Tuesday, June 18, 2013

கல்லூரிக் கட்டணத்துக்காக உடலை விற்கும் கொடிய வாழ்விலிருந்து - குலாத்தி

தற்செயலாக நேற்று கிஷோர் சாந்தாபாய் காலே ஞாபகம் வந்தது. அவரைப் பற்றிய ஏதேனும் செய்திகள் இருக்குமா, வேறு புத்தகங்கள் எழுதியிருக்கிறாரா என்று இணயதளத்தில் தேடிப் பார்த்தபோது அதிர்ச்சியாயிருந்தது. 2007 பிப்ரவரியில் கிஷோர் சாந்தாபாய் ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டார் என்ற ஒரு செய்தி இருந்தது. அதுவும் 37 வயதில். பெரும் ஏமாற்றமாகவும், வெறுமையாகவும் இருந்தது. அந்த மனிதர் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறார் என்னும் நினைவு இப்போது தாக்கப்பட்டுவிட்டது. அவஸ்தையாய் இருக்கிறது. 

அவரது குலாத்தி படித்து இரண்டு வருடங்களுக்கு மேலிருக்கும். முகப்பு அட்டையில் லேசாய் வளர்ந்திருந்த முடியுடன் வெறித்துப் பார்க்கும் அந்தச் சிறுவனும், குலாத்தி என்ற பேருக்குக் கீழே தந்தையற்றவன் என்கிற வார்த்தையும் யாரையும் பற்றிக் கொள்ளும். எழுதிய கிஷோர் சாந்தாபாய் காலே என்பவரின் சுயசரிதையே இந்த புத்தகம் என்பது பின்பக்க அட்டையில் தெரிந்தது. அந்த புத்தகம் வாங்கியிருந்த ஏராளமான விருதுகள் பெரிதாக எதையும் எதிர்பார்க்கச் செய்யவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.

படிக்க ஆரம்பித்த இரவு நேரம் அந்த புத்தகத்திற்குள் அப்படியே இழுத்துவிடக் கூடியதாயிருந்தது.
மங்கலான வெளிச்சத்தில், ஆண்கள் நிழலுருவங்களாய்த் தெரிய ஆரம்பிக்கிறார்கள். மேடையில் குலாத்தி இனத்தைச் சேர்ந்த இளம்பெண் தமாஷா நடனமாடிக்கொண்டு இருக்கிறாள். காசுகள் அவளை நோக்கி பறக்கின்றன. பொறுக்கி எடுத்துக் கொண்டே ஆடுகிறாள். மேடைக்குப் பின்னே அவளது குழந்தை பால் குடிக்கக் கதறிக் கொண்டு இருக்கிறது. ரணங்களை விழுங்கிய சதங்கைகள் அதிர அங்கே அந்தப் பெண் ஆடிக்கொண்டே இருக்கிறாள். 'சபாஷ், 'ஆஹா'வென ஆண்கள் அவளது உடலின் அசைவுகளுக்கு ஜதி சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைக்கோ முகமெல்லாம் வெடிக்க, அடிவயிற்றிலிருந்து அதுவே கடைசிக் குரல் என முறுக்கித் தெறிக்கிறது. அது போல குழந்தை ஒன்றே இந்தப் புத்தகத்தின் எழுதியவனாயிருக்க, அந்த உயிரின் அழுகை எழுத்துக்களாய், வாழ்வின் வரிகளாய், வாசிக்கிறவனுக்குள் படருகின்றன. இரவின் உலகத்தில் எழுதியவனின் பயணங்கள் ஒற்றைப் பறவையின் குரலோடு நீள்கின்றன.

ஒரு காலத்தில் கழைக்கூத்தாடிகளாய் இருந்து, பிறகு இப்படி மேடைகளுக்கு ஆடவந்து விடுகின்ற குலாத்திச் சமூகத்தில் பிறந்த ஒருவன் எம்.பி.பி.எஸ் படித்து முடிக்கிறான் என்பதுதான் கதை. நிச்சயமற்ற உலகத்தில் அந்த குலாத்திப் பெண்கள் வாழ்கிற துயரங்கள் தொண்டைக் குழிக்குள் அடைகின்றன. ஆட்டத்தைப் பார்க்க வந்த வசதியான, செல்வாக்கு மிக்க ஆடவன் தனக்குப் பிடித்தவளை காசு கொடுத்து அழைத்துச் சென்று விடுகிறான். கொஞ்ச மாதங்கள் அல்லது, சில வருடங்கள் கூட வைத்திருக்கிறான். அந்த குலாத்திப் பெண் ஆடுவதை நிறுத்தி விட்டு அவனோடு ஐக்யமாகி விடுகிறாள். அவன் எப்படிப்பட்டவனாய் இருந்தாலும் ஊர் ஊராய் அலைய வேண்டியிராத அந்த வாழ்வில் அவளுக்கு ஒரு நிம்மதி இருக்கிறது. அந்த ஆண் அவளை கைவிடுகிறான். அனேகமாக கைக்குழந்தையோடுதான். சாராயம் குடித்து, மாமிச ருசி பழகிப்போன குலாத்தி குடும்பத்தலைவன் அவளை மீண்டும் தமாஷா நடனமாட இரவின் மேடையில் கொண்டு வந்து நிறுத்துகிறான். தாய் ஏமாறுகிறாள். அக்கா ஏமாறுகிறாள். இருந்தாலும் தானும் அப்படியே ஏமாந்து போக சம்மதிக்கிறாள் ஒரு குலாத்திப் பெண்.

வேறு வழி எதுவும் முன் இல்லை. அவளுக்கென்று கனவுகள் இல்லை. உலகம் இல்லை. குழந்தைகள் இருந்தாலும் குழந்தைகள் இல்லை. அதில் வித்தியாசமனவளாய் சாந்தாபாய். டீச்சராக வேண்டும் என கனவு காண்கிறாள். வாழ்க்கை அவளையும் இந்தச் சுழிக்குள் தள்ளி, பதினான்கு வயதில் குழந்தையைத் தந்து, திரும்பவும் மேடையில் கொண்டு வந்து நிறுத்துகிறது. சாகும் வரை உன்னை வைத்து காப்பாற்றுவேன் என நானா என்னும் இன்னொரு ஆண் உறுதிசொல்ல குழந்தையை விட்டு, குடும்பத்தை விட்டு மீண்டும் ஓடிவிடுகிறாள். அந்தக் குழந்தை சகல அவமானத்தோடும் அந்த குலாத்திக் குடும்பத்தின் வேலைக்காரனாய் வளர்கிறது. அவனது தாயோடு பிறந்த சித்திகளும், ஜீஜீ என்னும் வயதான பாட்டியும் அவன் மீது அவ்வப்போது பாராட்டும் அன்பில், அந்த நிழலில் படிக்க வேண்டும் என்னும் வெறி அவனுக்குள் தீயாய் வளர்கிறது.

தந்தையின் பேரை பின்னால் வைத்துக் கொள்ளும் சமூகத்தில் கிஷோர் சாந்தாபாய் காலே என்று தாயின் பேரோடு பள்ளியில் சேருகிறான். சதா நேரமும் வேலை..வேலை. படிப்பதற்காக தாகம் எடுத்து, அதற்கு நேரம் கிடைக்காமல் தவிக்கிற தவிப்பு . பள்ளியில் அவன் பேரை உச்சரிக்கும் போது எழும்புகிற கேலி. லீவு நாட்களில் தமாஷா குழுவோடு அனுப்பப்பட்டு அங்கு வரும் ஆண்களுக்கு இரவு முழுக்க பணிவிடைகள் செய்ய வேண்டிய கொடுமை. எல்லாவற்றோடும் அவன் ஒவ்வொரு வகுப்பாய் தேறி உயர்நிலைப்பள்ளி, கல்லூரி வாழ்க்கை என நகரும் நாட்கள் ஒவ்வொன்றும் நரகத்தின் வாசலிலிருந்துதான் அவனுக்கு பிறக்கிறது. ஒருதடவை கல்லூரிக்கு பணம் கட்ட இரண்டாயிரம் ருபாய் தேவைப்பட, சுசிலா சித்தியும் ஒரு ஆணும் ஒரு லாட்ஜில் ஒரு அறையில் தங்க, பக்கத்து அறையில் தங்கியிருக்க வேண்டிய இரக்கமற்ற தருணங்களில் அவன் வெந்து போக வேண்டியிருக்கிறது.

அவனுக்குள் ஒரு தேவதையாய் இறங்கியிருக்கிற அம்மாவின் நினைப்பு மனித வாழ்வின் எல்லைகளைத் தாண்டி நிற்கிறது. ஏழு வருடங்களுக்குப் பிறகு தன்னை பார்க்க ஒருமுறை வந்த அம்மாவின் பார்வைக்குள்ளேயே தான் இருக்க வேண்டும் என அந்தப் பத்து வயதுச் சிறுவனின் செய்கைகள் ஒவ்வொன்றும் வாசிக்கிறவனை அப்படியே கரைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது. தன்னை விட்டு விட்டுப் போன அம்மாவைப் பற்றிய மதிப்பீடுகள் அவனது ஒவ்வொரு பருவத்திலும் வளருகிற இயல்பு ஒரு சித்திரமாக விரிகிறது. அம்மாவோடு சேர்ந்து வாழ்கிற காலமும் அவனுக்கு கிடைக்கிறது. நானா என்கிற அந்த ஆண் அவளை வைத்திருக்கிற அவலத்தில் துடித்துப் போகிறான். ஆனாலும் அம்மா அவனை விட்டு வராமல், அவனிடம் அடி, உதை பட்டுக் கொண்டு அங்கேயே வாழ்வது தாங்கமுடியாமல் இருக்கிறது.

சுசிலாச் சித்தி, ரம்பா சித்தி, பேபி சித்தி, ஷோபா சித்தி என மற்ற குலாத்திப் பெண்கள் படுகிற துயரங்களுக்கு அம்மா எடுத்த முடிவு எவ்வளவோ மேல் என்று நினைக்கிறான். குலாத்தி நாவலை அடுத்தநாள் இரவில்தான் படித்து முடிக்க முடிந்தது. தூரத்தில் எங்கோ நாய் சத்தம் கேட்டது. கிஷோர் சாந்தாபாய் வயற்காட்டில் இருக்கும் பாட்டி ஜீஜீக்கு இரவில் ரொட்டி எடுத்துப் போகும்போது நாய்கள் குரைப்பதாகப் படுகிறது. ஜீஜீயும் ஒருகாலத்தில் ஆண்களை வசீகரித்த குலாத்திக்காரிதான். இன்று அவளுக்கு மருத்துவம் பார்க்க வழியில்லாமல் கவனிப்பாரற்று ஒரு அனாதையைப் போல கிடக்கிறாள்.

அவள் மீது பிரியம் வைத்திருக்கும் கிஷோர் இப்போது டாக்டராகி விட்டான். மனது அசைபோட, தூக்கத்தை விழுங்கிவிட்டு இருளின் அடர்த்தியாய் என்னைச் சுற்றி குலாத்தி. இந்தப் புத்தகத்தின் முன்னுரையை கடைசியில்தான் படித்தேன். இப்போது கிஷோர் சாந்தாபாய் காலே டாக்டராகி, ஆதிவாசிகளுக்கும், பழங்குடி மக்களுக்கும் இலவச மருத்துவம் செய்து கொண்டிருக்கிறார் என்றிருந்தது.

இந்தப்புத்தகத்தின் மூலம் கிடைத்த வருவாய், எண்ணற்ற விருதுகளின் பணம் எல்லாவற்றையும் கொண்டு தன் பாட்டி ஜீஜீயின் நினைவாக அறக்கட்டளை நிறுவி இருக்கிறார். அதன்மூலம் அனாதைக் குழந்தைகளுக்கும், குலாத்தி சமூகக் குழந்தைகளுக்கும் கல்விக்கான உதவி செய்து வருகிறார். இருள் நிறைந்த தன் வாழ்விலிருந்து வெளிச்சத்தை திரட்டி அதை சாதாரண மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். உண்மை ஆர்ப்பாட்டமில்லாமல் எப்போதும் எளிமையாகவே இருக்கிறது. குலாத்தி ஒரு மனிதனின் கதை மட்டுமல்ல. ஒரு சமூகத்தின், அதுவும் நாம் வாழ்கிற காலத்தின் ஒரு பகுதி.

இணையதளத்தில் அவர் பெயரைக் குறிப்பிட்டுத் தேடினால் மொத்தமே இருபது பக்கங்கள்தான் தேடிக் கொடுக்கப்படுகின்றன. அதில் அவர் இறந்த செய்தியை இரண்டே இரண்டு வலைப்பக்கங்களே வெறும் செய்தியாய் சொல்கின்றன. துயர் மிகுந்த தன் வாழ்வினைப் பற்றி எழுதுகிற போது ஒரு இடத்தில் கிஷோர் சாந்தாபாய் " தினம் தினம் சாகிறவனுக்காக யாரும் அழுவதில்லை" என்கிறார். பெரும் துயரமாய் நம்மை அழுத்துகிறது அந்த வார்த்தைகள்.

- மாதவராஜ்

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)