காமிரா - ஒளிப்பதிவுக் கருவி அறிவியலின் ஓர் அற்புதக் குழந்தை. பெரிய திரையிலும் சிறிய திரையிலும் நம் கண்களைக் கொள்ளை கொண்டதோர் விந்தைக் கருவி. இப்போதெல்லாம் திரைப்படங்களின் காட்சிகள் சர்சர் என்று அடுத்த காட்சிக்குத் தாவுகின்றன. காமிராவின் ஓட்டம் என்பது அதிவிரைவு என்பதாகிவிட்டது. குறிப்பாகப் பாடல் காட்சிகளை எடுத்துக் கொள்வோம். ஒருபாடலின்போது காட்டப்படும் காட்சிகள் நாம் நமது கண்களால் உள் வாங்கி அது மூளைக்குச் சென்று பதிவாகி ஆணை வரும் முன்னரே ஓடிவிடுகின்றன.
பாடலின் 3 அல்லது 4 நிமிடங்களுக்குள் ஏராளமான விஷயங்களை சொல்லிவிட வேண்டும் எனும் துடிப்பு. ஆனால் இறுதியில் எதுவும் தெளிவாகக் கண்களில் பதிவாகவில்லை என்பதே இன்று நாம் காணும் உண்மை.
பழைய பாடல்களை விரும்பிப் பார்ப்பவர்கள் இன்றும் ஏராளம். இளையவர்களும் இதில் அடக்கம். கண்ணுக்குக் குளிர்ச்சி, மனதுக்கு அமைதி, உணர்வுக்கு இனிமை தருவது இன்றும் பழைய பாடல்களே. குறிப்பாய், கறுப்பு - வெள்ளையின் பாடல் காட்சி இதமாகவே இருக்கும். ஒரு பாடலில் தோன்றும் காட்சிகளால் கவரப்பட்டே மீண்டும் மீண்டும் படம் பார்த்தவர்கள் உண்டு. இன்றோ, தொலைக்காட்சி ஆதிக்கம், கட்டணக் கொள்ளை, மட்டுமின்றி பாடல் காட்சிகளின் ஒட்டாத தன்மையும் கூட திரையரங்குகள் வெறிச்சோடிப் போகக் காரணமாகின்றன.
புதுமையான மாற்றங்கள் நிச்சயம் வேண்டும். ஆனால் புரியாத புதுமையில் என்ன வாழும்? பாடல் காட்சிகளுக்காக பல இடங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. அதாவது லொக்கேஷன்! ஒருவரிக்காக மட்டுமே இரண்டு மூன்று நாடுகள் செல்வதுண்டு. இவ்வாறு பல நாடுகள் பயணம் செய்து அள்ளி வரும் காட்சிகள், பாடல் காட்சிகளில் விழலுக்கிறைத்த நீராய் விரயமாகி வருவதே கண்கூடு. பல்வேறு இரைச்சலுடன் காமிராவை கன்னாபின்னாவென்று சுழற்றுவதுடன் பாடல் முடிந்து விடும்.
பேசும்படம் வந்த காலத்தில், பாடல்காட்சி, நகர்தல் இல்லாமல் ஒரே இடத்திலேயே, நடிகர் பாடி ஆடும் காட்சி பதிவு செய்யப்பட்டன. சில படங்கள் இருபது பாடல்களுக்குமேல் கொண்டவை. அனைத்துமே பார்க்க பார்க்க ஆவலும், ஆசையும், ஆர்வமும் மிகும் தன்மை கொண்டவை. கண்ணில் கண்டவை திரையில் தெரிந்தபோது மகிழாதார் யாருமில்லை.
காமிரா நுட்பம் வளரத் துவங்கிய காலம். படப்பிடிப்பின் போதே பாடகர்கள் பாடினார்கள். பாடுபவர்கள் பாடிக் கொண்டிருக்க, பின்னணி வாசிப்பவர்கள் கேமிராவின் கண்ணில் படாமல் டிராலியின் மேல் அமர்ந்து வாத்தியங்களை, இசைப்பார்கள். அதாவது கல்யாண ஊர்வலங்களில் நடந்து கொண்டே நாதவரம் வாசிப்பதைப் போல! அந்த பாடல் காட்சிகள் நாம் இப்போது பார்த்தால் அது நாடகத் தன்மை கொண்டது போல் தோன்றினாலும், ஆற அமர காட்சியின் அழகு, நடிகரின் பாவனை, ஆடை ஆபரண அலங்காரம், இன்னும் பலவற்றை ரசிகர்கள் கண்டுணர முடிந்தது. இப்போதைய பாடல்களில் ஹீரோவைப் தவிர வேறு யார் முகமும் சரியாகத் தெரியவில்லை. டக்டக்கென்று காட்சி மாறுவதால், யாராவது முன்னேறத் துடிக்கும் நடிகர் முகம் காட்டியிருந்தால் பாவம் அம்பேல்தான்.
1960க்குப் பிறகுதான் காமிரா வெளியே செல்லத் துவங்கியது. அன்னை, பாவைவிளக்கு படங்களில் காமிரா அவுட்டோர் செல்லும் நிலை வந்தது. பாவை விளக்கு படத்தின் காவியமா ஓவியமா எனும் தாஜ்மகால் பாடலே தென்னகம் தாண்டி முதன்முதலாகச் சென்று படம் பிடித்தது. ஊட்டி, மைசூர், ராஜதான், காஷ்மீர் என்று இந்தியாவின் அழகு, காமிராவில் நிரப்பப்பட்ட பின், சிவந்தமண் படத்திலிருந்து வெளிநாடுகளுக்கும் காமிரா சுற்றுப் பயணம் செய்தது.
அன்று காமிராவில் பிடித்த இடங்களெல்லாம் ரசிகர் மனதில் நன்கு பதியன் போடப்பட்டது. காதலிக்க நேரமில்லை படத்தின் அந்தப் பாடல் ஆழியாறு அணையின் முழு அழகையும் நமக்குக் காட்டியது. ஒளிப்பதிவு சுந்தரம். பக்திப் படங்களின் பாடல்கள், பல தெய்வத்திருத்தலங்களை, அவற்றில் நம்பிக்கை உள்ள பக்தர்களுக்கு காட்டின. இன்று வெளிநாடுகளில் எத்தனையோ பாடல்கள் எடுக்கப்பட்டாலும் அது எந்த நாடு, எந்த இடம் என ஏதாவது பத்திரிகையில் தயாரிப்பாளரோ இயக்குநரோ நமக்குத் தெரிவித்தால்தான் உண்டு. ஜப்பானில் கல்யாண ராமன் என்ற கமல் படம் ஜப்பான் தேசத்தை மிக அழகாகக் காட்டிய படம். ஒளிப்பதிவு டி.எ.விநாயகம்.
ஒரே வானம் ஒரே பூமி - ஜெய்சங்கர் படம். மாலை ராணி முந்தானை எனும் பாடலில் கே.ஆர்.விஜயா நடிக்க, பாடல் முழுவதும் அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சி அழகு சொட்டச் சொட்டப் படமாக்கப்பட்டிருக்கும். இது சமீபத்தில் ஜீன் வரை தொடர்ந்தது. பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் என்ற வைரமுத்துவின் பாடல் உலகின் ஏழு அதிசய இடங்களில் படமாக்கப்பட்டிருந்தது.
ஜெய்சங்கரின் கௌபாய் படங்களில் வேகமாக ஓடும் குதிரைகளின் மேல் அமர்ந்து பாடும்காட்சிகள் கூட நிதானமாய் நகருமேயன்றி நம் கண்களைப் பாதிக்காது. கர்ணன் ஒளிப்பதிவு.
ஜி.விட்டல், பாலுமகேந்திரா, நிவா (சிகப்பு ரோஜாக்கள்) பி.சி.ஸ்ரீராம் போன்றோரின் பதிவுகள் கண்களுக்குத் துன்பம் தராதவை.
முன்பெல்லாம் எம் டிவியிலும், வி டிவியிலும் ஆல்பம் பாட்டுகள் வரும். கசமுசாவென்று ஒன்றுமே புரியாது. ஏதோ பாட்டு, அவ்வவுதான். அதனைக் கொண்டு வந்து சினிமாவில் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தியாகராஜ பாகவதர், பியூ சின்னப்பா, கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் இவர்களின் பாடல் காட்சிகளில் குரல் மட்டுமே மக்களுக்குப் போதுமானதாயிருந்தது. பின்னாளில் சில நடிக, நடிகையரின் தோற்றப் பொலிவு பாடல் காட்சிகளுக்கு அழகு சேர்த்தன. ஒவ்வொரு கால கட்டத்திலும் வெவ்வேறு விதமான அழகை காமிரா மக்களுக்கு அக்கறையுடன் அள்ளி வழங்கியிருக்கிறது. இப்போது எதை வழங்குகிறது? அதன் இலக்குதான் என்ன? கன்னாபின்னாவென்று காமிரா சுழன்று தன் தொழில் நுட்ப வளர்ச்சியை மட்டும் காட்டிக்கொண்டால் போதுமா?
மாற்றம் என்பது எங்கும் உண்டுதான். மாற்றம் இல்லையேல் வளர்ச்சியும் இல்லைதான். ஆனால் அந்த மாற்றத்திற்கு என ஒரு நோக்கம் இருக்க வேண்டாமா? காமிராவின் இந்த மாற்றம் ஏதாவது பலன் தருகிறதா?
மொழியின் உயிர் அதன் உச்சரிப்பில் இருக்கிறது என்று கூறினார் ரூசோ. அது போல் சினிமாவின் உயிர் காமிராவில் வாழ்கிறது. இன்று ஏராளமான புதியவர்கள் காமிராவை நம்பி தொழில் செய்ய வருகிறார்கள். ஆரோக்கியத்தின் அறிகுறியாக சில நல்ல படங்களும் வருகின்றன. புது ரத்தம் பாய்கிறது. இவர்களில் சிலரது படங்களிலும் கூட பாடல் காட்சிகள் கண்ணேறு போல அமைந்து விடுகின்றன. மக்கள் விரும்புகிறார்கள் கொடுக்கிறோம் என்று சொன்னால் அது ஏற்புடையதல்ல. பாடலே இல்லாமல் வந்த நல்ல படங்களையெல்லாம் மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். மக்களை நேசிக்கும் பல நல்ல கலைஞர்கள் வித்தியாசமான முயற்சிகளில் இயங்கி பல தடைகளை உடைத்தெறிந்திருக்கிறார்கள்.
நமது கண்கள் நிமிடத்திற்கு இருபத்திரண்டு முறை துடிக்கும். ஆனால் பாடல் காட்சியின் போது ஏழுமுறை மட்டுமே துடிக்கிறது. கண்ணீர் ஆவியாகிறது. ஈரப்பதம் குறைகிறது இது ஒரு புள்ளி விபரம். காமிராவின் அதிவிரைவு மனிதக் கண்களுக்கு செல்லுபடியாகாது. ஆனாலும் கண்ணைக் கொடுத்துக் கொண்டுதான் பாடலை ரசிக்கின்றனர். காமிராவின் கண்கள் ரசிகனின் கண்ணுக்குக் கண்ணாடியாக அமைய வேண்டுமேயன்றி, கண்ணாடியே கண்ணைப் பதம் பார்க்கக் கூடாது அல்லவா?
இனியாவது கலையென்னும் இனிய உலகின் சிறப்புக் கருவியான காமிரா நிதான நடைபோடட்டும்; நிஜங்களை மட்டுமே, அல்லது நிஜமாக்குவதற்கான கற்பனைகளை மட்டுமே நம்மிடம் சேர்க்கட்டும்.
-ஆர்.மீனா
வண்ணக்கதிர்
0 comments:
Post a Comment