இந்தியாவில் நவீன பொருளாதார சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஆனால், இந்தியா இன்று எந்தத் திசையில் செல்வது என்பது தெரியாமல் குறுக்குச் சாலையில் நின்று கொண்டிருக்கிறது. தனது அண்மைய வெளி நாட்டுப் பயணத்தின் போது, பிரதமர் மன்மோகன் சிங் “ 21-ம் நூற்றாண்டு ஆசியாவிற்குச் சொந்தமானதாகும். இதில் ஈடேற்றம் காண்பதில் இந்தியா முன்னிலை வகிக்கும்.” என்று கூறியுள்ளார். வரும் ஆண்டுகள் அவ்வாறு அற்புதமான ஆண்டுகளாக மலரப் போகின்றனவா, அல்லது இருக்கும் வாய்ப்புக்களையும் நழுவ விடப்போகிறோமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண் டும். பொருளாதார வல்லமை படைத்த நாடாக மலர அனைத்து சக்தியும் இந்தியாவிற்கு இருக்கிறது என்பதில் ஐயமில்லை. சீர்திருத் தங்கள் வேண்டுமா இல்லையா என்பதல்ல கேள்வி. மாறாக நமது வல்லமையைக் கண்டறிய எம்மாதிரியான சீர்திருத்தங்கள் தேவை என்பதே நம் முன்னிருக்கும் முக்கிய கேள்வி.
கார்ப்பரேட் நிகழ்ச்சி நிரல்!
கார்ப்பரேட் முதன்மை அதிகாரிகளின் குழு ஒன்று இந்தியச் சீர்திருத்தங்களுக்கான நிகழ்ச்சிநிரல் ஒன்றினை தயாரித்திருக்கிறது. தனித்தனி அம்சங்களை அலசியிருக்கும் அவர்கள், அது குறித்த முழுமையான பார்வையில் கோட்டை விட்டிருக்கின்றனர். 10 அம்சங்களில் முதல் 5 அம் சங்கள் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்தவை. மீதி 5 அம்சங்கள், ஒரு விரிவான அர்த்தத்தில், ஆட்சிமுறை குறித்த சீர்திருத்தங்களாகும். இந்தியாவிற்கு பெருமளவில் அந்நிய மூலதனம் தேவை என்பதோடு, உள்நாட்டி லும் மூலதனம் மலிவாகவும், உடனடியாகவும் கிடைக்கும் அளவிற்கு நிலைமைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அவை அமைந்திருக்கின்றன. அதாவது, இவற்றின் விளைவாக முதலீடுகளும், வளர்ச்சியும் பெருமளவில் மேம்படும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் அவை முன் மொழியப்பட்டிருக்கின்றன.
வீழ்ச்சியடையும் உற்பத்தி!
இன்றைய உலகச் சூழ்நிலையின் பின்னணியில் இதை ஆராய்வது அவசியம். கடந்த இரண்டு ஆண்டுகளில் தொழில் உற்பத்தி மிகப்பெரும் வீழ்ச்சியினைச் சந்தித்திருக் கிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு 6.1 சத வீதமாக இருந்த தொழில் உற்பத்திக் குறியீடு தொடர்ந்து குறைந்து, செப்டம்பர் மாதத்தில் 1.9 சதவீதத் தினைத் தொட்டிருக்கிறது. எப்போதும் அதி நம்பிக்கையூட்டும் (லண்டனிலிருந்து வெளி வரும்) “எக்கனாமிஸ்ட்” பத்திரிகை போன்றவைகள் கூட, உலக அளவில் எதிர்பார்க்கப்படும் இரட்டைத் தாழ்வு பொருளாதார மந்தம் குறித்து கவலை தெரிவித்திருக்கின்றன.
வாங்கும் சக்தியை உயர்த்தாமல்...…
யூரோ நெருக்கடியும், நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான மீட்புத் திட்டமாக கார்ப்பரேட் திவால்களை அரசாங்கத் திவால்களாக மாற்றுவதற்குத் தேவைப்படும் அபரி மிதமான தொகைகளுக்கான ஆலோசனையும், உலகப் பொருளாதாரத்தினை சுழற்றி யடித்து வருகின்றன. உலக வர்த்தகம் சுருங்கி வரும் பின்னணியில், இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சியும் 81.7 சதவீதத்திலிருந்து, ஜூலை மாதத்தில் 10.8 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இந்தப் பின்னணியில், உள் நாட்டுக் கிராக்கியினை உயர்த்துவதன் மூலமே வளர்ச்சியினை எட்டமுடியும்என்பதுதான் இயல்பான முடிவாக இருக்க முடியும்.
இத்தகைய சூழலில், மக்களின் வாங்கும் சக்தியினை கணிசமாக உயர்த்தாமல், மூலதனம் கிடைப்பதை மட்டுமே உறுதிப்படுத்துவதன் மூலம் வளர்ச்சியினை எட்டிவிட முடியாது.
பட்டினிக் குறியீடு!
ஒரு புறம், ஃபோர்பஸ்சின் கணக்கின்படி, இந்தியாவின் 61 டாலர் பில்லியனர்கள் (சுமார் 5,000 கோடி சொத்து மதிப்புள்ளவர்கள்) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மூன்றில் ஒரு பங்கினை கட்டுப் படுத்துபவர்களாக இருக்கின்றனர். மறு புறத் தில், அர்ஜூன் சென் குப்தா கமிட்டியின் அறிக்கையின் படி, 80 சதவீத இந்தியர்கள், நாள் ஒன்றிற்கு ரூ.20க்குள் தங்கள் வாழ்க்கையினை நடத்திக் கொண்டிருக்கின்றனர். நம் நாட்டில், 31 கோடிப் பேர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் வறுமைக் கோட் டிற்குக் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என, அண்மையில் ஐ.நா. வெளியிட்டிருக்கும் மனித மேம்பாட்டு அறிக்கை கூறுகிறது. 1973-74 லிருந்து, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வோர் எண்ணிக்கை 1.9 கோடி மட்டுமே குறைந்திருக்கிறது. இது ஒருபுறமிருக்க, மக்கள் உண்ணும் உணவின் கலொரி அளவும், பருப்பு வகைகளும் (புரதச் சத்து) 1983 லிருந்து 2005 க்குள் கிராமப்புறத்தில் 8 சதவீதமும், நகர்ப்புறத்தில் 3.3 சதவீதமும் குறைந்திருக்கிறது. பட்டினிக் குறியீட்டு எண்10க்குக் குறைந்த மாநிலம் நம் நாட்டில் எதுவும் இல் லை என்பதே பட்டினியின் அளவு எத்தகைய அபாய கட்டத்தினை அடைந்திருக்கிறது என்பதை உணர்த்துவதாகும்.
வறுமையின் கோர முகம்!
மூன்று வயதிற்குக் குறைந்த குழந்தை களின் எண்ணிக்கையில் சரிபாதி சத்துணவின்றி வாடுகின்றன. இது தெற்கு சஹாரா நாடுகளின் நிலைமையை விட மோசமானதாகும். குழந்தைகளில் சரி பாதியினருக்கு நோய்த் தடுப்பு ஊசி மருந்துகள் கிடைப்பதில்லை. முற்றிலும் தடுக்கப்படக்கூடிய நோய்களிலிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பில்லை. நமது நாட்டில் (அரசு மற்றும் தனியார்) மொத்த மருத்துவச் செலவு, உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் பார்த்தால், மொத்தமாக ஆப்பிரிக்கா முழுவதற்கும் ஆகும் செ லவு சதவீதத்தினை விட குறைவானதேயா கும். நாடு விடுதலை அடைந்து 60 ஆண்டு கள் ஆகிய பின்னரும் இன்னும் 50 சதவீத மக் களுக்கு கழிப்பறை வசதி இல்லை என்பது வெட்கக்கேடானது.
பொருளாதார வல்லமை சாத்தியமே!
பொருளாதார வல்லமை கொண்ட பெரிய நாடாக நாம் வளர வேண்டுமானால், தேச அளவில் ஒட்டுமொத்த கிராக்கி உயரும் வகையில் மக்களின் வாங்கும் சக்தியினை பெருமளவு அதிகரிக்க வேண்டும்.
வெளிநாட்டு மூலதனத்தினை வைத்துக் கொண்டு என்ன செய்வது? நமது உற்பத்தி ஆதாரங்களையும், வேலை வாய்ப்புக்களையும் பெருக்குவதற்கும், தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதற்கும் முதலீடுகள் வருமானால் அவற்றினை வரவேற்கலாம். அது அல்லாமல், இன்றைய உலக நிதி நெருக்கடிச் சுழலில் தேவையில்லாமல் சிக்கிக் கொள்ளும் அளவிற்கு, சீர்திருத்தங்கள் செய்ய வேண்டிய தேவை என்ன வந்தது? நமக்குத் தேவைப் படும் மூலதனத்தினை திரட்டும் சக்தி நமக்கு இல்லை என்று சொல்வதும் உண்மையல்ல; அது ஒரு புனைவேயாகும்.
“ஊக்குவிப்பும்”, “சுமையும்”!
நமது பட்ஜெட்டில் கூறப்பட்டிருக்கும் பின்வரும் விஷயங்களைப் பாருங்கள். விதிக் கப்பட்ட வரிகளை செல்வந்தர்களிடமிருந்து வசூலிக்காமல் விட்ட தொகை 2008-09ல் ரூ. 4,14,099 கோடி. 2009-10ல் இது ரூ.5,02,299 கோடியாக உயர்ந்தது. 2010-11ல் இது ரூ. 5,11,630 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், வரி செலுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் உயர் செல் வந்தர்களிடம் மட்டும் வசூலிக்கப்படாமல் விடப்பட்ட தொகை, ரூ.1,04,471கோடி (2008-09), ரூ.1,20,483கோடி(2009-10). இது 2010-11ல் ரூ.1,38,921 கோடியாக உயரும் என எதிர் பார்க்கப் படுகிறது. இந்த மூன்றுஆண்டுகளில் மட்டும் நியாயமாக அரசுக் கருவூலத்திற்கு வந்திருக்க வேண்டிய ரூ.14,28,028 கோடி யினை அரசு வசூலிக்காமல் விட்டுவிட்டது. இதில், ரூ.3,63,875கோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், உயர் செல்வந்தர்களுக்கும் மட்டுமே அளிக்கப்பட்ட சலுகை என்பதை மறந்துவிடக் கூடாது. செல்வந்தர்களுக்குக் கொடுப்பதை ‘ஊக்குவிப்பு’ எனவும், ஏழை களுக்குக் கொடுப்பதை ‘சுமைகள்’ எனவும் வர்ணிக்கும் தற்போதைய போக்கினை மாற்று வதே இன்றைய சீர்திருத்தத்திற்கான முக்கிய தேவை. நமது மக்கள் சக்தியினை பயன்படுத்தும் வகையில் இளைஞர்கள் மீது முத லீடு செய்ய வேண்டும். இன்று எதிர்பார்க்கப் படும் நிதிப் பற்றாக்குறை ரூ. 4,65,000 கோடி மட்டுமே. ஆனால், விதிக்கப்பட்ட வரியினை முழுவதும் வசூலித்திருந்தால், நிதிப்பற்றாக் குறை எங்கிருந்து வரும்? சமூக-பொருளாதார கட்டமைப்பில் முதலீடு செய்வதற்கு பணத்தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இட மில்லை அல்லவா?
தீவிர விவாதம் தேவை!
இது தவிர, சலுகை சார் முதலாளித்துவ ஊழல் மூலம் கொள்ளை போகும் பெருந்தொகைகளையும் சேர்த்தால், அரசுக் கருகூலத்திற்கு மொத்தம் வரவேண் டிய பணம் எவ்வளவு எனப் புரிந்துவிடும். நம் நாடு இதைத் தாங்காது என பிரதமரே கவலை தெரிவித்திருக்கிறார். இவற்றையெல்லாம் நாடாளுமன்றத்தின் குளிர்காலத் தொடர் தீவிரமாக விவாதித்து முடிவுகள் எடுத்தால் நல்லது.
பொருளாதார வல்லமை கொண்ட நாடாக நாம் உயர வேண்டுமென்றால், இன்றைய தேவைகளுக்குப் பொருத்தமான சரியான சீர்திருத்தப் பாதையினை தேர்ந்தெடுத்தல் அவசியம்.
-சீத்தாராம் யெச்சூரி எம்.பி
0 comments:
Post a Comment