உமது மீட்பரை நீர் கண்டடைவீர்...
உமது குற்றங்குறித்த விசாரணையின்
வாய்ப்பு மறுக்கப்பட்ட
அக்கணமே நிராதரவாய்
அந் நகரத்தில் கைவிடப்படுகிறீர்
நாக்குத் தள்ள அலைந்து
கண்டெடுத்த
வோட்கா போத்தலில் தளும்புவதோ
தூய
வெண்ணிறத்திலான கடவுளின் சிறுநீர்
எட்டுத்திசையிலும் மதிலையெழுப்பி
வழக்கம்போல்
எல்லா வழிகளையும் மூடிவிட்ட
உம் கடவுளோ
எங்கோ ஓடி ஒளிந்துகொள்கிறார்
வெப்பம் பொசுக்கும் இப் பாலை நகரத்தில்
சோர்வு கொண்டு மேய்கிறது
காய்ந்த குத்துச் செடியை
கரு நிறக் குதிரையொன்று
உம் அழைப்பை செவிமடுக்காமல்
அதுவரை அருகிருந்த குதிரை
நகர்ந்து நகர்ந்து போக்குக் காட்டுகிறது
அம் மதுப்போத்தலைப்
பரிசளிக்கத் துணிகிறீர்
நா வறண்ட தாகம் மீறி
நெகிழ்ந்துருகும் கருங்குதிரை
தாமதியாமல் அதை உடைக்கிறது
குறும்பாறை ஒன்றில்
துண்டு துண்டாகச் சிதறி
வழிகிறார் உங்களின் கடவுள்
பின்பு சொல்லவும் வேண்டுமா
இப்பாலைவெளி கடந்து
ஆகாசத்தில் உம்மை மீட்டுச் செல்லும்
அக் குதிரையே மீட்பராகிய சாத்தானென்று.
நீதிமானின் எழுதுகோல்
நீதிமானின்
எழுதுகோலினை நம்பினார்கள்
பெருங்கதவின் திறப்பிற்கு
காத்திருந்த அவர்கள்
விடுதலையின் குளிர்காற்றை
அது கொண்டு வருமென
அநீதியின்
ஒரு வாசகமும் தெரியாதென
தீமையின் புறம்
ஒருபோதும் திரும்பாதென
ஆகச் சிறந்த ஆகவே சிறந்த
ஒன்றை மட்டுமே அது
தாங்கிப் பிடிக்குமென
நீதிமானின்
எழுதுகோலினை நம்பிக் கொண்டிருப்பவர்களோ
துளியும் அறிவதே இல்லை
தமக்கான தீர்ப்புகளை எழுதும்போது
தலை குப்புற ஏன் அது விழுகிறதென்று
எவ்வித விமர்சனத்தையும் கடந்ததென
எந்நேரமும் உளறித் திரிகிறதென்று
பிறகு
அந்தரத்தில் தொங்கும்
அரதப் பழைய பிடியின் மீது
அவ்வளவு வெறியுடன்
கூர் கத்தியை வீசிப் போகிறதென்றும்
மேலாக
நீதிமானின்
எழுதுகோலினை நம்பப் போகிறவர்களுக்கோ
எப்போதும் தெரியப்போவதே இல்லை
அறுந்து கிழிந்த ஒரு நீதியை
சாவகாசமாய் உமிழ்ந்து விட்டு
அவ்வெழுதுகோல் மை
எப்படி
இறுகி உறைந்து போகுமென்றும்...
தற்கொலை நிகழ்ந்து கொண்டிருக்கிறது
நட்சத்திரமொன்று
பூமிக்கு நழுவுகிற கனவை
அவன் கண்ட இரவில்
தன் பிரிவு சொல்லி நிற்கிறது
ஜோசஃப்பின் குதிரை
சமாதானத்தின் இறகுகளால்
ஜோசஃப்
நீவி விட முயலுகையில்
இக்கணம் வரை அவனைச்
சுமந்தறியா அது
சற்றே தடுமாறி
பின் வெறித்துப் பார்க்கிறது
சலிப்பில் அரட்டி மிரட்டுகையில்
பிரிவு என்பதே
தன் தற்கொலையெனவும்
மெல்லப் பகிர்கிறது ஜோசஃப்பின் குதிரை
தானே அதற்கு முன்
செத்துத் தொலைவதென அவன்
புலம்பித் தீர்ப்பதை அது
அசைபோட்டு மென்று விடுகிறது
வெறுப்பின் உச்சியில் தற்கொலையை
நிகழ்த்தப் போகும் ஜோசஃப்
மலை உச்சியின் மரத்தில் ஏறி
நழுவி
விழுந்து
தவியெனத் தவிக்கிறான்
நிலம் தொட முடியாமல்
மலைச் சரிவில் புல்மேயும்
ஜோசஃப்பின் குதிரையோ
ஒரேமுறை மட்டும்
அவனை நிமிர்ந்து பார்த்து
பின் சாதுவிலும் சாதுவாகக் குனிந்து கொள்கிறது...
ஒரு நரியின் ஒப்பாரி
ஒரு நரியின் சிறு தந்திரங்களே
வாழ்வுத் துயர் கடக்க சூட்சுமமென
உள்ளூர களவு குணம் கைக்கொண்டு
உலவும்படி விதிக்கப்பட்டது இவ்வுலகமென
நீள்கிறது
உமது பிரசங்கம்
ஒரு நரியோ
ஒரு மயிரின் சிறு
நுனியளவும் அறியவில்லை
உயர் மின்சாரம் செலுத்தி
உயிர் கொல்கிற கலை குறித்து
கர்ப்பத்தில் புரளும் சிசுவிற்கும்
நேரடி மோட்சமளிக்கிற சூலம் குறித்து
லத்தியில் தடவிய அதிகாரக் கொழுப்பு
யோனி கிழித்துப் புணரும் நுட்பம் குறித்து
முடிவேயின்றி மூள்கிற போர்களின்
கொழுத்துப் பெருத்த ஆதாயங்கள் குறித்தும்
மட்டுமின்றி
உலகமே வியக்கும்
தன் தந்திரசாலித்தனம் குறித்தோ
இலக்கு பிசகின்றி
அதைப் பிரயோகிக்கும் வல்லமை குறித்தோ
தவிர
தானொரு நரி எனக் குறித்தோ கூட
அறியவே இல்லை
ஒரு நரி
ஆழ்துயிலுக்குள் இவ்வுலகம் புகும்போது
ஒரு நரி
ஒளிரும் நிலவை நோக்கித் துவங்குகிறது
தன் ஒப்பாரியை
தன்னளவில்
அதைத்தான் நீங்கள்
இரகசிய வேட்டைக்கான
ஒரு நரியின்
கானக ஊளை என்கிறீர்...·
·
கடவுளின் முகவரி
ஜோசஃப் தேடிவந்த கடவுள் அக்கவிதைக்குள்
சாவகாசமாகச் சாய்ந்து நின்றிருந்தார்
அடி மரத்தின் மீது
அவரிடம் ஜோசஃப் இறைஞ்சுகிறான்
அருள்கூர்ந்து
கடவுளின் முகவரியைத் தெரிவிக்க இயலுமாவென
கண் தொலைவிற்கு அப்பால் தெரிகிற
கவிதையின் எல்லைக் கோட்டினை
கடந்து திரும்பினால் தருவதாகச் சொல்லி
கடவுள்
மறைத்து வைத்திருந்தார் தன் முகவரி அட்டையை
எல்லை தொடும் பந்தயத்தில் ஜோசஃப்
மூச்சிரைத்து மூச்சிரைத்து ஓடும்போது
வளர்ந்து
வளர்ந்து
நீள்கிறது அவ்வெல்லைக் கோடு
அவ்வழியே
வயோதிகத்தின் பிடியிலிருந்த தன் தாயும்
என்றைக்குமாக கை நழுவிப்போன காதலியும்
சிரித்தபடி கடந்து போகிறார்கள் அவனை
இலக்கை அடைய ஓரடி முன்பாக ஜோசஃப்
சட்டென்று நின்று
பதட்டமுடன் திரும்புகிறான்
காணாமல் போய்விட்டிருந்தார்
மரத்தடியிலிருந்த கடவுள்
தனியே நின்று கொண்டிருந்தது
அக் கவிதைக்குள் ஒற்றை மரம்...
·
0 comments:
Post a Comment