Friday, February 25, 2011

பால்குடம் எடுத்தபோது நடுங்கிய என் கைகள்...

கட்டாய மதமாற்றம் எப்போது நடக்கிறது? எந்த மத அடையாளமும் இல்லாமல் பிறக்கும் குழந்தைக்குப் பெற்றோரும் உறவினர்களும் தங்களது மத அடையாளங்களைச் சூட்டுகிறபோது நடக்கிறது. நெற்றியில் இடப்படும் திருநீறு, தீட்டப்படும் நாமம், ஆசிர்வதித்து வரையப்படும் சிலுவை, காட்டப்படும் பிறை இன்ன பிற, இன்ன பிற சடங்குகளாக அந்த அடையாளங்கள் சூட்டப்படுகின்றன. எந்தக் குழந்தையும் இதுதான் சரியான வழி என ஆராய்ந்து சொந்த முடிவாக தான் வணங்க வேண்டிய கடவுளையோ, பின்பற்ற வேண்டிய மதத்தையோ தேர்ந்தெடுப்பதில்லை.

நானும் அப்படித்தான் குழந்தைப் பருவத்தில் ஒரு இந்துவாக மதமாற்றம் செய்யப்பட்டிருந்தேன். அப்படியாக இருந்த ஒரு நாளில் (கல்லூரிப் படிப்பை “முடித்துக்கொண்டு,” அடுத்து என்ன செய்யலாம் என்ற தேடல்களில் ஈடுபட்டிருந்த காலம்) என் அம்மா சொன்னார்கள்: “எங்கேயாவது ஊர் சுத்தப்போயிடாதே,,, அடுத்த வாரம் நாம திருச்செந்தூர் போறோம்...”

அதை விடவும் சின்ன வயதில் நான் நோய் வாய்ப்பட்டிருந்தபோது என்னைத் திருச்செந்தூருக்கு அழைத்து வந்து பால்குடம் எடுக்க வைப்பதாக நேர்ந்திருந்தார்களாம். டாக்டரின் ஊசி, மருந்து எல்லாம் போக முருகன் என்னை குணப்படுத்தினானாம். இடையில் நேர்த்திக் கடனை நிறைவேற்ற முடியாமலே போனதாம். அதனால்தானோ என்னவோ, ஒழுங்காகப் படித்துக்கொண்டிருந்த (?) நான் கல்லூரியை விட்டு வெளியேறினேன், நல்ல வேலையில் சேர முடியாமல் அலைகிறேன்... ஆகவே இப்போதாவது அதை நிறைவேற்றிவிட்டால் முருகன் கோபம் தணிந்து எனக்கொரு நல்வழி காட்டுவான்... (கடவுள் என்றால் இப்படியெல்லாம் கணக்குவைத்துக்கொண்டு, நேர்த்திக்கடனை அடைத்தால் அருள்பாலிப்பது, பாக்கி வைத்தால் பழிவாங்குவது என்று இருக்கலாமோ?)

மதுரையிலிருந்து புறப்பட்டு, அம்பாசமுத்திரம் அருகில் வெள்ளங்குளி கிராமத்தில் பெரியப்பா வீட்டில் தங்கியிருந்து, அப்புறம் அங்கேயிருந்து அவர்களும் உடன் வர செந்தூர் முருகனின் கடன் கணக்கை நேர் செய்யக் கிளம்பினோம். அங்கே எங்களுக்கு உதவுவதற்காகக் காத்திருந்தார் சுப்பிரமணிய பட்டர். எங்கள் உறவினர் உட்பட பல குடும்பங்களுக்கு அவர்தான் வாடிக்கையான பட்டர். பக்தி வியாபாரத் தொழிலில் அப்படியொரு ஏற்பாடு. கோவில் சத்திரத்தில் வசதியான அறை ஒன்றை எங்களுக்கு அமர்த்தினார்.

செய்யத்தக்கன - தகாதனவற்றைப் சுப்பிரமணிய பட்டர் பட்டியலிட்டார். அவர் கூறியபடி கோவிலுக்குப் பெரியப்பாவும் அப்பாவும் போய் மறுநாளைய பூசைக்கு டிக்கட் வாங்கிக்கொண்டு, மடப்பள்ளிக்குப் பணம் கட்டிவந்தார்கள்.

முதல் நாள் திருச்செந்தூரின் பல்வேறு சிறு குளங்களில் நான் நீராடுவது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதில் முதல் கட்டம். விரதம் இருப்பது இரண்டாவது கட்டம். பூசையில் உடைத்த தேங்காய், பழம் தவிர்த்து வேறு எதையும் நான் சாப்பிடக்கூடாது. வாய்திறந்தோ, மனதிற்குள்ளாகவோ நான் முருகன் நாமத்தை உச்சரித்துக்கொண்டே இருக்க வேண்டும். முருகனைத் தவிர வேறு எதையும் நினைக்காமலிருக்க வேண்டும்...

முருகனைத் தவிர மற்ற எல்லா நினைப்புகளும் வந்தன. நீராடிவிட்டு வரும் வழியில் ஈரமும் வண்ணமுமாய்ச் சுற்றிவந்த தாவணிகள் முதல், அந்த ஊர் திரையரங்கிற்கு வந்திருந்த ஒரு படத்தின் சுவரொட்டிகள் வரையில் கண்களைச் சுழல விட்டன. சில சிறுவர்கள் கன்னத்தில் அலகு குத்தி, துளையைச் சுற்றி சந்தனம் அப்பி அவர்களது சொந்தபந்தங்களால் மரியாதையோடு தோள் பிடித்து இட்டுச்செல்லபட்டார்கள். அதற்கு மேல் தாவணிகளோ சுவரொட்டிகளோ ஈர்க்கவில்லை. ‘நமக்கும் இப்படி கன்னத்தில் வேல் குத்திவிடுவார்களோ?’

பெரியப்பா மகளும் என் மீது அக்கறை கொண்டவருமான வேலாக்கா சொன்னார், “பைத்தியக்காரா, உனக்குப் பால்குடம் எடுக்கிறதாத்தானே நேர்ந்திருக்கு... அதுக்குப் போயி அலகு குத்துவாகளா?”

பட்டர் சிரித்தார். “அதெல்லாம் வேறவாளுக்குத்தான் தம்பி.” அலகு குத்துவது, காவடி எடுப்பது போன்ற நேர்த்திக்கடன் சடங்குகள் சாதிச்சான்றிதழோடு படிக்கவும் அரசாங்க வேலைக்குச் செல்லவும் விதிக்கப்பட்ட சமூகங்களில்தான் என்பது அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

காலையில் எழுந்து தயாரானோம். சுப்பிரமணிய பட்டரும் தயாராக வந்தார். மற்றொரு நீராடல் முடிந்து என் இடுப்பில் ஒரு புதிய வேட்டி சுற்றப்பட்டது. ஊர் முனையில் ஒரு பிள்ளையார் கோவிலுக்குக் கூட்டிச் சென்றார். அங்கே, வரிசையாகப் பலர் பால்குடங்களோடு நின்றுகொண்டிருந்தார்கள்.

பிள்ளையாரிடம் புறப்படுவதற்கு ஒப்புதல் பெறுகிற பூசை முடிந்தது. என் நெற்றியிலும் மார்பிலும் வயிற்றிலும் கைகளிலும் சந்தனம், திருநீறு, குங்குமம் என்று தடவப்பட்டது. கழுத்தில் ஒரு மாலை போடப்பட்டது. ஒரு நாயனக் குழு வந்தது. அவர்கள் பக்திப்பாடல்களை வாசிக்கத் தொடங்கினார்கள்.

பிள்ளையார் கோவில் பூசாரி உள்ளே தீபாராதனை செய்துவிட்டு, பால்குடத்தை எடுத்துவந்து என் தலையில் வைத்தார். அது ஒரு சிறிய செம்புதான். புறப்படலாம் என்று சைகையால் பட்டரிடம் கூற, அவர் பெரியப்பாவிடம் ஏதோ சொல்ல, பெரியப்பா என் அப்பாவிடம் எடுத்துரைக்க, பூசாரியின் தட்டில் அப்பா ஒரு ஐந்து ரூபாய்த் தாளை வைத்தார். அப்போது அது பெரிய தொகைதான்.

அதன் பிறகும் என் பால்குட ஊர்வலம் புறப்படவில்லை. அருள் வந்து நான் ஆடவில்லையாம். அப்படி ஆடினால்தான் புறப்பட வேண்டுமாம். நானோ அசையாமல் நின்றேன். பசி வேறு. “சீக்கிரம், சீக்கிரம்... மத்தவங்களுக்கு வழிவிடுங்க...”

திடீரென நாயனக்காரர் என் காதுக்கு நேராக நாதசுரத்தைத் தூக்கிப் பிடித்து ஏதோ ஒரு ராகத்தை ஒரு இழு இழுத்தார். மறு காதுப்பக்கம் தவில்காரர் இடித்தார். தலையைச் சிலிர்த்துக்கொண்டேன்.

“அருள் வந்துடுத்து... புறப்படுங்கோ,” என்றார் பட்டர்.

பசியின் வாட்டத்தில் தடுமாறிய என்னைப் பிடித்துக்கொண்டார்கள். ஊர்வலமாகச் சென்றோம். வழியில் எதிரில் வந்த சிலர் என்னைக் கும்பிட்டார்கள். யார் அவர்கள்? “சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தறவாளை சேவிக்கிறது ஒரு புண்ணியம்.”

முருகன் கோவிலை அடைந்தோம். அங்கே என் பெயருக்கும் என் நட்சத்திரத்துக்கும் அர்ச்சனை உள்ளிட்ட இதர சடங்குகள் நடந்தேறின. சுப்பிரமணிய பட்டர் அப்படி அர்ச்சனை செய்த தட்டிலிருந்து திருநீறு எடுத்து முதலில் என் நெற்றியில் பூசினார். எல்லோரும் அவரிடமிருந்து பக்தியோடு திருநீறு பெற்றுப் பூசிக்கொண்டார்கள். இன்னும் என் தலையிலிருந்து பால்குடம் இறக்கப்படவில்லை.

கோயிலின் சுற்றுப்பிரகார மண்டபத்திற்கு இட்டுச்சென்றார். அங்கே பக்கவாட்டுத் திண்iணை உயரத்தில் இருந்த பக்கவாட்டு மேடையில் மற்றவர்களை உட்காரச் சொன்னார். என்னிடம், “சுவாமியை நினைச்சுண்டு குடத்தை நீயே எடுத்து இறக்கி வை தம்பி,” என்றார். இறக்கிவைத்தேன். அதற்கொரு மந்திரத்தை உச்சரித்தார்.

மடப்பள்ளியிலிருந்து எங்களுக்கான பிரசாதங்களை வாங்கிவந்தார் அப்பா. பெரியம்மா எல்லோருக்கும் துண்டு வாழையிலைகளை விநியோகிக்க, அம்மா சர்க்கரைப் பொங்கல், புளியோதரையைப் பரிமாறினார். தங்கையரும் தம்பியும் அவற்றை ஒரு பிடி பிடிக்க, நான் அவர்களை விட வேகமாக வாரி வாயில் போட்டுக்கொண்டேன். சும்மா சொல்லக்கூடாது, திருச்செந்தூர் கோயில் மடப்பள்ளி தயாரிப்பு சுவையோ சுவை. இப்போது எப்படியோ?

பட்டருக்கு எவ்வளவு கட்டணம் என்ற பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தது. செய்த பூசைகள், அழைத்துச் சென்ற இடங்கள் என்றெல்லாம் பட்டியலிட்டு ஒரு தொகையை அவர் கூற, அது வரையில் “சரிங்க சாமி” என்று அவர் சொன்னதையெல்லாம் கேட்டுச் செய்து வந்தவர்கள், இப்போது “பட்டரே என்ன ஒரேயடியா கேக்குறீரு...” என்று பேரத்தில் ஈடுபட்டு பாதியாகக் குறைத்தார்கள். அவர் ஒப்புக்கொள்ள மறுத்தார்.

அப்போது அப்பா என்னைப் பார்த்தபடி, “எப்படித் திங்கிறான் பாரு... மனசில ஏதாவது பக்தி இருந்தால்தானே,” என்று கிண்டலாகவும் கடுப்பாகவும் சொன்னார்.

சுப்பிரமணிய பட்டர் குறுக்கிட்டார். “அப்படியெல்லாம் சொல்லாதீங்கோ... தம்பி பால்குடத்தை இறக்கிவைக்கிறப்போ நான் நன்னா கவனிச்சேன்... தம்பியோட கை ரெண்டும் அப்படியே நடுங்கித்து... பக்தியில்லாம, சுவாமியோட அருள் இல்லாம அப்படி நடுங்காது... இனிமே தம்பியைப் பிடிச்ச துரதிர்ஷ்டமெல்லாம் தொலையறதா இல்லையான்னு பாருங்கோ.”

பேசிய தொகை பெரிய அளவுக்கு வெட்டப்படாத மன நிறைவுடன், ஆண்டுதோறும் எங்கள் குடும்பத்தின் பெயரில் முருகனுக்கு அர்ச்சனை செய்த திருநீறு, குங்குமத்தைத் தபாலில் அனுப்பிவைப்பதாக உறுதியளித்துவிட்டுக் கிளம்பினார் சுப்பிரமணிய பட்டர். “நாளைக்கு மெட்ராஸ்லேயிருந்து ஒரு ஃபேமிலி பால்குடம் எடுக்க வர்றது... அவாளுக்கு சத்திரத்தில ரூம் ஏற்பாடு செய்யணும்...”

பேருந்து நிலையத்துக்கு நடைபோட்டோம். தம்பியும் தங்ககையரும் என்னைக் கலாய்க்கத் தொடங்கினார்கள். “நிஜமாவே உன் கை நடுங்கிச்சாக்கும்?”


-அ. குமரேசன்

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)