- பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா தரையில் கிடந்த கைகளை அசைக்க முடியவில்லை. உடலில் படுத்திருந்த ஒரு நீண்ட சோம்பல் சட்டென தாவிக் குதித்து தரை முழுவதும் பரவியது. என்னைச் சுற்றிலும் மிகக் கொடூரமான சோர்வு ஆக்கிரமிக்கத் தொடங்கியது. சன்னல் வழியாக வெளியில் அசையும் துல்லியமான வெளிச்சத்தைப் பார்த்தேன். ஒவ்வாமை. மீண்டும் தலையைத் தாழ்த்தி தரையில் படுத்துக்கொண்டேன்.
தரை திடீரென சூடாகியிருந்தது. கதவுக்கடியிலிருந்து அறையில் சூழ்ந்திருந்த இருளின் மீது ஒரு நேர்த்தியான கீறலை ஒழுங்குபடுத்துவது போல வெயில் எக்கிப் பார்த்தது. மதியம் என் அறைக்குள் நுழையும் வெயில் இப்படித்தான் வந்தாக வேண்டும். அழைக்காத விருந்தாளியைத் தரிசிப்பது போல அதன் அருகில் அப்படியே படுத்துக்கிடந்தேன்.
மதியம் 12.05
அடிக்கடி சோம்பலான மதிய உறக்கத்திலிருந்து விழித்துக்கொள்வதற்கு ஒரு காரணம் மட்டுமே இருந்தது. அதையும் அவ்வப்போது ஞாபகப்படுத்திக் கொள்ளும் துர்பாக்கியம் வாய்த்துவிடுவதால் என்னையறியாமல் விழித்துக்கொண்டு வெறுமனே அமர்ந்திருக்கிறேன். மதியம் வீட்டில் இலேசான வெப்பமும் அடர்ந்த சூன்யமும் தரிசிக்க இயலாத ஒரு நதியைப் போல ஓடிக் கொண்டிருக்கிறது.
யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள்ளேயே காணாமல் போவது பற்றி எப்பொழுதேனும் சிந்தித்ததுண்டா? அது அத்துனை சுலபமான காரியம் அல்ல. அதற்கு முதலில் சுய வெறுப்பிற்கு ஆளாக வேண்டும். அருகாமையிலுள்ள மேசையின் விளிம்பில் இருந்த தண்ணீர் குவளை கைக்கெட்டும் தொலைவில். மீதமிருந்த தண்ணீரில் சலசல்ப்பு மறைந்துவிட்டிருந்தது.
அம்மா வாசல்வரை வந்ததும், காலில் அணிந்திருந்த செருப்பை வேகமாகக் கழற்றி ஓங்கிச் சுவரில் அறைந்துவிட்டு உள்ளே நுழைந்தார்.
மதியம் 12.15
சுவரில் நெளிந்துகொண்டிருந்த அந்த உருவம் இன்னும் சிறிது நேரத்தில் நான் எதிர்ப்பார்த்திராத ஒரு உருவத்தை அடைந்து பேரதிசயத்தை ஏற்படுத்தக்கூடும். அந்த மதியம் என் பொழுதுகளின் அத்துனை சலிப்பையும் வெறுமையையும் கரைத்துவிட்டு புது உற்சாகத்தைக் கிளர்ச்சியடைய செய்திருக்கும்.
“தர்மா. . .”
சுவரிலிருந்து ஒழுகத் துவங்கின சில சொற்கள் மட்டும். அதனை ஒட்டுமொத்தமாக அடுக்கி அழைத்துப் பார்க்கும்போது என் பெயர் ஒலிக்கப்படுகிறது. மூன்றாவதுமுறை தர்மா என உச்சரிக்கப்படும்போது சனி சுவரிலிருந்து கீழே விழுந்திருந்தது.
அதன் நாக்கு மிகத் தடுமனான உறுப்புகளைக் கொண்டிருந்தது. ஒரே சுவைத்தலில் என் சரீரத்திலுள்ள அனைத்து உணர்களையும் வலித்துவிடும் அசாத்திய வலிமை கொண்டிருப்பதாகத் தோன்றியது. கணம் தாளாத சனியின் நாக்கு வாயிலிருந்து கழன்று வெளியே தொங்கியது. சனியின் நாக்கின் நுனியில் தேங்கிக் கிடந்த உமிழ்நீரில் நான் தத்தளித்துக் கொண்டிருந்தேன்.
“டேய்! சரியா பசி எடுத்துருக்குமே?”
அம்மா அறையின் கதவை இரண்டுமுறை அடித்தார். சனி தலையை உயரமாகத் தூக்கி எக்கிப் பார்த்தது.
மதியம் 12.30
மதியம் எப்படி இவ்வளவு சாமர்த்தியமாக நீள்கிறது? அதனுக்கடியில் அமர்ந்துகொண்டு நீண்ட தியானத்தில் களைப்படைந்த உயிரைப் போல வெளிவர முடியாமல் போலியான அமைதியில் இலயித்திருக்கிறேன்.
“என்னா பண்றான்? சாப்ட்டானா?”
எரிச்சலூட்டும் அதே கேள்விகள். வழக்கமாக 12.30க்கு மேல் உணவுக்காக வீட்டிற்கு வரும் அப்பாவிடம் அந்தக் கேள்வி மட்டுமே தயாராக இருக்கின்றது. எடுத்துத் தூக்கிவீசிவிட்டு கால்களில் ஒட்டிக் கொண்டிருந்த மதியத்தைக் கழுவிக் கொண்டிருந்தார். அதன் சலசலப்பும் கால்களிலிருந்து சறுக்கி வலிந்தோடும் சப்தமும் திடீர் இரைச்சலாக மாறி அறைக்குள் நுழைந்தது. கையில் வைத்திருந்த கைவாலியை தொட்டித் தண்ணீரின் மேற்பரப்பில் வேகமாக எறிந்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தார். கைவாலி மிதந்து சென்று சனியின் முதுகில் உரசி நின்றது.
“எசு.பி.எம் முடிச்ச பையன், வேற தொழிலா இல்லெ? எவ்ளதான் சொல்றது? ஒரு மாட்டுக்கு ஒரு சூடு”
சனி இப்பொழுது ஒரு முரட்டுத்தனமான மாடாக உருக்கொண்டது. அதன் தலையின் இரு இடுக்குகளிலும் உறுதியான இரு கொம்புகள் முளைத்திருந்தன. தண்ணீர் தொட்டியின் அடியிலிருந்து தலையைத் தூக்கி வேளியே பார்த்தது. தண்ணீரின் மொத்த சலனமும் உள்ளுக்குள் அழுந்தி பரிதவித்துக் கொண்டிருந்தது.
மதியம் 12.45
அம்மா அறைக்கதைவைத் திறந்தார். உள்ளே சுவரோடு உடலைச் சாய்த்து உறங்கிக் கொண்டிருந்த சனியை எழுப்ப முயன்றார். சனி புரண்டு படுத்தது.
“டெ சனியனெ. எழுஞ்சி போய் சாப்புடு. உங்க கணபதி மாமா வீட்டுக்குப் போய்டு. அங்கத்தான் மோட்டர் கடையிலெ வேலை இருக்காமெ. ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவெ வந்து 5-10 நிமிசம் இருந்துட்டுப் போ, போதும்”
தளர்த்தப்பட்டு தாக்கும்போது அதன் வலி எத்துனைக் கடினமானதாக இருக்கும்? சனி தனது நீண்டு வளர்ந்திருக்கும் தலையை தூரமாக அகற்றி விரித்தது. அம்மா வெளியே சென்றதும் பசி அதிகரித்தது. எத்தனை நாள் இப்படி வெறும் மதியத்தைத் தின்று சலிப்படைவது? சனியின் தொண்டை குழிக்குள் அகலமான பசி தோன்றியிருக்கக்கூடும், சுவரில் தெரிந்த எனது நிழலை நாக்கால் சுவைத்துக் கொண்டிருந்தது. அதன் நாக்கின் நீளம் கொடுரமான மனநிலைக்குத் தள்ளியது.
தண்ணீர் தொட்டியிலிருந்து வெளியே குதித்து நீர் சொட்ட சொட்ட வேகமாக அறையை நோக்கி நடந்தேன். இப்பொழுது சனி பெரிய உருவமாக வீடு முழுக்க நிறைந்திருந்தது.
“கதவெ சாத்திட்டுத் தூங்காதெ, வெட்டி மிதிச்ச மாதிரி” யாருடைய குரலாக இருக்கும் என்கிற சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள முடியாததால் மீண்டும் உடலைச் சுவருக்கு முட்டுக் கொடுக்க வேண்டியதாகப் போயிற்று.
மதியம் 1.05
எல்லோரும் ஒரு பிம்பத்தை ஒரே மாதிரி சனி என்று அழைக்கும்போது சிறுநீர் சரியாக வெளியேறாததை ஒரு குறையென எங்குப் போய் சொல்வது? மதிய சூட்டில் கழிப்பறைக்குள் நுழைந்ததும் உடல் முழுவதும் பரவி வெறுப்பேற்றும் அதிர்வை எப்படி அர்த்தப்படுத்துவது என்கிற தடுமாற்றம். தண்ணீர் தொட்டியில் கைவாலி இன்னமும் மிதந்துகொண்டிருந்தது. அதை எக்கிப் பிடித்து அதன் சலனத்தை அடக்குவத்ன் மூலம் ஒருவேளை நிலையறியாமல் தாவிக் குதிக்கும் மனதையும் கட்டுப்படுத்த முடியும் என நம்பி செய்து பார்க்கும் கோமாளித்தனத்திற்கு ஆளாகியிருந்தேன்.
அப்பா மீண்டும் உள்ளே வந்தார். எதையாவது மறந்திருக்கக்கூடும். அவர் வாய் முணுமுணுக்கப் போகும் அடுத்த வார்த்தையையும் என்னால் மிக உறுதியாக ஊகிக்க இயன்றது. அவருக்கு வெளி அரசியல் தெரிந்த அளவிற்குக் குடும்ப அரசியல் கைவரவே இல்லை. வீட்டிற்குச் சாதாரண பொருள் வாங்கும் தீர்மானத்தில்கூட தனது அதிகாரத்தை அம்மாவிடம் பறிக்கொடுத்துவிட்டு பரிதாபமாக நின்றுகொண்டிருப்பார். அதிகாரம் ஆணிடமிருந்தால் என்ன பெண்ணிடமிருந்தால் என்ன? அது ஒரே மாதிரியான அடிமைகளைத்தான் உருவாக்க்குகிறது எனச் சொல்லத் தோன்றுகிறது.
“மைக்கா பணம் வராது. வாய்க்கரிசி போட்டுட்டானுங்களே. இனி என்னா மசுரு கிடைக்கும்?”
அரசியலின் ஏமாற்றத்தின் ஒரு துளி எங்கள் வீட்டிலும் இருந்தது. அவருக்கென்ன தெரியப் போகிறது அதே அரசியலின் ஏமாற்றத்தில் வளர்க்கப்பட்ட இன்னொரு துளிதான் நானும் என. அவருக்கு வேண்டியது அவருடைய பங்குப் பணம் ஏமாற்றப்பட்டதன் கொடூரத்தை ஊர் முழுக்கப் பரப்பி அரசியலுக்கு எதிரான இன்னொரு உரையாடலைத் துவக்கி வைக்க வேண்டும்.
“ஒனக்குப் பணம் கிடைச்சிச்சா?” எனக் கேட்கப்படும் முதல் கேள்வியே அரசியலின் மீதான அதிருப்தி அலையைச் சேகரிக்கும் முயற்சிதான். 6 ஆண்டுகளுக்கு முன் எழுதி 8 பாடங்களில் தேர்ச்சிப் பெற்ற எனது எசு.பி.எம் சான்றிதழ் அலமாரியின் உள்ளே கோடுகள் விழாதபடி பாதுகாப்பாக வைக்கப்பட்டுருக்கின்றது. அதில் ஏனோ இந்த ஆறு ஆண்டுகளில் சிறுக சிறுக மெலிந்துபோன ஓர் அரசியலின் தேர்ச்சியையும் பதித்து வைத்துள்ளேன். அது எனக்கு மட்டும் புரியக்கூடிய தீவிரம். இழப்பு, சோர்வு, அவநம்பிக்கை.
சனி மெல்ல எழுந்து அலமாரியில் வைக்கப்பட்டிருந்த அந்த 8 பாடங்களில் தேர்ச்சிப் பெற்ற “அரசியலை” வெளியே எடுத்து கிழித்து எறிந்தது. தனக்கு எந்த வகையிலுமே திருப்தியளிக்காத ஒன்று தன்னைச் சுற்றி மிகப்பாதுகாப்பாக இருப்பது அசௌகரிகமாகவே இருந்தது.
“ஒனக்கும் பணம் கிடைக்கலயா?”
முன்பொரு மதியம்
நாளிதழில் போட்டிருந்த செய்தியைப் படித்துவிட்டு அப்பா வீட்டுக்கு வந்து சேர்ந்த விதம் வித்தியாசமானதாக இருந்தது. ஒரு பரப்பரப்புடன் வீடு முழுக்க எதையோ தேடிக்கொண்டிருந்தார். யாருடன் பேச விரும்பாமல் வெறும் மௌனத்தை விழுங்கிக்கொண்டு வீட்டின் தரை, அலமாரிக்கு அடியில், கட்டிலுக்குக் கீழ் என அவரது பார்வை அலைந்தது.
சோர்வாக மெத்தையில் படுத்திருந்த அம்மா எழுந்து அவரை விநோதமாகப் பார்த்தார். வீட்டு வேலைகள் அனைத்தும் அம்மாவின் ஆக்கிரமிப்பில் இருந்ததால் அப்பா ஏதோ சுத்தப்படுத்துகிறார் என்கிற தவறான முடிவுக்கு வந்தவர், கத்திக்கொண்டே வெளியில் ஓடி வந்தார்.
“என்னா பண்றீங்க? உங்கல யாரு இந்த வேலைலாம் செய்ய சொன்னது?”
“மைக்கா சூரா எங்க?”
“அது யேன் இப்பெ?”
“மைக்கா காசுலாம் திரும்பி தராங்கலாம்..கோலம்பூருக்கு எடுத்துட்டுப் போய் காசு போட்ட அத்தாச்செ காட்டனா, ஒரு மாசத்துலெ காசு கிடைச்சுருமாம்”
“ஐயோ ஆத்தாடி, கொடுத்துட்டுத்தான் மறுவேல பாப்பானுங்க. கொடுக்கறவனுங்கலா இருந்திருந்தா 23 வருசம் காசைலாம் ஏப்பம் உட்டுக்கிட்டு காலத்தெ ஓட்டிருக்க மாட்டானுங்க. . .எல்லாம் புளுவாண்டிங்க”
“நீ கம்முன்னு இரு. காசு சூரா எங்க?”
அம்மா கோபமாக அப்பாவைப் பார்த்துவிட்டு மேல்மூச்சி வாங்கினார். அப்பா மெல்ல பலவீனமடைவதைத் துல்லியமாகக் கவனிக்க முடிந்தது. சட்டென அதை எதிர்க்கொள்ளும் விதமாக மீண்டும் அந்த மைக்கா பத்திரத்தைத் தேடுவதில் மும்முரமானார்.
வேறொரு மதியம்
வாசல்வரை வந்தவர், வானத்தை அன்னாந்து பார்த்துவிட்டு வாசலிலேயே அமர்ந்தார். அறைக்குள் படித்துக்கொண்டிருந்த எனக்கு அது ஒரு மங்கலான காட்சியைப் போல தெரிந்தது. முடிந்தவரை எக்கி வாசலில் அமர்ந்திருக்கும் அப்பாவைப் பார்த்தேன். மிகுந்த களைப்பும் கொடூரமான மதியத்தின் வெயிலும் அவருடைய உடலில் படிந்திருந்தன.
“என்னாச்சி? வந்தோன வெளில உக்காந்துட்டிங்க?” உள்வாசலுக்குள்ளிருந்து உருவம் தட்டுப்படாத அம்மாவின் குரல். எப்பொழுதும் அப்பாவின் மௌனத்தை அவசரமாகக் களைத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் அதே குரல். அப்பா தலையை மட்டும் சோர்வாக ஆட்டிவிட்டு மீண்டும் அமைதியானார். கையில் ஒரு கடிதம் இருந்ததை அப்பொழுதுதான் கவனித்தேன்.
“என்னாச்சின்னு கேட்கறன், சும்மா உக்காந்துருக்கீங்க?”
கையில் ஒரு வாளியுடன் வெளியே வந்த அம்மா அப்பாவின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார்.
“ஒன்னுமில்லெ நீ உன் வேலையெ பாரேன்.. .சும்மா கத்திக்கிட்டு இருக்கெ”
அப்பாவின் கையிலிருந்த கடிதத்தைப் பிடுங்கி ,”இதுலெ என்னா எழுதி இருக்கு?” எனக் கேட்டார்.
“மைக்கா காசு 1 வெள்ளிக்கு 1.20 காசுதான் கொடுப்பானுங்கலாம். 23 வருசத்துலெ பாட்டாளிங்களுக்குக் கொடுக்கற லாபமா இது? 23 வருசம் இவ்ள காசையும் வெச்சிக்கிட்டு எதைப் பிடிச்சி ஊம்பிகிட்டு இருந்தானுங்க? நாமத்தெ பொட்டுட்டானுங்க”
விரக்தியுற்ற அப்பாவின் குரல் வீடு முழுக்க சன்னமாய் ஒலித்தது.
மீண்டுமொரு மதியம்
பரீட்சை முடிந்து வீட்டில் வேலையேதுமின்றி காலத்தை நகர்த்திக்கொண்டிருந்த நாட்கள். அப்பாவின் நண்பர் குமாரசாமி வீடுவரை வந்திருந்தார். வெகுநேரம் முன்வாசல் கதவைத் தட்டிக்கொண்டிருந்தவரை அறைக்குள் இருந்துகொண்டே பார்த்தேன். பெரும்பாலும் எனக்கு முன் நிகழும் காட்சிகளின் மீது உடனடி கவனம் வருவதில்லை. அதை உற்றுப் பார்த்திருந்துவிட்டு சுதாரித்துக்கொள்ள கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. அப்பாவின் நண்பர் தொடர்ந்து முன்வாசல் கதவின் பூட்டை இரும்பு கதவோடு வைத்துத் தட்டி சத்தத்தை எழுப்பிக்கொண்டிருந்தார்.
வாசல் கதவைத் திறந்து விசாரித்தேன். அப்பாவிற்கு மைக்கா பணம் கிடைத்துவிட்டதா எனத் தொடங்கிய கேள்வி அவர் எங்குச் சென்றிருக்கிறார் என்பதில் வந்து நிற்கும்போது மதியம் தலைக்கு மேல் எரிந்துகொண்டிருந்தது.
“தம்பி அப்பா வரவரைக்கும் இப்படி வாசல்படிலெ உக்காந்துக்குறேன். பாத்துட்டுத்தான் போகனும்”
வெயிலைவிட மிகவும் உக்கிரமாக இருந்தது அவருடைய முகம். ஒரு குவளை நீராஇ வாங்கிக் குடித்துவிட்டு பெருமூச்சி வாங்கினார். மதியம் எல்லோருக்கும் ஒரு உடல்வாகைக் கொடுத்திருந்தது. கரைந்து போய்விடக்கூடிய நிலையில் சுருங்கியிருந்தது.
“மைக்கா காசு, நாங்கலாம் ஒரே எஸ்டேட்ல இருந்தப்பெ கொஞ்சம் கொஞ்சமா சேத்து வச்சி கொடுத்தோம். ஊர் ஊரா வந்தானுங்க.. . பணம் போடுங்க, டபுளா கெடைக்கும்னு சொன்னாங்க. நம்பி போட்டோம், உயிரே போயிரோம் போல. பொணம் விழுந்தோனத்தான் மிச்ச காசெ கொடுப்பானுங்க போல”
வெகுநேரம் அதையே புலம்பிக்கொண்டிருந்தார். எப்படி இதையெல்லாம் பார்த்து வியப்பது எனக்கூட எனக்கு தெரியவில்லை. வெறுமனே எந்தப் பிரதிபலிப்பும் இல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.
“தம்பி.. ஐயா.. .அப்பா வந்தா சொல்லு முனியாண்டி வந்தேன்னு. இன்னொருக்கா வரேன். அந்த மைக்கா காசு பத்தி கேட்டேன்னு சொல்லு”
அவர் அங்கிருந்து சென்றதும், வாசலையே கவனித்துக்கொண்டிருந்தேன். மதியம் கவனிப்பதைத் தவிர வேறு பயிற்சியைக் கொடுக்க மறுக்கிறது.
மதியம் 1.25
அம்மா மீண்டும் அறைக்கதவைத் தட்டினார். அவரது தட்டுதலில் வேகமும் வெறுப்பும் தெரிந்தாலும் கூட மீண்டும் மீண்டும் அழைக்கப்படுதலில் எங்கோ ஓர் அக்கறை இருப்பதாகவே தோன்றுகிறது. அதைத் தேடிக் கண்டறிவது தாய்மையைக் கிண்டலடிப்பது போல ஆகிவிடும். எழுந்து கதைவைத் திறந்ததும், எப்பொழுதும் போல சனிக்கு மதிய உணவு தயாராக இருந்தது. சனியின் நாக்கிலிருந்து தானாக எச்சில் வழிந்துகொண்டிருந்தது.
0 comments:
Post a Comment