முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென்னிலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே...
பின்னை இட்ட தீ தென்னிலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே...
-பட்டினத்தார்
அக்கினிக் குஞ்சொன்று போலத் தான் பிடித்தது இந்த நெருப்பு...செப்டம்பர் 17 அன்று. அமெரிக்காவின் சந்தைப் பொருளாதார மையமான வால் ஸ்ட்ரீட் அருகே இருக்கும் ஜுக்கொவிட் பூங்கா உள்ளே அன்று இரவு நூறு பேர் இன்றிலிருந்து 'இராத் தங்கல்' இங்கே தான் என்று பாய் தலையணைகளோடு வந்து நின்றுவிட்ட அந்த நாளில் ஆயிரம் பேர் கலந்து கொண்ட ஆவேச ஆர்ப்பாட்டங்களோடு தொடங்கியது இந்த "வால் ஸ்ட்ரீட்டை முற்றுகையிடுவோம்" போராட்டம். அக்டோபர் 15 உலகைக் குலுக்கி இருந்தது அதன் வீச்சு! 82 நாடுகள், அவற்றின் 951 நகரங்களில் லட்சக் கணக்கில் திரண்ட மக்களின் எழுச்சிகரமான அணிவகுப்பு- அவரவர் நாட்டுப் பிரச்சனைகளின் கோபத் தீயோடு சேர்ந்து கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது செப்டம்பர் 17 ஜுக்கொவிட் பூங்கா மரத்திடைப் பொந்தினில் வைத்திருந்த அக்கினிக் குஞ்சு..
''உனக்குப் பசி எடுக்கிறதா, எவனாவது ஒரு வங்கி அதிபரைப் பிடித்துத் தின்னு..''என்று அலறியது ஆர்ப்பாட்டத்தில் ஒரு பெண் ஏந்தியிருந்த தட்டி. டோக்கியோ நகரில் ஒரு சின்னஞ்சிறுவன் வைத்திருந்த அட்டையில், என்னைக் கரை சேர்ப்பது எப்போது... என்று எழுதியிருந்தது உலகச் செய்தியானது. (பெயில் அவுட் என்ற சொல், நஷ்டத்தில் சிக்கி இருக்கும் நிறுவனத்தை அரசு தலையிட்டுக் காப்பற்றுவதைக் குறிக்கிறது, நிறுவனங்களின் அதிபர்களைக் காப்பாற்றி விட்டு அதன் முதலீட்டாளர்களை நடுத்தெருவில் நிறுத்துகின்றன அரசுகள், எனக்கான பெயில் அவுட் எங்கே என்று தான் இந்தச் சிறுவன் கேட்டது).. உலகமயமாகி இருக்கும் சுரண்டலுக்கு எதிரான கோபாவேசம் உலகமயமாகிக் கொண்டிருக்கும் ஒரு மகத்தான வெளிப்பாடாக வெடித்துக் கொண்டிருந்தது அக்டோபர் 15.
பெருமுதலாளிகளைக் குறிக்கிறது கார்பொரேட் என்கிற சொல். கார்பொரேட்களின் பேராசைக்கும், பட்ஜெட்களில் சாதாரண குடிமக்களைக் குறிவைக்கும் தாக்குதல்களுக்கும் எதிராக என்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தது இந்த வால் ஸ்ட்ரீட்டை முற்றுகையிடுவோம் போராட்டத்தின் ஆதார முழக்கம். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகக் கனன்று கொண்டிருந்த உலகப் பொருளாதார பிரச்சனைகளின் பெருத்த அடி, 2008 இறுதிப் பகுதியில் மேற்கத்திய நாடுகளில் விழத் தொடங்கியது. லண்டனில் மிகப் பெரிய வங்கி (நார்தர்ன் ராக்) ஒன்று கவிழ்ந்தபோது அதோடு நின்றுவிடும் சரிவு என நினைத்த கதை எல்லாம் கவிழ்ந்து, அமெரிக்காவில் தொடங்கி அய்ரோப்பிய நாடுகள் வரை நிதி நிறுவனங்கள் பலவும் ஒரு நாளைக்கு இத்தனை என்று கணக்கு சொல்லி வைத்தாற் போல் சரிந்து கொண்டே இருந்தன..ஜார்ஜ் புஷ் காலத்திலிருந்து, ஒபாமா காலம் வரை அமெரிக்காவிலும், இதர நாடுகளிலும் இந்த நெருக்கடியை எதிர்கொள்ள எப்படி திட்டங்கள் தீட்டப்பட்டன என்பதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தின் அடிப்படை ஆவேசம்..
முதலாளித்துவ பொருளாதாரம் தனது சரிவிலிருந்து தன்னைத் தானே மீட்டெடுத்துக் கொள்ளும் திறன் படைத்தது என்று பெருமை பேசிக்கொண்டிருந்த அறிவுஜீவிகள் பலரையும் ஆட்டம் காணச் செய்திருக்கிறது அண்மைக்கால நிகழ்வுகள். மீட்சிக்கான பாதை நெருக்கடியை இன்னும் கூர் தீட்டிக் கொண்டிருப்பது என்பதை அவர்களால் ஒப்புக் கொள்ளவும் முடியவில்லை. தப்பித்துச் செல்லவும் வழியில்லை. பொருளாதாரம் எத்தனை வீழ்ச்சி அடைந்தாலும், பெருந்தனக்காரர்களுக்கு வரியை ஏற்றிவிடக் கூடாது, செலவினங்களைக் கட்டுப்படுத்தி - அதாவது, குடிமக்களுக்கான கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவ வசதி, சுகாதாரம், ஓய்வூதியம், வேலையற்ற காலத்துக்கான நிவாரணம், காப்பீடு போன்றவை எல்லாம் ஒழித்துக் கட்டி, பற்றாக்குறையைத் தட்டி நிமிர்த்திவிட வேண்டும் என்று துடிக்கின்றன அரசுகள். நிறுவனங்களின் அதிபர்கள் தமது தொப்பைகளை மேலும் வளர்த்துத் தடவித் தடவி ஆனந்தம் அடைந்து கொண்டிருக்க, தங்கள் வாழ்வாதாரங்கள் அனைத்தும் பறி கொடுத்துவிட்டு வீதிகளில் நிற்கும் சாதாரண குடிமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த அத்தகைய அரசுகளின் கனவுகளில் மண்ணை அள்ளிப் போட்டுப் புறப்பட்டிருக்கிறது இந்தப் போராட்ட அலை.
இதன் உருவகம் தான், நாங்கள் 99% என்ற புதிய கோஷ உருவாக்கம். ஒரு சதவீத பெரும் பணக்கார வர்க்கத்திற்காக பெரும்பானமையான எங்கள் நலனைக் காவு கொடுக்காதே என்ற கண்டன முழக்கம் அது. மேற்கு ஆசியாவில் புறப்பட்ட போராட்டங்களில் எப்படி முன்னேறிய கணினி தொழில் நுட்பம் பயன்பட்டதோ, அட அவ்வளவு ஏன், அதிபர் தேர்தலுக்கு ஒபாமா என்ன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திப் பரவலான மக்களைச் சென்றடைந்தாரோ, அதே சாதனங்களின் வழியாகக் கொப்புளிக்கும் கோபாவேசத்தை உலகு முழுக்க பெருந் தீயாகப் பரப்பி வருகின்றனர் இந்தப் போராளிகள். இதன் நரம்பு மண்டலம் எது, தலைமைப் பொறுப்பு யார் கையில் இருக்கிறது, இது தெளிவான திட்டமிடலின் வழி பயணம் செய்யுமா, குழப்பங்களில் சிதறி விடுமா என்ற கேள்விகள் இருந்தாலும், நிராகரிக்க முடியாத கொதி நிலையை நோக்கி நகர்கிறது.
ஃபிரான்ஸ் நாட்டில் அதிபர் சர்க்கோசி அரசுக்கு எதிராகப் பல ஆண்டுகளாக வெடித்துக் கொண்டிருக்கும் கலகங்கள் இன்னும் தீவிர உருக் கொள்கின்றன. லண்டன் மாநகரம் தொடர் போர்க் களமாக மாறிக் கொண்டிருக்கிறது. ரோம் வெடித்துக் கொண்டு எழுகிறது. கிரீஸ் கொழுந்து விட்டு எரிகிறது. வேலை நிறுத்தங்கள், காவல் துறையோடு தள்ளு முல்லுகள், மனிதச் சங்கிலிகள், முற்றுகைகள், ஆர்ப்பாட்டப் பேரணிகள்....என உயர்த்திய பதாகைகளின் வழி ஷேக்ஸ்பியரின் மேக்பெத் நாடகத்தில் அரசனுக்கு எதிராக பிர்னாம் காடுகள் எழுந்து வரும் காட்சியைப் போல் திரள்கின்றனர் மக்கள். கண்டங்கள் எல்லாம் முதலாளித்துவத்தைக் கண்ட துண்டமாக வெட்டிப் போடு என்று குரல் கொடுக்கும் நாள் நெருங்கி விட்டதோ என்ற ஆசையைத் துளிர்க்கச் செய்து கொண்டிருக்கிறது நடப்புகள். விஷயம் அத்தனை சுலபம் இல்லை என்றாலும்..
அமெரிக்காவின் நர்சுகள் எழுகிறார்கள், நாங்களும் இந்தப் போராட்டத்தில் என்று. ஐரோப்பாவின் மாணவர்கள், வங்கி ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர், முதியோர்கள் என யார் தான் இல்லை இந்தப் போராட்டத்தில்! ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி, நுகர்வுக் கலாச்சாரத்திற்கு எதிரான அட்பஸ்டர்ஸ் என்ற பத்திரிகை தான், வால் ஸ்ட்ரீட்டை முற்றுகையிடுவோம் என்ற பெயரைப் பதிவு செய்தது என்கிறார்கள். அது பிறகு பல்கிப் பெருகிப் பெரு வெள்ளமாக அக்டோபர் 15 உலக நாடுகளில் பாய்ந்துவிட்டிருக்கிறது. அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி மேலும் உக்கிரமாகக் கூடும் என்றும் தெரிகிறது.
அதன் பிரதிபலிப்புகளை அமெரிக்க அதிபர் ஒபாமா பேச்சிலும், நமது பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டு உலக நாடுகளின் அதிபர்கள் கருத்தோட்டங்களிலும் காண முடிகிறது. அதிர்ந்து தான் போயிருக்கின்றனர் மாற்றுக் கொள்கை கிடையாது என்று இத்தனைக் காலமும் சாதித்துக் கொண்டிருந்தவர்கள். ஆனாலும் கொள்கைகளில் இவர்கள் என்ன மாற்றம் கொண்டு வருவார்கள் என்பது தான் முக்கியம். அதை இலேசில் கொண்டு வர முடியாது என்பதும் தெரியும்.
'பச்சைக் குழந்தை பால் இன்றி பாதையில் விழுவது அகிம்சையா, பசிக்கு இரத்தம் குடிக்கும் பேய்களைப் போருக்கு இழுத்தால் வன்முறையா' என்று போகிறது, பரிணாமன் எழுதிய கிளர்ச்சியைத் தூண்டும் தோழர்களே பாடல் வரிகள். அதன் அடுத்த மேன்மையான இடம், 'நிழலையே திருடும் நீசர்கள் முன்னே நேசக் கரங்கள் நீளாது, இவர் நிழலே விழாத திருநாள் வரும் வரை சமரசம் போரில் கிடையாது' என்று உச்சியைத் தொடும். அப்படியான சமரசமற்ற போர் தொடுக்கப்படும் என்று விழைகிறது முற்போக்கு உலகம்.
நடந்து கொண்டிருக்கும் இந்த எழுச்சிப் போரின் ஒரு முக்கிய முனையாக இருக்க வேண்டிய இந்தியாவில் இதன் உடனடி பிரதிபலிப்பு இல்லாதது வியப்பையும், கொஞ்சம் வருத்தத்தையும் ஏற்படுத்தினாலும் தொழிற்சங்கங்களும், இடதுசாரி கட்சிகளும் - குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியும் அக்டோபர் 15 எழுச்சியை வரவேற்றிருப்பது ஆறுதல் அளிக்கிறது. உலகெங்கும் போராட்டம் நடந்தாலும் சந்தைப் பொருளாதாரம் தவறு என்று ஆகிவிடாது என்று அண்மையில் மணிசங்கர் ஐயரின் தகப்பனார் சங்கர அய்யர் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா முழங்கி இருக்கிறார். நாள் ஒன்றிற்கு இருபத்தைந்து ரூபாய் ஈட்டினால் வறுமை ஒழிந்துவிடும் என்று சிந்திக்கும் அதி தீவிர அறிவியல் மூளை ஆயிற்றே, அது தான் இன்னும் அடங்காத கொழுப்பு. ஆனாலும், ஊழல், பெருந்தொழில் நிறுவனங்களின் பகாசுரக் கொள்ளை, அதிகரிக்கும் விலைவாசி, பெருகும் பட்டினிச் சாவுகள், நொறுங்கும் வேளாண்மை, வேதனை அளிக்கும் வேலை இழப்புகள்....இவற்றின் பளுவால் துடித்துக் கொண்டிருக்கும் சாதாரண மக்களின் பாடுகள் அவர்களையும் ஒன்று திரட்டும். கலகம் வெடிக்கும். அதை வடிவமைக்கிற, வழிகாட்டுகிற, தலைமை ஏற்கிற கடமை அழைக்கிறது, முற்போக்கு இடது சாரி ஜனநாயக சக்திகளை.
வால் ஸ்ட்ரீட் முற்றுகை அமெரிக்காவில் என்றால், தலால் ஸ்ட்ரீட் முற்றுகை இந்தியாவில் என்று எழுதுகிறார் பிசினஸ் லைன் கட்டுரையாளர் ஒருவர். அது உண்மையாகட்டும்.
-எஸ் வி வேணுகோபாலன்
0 comments:
Post a Comment