஆட் சிக்கு வந்தது. எப்படி இது நிகழ்ந்தது? காரணம் என்ன?
ஜெயலலிதா நினைப்பதுபோல், அவரைத் திருப்திப்படுத்த அ.தி.மு.க பிரமுகர்கள் கூறுவது போல் ஜெயலலிதாவுக்கு விழுந்த வாக்குகளா? இல்லை. இந்த வெற்றியின் பின்னால் மக்களின் தெளிவான பார்வை இருந்தது. தி.மு.க. ஆட்சி மிகவும் ஊழல் நிறைந்த ஆட்சி. ஒரு குடும்பம் கோலோச்சிய ஆட்சி. மக்கள் பணத்தை ஒரு சிலர் சேர்ந்து சூறையாடிய ஆட்சி. சட்டம்-ஒழுங்கு சீரழிந்த ஆட்சி. கட்டப்பஞ்சாயத்தும், நிலமோசடியும் மலிந்த ஆட்சி. மத்திய அரசில் அங்கம் வகித்து தி.மு.க.வும், காங்கிரசும் நடத்திய ஊழல்கள் மற்றும் மக்கள் விரோத செயல்கள். மின் வெட்டால் தமிழக மக்கள் இருளில் மூழ்கியது மட்டுமல்ல, தொழில்கள் முடங்கி, உற்பத்தி சரிந்து வேலையின்மையும், பொருளாதார சீரழிவும் மிகுந்த ஆட்சி. எனவே அதற்கு விடை கொடுக்க மக்கள் தயாரான போது, ஒரு வலுவான அணியோடு அ.இ.அ.தி.மு.க. களம் இறங்கியது. தே.மு.தி.க., சிபிஐ(எம்), சி.பி.ஐ, புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளின் அணிவகுப்பாக இந்த அணி மாறியபோது, ஆட்சி மாற்றம் உறுதிபடுத்தப்பட்டது. மக்கள் நம்பிக்கையோடு வாக்களித்தனர்.அதிக பெரும்பான்மையோடு அ.இ. அ.தி.மு.க. அரசு பதவியேற்றது. ஜெயலலிதா முதலமைச்சரானார்.
தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதும் மக்களுக்கு நிவாரணமளிக்கும் பல அறிவிப்புகளை வெளியிட்டார். மாதம் 20 கிலோ அரிசி இலவசமாகக் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்குவது, இலவச மிக்ஸி, கிரைண்டர் வழங்குவது, இலவச மின்விசிறி வழங்குவது, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உரிய மாற்றங்கள் செய்து பல்வேறு நோய்களுக்கும், அதிக மருத்துவச் செலவுகள் கிடைக்கும் வகையில் உரிய மாற்றம் செய்வது போன்ற அறிவிப்பு கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. ஊடகங்கள் சில இலவசங்களைக் கொச்சைப் படுத்தினாலும், பெரும் முதலாளிகளுக் கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பெருமளவு நிதிச்சலுகை வழங்கும் மத்திய அரசின் செயலை கண்டுகொள்ளாத ஊடகங்கள், ஏழை மக்களுக்கு வழங்கும் சில சலுகைகளை மட்டும் விமர்சிப்பதை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கவில்லை.
முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் உள்ள ரவுடிகள், கொள்ளைக்காரர்கள், மோசடி பேர்வழிகள், கொலைகாரர்கள் அனைவரும் ரயிலேறி ஆந்திராவிற்குச் சென்று விட்டனர் என்று அகம்பாவத்துடன் அறிக்கை வெளியிட்டார். ஆனால் அ.தி.மு.க. ஆட்சி வந்த பின்னரும் ரவுடிகளின் அட்டூழியம் ஓய்ந்தபாடில்லை. தினசரி கொலை, கொள்ளைகள் தொடர்ந்து நடைபெறும் செய்திகள் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வந்த வண்ணம் உள்ளன. சட்டம் -ஒழுங்கில் கவனம் செலுத்த வேண்டிய காவல்துறையினர், ஆளும் கட்சியைத் திருப்திபடுத்தும் பணிகளில்தான் அதிகம் ஈடுபடுத்தப்படுகின்றனர். மற்றவர்கள் பந்தாடப்படுகின்றனர். பரமக்குடியில் தேவையற்ற துப்பாக்கிச்சூடு நடத்தி, அப்பாவி தலித் மக்களைச் சுட்டுக் கொன்ற காவல்துறையினரின் செயலை நியாயப்படுத்தும் பணியையே ஜெயலலிதா செய்தார்.மேலும் 3 மாத காலத்திற்குள் மின்வெட்டை சரி செய்து விடுவதாக நம்பிக்கையுடன் கூறினார். ஆனால் நிலைமை மிகவும் பரிதாபம். தினசரி 4 மணிநேரம் முதல் 5 மணி நேரம் வரை மின்வெட்டு தொடர்கிறது. நிலைமை தினசரி மோசமாகிக் கொண்டே வருகிறது. மக்கள் மிகவும் அவதிப்படுகின் றனர். தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பும், தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும் அதிகரித்துக் கொண்டே வரு கிறது. இதற்கெல்லாம் துரித நடவடிக்கை எடுத்து மக்களுக்கு நலம் செய்ய வேண்டிய முதல்வரின் கவனமும், முனைப்பும் எங்கு இருக்கிறது?
கடந்த ஆட்சிக்காலத்தில் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற கட்டடம் கட்டப்பட்டது. சுமார் 1000 கோடி ரூபாய் செலவில் அண்ணா சாலையில் அது பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது. அப்போதே அதை எதிர்த்தவர் ஜெயலலிதா. இருந்தாலும், ஒரு அரசு தேவையின் அடிப்படையில் மக்கள் பணத்தைச் செலவு செய்து எழுப்பிய அந்த கட்டடத்தைப் பயன்படுத்தமாட்டேன் என்ற அறிவிப்பு வந்தபோது அனைவரும் ஆட்சேபித்தனர். தனிமனித விருப்பு வெறுப்புக்கு ஏற்ப மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பது கூடாது என்று அறிவுறுத்தினர். ஆனாலும் பிடிவாதத்தில் யாருமே மிஞ்ச முடியாத ஜெயலலிதா, பழைய சட்டமன்ற கட்டடத்தில், புனித ஜார்ஜ் கோட்டையில் இரவோடு இரவாக சட்டமன்ற கூடத்தையும், தலைமைச் செயலகத்தையும் அமைத்து, அங்கேயே சட்டமன்றத்தைக் கூட்டினார். சந்து பொந்துகளுடன் கூடிய வசதியற்ற, பழமையான அந்த கட்டடத்தில் தான் சட்டமன்றம் கூடும் என்பதிலே எதாவது நியாயமான காரணம் உண்டா? தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டதை தவிர்ப்பது என்பதைத் தவிர. 1989ல் இந்த கட்டுரையாளர் அவை உறுப்பினராக இருந்தபோது, பெருச் சாளிகள் சட்டமன்ற உறுப்பினர்களின் இருக்கைகளுக்கு இடையில் ஓடி விளையாடியதும், அதை கட்டுரையாளர் சட்டமன்றத்திலேயே எடுத்து கூறியதும் நினைவுக்கு வருகிறது. (ஊழல் பெருச்சாளிகளே இந்த அவையில் இருக்கும் போது, ஒரிஜினல் பெருச்சாளி இருக்கக் கூடாதா என்று நீங்கள் முணுமுணுப்பது காதில் விழுகிறது.) அத்தகைய வசதியற்ற இடத்தை விட்டு விட்டு வசதியான புதிய இடத்தை மறுப்பது நியாயமா? அந்த வழியாகச் செல்லும் போது புல்லும், புதரும் வளர்ந்து பாழடைந்து வரும் இந்த பெரும் மாளிகையைப் பார்க்கும் நமக்கு பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை. உயர்நீதிமன்ற வழக்கு வந்தவுடன் அங்கு எய்ம்ஸ் போன்ற ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வருவதாகக் கூறுவதை யார்தான் நம்புவது? அதுபோல்தான் அற்புதமான அண்ணா நூற்றாண்டு விழா நினைவு நூலகம். லட்சக்கணக்கில் புத்தகங்கள், நூலகத்துக்கான அனைத்து வசதிகளுடன் அதை மாற்றுவது ; அங்கு குழந்தைகள் மருத்துவமனை என்கிறபோது இந்த நோயைக் குணப்படுத்த மருத்துவமனை எதுவும் இல்லையா என்றுதான் எண்ணத்தோன்றும்.
திடீரென முதல்வர் ஜெயலலிதா ஜெயா தொலைக் காட்சியில் தோன்றுகிறார். அமைச்சரவைக் கூட் டத்தையொட்டி 17.11.2011 பிற்பகலில் அவர் தோன்றியபோது மக்கள் தலையில் இடியாக அறிவிப்புகள் வந்துவிழும் என்று யாராவது எண்ணினோமா? ஆனால் பேருந்து கட்டணம் 60 சதம் முதல் 80 சதம் வரை உயர்த்தப்படுகிறது. பால் விலை ஒரு லிட்டருக்கு ரூ.6.25 உயர்த்தப்படுகிறது . மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது என்ற அறிவிப்புகள் மக்களுக்கு, எவ்வளவு பெரிய அதிர்ச்சி. தினசரி பேருந்தில் வேலை பார்க்கும் இடங்களுக்குச் செல்லும் சாதாரண உழைப்பாளிகள் தலையில் எவ்வளவு பெரிய சுமை. வாக்களித்த மக்களுக்கு தரும் பிரதிபலனா இது? மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள விலைஉயர்வில் திணறிக் கொண்டிருக்கும் மக்களுக்கு முதல்வர் தரும் நிவாரணம் இதுதானா? திடீரென 13000 மக்கள் நலப்பணியாளர்கள் கூண்டோடு வேலை நீக்கம். உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது போல், சாதாரண ஊழியர்கள் பந்தாடப்படுவது ஏன்? சமச்சீர் கல்வியை கைவிட எடுத்த முதல்வரின் முயற்சிக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த சரியான குட்டுக்குப் பின்னரும், இத்தகைய விளையாட்டுகள் தொடர்கின்றன. ஜெயலலிதா முதல்வராகும் போதெல்லாம் 1991, 2001, 2011 என ஒவ்வொரு தடவையும் இதுதானே அனுபவம். ஒவ்வொரு 5 ஆண்டு களுக்குப் பின்னரும் மக்கள் அந்த ஆட்சியைத் தூக்கியெறிந்ததிலிருந்து உரிய பாடத்தை அவர் கற்கவில்லையே!
தமிழகம் வகுப்புவாதிகள் நுழைய முடியாத இடமாகவே இருந்து வந்தது. பெரியார் உள்ளிட்ட பகுத்தறிவு கொள்கையாளர்களால் உருவாக்கப்பட்ட வலுவான சமய சார்பற்ற அரசியல் வளர்ந்த பூமி. ஆனால் அ.இ.அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தங்களது சந்தர்ப்பவாத நிலைபாடுகளால் அந்த வகுப்புவாத விஷச் செடியை இங்கு ஊன்றி வளர்த்தனர். எனவேதான் தமிழகத்திலும் சில இடங்களில் வகுப்புவாத பதட்டங்கள் வரத் துவங்கின. பா.ஜ.க.வுடன் தங்களது அரசியல் உறவால் தங்களுக்கு தமிழகத்தில் அரசியல் லாபமில்லை, நஷ்டமே என்பதால், தற்போது பா.ஜ.க.வுடன் தமிழகத்தில் தேர்தல் உறவு வைக்கத் தயாராவதில்லை. கடந்த தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகளுடன் உறவு கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிய ஜெயலலிதா, தனது பதவியேற்பு விழாவிற்கு மதவெறியின் மொத்த உருவமான மோடியை சிறப்பு விருந்தினராக அழைத்து பக்கத்தில் அமர்த்திக் கொள்கிறார். மோடியின் பதவியேற்புக்கு தனி விமானத்தில் சென்று அமர்ந்த அவர், அதற்கு கைமாறாக அவரை அழைத்துள்ளாரா? மேலும் பா.ஜ.க. தலைவர் அத்வானி ஊழலுக்கு எதிராக நடத்திய ரத த்திரை நாடகத்தின் கடைசி காட்சியில், நிறைவு விழாவில், அ.இ.அ.தி.மு.க. எம்.பிக்களை அனுப்புகிறார். இது அ.இ.அ.தி.மு.க. தற்போதும் அகில இந்திய அரசியலில் பா.ஜ.க.வுடன் எந்நேரமும் கைகோர்க்க வாய்ப்புள்ளது என்ற சமிக்ஞையைக் கொடுக்காதா?
தமிழகத்தில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் மாறி மாறி மக்களை ஏமாற்றியே வந்துள்ளன. மக்கள் தலையில் மிளகாய் அரைப்பதில் இரண்டும் போட்டியிட்டு வருகின்றன. வாக்களித்தபின் மக்கள் கையறு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களும் வேறு வழி தெரியாமல் மாறி மாறி வாக்களித்தும், கிடைப்பதெல்லாம் மக்கள் விரோத ஆட்சி தான். உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாற்று உருவாக்கப்பட முயற்சி நடந்தபோது மக்கள் பல காரணங்களால் மாற்றை உரிய அளவில் அங்கீகரிக்கவில்லை. விளைவு, கடும் தாக்குதல் மக்கள் மீது உடனடியாகவே. மக்கள் தி.மு.க, அதிமுகவிற்கு உரிய மாற்றை பற்றி யோசிக்க வேண்டும். இடதுசாரி கட்சிகளும், பிற மதச்சார்பற்ற கட்சிகளும் வலுப்படாமல் அது சாத்தியமல்ல. தற்போது தங்கள் மீது தொடுக்கப்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் தாக்குதல்களில் இருந்து தங்களைக் காப்பாற்றிட, இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து நின்று தெருவில் இறங்கி போராடுவதே தற்போதுள்ள ஒரே வழி.
-எஸ்.நூர்முகம்மது
J character therinche CM akitdinka . eppo makkal nala paniyalarkalodu mudinchiduma jeya vin kola veri . aatdai kadichi manuchanai kadicha kathaiyaka thodarum j aatchi viratda padanum nu othdu kitda sari .
ReplyDelete