திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் முடிந்தபின் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார் முதல்வர்.
நிருபர் 1 : திமுகவை விமர்சிக்கும் பத்திரிகைகளை கழகக் கண்மணிகள் வாங்கிப் படிக்க வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறீர்கள். பத்திரிகையாளர் கூட்டங்களில் நானும் ஒரு பத்திரிகையாளன்தான் என்று பெருமையாக அறிவிப்பீர்களே, முரண்பாடாக இல்லையா?
முதல்வர் : யாரப்பா அது எடுத்த எடுப்பிலே முரண்பாடைப் பத்திப் பேசறது? உடன்பாடுகளைப் பத்திப் பேசறவங்க மட்டும் இங்கே இருந்தா போதும்...
நிருபர் 2 : உடன்பாடுன்னதும் நினைவுக்கு வருது. டில்லியிலே சோனியாவுடன் செய்துகொண்ட உடன்பாடு பற்றி..?
முதல்வர் : கற்கண்டென இனித்தது.. கண்கள் பனித்தன..
நிருபர் 3 : சோனியாவுடன் பேசிவிட்டு வந்தபிறகுதானே ராசா கைது செய்யப்பட்டார்? இதைப் பற்றி சோனியா உங்களிடம் ஏதாவது கோடி காட்டினாரா?
முதல்வர் : இந்த கோடி... காட்டினாரா.. என்ற பேச்சே இங்கே வேண்டாம்...கோடிகளைப் பற்றி அறியாதவன் இல்லை இந்தக் கருணாநிதி.
நிருபர் 3 : மன்னிச்சுங்குங்கய்யா, நான் அந்த அர்த்தத்திலே கேட்கலை..
முதல்வர் : சோனியா ராசாவைப் பத்திப் பேசினாரான்னு கேட்கறே... அது உடன்பாட்டின் ஓர் அம்சம்னா பேசியிருப்பார்.
நிருபர் 4 : ராசா குற்றமற்றவர்னு தீர்மானம் நிறைவேற்றியிருக்கீங்களே, இவ்வளவுக்குப் பிறகுமா?
முதல்வர் : எவ்வளவுக்குப் பிறகு?
நிருபர் 4 : சிஏஜி, சிபிஐ...
முதல்வர் (குறுக்கிட்டு) : ஒரு தலித் நாடாள்வதை நால்வருணப் பெருமை பேசுவோர் ஏற்றுக் கொண்டதாக வரலாறு உண்டா?
நிருபர் 5 : இந்த நீரா ராடியா என்பவர் பெயர் இன்று பிரபலமாகியிருக்கிறது. அவரை உங்களுக்கு முன்பே தெரியுமா?
முதல்வர் : ஒரு வடநாட்டுப் பெண்மணி பற்றி நாம் ஏன் பேச வேண்டும்?
நிருபர் 6 : ராசாவைக் கைது செய்ய வேண்டுமென்று ஜெயலலிதா கோரி வந்தது பலித்துவிட்டதே?
முதல்வர் : இந்தத் தென்னாட்டுப் பெண்மணி பற்றியும் இங்கே பேச வேண்டாம்..
நிருபர் 1 : வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று அன்று முழக்கம் வைத்தார் அண்ணா. இன்றும் அது பொருந்துகிறதா?
முதல்வர் : வடக்கு வாழ்வதால் தெற்கும் வாழ்கிறது என்பதை இன்று அண்ணா இருந்திருந்தால் ஏற்றுக் கொள்வார்.
நிருபர் 3 : உத்தப்புரத்தை உத்தமபுரம் ஆக்குவோம் என்றீர்கள். ஆனால் அங்கு தலித்துகள் ஆலயத்துக்குள் நுழைவதைத் தடுக்கும் கொடியவர்களைக் கைது செய்யாமல் தலித்துகளைக் கைது செய்வது நியாயமா? ராசா மட்டும்தான் தலித்தா, அவர்கள் தலித்துகள் இல்லையா என்று மக்கள் கேட்கிறார்கள்.
முதல்வர் : மக்கள் என்ன கேட்க வேண்டும் என்பதை நாங்கள் சொல்லிக்கறோம். நீங்க உங்க கேள்வியைக் கேளுங்க. சட்ட ஒழுங்கைச் சீர்குலைக்கும் கெடுமதியாளர்களைக் கைது செய்யாமல் வேடிக்கை பார்க்க முடியுமா?
நிருபர் 2 : அடியோடு மனமாறுதல் ஏற்பட்ட பிறகுதான் ஆலயப் பிரவேசம் சாத்தியம் எனக் கூறுவது அறிவுடமை ஆகாது என்று அண்ணா அன்றே கூறியிருக்கிறாரே..?
முதல்வர் : அண்ணாவைப் பற்றி என்னிடமே பேசுகிறாயா? “தம்பி... நீ எந்தக் கணக்கில் கோட்டை விட்டாலும் ஓட்டுக் கணக்கில் மட்டும் கோட்டை விடாதே ! ” என்று அண்ணா நேற்றிரவு என் கனவில் வந்து காதோடு சொன்னது உனக்குத் தெரியுமா?
நிருபர் 4 : உங்களுடைய ஓட்டுக் கணக்கில் பாமக வருகிறதா?
முதல்வர் : சேர்ப்பதில் தவறு இல்லை என்கிறேன் நான்.. கவனமாக இருங்கள் என்று எச்சரிக்கிறார் சோனியா. மருத்துவர் உண்டு என்றால் அது உண்டு..அவர் இல்லையென்னால் அது இல்லை..
நிருபர் 2 : ஒரு கேள்வி ஐயா.. தவறாக நினைக்க வேண்டாம். அண்ணா அன்று சொன்னதையெல்லாம் ஏற்பது சரியா? அல்லது அவர் இன்று உங்கள் கனவில் வந்து சொல்வதை ஏற்பது சரியா?
முதல்வர் : யாரப்பா நீ? எந்தப் பத்திரிகையிலேருந்து வர்றே? உனக்கு இங்கே எப்படி இடம் கிடைச்சுது ?
(முதல்வர் இப்படி உணர்ச்சிவசப்பட்டதும் கூட்டம் முடிந்தது என்று சைகையால் உணர்த்துகிறார் தனிச் செயலர். நிருபர்கள் ஒருவரையொருவர் பார்த்தபடி மௌனமாக வெளியேறுகின்றனர்).
கற்பனை : ராஜகுரு
கலைஞரின் காதல் !!!
ReplyDeletehttp://aagaayamanithan.blogspot.com/2010/02/blog-post_7395.html