திரைப்படக் கலைகள் மற்றும் அறிவியல் கல்விக்கழகத்தின் நூலகத்தில் டேம் 999 படத்தின் திரைக்கதை சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள முதலாவது இந்தியத் திரைப் படம் இது என்றும் திரையிடுவதற்கு முன்பே நூலகத்தில் சேர்க்கப்பட்ட படம் இது என்றும் கூறப்படுகிறது.
இந்தத் திரைப்படத்தின் பாத்திரங்கள் நவரசங்களை வெளிப்படுத்துவதாக இருக்கின்றன; இந்தியப் பாரம்பரிய ஆயுர் வேத மருத்துவமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது; 2டி யிலிருந்து 3டி ஆக மாற்றிக் கொள்ளும் நவீன தொழில் நுட்பம் கையாளப்பட்டிருக்கிறது.
இதெல்லாம் சரிதான் என்றாலும் இந்தப் படம் கடுமையான சிக்கலை ஏற்படுத்தியிருப்பது ஏன்? 1975 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள பான்கியாவோ அணை அழிந்ததால் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் இறந்து போன சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்ததப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள பிஸ்டிவி நெட்ஒர்க் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் டைட்டானிக் போல கடந்த கால சம்பவத்தை நினைவுபடுத்துவதோடு நின்றிருந்தால் பரவாயில்லை. எச்சரிக்கை செய்கிறேன் பேர் வழி என்று கற்பனையைக் கட்டவிழ்த்து விட்டதுதான் சிக்கல்.
‘சின்னஞ்சிறு உலகம்’ திரைப்படத்தில் கல்யாண வீட்டில் நாகேஷ் தேம்பித் தேம்பி அழுவார். ஏதும் புரியாத விருந்தினர்கள் காரணம் கேட்பார்கள், அவர் அங்கே இருக்கிற குத்துவிளக்கைக் காட்டி இந்த திரியில் மணப்பெண்ணின் சேலை தீப்பிடித்து, மணவறை எரிந்து மணமகன் எரிந்து இந்த மண்டபமே எரிந்தால் என்ன ஆகும் என்று எண்ணிப்பார்த்தேன் அதனால் தான் அழுகிறேன் என்று காரணம் சொல்வார்.
இது நகைச்சுவை காட்சியாகப் போய் விட்டது நாமும் சிரித்துவிட்டு அமைதி அடைந்து விடலாம்; ஆனால் இரண்டு மாநிலங்களுக்கிடையே கொதிக்கும் பிரச்சனையாக இருக்கிற முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் ஒருபக்கமாக நின்று அணை உடைவது போலவும் அதில் ஆயிரக் கணக்கான மக்கள் அடித்துச் செல்வது போலவும் கற்பனை செய்திருப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது.
கலைக்குக் கற்பனை அவசியம் தான். ஆனால் அது அறிவூட்டுவதாக இருக்க வேண்டும்; ஆத்திரமூட்டுவதாக இருக்கக் கூடாது. மக்களை தெளிவுப்படுத்துவதாக இருக்கவேண்டும்; குழப்பி அச்சத்தையும், பீதியையும் கிளறிவிடுவதாக இருக்கக் கூடாது. இந்த இரண்டாவது காரியத்தைத் தான் டேம் 999 செய்திருக்கிறது.
இந்தத் திரைப்படத்தின் முக்கியமான பாத்திரத்தில் மலையாள நடிகர் திலகன் நடிப்பதாக ஒப்பந்தமாகி இருக்கிறது. ஆனால் அதற்குக் கேரள திரைப்பட ஊழியர்கள் சம்மேளனம் எதிர்ப்பு தெரிவித்துள் ளது. இந்தப் படத்தில் நடித்தால் அவரைப் புறக்கணிப்போம் என எச்சரிக்கை செய்துள்ளது. அதே சமயம் மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கம் திலகனுக்கு ஆதரவாக நின்றுள்ளது.
ஆலப்புழாவில் படமெடுக்கும்போதும் பல பிரச்சனைகளை படப்பிடிப்புக்குழுவினர் எதிர்கொண்டுள்ளனர். இவ்வளவுக்குப் பின்னும் கற்பனையான - இருமாநில உறவுகளில் சிக்கலை ஏற்படுத்துகிற திரைப் படத்தை உருவாக்கி அதனை வெளியிடுவதன் பின்னணியில் உள்ள நோக்கம் கேள்விக்குறியாகிறது.
கலை படைப்புகள் இணைப்பதற்காகவும் இணக்கத்தை உருவாக்குவதற்காகவும் இருந் தால் வரவேற்கலாம் - உறவுகளைக் கலைப்பதற்காக இருந்தால் ஏற்க இயலாது அல்லவா? அதனால் தான் டேம் 999 என்பது டேமேஜ் 999 ஆகியிருக்கிறது.
-மயிலை பாலு
சபாஷ் பாலு அவர்களே! மிக மிக நிதானமாகவும் சார்பின்றியும் எழுதப்பட்டுள்ளது---காஷ்யபன்
ReplyDelete