கையெடுத்துக் கும்பிட்டபடி, இரண்டு விரல்களை அசைத்தபடி மக்களிடம் ஒட்டுக் கேட்க வந்த ஜெயலலிதா இவர் இல்லை. கோரப்பல் முளைத்த அதிகார ரூபத்தில் காட்சியளிக்கிற உருவம் இது. மிக்ஸி தருவேன், கிரைண்டர் தருவேன், ஆடு தருவேன், மாடு தருவேன் என அள்ளிவிட்டவர், இதோ இருந்த வேலையையும் பிடுங்கிக்கொண்டு விட்டார். அவரது வழக்கமான பாணியில் ஒரே நாளில் 13500 மக்கள் நலப்பணியாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு இருக்கின்றனர்.
தமிழகத்தின் கிராமப்புற மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்த புரிந்துணர்வை உருவாக்கவும், அவற்றின் பலன்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் திமுக அரசு 2.7.1990ல் 25ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை மாதம் ரூ.200 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்தது.
ஆனால், 10 மாத காலமே பணி செய்த இவர்களை அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு எவ்விதக் காரணமும் இன்றி 1991 மே மாதத்தில் பணி நீக்கம் செய்தது. இதன்பிறகு மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது 1997ல் மாதம் ரூ.500 தொகுப்பூதியத்தில் திமுக அரசு இவர்களை பணியமர்த்தியது. பின்னர் மேலும் 200 ரூபாய் உயர்த்தி வழங்கப்பட்டது.
2001ம் ஆண்டில் அதிமுக அரசு மீண்டும் பொறுப்பேற்ற பின் மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 2006ல் திமுக அரசு இவர்களை பணியில் அமர்த்தி மாதம் ரூ.1000 வீதம் தொகுப்பூதியம் வழங்கி ஆணையிட்டது.
மக்கள் நலப்பணியாளர்களின் சரிபாதி பேர் பெண்கள். மேலும் இவர்கள் அனைவரும் 40வயத்திற்கும் அதிகமானவர்கள். பணி நியமனம் பெற்று 2 முறை பணி நீக்கம் செய்யப்பட்ட நிலைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் இவர்களைத் தவிர வேறு எவரும் இருக்க முடியாது. இந்த வேலையை நம்பி இவர்கள் இருந்து விட்டதால் வேலைவாய்ப்பக பதிவு மூப்பும் கலாவதியாகி விட்டது. அரசுப் பணிகளுக்கான வயது வரம்பும் கடந்து வேறு எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலைக்கும் ஆட்படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் இரா.தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர் இரா.சீனிவாசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அமல்படுத்தும் ஊரக வளர்ச்சித்துறையின் அனைத்துப் பணிகளிலும் ஈடுபடுகின்ற மக்கள் நலப்பணியாளர்களை பணி நீக்கம் செய்திருப்பது மக்கள் நலன் சார்ந்த பணிகளை கடுமையாக பாதிக்கும் என்பதுடன், மக்கள் நலனில் இந்த அரசுக்கு உண்மையான அக்கறை இல்லை என்பதை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
கொடூரமான இந்த அரசாணையை திரும்ப பெற்று மக்கள் நலப்பணியாளர்கள் அனைவருக்கும் இடையறவு (பிரேக்) இன்றி பணியில் தொடர வழிவகை செய்ய வேண்டும். நியாயமான இந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால், மக்கள் நலப்பணியாளர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் போராட நேரிடும் என்றும் அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா முதல்வர் பொறுப்பேற்று ஆறு மாதங்களே ஆகியிருக்கின்றன. அதற்குள் தமிழகத்தில் இந்த அம்மையார் நடத்தியிருக்கும் அழிச்சாட்டியங்களும், அடாவடித்தனங்களும் பெரும் பட்டியலாய் நீண்டுகொண்டே இருக்கிறது. முணுமுணுத்த மக்கள் இப்போது கோபம் கொள்ளத் துவங்கியிருக்கின்றனர்.
அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான நீண்ட தொடர் போராட்டங்கள் தவிர்க்க முடியாதவை என்றே தோன்றுகிறது
ReplyDelete