வீடு என்னும் தேவை, அளவு ரீதியாகவும் பண்பு ரீதியாகவும் பரவிக்கொண்டே போய் நகரமயமாக்கல் என்ற விசுவரூபம் எடுத்து, மனிதர்களைப் பேய்போல கவ்விப் பிடித்து, அவர்கள் புறவாழ்விலும் எத்தனை எத்தனை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக் கிறது என்பதை அழகாக நாவலாக்கி உள்ளார், எஸ்.அர்ஷியா.
அந்நாவலுக்கு ஓர் அழகான தலைப்பும் வைத்துள்ளார் அவர். பொய்கைக்கரைப்பட்டி. பட்டிகள் எல்லாம் தங்கள் தனித்துவத்தை இழந்து பெருநகரங்களின் அங்கங்களாகிப் போய்க் கொண்டிருக்கிற மாற்றத்தைப் பற்றி அத்தலைப்பே சிந்திக்க வைக்கிறது.
பொய்கைக்கரைப்பட்டி, எத்தகைய ஊர்?
“பதினேழு கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் மதுரை நகரில் வெயில் வாட்டியெடுக்கும், ஆனால் மலையைச் சுற்றியிருக்கும் இடங்களில், லேசாகவும் கனமாகவும் மழை பொழிந்திருக்கும். தொடர்ச்சியாகப் பொழியும் லேசான மழையில், மண் குளிர்ந்து பயிர்கள் கம்பீரமாக நிற்கும். கனமழையின் போது, சுற்றியுள்ள மலைகளின் மீதிருந்து அடித்து வரப்படும் மணலும் மூலிகையும் அந்தப் பகுதிக்கு உரமாகி வளம் கூடிவிடும். செம்மண்ணும் மணலும் கலந்த செவல் பூமியது. வேறெங்கும் இதுபோன்ற அமைப்பு இல்லை. எதை நட்டாலும் நாலு நாளில் முளைவிடும். வேர் பிடித்துத் தலை தூக்கும். குச்சியால் ஆழக் குத்தினாலே போதும். பூமியில் ஈரம் கசியும். நாலடி தோண்டினால், வாளியில் தண்ணீர் மொள்ளலாம்”.
இந்த நிலமும் இந்த நிலத்தின் மைந்தர்களும் எப்படியெல்லாம் சிதைந்து போகிறார்கள் என்பதே, நாவலின் மைய இழை!
‘மரத்தை வெட்டியதும், இந்தப் பறவைகளெல்லாம் எங்கே போகும்?' என்று கேட்டுக்கொள்ளும் சமுத்திரக் கனியின் தொழிலே, வீட்டுமனைகளாக விவசாய நிலங்களை மாற்றித்தரும் புரோக்கர் என்பதுதான், வாழ்வின் கோரம். புரோக்கர் என்று சொன்னால் சமுத்திரக்கனி பதறிப்போவார். அவர் அழகர் மலையானுக்கே அவித்துக் கொட்டும் பரம்பரையில் உதித்தவராயிற்றே, பதற மாட்டாரா? உழவுத் தொழில் செய்து அப்பன் சேர்த்து வைத்ததில் வாழக் கொடுத்து வைத்து, அவர் கஜேந்திரக்குமாரின் ‘ஞான ஸ்தானத்தில்’ மீடியேட்டர் ஆகிறார். ‘மரத்தை வெட்டியதும் பறவைகள் எங்கே போகும்?’ என்று தன்னையே கேட்டவர், போட்டி மீடியேட்டர்களால் தலைவேறு முண்டம் வேறாக வெட்டிப் போடப்படுகிறார். இந்த முதல் அத்தியாயமே நாவலுக்கு அற்புதமான தொடக்கமாகக் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது.
ஆன்மிகத்துக்கும் லௌகீகத்துக்கும் இடையே ஊடாடி, இறுதியில் லௌகீகத்தின் பக்கம் சாய்கிற கஜேந்திரக் குமார் ஆட்டைப்போல அலற வேண்டிய சந்தர்ப்பங்கள் அவர் வாழ்விலும் நேர்கின்றன.
இராமநாதபுரத்திலிருந்து கிளம்பிவந்து ஒண்டக்கூட இடமில்லாமல் இரண்டு இரவுகளைக் கீழ் மதுரை ரயில் நிலைய சிமெண்ட் பெஞ்சில் கழித்த, சாப்பிடக்கூட காசில்லாமல் பசியோடு மதுரைத் தெருக்களில் அலைந்து திரிந்த கடந்த காலத்தை நினைத்துப் பார்த்து, தூக்கம் வராமல் எழுந்து தனது கனவுத்திட்டமான ‘லெவின்ஸ்கி கார்டனுக்கு’ வந்து, அங்கு காலாற நடந்து சுகம் கண்டு, தனது கண்ணுக்கு எட்டாத தூரம்வரை அவரது எல்லை நீண்டிருப் பதாகப்பட்டு, ‘மனசுக்குள் சந்தோஷமாக இருந்தாலும் அது நிறைவுதராமல் இன்னும் இன்னும்’ என்று தாகம் கொள்கின்ற கஜேந்திரக் குமார், ஆட்டைப் போல அஞ்சி நடுங்கி அலற நேர்கிறபோது, அந்தச் செவலையம்மாளை நினைத்தாரோ என்னவோ, அர்ஷியா எதுவும் சொல்வதில்லை. கமுக்கமாய்க் கண் சிமிட்டுகிறார்.
யாரோ ஒரு முகம் தெரியாத அண்ணனின் அதிகாரக் கரங்கள், கஜேந்திரக் குமாரின் மௌன அழுகையைப் பொருட்படுத்தாமல் அவரது உடம்பிலிருந்து எவ்வளவு இயலுமோ, அவ்வளவு மாமிசங்களைக் கொத்துக் கொத்தாக அள்ளிக் கொள்கின்றன. தனிமையாய் இருந்து அந்த மௌன சோகத்தைத் தீர்த்துக் கொள்ளச் சென்ற இடத்தில் மும்பையைச் சேர்ந்த தாதா கும்பலின் உள்ளூர் அடியாட்கள், துப்பாக்கி முனையில் குத்திக் குடைந்து கஜேந்திரக் குமார் என்கிற ஆட்டிடமிருந்து மாமிசங்களை அறுத்துக் கொண்டு போகின்றனர்.
‘ஆடு அலறுதேன்னு கறி திங்காம இருக்கோமா?’ என்ற நியாயம், கஜேந்திரக் குமாருக்கு மட்டும்தானா? ஆட்சி பீட அண்ணனுக்கும் உண்டல்லவா? திரைப்படங்களில் மட்டுமே பார்த்து வந்த துப்பாக்கி முனைக் கொள்ளையர்களுக்கும் உண்டல்லவா?
இந்த நான்கு காட்சிகளையும் இணைத்துப் பார்க்கின்றபோது, மானுட இயல்பு, மானுட வாழ்வின் பொருள் குறித்தெல்லாம், நாவலின் தளத்தில் நின்று பல விசாரணைகள் கிளை வெடிக்கின்றன. அவற்றுள் ஒரு கிளை விசாரணை மட்டும் கஜேந்திரக் குமாரின் நினைவாக, ஒரு சுடுகாட்டில் சிலரிடையே நிகழும் வாதமாக அர்ஷியா படைத்துக்காட்டி உள்ளார். நாவலின் கதைப்போக்குக்கு அது அவசியமற்றதுபோல புறத் தோற்றத்தில் தோன்றினாலும் ஆழ அந்தரத்தில் ஓர் இணைப்பு அல்லது ஓர் அவசியம் இருக்கவே செய்கிறது. இந்நாவலில் பல இடங்களில் இந்தப்போக்கு காணப்படவே செய்கிறது. படிக்கிறபோது ஒரு வேண்டாத துறுத்தலாக இடைஞ் சல் செய்வன எல்லாமே, புத்தகத்தை மூடிவைத்துவிட்டுச் சிந்திக்கின்றபோது, அவசியமான ஒன்றாகவே தோன்றும்படி செய்யும் ரசவாதம், அர்ஷியாவின் கைவண்ணம். அர்ஷியா வெறும் கதை சொல்லி மட்டும்தானா என்ன?
எல்லோரையும் பலிகொண்டு விடுகிற கஜேந்திரக் குமாருக்கும் அவரது மீடியேட்டர்கள் சமுத்திரக் கனி, மலைக்கள்ளன், ஆகியோருக்கும் சவால்விட்டு நிற்பவர் மலைநாட்டான். ‘‘மோசம் செய்துவரும் மழை, வாட்டியெடுக்கும் வெயில், ஏமாற்றிவிடும் விதைகள், விலையேறிப்போன உரம், இடையில் விலை வைக்கும் தரகர்கள் எல்லாமாகச் சேர்ந்தும்’’ கலகலக்க வைக்க முடியாத விவசாயி மலைநாட்டான். ‘சம்சாரின்னா அவர மாதிரி இருக்கணும்' என்று பாராட்டுப் பெற்றவர், அவர். அவர் விவசாயம் பார்க்கும் ஏழு ஏக்கர் மண்ணைச் சேர்த்துவிட்டால், கஜேந்திரக் குமாரின் திட்டம் பூர்த்தியாகிவிடும். அதற்காக அவரை அணுகியவர்களிடம் மலைநாட்டான் சொல்கிற பதிலிலிருந்து தெரிகிறது: நிலம் அவருக்கு வெறும் மண் மட்டுமல்ல; அதற்கும் மேல். அங்கிருப்பவை வெறும் தாவர உயி£¢களல்ல; அவற்றிற்கும் மேல். அது அவர் வாழ்வின் அர்த்தம். அவர் ஏதோ பயிர்களை உண்டாக்கிப் பாதுகாத்து, அறுத்து விற்கும் மனிதனில்லை. அதற்கும் மேல்; ஒரு படைப்பாளி!
அவர் சொல்கிறார் : ‘இது எங்க தாத்தா விட்டதை, எங்கப்பாரு மீட்டு எங்கைல குடுத்துட்டுப் போயிருக்காரு. எங்கப் பாட்டி அங்கம்மாவோட ஆவி, இங்கதான் இருக்குது. எங்கம்மாவையும் இங்கதான் பொதைச்சுருக்கோம். இதோ இது, எம்பொண்டாட்டியோட சமாதி. சொல்லப்போனா இது எங்க குடும்பக் கோவில். யாராச்சும் கோவிலை விப்பாங்களா? அப்படியேன்னாலும் இப்ப இதை விக்கணுங்குற அவசியமில்லையே!'
அப்படியொரு அவசியத்தை உண்டாக்க வல்லவராயிற்றே கஜேந்திரக் குமார். பாதாளம் மட்டும் பாயவல்ல பணம் எதிர்த்திசையில் இமய உச்சிவரை பாயாதா, என்ன? சாட்சாத் ஸ்ரீதேவியின் அருட் கடாட்சத்திற்காக அரசு அலுவலகங்களில், ஆட்சிக் கட்டில்களில் கோப்புகள் மீதேறி தவமியற்றுபவர்கள் கஜேந்திரக்குமாரின் கவலையைத் தங்கள் கவலையாகக் கொள்ள மாட்டார்களா? அவர் கவலையை மாற்றுவதே தங்கள் காரியம் என்று கருதிக் களத்தில் இறங்க மாட்டார்களா?
தண்ணீர் வரும் வழி அடைக்கப்படுகிறது. மலைநாட்டான் தோட்டத்துக்கு வரும்வழி மட்டுமா? அழகர் மலையின் சுந்தர்ராஜப் பெருமாள், ஆண்டுக்கு இரண்டு முறை பக்தர்களுக்கு அருள்பாலித்து உலாப் போகும் தெப்பக்குளத்திற்குத் தண்ணீர்வரும் வழியும் அடைபட்டுவிட்டது. ‘‘தண்ணீரில்லாத தெப்பக்குளத்தின் கரைகளில், பிறர் சுமக்க, தோள்களில் உலா போவதற்கு அவர் வெட்கப்பட்டுக் கொண்ட மாதிரியும் தெரியவில்லை. ஓடையை அடைத்து இடத்தை அபகரித்துக் கொண்டவர்களுடன் அவரும் கூட்டணி வைத்துவிட்டாற்போல. அமைதியாக மலையில் உறங்குகிறார்’’, கடவுளின் கதியே இதுவென்றால்...? மலைநாட்டான், மனிதன்!
நாவல் இப்படி முடிகிறது : ‘‘தண்ணீர் வரும் வழி அடைக்கப்பட்ட பின், மழையும் விழாமல், போரில் தண்ணீரும் வராமல், உயர்ந்துவரும் கட்டிடத்துக்குப் பக்கத்திலிருந்த வாழைத் தோட்டம் கருகிப் போயிருந்தது. அதைப் பார்த்துக்கொண்டே வந்த மலைநாட்டானிடம் செண்பகம் சொன்னாள்: ‘பேசாம நாமளும் இதை வித்துட்டுப் போயிறலாம்ப்பா. தண்ணியுமில்லாம, மழையுமில்லாம எத்தனை நாளைக்குத்தான் இப்டியே பாத்துக்கிட்டுருக்க முடியும்? கடவுளும் நம்மளக் கை விட்டுட்டாரு. வேற வழியில்லப்பா!’’
காதில் விழுந்ததை அமைதியாகக் கேட்டுக்கொண்ட மலைநாட்டான், மகள் முகத்தை நிதானமாகப் பார்க்கிறார்.
சந்திர காந்தன்
காலம் வெளியீடு, மதுரை- 625 002.
பக்: 152 | ரூ.100
0 comments:
Post a Comment