உத்தப்புரம் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு கண்டதற்காக தமிழக அரசை பாராட்டுவதாக இந்து முன்னணித் தலைவர் இராம.கோபாலன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக ஆட்சியை பாராட்டுவது அவரது உரிமை.
அதிமுகவில் கடந்த ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளான மதமாற்ற தடைச்சட்டம், ஆடு, கோழி பலியிடத் தடை போன்ற நடவடிக்கைகளையும் இவர் பாராட்டி, புல்லரித்து தரையில் விழுந்து புரண்டார். அத்தகைய நடவடிக்கைகளின் விளைவு என்ன என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள்.
இப்போது கூட சமச்சீர்கல்வி சீர்குலைக்கப்பட்டதை வரவேற்று மகிழ்ந்தார். ஆனால் மக்களின் கருத்து அரசுக்கு எதிராக இருந்தது என்பதே உண்மை.
உத்தப்புரம் பிரச்சனைக்குத் தீர்வு கண்டதில் தமிழக அரசின் பங்கை, குறிப்பாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க்கின் பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் அங்கீகரித்து பாராட்டியுள்ளது.
ஆனால் இராம.கோபாலன் தனது அறிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சித்துள்ளார். சாதிப் பிரச்சனையை தீண்டாமைப் பிரச்சனையாக மாற்றி தலித் விரோதமாக சித்தரித்து ஊதி ஊதிப் பெரிதாக்கியது மார்க்சிஸ்ட் கட்சி தான் என்று அவர் கூறியுள்ளார்.
உத்தப்புரத்தில் தீண்டாமைச்சுவர் எழுப்பப்பட்டிருந்ததைக் கண்டறிந்து அதை அகற்றுவதற்காக இடையறாது போராடி யது மார்க்சிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி யும். கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் அவர்களின் உத்தப்புரம் வருகையை ஒட்டி சுவரின் ஒரு பகுதி தகர்க்கப்பட்டது. இப்போது அறிக்கை விடும் இராம.கோபாலன், உத்தப்புரம் பக்கமே எட்டிப்பார்த்ததில்லை. அந்த ஊர் எங்கிருக்கிறது என்று கூட இவருக்கு தெரியாது. கேட்டால், காசிக்கு பக்கத்தில் இருக்கிறது என்று கூடக் கூறுவார்.
தலித் மக்கள் அனுபவித்து வந்த தீண்டாமைக் கொடுமையை முடிவுக்கு கொண்டுவர ஒரு புல்லைக் கூட கிள்ளிப் போடாத இவருக்கு அறிக்கைவிட எந்த அருகதையும் இல்லை.
தலித் மக்கள், மார்க்சிஸ்ட் கட்சியை விட்டு இந்து இயக்கத்தை அணுகியதால்தான் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது என்று ஓர் ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளார் இந்த சமாதானத் தூதுவர்.
உத்தப்புரம் தலித் மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியோடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியோடு உறுதியாக நின்ற தால்தான் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்பட்டது.
முத்தாலம்மன் ஆலயத்திற்கு வழிபடச்சென்ற தலித் மக்களை வாழ்த்தி வழியனுப்பிவைத்தது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி.
தமிழகத்தில் இன்னமும் கூட ஏராளமான கோவில்களுக்குள் தலித்மக்கள் சென்று வழிபட முடியவில்லை. இராம.கோபாலன் தலித் மக்களை அழைத்துக்கொண்டு அந்த கோவில்களுக்குள் செல்லத்தயாரா? அத்தகைய கோவில்களின் பட்டியலை வேண்டுமானால் அவருக்கு அனுப்பத் தயார்.
தலித் மக்களுக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் இடையிலான உறவு ரத்தமும் சதையும் போன்றது. எங்கெல்லாம் அடக்குமுறை இருக்கிறதோ, அங்கெல்லாம் செங்கொடி எழும்.
எங்கே சமூக ஒற்றுமையை கெடுக்கலாம், மதக் கலவரத்தைத் தூண்டலாம் என சதாசர்வ காலமும் சிந்தித் துக்கொண்டிருக்கும் இராம கோபாலர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியை விமர்சிக்கும் அருகதை இல்லை.
- மதுரை சொக்கன்
வீரத் துறவி என்ன ஷூட்டிங்க் போராறா ?பட்டை , சந்தனம்,பொட்டு ஜமாய்க்கிறாரு!சரிபார்க்க கண்ணாடி!பொட்டோ அருமை!---காஸ்யபன்
ReplyDelete