நான் ஒரு நகர்மன்றத்தின் தலைவராக இருந்தவன்; தற்போது எனது மனைவி நகர்மன்றத் தலைவராக இருக்கிறார். இந்த மாவட்டத்தில் 30 ஆண்டு காலம் மாணவர் இயக்கத்தின் தலைவராக, தற்போது விவசாயிகள் இயக்கத்தின் அனைத்து கிராமங்களுக்கும் சென்று வந்தவன்.
பல்வேறுபோராட்டங்களைநடத்தியவன். இன்றைக்கும் எந்த கிராமத்திற்குச் சென்றாலும் அங்குள்ள மக்கள் நன்றாக பழகுகிறார்கள் என்றபோதிலும், கிராமத்தினரோடு செல்லும்போது அவர்களுடைய வண்டியில் எனக்கு கடைசி இடத்தைத்தான் ஒதுக்குகிறார்கள். அவர்கள் அளிக்கிற தேநீரைஅருந்துகிறபோது, அந்தக்கோப்பையை நான் கழுவி வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். கழுவி வைக்காவிட்டால், நான் தலைவர் பொறுப்பில் இருப்பதால் அவர்களால் கேட்க முடியாது; ஆனால் கழுவி வைக்காமல் போய்விட்டானே என்று அவர்களது மனம் கலங்குகிறது. பல தருணங்களில் அவர்கள் எனது சாதி என்ன என்பதை தெரிந்துகொண்டு அதற்கேற்ப நடத்துகிறார்கள்”
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியப்பிரதேச மாநிலக்குழு சமீபத்தில் தலைநகர் போபாலில் கட்சியில் செயல்படும் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கான இரண்டுநாள் பயிலரங்கை நடத்தியது. இந்தப்பயிலரங்கில் பங்கேற்று பேசிய கட்சியின் பிந்த் மாவட்ட தலைவர்களில் ஒருவரான பிரேம் நாராயண மகாவூர் பேசிய பேச்சின் ஒரு பகுதிதான் இது.
தலித்துகள் எத்தனை பெரிய பொறுப்புக்கு சென்றாலும், சாதி ஆதிக்க சக்திகளால் அவர்கள் நடத்தப்படுகிற விதம் பற்றிய ஒரு நேரடி சாட்சியே தோழர் பிரேம் நாராயண மகாவூரின் பேச்சு.
நாடு முழுவதும் மக்கள் சமூகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் புரையோடிப்போயிருக்கிற மிகக்கொடிய சாதியச்சிந்தனை, கிராமப்புற மக்களிடம் மட்டுமல்ல; நகர்ப்புறத்திற்கு வந்து மெத்தப்படித்து நவீனத் தொழில்நுட்பங்களை அறிந்துகொண்டு சாதிக்கு எந்த வேலையும் இல்லாத வேலைகளுக்கு சென்றாலும் கூட, உயர்சாதியினர் என்று சொல்லிக்கொள்பவர்கள் அவரவர் அளவில் தலித்துகளை நடத்துகிற விதம் மிகவும் குரூரமானது. சாதி, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இந்தியாவில் புதிய பரிணாமங்களை எட்டிக்கொண்டிருக்கிறது.
பிரேம் நாராயண் மகாவூரைப்போலவே இப்பயிலரங்கில் பேசிய பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் அந்தந்த பகுதிகளில் தாங்கள் எதிர்கொண்ட, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தலித் மக்கள் எதிர்கொண்ட, எதிர்கொள்கிற தீண்டாமைக்கொடுமைகளையும், அதன் நுணுக்கமான வடிவங்களையும் பட்டியலிட்டார்கள்.
இந்தூரைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலக்குழு உறுப்பினருமான ஜெகநாத் பாரதி ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்டினார். காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக இருந்தவர் ராதாகிருஷ்ணன் மாளவியா. இவர் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். காங்கிரசின் மத்தியப்பிரதேச மாநிலத்தலைவராகவும் ஒருமுறை பதவி வகித்தவர். ஆனால், இவரது சொந்த ஊரான தாதோடா கிராமத்தில் தனது மகனுக்கு திருமணம் நடத்தியபோது, மணமக்களை ஊர்வலமாக அழைத்துவரவும், அந்த ஊர்வலத்தில் குதிரையில் ஏற்றி மணமக்களை அழைத்துவரவும் தடை விதிக்கப்பட்ட கொடுமையை அனுபவித்தார். ஒரே காரணம் இவர் தலித் வகுப்பைச்சேர்ந்தவர். தலித்துகள் திருமண ஊர்வலங்கள் நடத்துவதே பாவம்; அதிலும் குதிரை வைத்துக்கொள்வதோ அல்லது பேண்டு வாத்தியம் முழங்கிக்கொள்வதோ எப்படி அனுமதிக்க முடியும் என்பதே இன்றைக்கும் மத்தியப்பிரதேச கிராமங்களில் நீடிக்கிற தீண்டாமை.
குவாலியர் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்பாபு ஜாதவ் என்ற தோழர் பேசினார். இவர் அப்பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரபலத்தலைவர் இவரது மனைவி குவாலியர் மாவட்டப்பஞ்சாயத்து கவுன்சிலாக இருக்கிறார். ஆனால், மோரியானா மாவட்டத்தில் உள்ள இவரது சொந்த ஊரில் இருக்கிற பூர்வீக நிலத்தை இன்றைக்கு வரைக்கும் விற்க முடியவில்லை. ஏனென்றால் அந்த நிலத்தைச்சுற்றி உயர்வகுப்பினரின் நிலங்கள் இருக்கின்றன. அவர்களிடம் அடிமாட்டு விலைக்கு அந்த நிலத்தை ஒப்படைப்பதை தவிர இவருக்குவேறு வழியே இல்லை. நியாயமான விலைக்கு அவர்கள் வாங்க மாட்டார்கள்.
ராம்பாபுவைப்போலவே உயர்வகுப்பினரின் நிலங்களால் சூழப்பட்ட தங்களது சொந்த நிலத்தில் உழுது பயிரிடவும் முடியாமல், நல்ல விலைக்கு விற்கவும் முடியாமல் வீணாக அவர்களது கைகளில் சிக்கவிட்டுவிட்டு ஏதுமில்லாமல் ஊரைவிட்டு வெளியேறிய தலித்துகள் ஏராளம்.20 ஆண்டுகளுக்கு முன்பு கையில் ஏதோ கொஞ்சம் நிலமிருந்த பெருவாரியான தலித்துகள் கூட, சாதிய ஆதிக்க சக்தியினரின் நெருக்குதலால் அவர்களிடம் நிலத்தை கொடுத்துவிட்டு வெறுங்கையோடு இடம்பெயர்ந்துவிட்டார்கள். மறுத்தால், அவர்களது பயிர்கள் தீவைத்து கொளுத்தப்படும்; வீடுகள் சூறையாடப்படும்; கால்நடைகள் களவாடப்படும்.
கூட்டுறவு சங்கங்களில் கூட தலித் விவசாயிகளுக்கு உரம், விதைகள் அல்லது கடன்கள் என எதுவும் கிடைப்பதில்லை. கிராமப்புற வங்கிகளில் நீண்ட காலமாக இந்த மக்களால் சொந்தமாக சேமிப்பு கணக்கு கூட துவங்க முடியவில்லை. கிராமக்கோவில்களில் நுழையவே முடியாது என்பது உட்பட அனைத்துவகையான தீண்டாமைக்கொடுமைகளையும் மத்தியபிரதேச கிராமங்களில் தலித்துகள் அனுபவித்து வருகிறார்கள். குறிப்பாக தலித் பெண்கள் சொல்லொண்ணா துயரத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். கிராமப்பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் பிரதிநிதிகள் செயல்பட முடியாத நிலைமை நீடிக்கிறது.
பள்ளிகளிலும் விடுதிகளிலும் தலித் மாணவர்களும் மாணவிகளும் எதிர்கொள்கிற கொடுமைகள் சொல்லி மாளாது அரசு அலுவலகங்களிலும் கூட தலித்துகளுக்கு எதிரான தீண்டாமை வடிவங்கள் மிகவும் நுணுக்கமாக கடைபிடிக்கப்படுகிறது.
போபால், குவாலியர், பிந்த், குணா, ஷாதோல், ரத்லம் என பல்வேறு மாவட்டங்களிலிருந்து பயிலரங்கில் பங்கேற்றிருந்தவர்கள் இப்படி ஏராளமான தகவல்களை பட்டியலிட்டார்கள். தலித் மக்களுக்கு எதிரான இத்தகைய தீண்டாமை கொடுமைகளை எதிர்த்து தொடர் போராட்டத்தை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. பிப்ரவரி 13ம் தேதி போபாலில் மிகப்பெரும் கருத்தரங்கையும் நடத்தியது.
தமிழகம் மட்டுமல்ல, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எண்ணற்ற வடிவங்களில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக உரத்து குரல்கொடுத்து தொடர் போராட்டத்தை நடத்திவருவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே என்பதை மத்தியப்பிரதேச அனுபவமும் உணர்த்துகிறது.
(பீப்பிள்ஸ் டெமாக்ரசியிலிருந்து-பிப்.13)
0 comments:
Post a Comment