1983-ஆம் ஆண்டு மே மாதம். மைசூரில் பேராசிரியர் சி.டி. நரசிம்மையா தொன்யாலோகாவில் தங்கி இருந்து ‘சூரியவம்சம்’ நாவலை எழுதிக் கொண்டிருந்தேன். தொன்யாலோகா ஒர் இலக்கிய அமைப்பு. உலகம் முழுவதிலும் இருந்து எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டு அவர்கள் எழுதுவதற்கு வசதி செய்து கொடுத்துக் கொண்டிருந்தது. இயற்கையான சூழல். மரம் செடி கொடிகளுக்கிடையில் குடில்கள். ஆர்.கே. நாராயணன் யோசனையின்படி அமைக்கப்பட்டது. படிக்க மிகவும் சிறந்த நூலகம். ஆங்கில நூல்கள்தான். பேராசிரியர் சி.டி. நரசிம்மையா மைசூர் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று இருந்தார். அவருடைய இரண்டு மகன்களும் மருமகள்களும் ஆங்கில ஆசிரியர்கள்.
எனக்கு அடுத்த அறையில் ஆங்கிலமொழியில் கவிதை, கட்டுரைகள் எழுதும் இசையிம் நசிக்கீள் தங்கி இருந்தார். அவர் மும்பை பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியர். சிறிது காலம் இம்பிரண்ட் என்ற இலக்கிய இதழை நடத்தினார். நாடறிந்த தீவிரமான இலக்கியவாதி; ஆனால் பார்க்கும் போதும், நடக்கும்போதும் பரமசாதுவாக இருந்தார்.
காலைப்பொழுதில் மைசூர் பல்கலைக்கழக வளாகத்தில் சி.டி. நரசிம்மையாவோடு இலக்கியம் பற்றி பேசிக்கொண்டே நடந்து சென்றோம். ஒரு நாள் இந்திய மொழிகள் பற்றிபேச்சு வந்தது.
மராட்டியமொழியில் நவீன இலக்கியம் எப்படி இருக்கிறது? என்று கேட்டேன். “மும்பையில் செல்வம் கொழிக்கிறது என்கிறார்கள். அது சரியாக இருக்கலாம். ஆனால் மராத்திமொழியில் அசலான இலக்கியம் எழுதப்படுவது இல்லை. இலக்கியம் எழுத ஆட்கள் முன்வருவது இல்லை. படிக்கவும் ஆட்கள் கிடையாது. இலக்கியம் மட்டுமல்ல, மராத்தியில் சினிமாகூட கிடையாது. இந்தி சினிமா இருக்கிறது. எனவே மராத்தியில் நாடகம் போடுகிறார்கள். எனவே சிலர் மராத்தியில் நாடகம் எழுதுகிறார்கள். ஆனால் கவிதை, சிறுகதை, நாவல் எழுத ஆட்கள் இல்லை”.
“மும்பைக்கு வெளியில் மராத்தி மொழி பேசப்படு கிறது. அவர்களுக்காகச் சிறுகதைகள், நாவல்கள் எழுதப்படுவது இல்லையா?”
“சிலர் எழுதுகிறார்கள். அவர்களுக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் கிடையாது. அவர்களுக்கு புராணம், இதிகாசம் கொஞ்சம் தெரியும். அதை வைத்துக்கொண்டு காலத்தை ஓட்டுகிறார்கள். இந்திய மொழிகளில் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது என்பது மட்டுமல்ல, மராத்தியில் எழுதப்படுவதும் தெரியாது. அவர்களிடம் விமர்சனம் கிடையாது. ஒரு மராத்தி எழுத்தாளர் வீட்டிற்குச் சென்றால் தன் ஐந்தாறு புத்தகங்களை அடுக்கி வைத்து இருப்பார்; சிநேகித எழுத்தாளர்கள் கையெழுத்திட்டுக் கொடுத்த சில புத்தகங்கள் இருக்கும். அப்புறம் ஆங்கில, பிரெஞ்சு, அமெரிக்கப் புத்தகங்கள். அவற்றில் பெரும்பாலானவை படிக்கப்பட்டு இருக்காது’’
“நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்களே அதனை யார் படிக்கிறார்கள்?”
“எழுதிய நான் படிக்கிறேன். வெளியிடும் உதவி ஆசிரியர் படிக்கிறார்; அவ்வளவுதான். மின்சார ரயிலில் என்னோடு பல்கலைக் கழகத்திற்கு வரும் பேராசிரியர்கள், பத்திரிகையில் என்கவிதையைப் பார்த்ததாகச் சொல்பவர்கள் படித்ததாகச் சொன்னது இல்லை.”
“பேராசிரியர்கள் தானே. இலக்கியம் கற்றுக்கொடுக்கும் பேராசிரியர்கள் ஏன் ஒரு புதிய படைப்புப் பற்றி விமர்சிக்க மறுக்கிறார்கள்?”
“முதல் காரணம், கவிதை ஒரு பத்திரிகையில் வெளிவந்தாலும் அது பத்திரிகையின் குணநலன்களோடு இணைந்து போவது இல்லை. அதன் மொழி தனியாக இருக்கிறது. எனவே அக்கறை எடுத்துக்கொண்டு படிக்க வேண்டும். இரண்டாவது அம்சம் கவிதை சொல்லும் கருத்தை, வாழ்க்கையை உள்வாங்கிக் கொண்டு சொந்தமாகச் சொல்ல வேண்டும். அது பெரிய வேலை. அதோடு புதிய படைப்பைத் தான் சரியாகப் படித்து இருக்கிறோமா? புரிந்து கொண்டிருக்கிறோமா? என்ற பயம் வந்துவிடுகிறது. அதன் காரணமாகப் படித்திருந்தாலும் பலர் அது பற்றிப் பேசுவதில்லை அதிலும் கல்வி போதிப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கும் பேராசிரியர்கள் இலக்கியம் பற்றி பேசுவதும் எழுதுவதும் இல்லை”
“ஆங்கிலத்தில் எழுதுவதால் அதிகமான மக்கள் படிக்க வாய்ப்பு இருக்கிறது அல்லவா?”
“வாய்ப்பு இருக்கலாம். ஆனால் மக்கள் படிப்பது இல்லை. முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலத்தில் தான் எழுதி வருகிறேன். அது எனக்குத் தாய்மொழி இல்லை. நான் யூதன். ஆனால் ஹீப்ரூமொழியில் எழுத முடியாது. நான் மராத்தி மாநிலத்தில் வாழ்கிறேன். அதனால் மராத்தி என் தாய்மொழி. இருந்தாலும் நான் மராத்தியில் எழுத முடியாது. என் படிப்பு ஆங்கிலமொழி வழியிலானது. ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்று கிறேன். எனவே ஆங்கிலத்தில் தான் எழுதவேண்டியிருக்கிறது. அதுதான் என் பிரச்சினை” என்றார்.
எழுதக் கூடியவர்களுக்கு எல்லாம் மொழிதான் பிரச்சினை. மனிதர்கள் புலம் பெயர்கிறார்கள். தாய்நாடு; தாய்மொழி இல்லாமல் போகிறது. புதிய நாட்டில், புதிய மொழியில் பேசவும் எழுதவும் நேர்கிறது.
1999-ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற, ஸ்ரீலங்கா-இந்தியா கருத்தரங்கத்திற்கு, இந்தியாவின் சார்பில் சென்று இருந்தேன். என்னோடு அசோகமித்திரன், லீலா பையா நாயர் என்ற வங்காளப் பெண்கவிஞரும் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் கா. சிவத்தம்பி, சிவகுருநாதன் மற்றும் சிங்கள எழுத்தாளர்கள் சிலரும் கலந்து கொண்டார்கள். அவர்களில் ஒருவர் திருமதி ஜீன் அரச நாயகம். அவர் இலங்கையில் நன்கு அறியப்பட்ட கவிஞர். ஆங்கிலத்தில் கவிதையோடு பயணக் கட்டுரைகளும் சிறுகதைகளும் எழுதுகிறார்.
“நீங்கள் ஆங்கிலத்தில் எழுதக் காரணம் என்ன?” என்று கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சுற்றிப் பார்க்கும்போது கேட்டேன்.
“ஆங்கிலம் எனக்குத் தாய்மொழி போல. என் தந்தை டச்சுக்காரர். தாய் சிங்களம். எங்களை பர்க்கீஸ் என்பார்கள். வீட்டில் ஆங்கிலம் பேசுவோம். படித்ததும் ஆங்கிலம். எனவே எழுதுவதும் ஆங்கிலந்தான்” என்றார்.
திருமதி ஜீனோடு கண்டி சென்றோம். பழைய காலத்து வீடு. நிறைய புத்தகங்கள். நாய், பூனைகளோடு அவர் கணவர் எங்களை வரவேற்று தேனீர் தயாரித்து வழங்கினார். அரச நாயகம் ஆங்கிலத்தில் சிறுகதைகள், நாவல் எழுதுகிறார்.
எழுதுவதற்கு இதுதான் சரியான மொழி என்பது கிடையாது. யாரும் மொழியால் சிந்திப்பது இல்லை. கதையைக் கட்டமைப்பதும் கிடையாது. தங்கள் கருத்தை, கதையை ஒன்றுக்கு மேற்பட்ட மொழி தெரிந்தவர்கள் எதில் சரியாகச் சொல்ல முடியும் என்று கருதுகிறார்களோ அதில் எழுதுகிறார்கள்.
கன்னட மொழியில் நவீன இலக்கியத்தை ஸ்தாபித்துக் கொடுத்தவர் என்று சொல்லப் படும் மாஸ்தி வேங்கடேச ஐயங்கார், வீட்டில் தமிழ் பேசிக் கொண்டிருந்தார். மலையாள மொழியின் மகாகவி என்று போற்றப்படும் உள்ளூர் பரமேஸ்வர ஐயரின் தாய்மொழி தமிழ். தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் கு.ப.ராஜகோபாலன் தாய் மொழி தெலுங்கு. ஆனால் அவர் முழுக்க முழுக்கத் தமிழில்தான் எழுதினார்.
ராசிபுரம் கிருஷ்ணசாமி ஐயர் நாராயணசாமி என்ற ஆர்.கே. நாராயணனின் தாய்மொழி தமிழ். சென்னை புரசைவாக்கத்தில் பிறந்தார். ஆங்கிலத்தில் கதைகள், கட்டுரைகள் எழுதினார். நோபல் பரிசுக்கு அவர் பெயர் பலமுறை இந்தியா சார்பாகப் பரிந்துரைக்கப் பட்டது.
1986-ஆம் ஆண்டில் மைசூரில் அவரை சந்தித்தேன். இலக்கியம் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.
“உங்கள் நாவல்கள் தமிழ்க் கதைகள் போலவே இருக்கிறதே” என்றேன்.
“ஆமாம். அது அப்படித்தான் இருக்கும்” என்றார்.
ஆங்கிலத்தில் எழுத முதல் காரணம், அவர்கள் தாய்மொழியைவிட ஆங்கிலமொழியில் அதிகமான புலமை பெற்று இருந்தார்கள். எனவே தங்கள் கருத்துகளை, கதைகளை அதில் எழுதுவது சரியாக இருக்குமென நம்பி எழுத ஆரம்பித்தார்கள். அதில் முதல் ஆங்கிலமொழி எழுத்தாளர்கள் ஆர்.கே. நாராயணன் ‘மால்குடி’ என்ற கற்பனையான ஒரு தமிழ்-கர்னாடகா கிராமத்தை உருவாக்கிக் கொண்டு தமிழ்க் கதைகள் எழுதினார்.
முல்க்ராஜ் ஆனந்த் தில்லி பகுதிகளில் வாழும் ஏழை எளிய தீண்டப்படாதவர்களின் கடினமான வாழ்க்கையைப் பற்றி எழுதினார்.
ராஜாராவ் நாட்டில் ஏற்பட்ட சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி எழுதினார். கர்னாடகாதான் கதையின் களம்.
மொழிதான் ஆங்கிலமாக இருந்தது. ஆனால் வாழ்க்கை அவர்கள் பிறந்து, வளர்ந்த இடம் சார்ந்து இருந்தது. படைப்பிற்கு இயல்பான அர்த்தம் கிடைக்கவில்லை. கல்லூரிகளில் ஆங்கிலம் போதித்து வந்த ஆசிரியர்களுக்கு - இந்திய படைப்புக்களை ஆங்கிலோ - இந்திய படைப்பு என அழைத்தார்கள் அது நிறைவாகப் படவில்லை.
சிங்கப்பூர் தேசிய பல்க¬லைக்கழகத்தில் பேராசிரியர் எட்வீன்தம்புவை சந்தித்தேன். அவர் தமிழரான நடேசனின் மகன். தாயார் சீனமாது. அவர்க்குத் தமிழ் தெரியாது. ஆங்கிலமொழியில் கவிதைகள் எழுதி வந்தார்.
இந்தியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா நாடுகளில் ஆங்கில மொழி படிப்பு - அதுவும் இலக்கியம் படிப்பது கூடிய போது அதற்கு முக்கியத்துவம் கொடுக்க காமன்வெல்த் இலக்கியம் என்று பெயரிட்டு, கனடா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்த்துக் கொண்டார்கள்.
மைசூர் தொன்யாலோகா சி.டிநரசிம்மையா காமன்வெல்த் இயக்கியம் - என்று ஒன்றை ஸ்தாபிக்க முன் முயற்சி எடுத்தார். “அது ஒரளவு வெற்றி பெற்று விட்டது. பரந்த அளவில் களம் கிடைத்து இருக்கிறது. ஆனால் படைப்புக்கள் உருவாக இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும்” என்றார்.
மனிதர்களின் கண்டு பிடிப்புக்களிலேயே உச்சமென்றால் அது மொழியும், அதை எழுதும் எழுத்தும்தான். மொழியின் மூலமாகத்தான் அறிந்ததையும் அறியாததையும் அப்படியே எழுதி வைத்து இருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதக் கூட்டத்திற்கும் தனித்தனியாக மொழி, எழுத்து இருக்கிறது என்று பல நூற்றாண்டுகளாக நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் எல்லா மொழிகளும், எல்லா எழுத்து முறைகளும் ஒரே மொழியில் இருந்தும், ஒரே எழுத்தில் இருந்தும் பிரிந்ததுதான் என்று புலம் பெயர்ந்த சரித்திரத்தின் வழியாகச் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். அதுவே மனிதன் பற்றி மட்டுமல்ல; பிரபஞ்சத்தைப்பற்றி எந்த மொழியில் எழுதினாலும், அது தெரிந்த மொழியில், கேட்ட மொழியில், பேசியமொழியில் எழுதப்பட்டது போல இருக்கிறது.
0 comments:
Post a Comment