பொது இடங்களில் “திருடர்கள் ஜாக்கிரதை” என்ற வாசகத்தை நாம் பார்த்திருப்போம். அந்த வாசகத்தைப் பார்த்ததும் நமது கை தானாகச் சென்று பணம் பத்திரமா என்று தடவிப் பார்க்கும். பொதுவாக பிக் பாக்கெட் திருடர்களுக்கு அதுவே வசதியாகிவிடும். அதுபோலத்தான் ”பெட்ரோல் விலை இன்று உயரும்”, ``நாளை உயரலாம்”, ``பெட்ரோல் நிறுவனங்களுக்கு இழப்பு”, ”சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது” என்று செய்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றன.
யானை வரும் பின்னே என்பது போல, முன்னறிவிப்பாய் வெளியாகும் மணியோசைகள் ஒன்றும் அவ்வளவு மகிழ்ச்சியளிப்பதாய் இல்லை. இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கும் அரசு, சாவியை திருடன் கையிலேயே கொடுப்பதுபோல, விலையைத் தீர்மானிக்கும் பொருப்பை பெட்ரோல் நிறுவனங்களிடமே கொடுத்திருக்கிறது. ஆனால் விலையேற்றத்திற்குச் சொல்லப்படும் காரணங்கள் எல்லாம் உண்மைதானா?
தனியார்மய யுகத்தில் கனிம வளங்கள் எல்லாம் பெரிய நிறுவனங்களுக்கு திறந்து விடப்பட்
டிருக்கின்றன. அப்படியாக இந்தியாவில் பெட்ரோல் கிடைக்கும் பகுதிகள் ரிலையன்ஸ் நிறுவனம் ஆதிக்கம் செலுத்துகிறது. பெட்ரோலியப் பொருட்களில் கிடைக்கும் கொள்ளை லாபத்தை கணக்கில் கொண்டு இங்கிலாந்தின் பெரும் நிறுவனமான பிபி, மிகப்பெரும் முதலீட்டுடன் இந்திய வளங்களைச் சுரண்டுவதில் கைகோர்த்துள்ளது. இப்படியாக தனியார் நிறுவனங்கள் சந்தைக்குள் புகுந்த பிறகுதான் பெட்ரோல் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டது.
ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பெட்ரோல் வர்த்தகத்தின் மூலம் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டில் (நான்கு மாதத்தில்) கிடைத்த லாபம் ரூ.4923 கோடி, பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் நிறுவனம் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டில் பெற்ற நிகர லாபம் ரூ.5294 கோடி, இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் ரூ. 2142.22 கோடி, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் ரூ.2142.22 கோடி (அரசுக்கு செலுத்திய லாபம் தனி). இப்படியாக ஆயிரம் கோடிகளில் லாபம் கொழித்துவிட்டு, ஊடகங்களில் ஏதோ நட்டத்திற்கு வியாபாரம் செய்வதைப் போல பல்லவி பாடுகின்றனர் அவர்கள்.
இதற்கு எதிர்பார்த்த லாபத்தை விட குறைவாக சம்பாதித்தால், அது நட்டம் என்று விளக்கம் கொடுக்கிறார்கள் சில பொருளாதார வல்லுனர்கள். (!). உதாரணத்திற்கு, 2000 கோடி லாபம் வர வேண்டும் ஆனால் 1500 கோடி தான் லாபம் வந்துள்ளது எனவே 500 கோடி நட்டம். நட்டக் கணக்குக் காட்டும் சூட்சுமம் இதுதான்.
அடுத்து சொல்லும் காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது என்பதாகும். கடந்த முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டபோது சர்வதேச சந்தையில் பீப்பாய் ஒன்று 92 டாலருக்கு விற்கப்பட்டது. உயர்த்தப்பட்ட பெட்ரொலின் விலை லிட்டர் ரூ.63.54, ஆனால் கடந்த 2008 ஆம் ஆண்டில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மிக அதிக விலைக்கு சுமார் 135 டாலருக்கும் மேல் விற்கப்பட்டது. அப்போது பெட்ரோல் ஒரு லிட்டர் விலை என்ன தெரியுமா? ரூ.54 மட்டும் தான். இந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற மாற்றம் என்ன?.
ஆம் ஒரு மாற்றம் நடந்திருக்கிறது. இடதுசாரிகளின் ஆதரவிலேயே மத்தியில் ஆட்சி நடந்த நிலை மாறியுள்ளது. இடதுசாரிகள் இருந்திருந்தால் எண்ணெய் விலை உயர விட்டிருக்க மாட்டார்கள் என்று பல முதலாளித்துவ ஊடகங்களே பேசத் துவங்கியுள்ளார்கள்.
உண்மையில் கச்சா எண்ணெயிலிருந்து தயாராகும் பெட்ரோலை ரூ.22 ரூபாய்க்கு விற்கலாம். ஆனால், மத்திய -மாநில அரசுகளின் வரியே கூடுதல் விலைக்கு மற்றுமொரு காரணமாக உள்ளது. ஒரு வாகன ஓட்டி சராசரியாக மாதத்திற்கு 15 லிட் டர், பெட்ரோல் பயன்படுத்துகின்றார் என்று வைத்துக் கொள்வோம். தற்போதைய விலை நிலவரத்தில் ரூ.951.75 செலவாகிறது. இதில் சுமார் ரூ.650 வரியாக மட்டுமே செலுத்துகின்றார். பெட்ரோலுக்கான விலை அல்ல.
இப்படி வரி விதிக்க காரணம் என்ன?. பொதுவாக அதிகம் சம்பாதிப்பவர்கள் மீது அதிக வரி விதிக்கப்பட வேண்டும். ஆனால், இந்தியாவில் அப்படியாக இல்லை, மாறாக பெரிய நிறுவனங்களுக்கு தற்போதையை நிதி நிலை அறிக்கையில் வழங்கப்பட்டிருக்கும் வரி தள்ளுபடி சலுகை ரூ.46 ஆயிரத்து 972 கோடி. கடந்த 5 ஆண்டுகளில் தரப்பட்ட தொகை 3 லட்சத்து 74 ஆயிரத்து 937 கோடி. இது 2ஜி ஊழலில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பைக் காட்டிலும் 3 மடங்கு அதிகம் என்கிறார் செய்தியாளர் பி.சாய்நாத். அதேசமயம் நம்மிடம் பெட்ரோல் விலை மூலம் வசூலிக்கப்படும் மத்திய, மாநில அரசுகளின் வரி வருமானம் வருடத்திற்கு சுமார் 78 ஆயிரம் கோடி. சுதந்திர வேட்கை மிக்க வரிகள் தான் இங்கே நினைவுக்கு வருகின்றன.
“பொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளை
கொண்டு போகவோ? - நாங்கள் - சாகவோ?
அழுது கொண்டிருப் போமோ?
ஆண் பிள்ளைகள் நாம் அல்லமோ?
உயிர் வெல்லமோ?”
2010-2011 ன் இரண்டாம் காலாண்டில் நிகரலாபம்
ரிலையன்ஸ் ரூ.4923 கோடி
இந்தியன் ஆயில் ரூ..5294 கோடி
இந்துஸ்தான் பெட்ரோலியம் ரூ. 2142.22 கோடி
பாரத் பெட்ரோலியம் ரூ.2142.22 கோடி
திருடர்கள் ஜாக்கிரதை:மத்திய அரசின் பெட்ரோல் விலை உயர்வு
தகவல் உதவி:
திருப்பூர் துரை, சம்பத்
0 comments:
Post a Comment