Part: 1 - Click here
பன்னாட்டு நிறுவனங்கள் தங்களை நிலைப்படுத்திக்கொண்டு உணவு விலையை ஏற்ற ஆரம்பித்தன. இந்நிறுவனங்கள் விவசாய சந்தைகளையும், உணவு உற்பத்தியையும் இணைத்து விலை நிர்ணயிப்பதில் வெற்றிகண்டன. தாராளமயம் மற்றும் தனியார்மயத்தால் உணவு சுழற்சியை உலகமயமாக்கியதாலும், உணவு உற்பத்தி கட்டமைப்பை மாற்றியதாலும்
இவர்களுக்கு இது சாத்தியமானது. 2007ம் ஆண்டு கார்கில் கம்பெனி விவசாய வணிகத்தில் 36 சதம் லாபம் ஈட்டியுள்ளது. ஏடிஎம் 67 சதவீதமும், பங்கி 49 சதவீதமும் லாபமடைந்துள்ளன. 2008ம் ஆண்டு முதல் மூன்றுமாதத்தில் கார்கில் கம்பெனியின் மொத்த வருமானம் 86 சதம் உயர்ந்துள்ளன. ஏடிஎம் நிறுவனத்தின் மொத்த லாபம் 55 சதமும், பங்கி கம்பெனியின் மொத்த லாபம் 189 சதமும் உயர்ந்துள்ளது. உரக் கம்பெனிகளில் 2007ல் பொட்டாஷ் கார்பொ ரஷன் 72 சதவீத லாபமும், மொசைக் 141 சதம் லாபமும் ஈட்டியுள்ளன.
2008 முதல் மூன்று மாதம் மட்டும் பொட்டாஷ் கார்பொரேஷன் நிகர வருமானம் 186 சதம் அதிகரித்துள்ளது. மொசைக் உர நிறுவனத்தின் நிகர வருமானம் 1200 சதம் அதிகரித்துள்ளது. விதைகள் மற்றும் உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களான மன்சோட்டா 44 சதமும், டூபான்ட் 19 சதமும், சைன்ஜென்டா 28 சதமும் லாபம் ஈட்டியுள்ளன.
இந்த விலையேற்றங்கள் எதுவும் சிறுவிவசாயிகளுக்கு எந்தவிதமான பலனையும் தரவில்லை. காரணம் இன்றைய உணவு வர்த்தக சட்டத்தை இயற்றுவதும், சந்தையை கட்டுபடுத்துவதும், நிதி கட்டுப்பாட்டை மேற்கொள்வதும் இப்பெரும் நிறுவனங்கள்தான். எனவே இதன் பலன் விவசாயிகளுக்கு கிடைக்காது.
மேலும் விவசாயத்தை தொழில்மயமாக்குவது ஒருபுறம் நடைபெறுகிறது. இதன் தாக்கமாக உணவுப்பொருட்களைசர்வதேசமயமாக்கி செயல்படுத்தும் போக்கு விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். உதாரணமாக இன்றைய உணவு வகைகள் சமையல் ஆவதற்கு முன்பு சராசரியாக 1300 மைல் பயணம் செய்கிறது. பழங்களையும், காய்கறிகளையும் குளிரவைத்து, மெழுகு தடவி, வர்ணம் பூசி, பிரகாசிக்கச் செய்து, நறுமணம் கமழும் முறையில் பெட்டிக்குள் அடைத்து கப்பலேற்றுவது வரை பணிகள் தொடர்கின்றன.
இந்த நடவடிக்கை அனைத்தும் சம்பந்தப்பட்ட உணவுப் பொருளின் தரத்தை உயர்த்துவதில்லை. மாறாக நீண்டதூர விநியோகத்திற்கும் அதன் அலமாரி வாழ்வுக்குமே இந்த நடவடிக்கை உதவுகிறது என்று டேனியல் இம்மோப் கூறுகின்றார். இந்த முதலாளித்துவ தொழில்மய விவசாயம், உற்பத்திக்கும், உண்பதற்கும் இடையிலான பணிகளுக்காக ஒரு கலோரி எரிசக்தி உணவை பெறுவதற்கு 10 கலோரி எரிசக்தியை செலவிடுகின்றது. எனவே, இந்த விலையேற்றம், வளர்ந்த நாடுகளும், பன்னாட்டு நிறுவனங்களும், இவர்களால் இவர்களுக்கு இவர்களே ஏழைநாட்டு மக்களிடமிருந்து சூறையாடிய லாப வேட்டையாகும்.
முதலில் ஏற்றுமதி அடுத்து உணவு:
எப்பொழுதெல்லாம் உணவு தானியங்கள் வணிகமயமானதோ அப்பொழுதெல்லாம் பட்டினிச்சாவுகள் அரங்கேறியுள்ளன. இந்தியாவிற்கு பிரிட்டிஷ்காரர்கள் வந்ததையொட்டி ஏற்பட்ட போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புமுறைகள் புதிய வாய்ப்புகளை உருவாக்கின. உணவுப்பொருட்களின் ஏற்றுமதிக்காக இந்திய விவாசாயிகளை தங்களுடைய நாட்டுக்கு ஏற்றுமதி செய்யுமாறு நிர்பந்தித்தனர்.
இதனால் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டு1875 முதல் 1900வரை இந்தியாவின் 1.20 கோடி முதல் 2.90 கோடிவரை மக்கள் பட்டினியால் மடிந்தனர். இக்காலத்தில்தான் இந்தியாவின் தானிய ஏற்றுமதி 30 லட்சம் டன்னிலிருந்து 100 லட்சம் டன்னாக உயர்ந்தது. 1840ம் ஆண்டு அயர்லாந்தில் ஏற்பட்ட உருளைகிழங்கு பஞ்சமும், 1943ல் வங்கப்பஞ்சமும் இதே வகையைச் சேர்ந்ததுதான்.
தற்போது இந்தியாவில் உணவுதானிய பொருட்கள் வணிகமயமாகி விட்ட நிலைமையில்தான் தற்கொலை எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டிச்சென்று கொண்டிருக்கிறது. அரிசி ஏற்றுமதி செய்த பிலிப்பைன்சும் சோளம் ஏற்றுமதி செய்த மெக்சிகோவும் தற்போது இறக்குமதிக்கு தள்ளப்பட்டுள்ளன.
இந்தியா, சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்சு, தாய்லாந்து, வியட்நாம், ஈரான், எகிப்து, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய 11 நாடுகள் உலகத் தானிய உற்பத்தியில் 40 சதவீதத்தை உற்பத்தி செய்கின்றன. இந்நாடுகளில் கடந்த 13 ஆண்டுகளில் அதாவது, 1989-91 முதல் 2003-04வரை தானிய உற்பத்தி 1.1 சதவீதம் மட்டுமே ஆண்டுதோறும் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதற்கு மாறாக ஏற்றுமதிக்கான வணிகப்பயிர்கள் உற்பத்தி இக்காலத்தில் 10 மடங்கு அதிகமாக இந்நாடுகளில் விளைந்துள்ளது. இதற்கான நிலப்பரப்பும், முதலீடும் திருப்பிவிடப்பட்டுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக உணவு தானியத்தை வணிகப்பயிர்கள் கபளீகரம் செய்ய ஆரம்பித்துள்ளன.
பொருளதார அறிஞர் உஸ்த்தவ் பட்நாயக் கூறுவதுபோல் காலனியாதிக்க ஆட்சியின்போது இந்திய விவசாயிகள் இங்கிலாந்திற்கு கோதுமையை கொடுத்துவிட்டு தாங்கள் பட்டினியாக கிடந்தனர். நவீன இந்திய விவசாயிகள் மேலைநாட்டினருக்கு ஊறுகாய்க்கான வெள்ளரியையும், ரோசாப்பூவையும் பயிரிட்டு ஏற்றுமதி செய்துவிட்டு பற்றாக்குறை உணவை எடுத்துக்கொள் கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஏ.பாக்கியம்
தொடரும் ...
0 comments:
Post a Comment