Sunday, May 20, 2012

ஊடகங்கள் மறைத்துவிட்ட மக்கள் புரட்சி (வெனிசுவெல்லா திரைப்படம்)

அறிவியல் தொழிற்நுட்பங்களின் உதவியோடு, ஊடகங்களால் கோடிக்கணக்கான மக்களை சில வினாடிகளில் தொடர்பு கொண்டு செய்திகளை விநியோகிக்கமுடிகிறது. இதனால் உலகளவில் ஊடகங்கள் அடைந்திருக்கிற வளர்ச்சி அபாரமானது. அவர்களால் மக்களிடையே ஒரு பொதுக்கருத்தை திணித்து நிலைநிறுத்தவும் முடியும் என்கிற அளவிற்கான வளர்ச்சியிது.

எவையெல்லாம் "செய்திகள்", எவையெல்லாம் "முக்கிய செய்திகள்" என்பனவற்றை, ஊடகங்களை கையில் வைத்திருக்கிற முதலாளிகள்தான் தீர்மானிக்கிறார்கள்.
* 1994 இல் ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் சுமார் பத்து லட்சம் அப்பாவி மக்களின் உயிரைக்குடித்த இனப்படுகொலைக்கு மிக முக்கியமான காரணம் ஆர்.டி.எல்.எம். என்கிற வானொலிதான். தொடர்ந்து அவ்வானொலியில் இடைவிடாது சிறுபான்மையின டூட்சி மக்களுக்கு எதிராக இனவெறிக்கருத்துக்களைப் பரப்பி பல இலட்சக்கணக்கான மக்களை கொலை செய்யத்தூண்டிவிட்டுக்கொண்டே இருந்தது.

* 2002 இல் குஜராத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறையின்போதும், "குஜராத் சமாச்சார்" மற்றும் சந்தேஷ் போன்ற பத்திரிக்கைகள் இனவெறி கருத்துக்களை எவ்வாறு பரப்பின என்பதும் நாம் அறிந்ததே.

* எண்ணைவளமிக்க மத்தியகிழக்கு நாடுகளை ஆக்கிரமிக்கும் போர்களுக்கு உலகளவில் ஆதரவைத்திரட்ட ஊடகங்கள் மூலமாக அமெரிக்கா செய்கிற பரப்புரைகளும் இதிலடங்கும்.
வரலாற்றில் இப்படியான உதாரணங்கள் ஏராளமாக உண்டு.

கதைச்சுருக்கம்:

தென்னமெரிக்க நாடான வெனிசுவெல்லாவில், அந்நாட்டு மக்களின் பேராதரவுடன் ஒரு அரசு அமைகிறது. பெருமுதலாளிகளும் உலகின் மிகப்பெரிய தீவிரவாத அமைப்பான சி.ஐ.ஏ.வும் கைகோர்த்து ஊடகங்களைப் பயன்படுத்தி வெனிசுவெல்லாவின் மக்கள் அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டுகிறது. மக்களால் விரும்பியேற்கப்பட்ட ஒரு அரசினை கவிழ்க்க, ஊடகங்கள் மூலமாக எவ்வாறு முயற்சி செய்யப்பட்டது என்பதனையும், அதனை முறியடித்த மக்களின் புரட்சியையும் சொல்கிற திரைப்படம்தான் "The Revolution will not be Televised"

திரைக்கதை:

2000 ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 60 சதவீத வாக்குகளைப் பெற்று வெனிசுவெல்லாவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறார் ஹூகோ சாவேஸ்.

பதவியேற்றுக்கொண்ட சாவேஸ் : "இங்கே வெனிசுவெல்லா மற்றும் பிற லத்தீன் அமெரிக்கா நாடுகளிலும் பின்பற்றப்பட்டு வந்த புதிய தாராளமயக் கொள்கைகளினால் கட்டுப்பாடுகளற்ற வர்த்தகம் சாத்தியம் என்றே சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அவை அனைத்தும் பொய். ஆயிரம் மடங்கு பொய். அதற்கு மாற்று இருக்கிறது என்பதனை வெனிசுவெல்லாவில் நாம் நிரூபித்துக்கொண்டிருக்கிறோம். இதனைசெய்வதற்கு சர்வதேச அளவில் பல நெருக்கடிகளை நான் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அதையெல்லாம் நான் கண்டுகொள்ளப்போவதில்லை. நரகத்தின் வாசலுக்கே தள்ளப்பட்டாலும், நான் வெனிசுவெல்லா மக்களைக் காப்பேன்."

சாவேசின் ஆட்சி குறித்து ஒரு ஆவணப்படம் எடுக்க, 2001 ஆம் ஆண்டில் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கிம் பார்ட்லி மற்றும் பிரைன் ஆகிய இருவரும் வெனிசுவெல்லா நாட்டிற்கு செல்கிறார்கள். சாவேசின் அனுமதியுடன் அவர் செல்கிற இடங்களுக்கெல்லாம் காமிராவை தூக்கிக்கொண்டு ஆவணப்படுத்திக்கொண்டே போகிறார்கள்.

சாவேசின் எளிமை, மக்களிடம் அவர் கொண்டிருக்கிற நெருக்கம் போன்றவை அவர்களை ஆச்சரியப்பட வைக்கிறது. அமெரிக்காவின் கட்டுபாடற்ற சந்தைப் பொருளாதாரத்தை கடுமையாக எதிர்த்துப் பேசிவருகிறார் சாவேஸ்.

சாவேஸ் : "60 களில் நமக்கு நம்முடைய நாட்டினை திருப்பிக் கொடுத்தார்கள். ஆனால் எவ்விதக் கடன் வசதியோ தொழிற்நுட்ப வசதியோ தரவில்லை. அதனால் நமது உழைப்பாளி மக்களுக்கு என்ன கிடைத்தது? நம்முடைய எண்ணெய் வளம் கூட நம்முடையதாக இல்லை. இந்நிலை இன்னொருமுறை நடக்க விடமாட்டோம். அதற்கேற்ப நம்முடைய அரசியலமைப்பும் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. மக்களாகிய நீங்களும் ஒருங்கிணைந்து ஒத்துழைக்கவேண்டும்."

வாரத்தில் ஒரு நாள் தொலைகாட்சி மற்றும் வானொலியில் சாவேஸ் தோன்றி தொலைபேசி வாயிலாக நாட்டு மக்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கிறார். மக்கள் தங்களுடைய குறைகளை எவ்வித இடைத்தடைகளுமின்றி சாவேசிடம் தெரிவிக்கலாம் என்பதுதான் அந்நிகழ்ச்சியின் சிறப்பு. குறைகளை மட்டுமல்லாது, அரசுக்கு தங்களாலான உதவிகளையும் செய்ய முன்வருகிறார்கள் மக்கள். அந்நிகழ்ச்சியில் சாவேசை தொடர்புகொண்டு பேசுகிற ஒரு பெண்மணி,
"சாவேஸ்! என்னிடம் ஒரு சிறு நிலம் கூடுதலாக இருக்கிறது. மக்களுக்குப்பயன்படும் என்பதால், அதனை நான் அரசுக்கு வழங்க விருப்பப்படுகிறேன்".

அதுபோக, சாவேஸ் செல்லுமிடமெல்லாம் சிறு காகிதங்களிலும் மனுக்களாகவும் தங்களது குறைகளையும் அரசுக்கான ஆலோசனைகளையும் மக்கள் எழுதித்தருகிறார்கள். மக்களிடமிருந்து மனுக்களை பெறுவதற்கு ஒரு குழுவையே அமைக்கிறார் சாவேஸ். தினமும் ஆயிரக்கணக்கில் வந்து குவியும் மனுக்களை படித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதும் அக்குழுவின் பணி.

உழைக்கும் மக்களுக்கு ஆதரவாகவும் பெருமுதலாளிகளுக்கு எதிராகவும்  செயல்படுவதால், அவர்கள் சாவேசின் மீது கடும் அதிருப்தியோடு இருந்தனர். மக்களோடு மக்களாக வாழ்கிற சாவேஸ் குறித்து தனியார் தொலைக்காட்சிகள் மூலமாக தவறான பரப்புரையினை தொடர்ந்து நடத்தத்துவங்கினர். வெனிசுவெல்லாவில் ஐந்து முக்கியமான தனியார் தொலைக்காட்சிகளும் பெருமுதலாளிகளின் வசம் இருக்கிறது.

அவர்களால் இயன்றவரை சாவேஸ் குறித்து எதையாவது எதிர்மறையான செய்திகளைச் சொல்லிக்கொண்டே இருந்தனர்...
தனியார் தொலைகாட்சி 1 : "சாவேசுக்கும் பிடல் காஸ்ட்ரோவுக்கும் ஏதோ உடல்ரீதியான உறவு இருக்கிறது..."
தனியார் தொலைகாட்சி 2 : "சாவேஸ் மருத்தவ ரீதியாக மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை சாவேசே ஒப்புக்கொண்டிருக்கிறார்..."
தனியார் தொலைகாட்சி 3 : "இந்த அரசினை மாற்றுவதற்கான நேரம் இது. சாவேசை மக்கள் மாற்றுவது குறித்து யோசிக்கவேண்டும்..."

இவற்றையெல்லாம் சாவேஸ் அரசு கவனித்து வந்தாலும், ஊடகங்களுக்கு அரசு எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை. அதனை அவர்களது சுதந்திரம் என்றே சாவேசின் அரசு கருதிவந்தது. தனது நிலையினை ஒட்டுமொத்த மக்களுக்கும் விளக்கிச்சொல்ல, அவருக்கு இருந்த ஒரே ஊடகம் "சேனல் 8" என்கிற அரசு தொலைகாட்சிதான்.

ஒரு புறம் உள்ளூர் கொள்ளையர்களிடமிருந்து மக்களை காக்கவேண்டிய பணியினை செய்துகொண்டே, மறுபுறம் உலகளவில் ஏகாதியபத்தியத்தின் மனித உரிமை மீறும் போர்களையும் அவ்வப்போது கடுமையாக கண்டித்தே வந்தார் சாவேஸ்.

ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்துப்பேசும்போது,
"தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும் என்பதில் நமக்கு உடன்பாடு உண்டு. ஆனால் தீவிரவாதம் உருவாவதற்கு காரணமான பிரச்சனைகளை கண்டறிந்து, தீர்த்தால்தான் தீவிரவாதம் ஒழியும். குழந்தைகளையும் பெண்களையும் அப்பாவி மக்களையும் குண்டு வீசித்தாக்கியெல்லாம் தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது. இத்தவறை தொடரப்போகிறார்களா அவர்கள்? இனியும் அவர்கள் இதனைச் செய்வதற்குமுன், யோசித்து செயல்படவேண்டும். இதனை கோரிக்கையாக வைக்கிறோம் அவர்கள் முன்னே... நான் மீண்டும் சொல்கிறேன், தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் ஒழிக்கமுடியாது..."

உலகிலேயே மிக அதிக அளவில் எண்ணை இருப்பு கொண்ட நாடு வெனிசுவெல்லாதான் (சவுதி அரேபியாகூட இரண்டாவது இடத்தில்தான் இருக்கிறது). சாவேசின் சோசலிச அரசு அமைவதற்கு முன்புவரை அமெரிக்காவின் கைப்பாவை அரசுகள் பல ஆண்டுகளாக வெனிசுவெல்லாவை ஆண்டுவந்தமையால், அமெரிக்காவைப் பொறுத்தவரையில் எண்ணை இறக்குமதிக்கு வெனிசுவெல்லா எப்போதும் ஒரு நம்பிக்கையான நாடாகவே இருந்துவந்திருக்கிறது. ஆனால் சாவேசின் அரசு பதவியேற்றபின் நிலைமை தலைகீழாகிவிட்டமையால், வெனிசுவெல்லாவில் எப்படியாவது ஒரு ஆட்சி மாற்றத்தினை உருவாக்கவேண்டுமென அமெரிக்கா காத்துக்கொண்டிருந்தது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பவலும் இன்னபிற அமெரிக்க அமைச்சர்களும் வெளிப்படையாகவே சாவேசை மாற்ற வேண்டுமென பேசிவந்தனர்.

இதனையெல்லாம் சிறிதும் கண்டுகொள்ளாத சாவேஸ் அரசின் ஆதரவாளர்கள், கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் சிறுசிறு குழுக்களை அமைத்து அதன்மூலமும் அப்பகுதியிலுள்ள மக்களுக்கு கல்வி வழங்குவதையும் சமூக பிரச்சனைகளை தீர்ப்பதிலுமே கவனம் செலுத்தினார்கள்.

மக்கள் குரல் 1 : "நான் இதற்கு முன்பு எப்போதும் ஓட்டுப் போட்டதே இல்லை. ஆனால் இந்த அரசு புதிய நம்பிக்கைகளை எங்களுக்கு கொடுத்தது. அதனால்தான் சாவேசுக்கு ஓட்டுப்போட முடிவெடுத்தோம்"
மக்கள் குரல் 2 : "அரசியலுக்கும் எங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இருந்ததில்லை. ஒரு கூட்டம் பணம் படைத்தவர்களாக மாறுவதும், நாங்கள் மேலும் ஏழையாவதுமே நடந்துவந்திருக்கிறது அரசியலால். ஆனால் இப்போது எங்களுக்கு உண்மையிலேயே அரசியலில் ஈடுபாடு வந்திருக்கிறது. ஏனென்றால், இப்போது அரசியல் என்பது மக்களாட்சியில் பங்கெடுப்பது என்பதாக மாறியிருக்கிறது"
மக்கள் குரல் 3 : "முதலில் படிக்க வேண்டும் என்றுதான் சாவேஸ் சொல்வார். அதனால் நாங்கள் அனைவரும் புதிதாக மாற்றியமைக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தை படித்தோம்."
மக்கள் குரல் 4 (பெட்டிக்கடைக்காரர்) : "பொருள்வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம், அரசியலமைப்புச் சட்டத்தை படிக்க வலியுறுத்துவோம். படிப்பதோடு மட்டுமல்லாது விவாதிக்கவும் அவர்களைத் தூண்டுகிறோம்."
மக்கள் குரல் 5 : "இதற்கு முன்னர் இருந்த அரசுகள் எல்லாம், மூடிய கதவுகளுக்குள்தான் முடிவுகளை எடுத்துவந்தன. எங்களின் குரல் அவ்வறைக்குள் நுழையக்கூட முடியாத நிலைதான் இருந்தது. முதன்முறையாக மக்களையும் பங்கெடுக்க வைக்கிற ஒரு மக்களாட்சி இப்போதுதான் நடக்கிறது"

ஒரு புறம் உழைக்கும் வர்க்கத்திடம் சாவேசின் சோசலிச அரசு மீதான மரியாதை இப்படியாக அதிகரித்திருந்தாலும், மறுபுறம் உழைக்காமல் காலம் காலமாக பிறர் உழைப்பைச் சுரண்டியே வாழ்ந்துவந்திருந்த பணம்படைத்த ஒரு சிறு கூட்டம் சாவேசின் அரசை கடுமையாகக் குறைகூறிவந்தனர்.
அவர்கள் அவ்வப்போது அவர்களுக்குள்ளாக சில கூட்டங்கள் நடத்தி நிலைமையினை விவாதித்தும், ஆங்காங்கே சிறுசிறு போராட்டங்களை நடத்தியும் சாவேஸ் அரசுக்கு தங்களது எதிர்ப்பினை வெளிக்காட்டினர்.

எண்ணைவளங்கள் நாட்டுடைமையாக்கமும், அமெரிக்க அரசின் எதிர்ப்பும்:


பல ஆண்டுகளாக நாட்டின் ஒட்டுமொத்த எண்ணை வளமும் வெனிசுவெல்லாவை ஆண்டுவந்த ஆளும்வர்க்கத்தின் தனிச்சொத்தாகவே இருந்துவந்தது. உலகிலேயே மிக அதிகமான எண்ணை இருப்புகொண்ட வெனிசுவெல்லாவில் 80 சதவீதத்திற்கும் மேலான மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ்தான் வாழ்ந்துவந்தார்கள். அதனால், பிப்ரவரி 2002 இல் வெனிசுவெல்லாவில் இருக்கும் எண்ணை நிறுவனங்கள் அனைத்தையும் நாட்டுடைமையாக்கியது சாவேஸ் அரசு. அதில் வரும் இலாபம் அனைத்தையும் வறுமைக்கோட்டுக்குக் கீழிருக்கும் 80 % மக்களின் வாழ்க்கையை உயர்த்தப் பயன்படுத்தப்படும் என்றும் பல்லாயிரக்கணக்கான மக்களின் கரகோஷங்களுக்கிடையே அறிவிக்கிறார்.

எண்ணை நிறுவனங்களை நாட்டுடைமாக்கிய செய்தி, எண்ணை நிறுவங்கள் மூலமாக பெரும் இலாபம் அடைந்துவந்த இருவரை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒருவர் வெனிசுவெல்லாவின் பெருமுதலாளிகள் சங்கத்தலைவர் "பெட்ரோ கார்மோனா". மற்றொருவர், பழைய அரசியலமைப்பினை ஆதரித்த தொழிற்சங்கத்தலைவர் "கார்லோஸ் ஓர்தேகா". அமெரிக்க புஷ் அரசின் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் சி.ஐ.ஏ. அதிகாரிகள் ஆகியோரை சந்திக்க இருவரும் உடனடியாக அமெரிக்கா விரைந்தனர். அக்கூட்டம் இரண்டு நாட்கள் தொடர்ந்து நடந்தது.

ஏற்கனவே நேரம் பார்த்து காத்துக்கொண்டிருந்த வெனிசுவெல்லாவின் உள்ளூர் தனியார் தொலைக்காட்சிகள் இதனை முக்கியப் பிரச்சனையாகக் கையில் எடுத்தன.

தனியார் தொலைகாட்சி செய்தி : "அமெரிக்க புஷ் அரசாங்கம் நம் நாட்டு நிலை குறித்து மிகுந்த கவலை தெரிவித்திருக்கிறது. சி.ஐ.ஏ.வின் இயக்குனர்கூட நமது நிலைகண்டு மிகுந்த வருத்தமடைந்திருக்கிறார்."
இதனைத்தொடர்ந்து அமெரிக்க சி.ஐ.ஏ., வெனிசுவெல்லாவின் இராணுவ உயரதிகாரிகளில் சிலரைத் தொடர்புகொள்ளத்துவங்கியது. சி.ஐ.ஏ.வின் கருத்திற்கு வலுசேர்த்த ஒரு இராணுவ அதிகாரி தனியார் தொலைக்காட்சியில் சாவேஸ் அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கிறார். சாவேஸ் அரசு பதவி விலக வேண்டுமென்றும் இல்லையென்றால் வேறு யாராவது பதவி விலக வைப்பார்களென்றும் எச்சரிக்கிறார். வெறும் வாயினை மென்றுகொண்டிருந்தவர்களுக்கு அவலும் அச்சுவெல்லமும் கிடைத்தார்ப்போல், தொடர்ந்து 24 மணிநேரமும் இதனையே ஒளிபரப்பத்துவங்கினர் தனியார் தொலைக்காட்சியினர்.

சி.ஐ.ஏ. + பெருமுதலாளிகள்  + தனியார் ஊடகங்கள் = மக்கள் விரோதக் கூட்டணி:

எண்ணைவளம் தேசியமயமாக்கப்படுவதை எதிர்க்க, அன்று மாலையே முதலாளிகள் சங்கத்தலைவரான "கார்லோஸ் ஓர்தேகா" எதிர்கட்சியினர் அனைவரையும் எண்ணை நிறுவன முற்றுகைக்கு வருமாறு அழைப்புவிடுக்கிறார். அடுத்தநாள் காலையில் எதிர்கட்சியினர் ஊர்வலமாக திரண்டு வருகின்றனர். அதே நேரத்தில், சாவேஸ் அரசின் சாதனைகளை விளக்கியும் அரசுக்கான தங்களின் ஆதரவைத்தெரிவித்தும் அதிபர் மாளிகைக்கு முன்பாக பாட்டுப்பாடி நடனமாடி மக்கள் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.

"கார்லோஸ் ஓர்தேகா"வின் திட்டப்படி, எதிர்க்கட்சியினரின் பேரணியை எண்ணை நிறுவனத்திலிருந்து சட்டவிரோதமாக அதிபர் மாளிகைக்கு திசை திருப்பிவிடுகின்றனர். இதனை சற்றும் எதிர்பாராத அதிபர் மாளிகை காவலர்களும் அரசு அதிகாரிகளும் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறுகிறார்கள். வழிநெடுக கடைகளையும் பொதுச்சொத்துகளையும் சூரையாடிக்கொண்டே, எதிர்க்கட்சியினர் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். மிகச்சிறிய எண்ணிக்கையிலான காவல்துறையினரால் இச்சூழலை சமாளிக்கமுடியாமல் போகிறது. திடீரென கூட்டத்தினர் மீது துப்பாக்கி குண்டுகள் வந்து தாக்குகின்றன. அருகில் இருக்கும் கட்டிடத்திலிருந்து வருகிறதா, அல்லது கூட்டத்திலிருந்தே வருகிறதா என்று ஒன்றும் புரியாமல் காவல்துறையினரும் இங்கும் அங்கும் ஓடுகின்றனர்.

தனியார் தொலைக்காட்சியொன்று அதிபர் மாளிகைக்கு எதிரில் இருக்கும் கட்டிடத்தில் முன்பே திட்டமிட்டு காமெராக்களை வைத்துவிட்டது. சில நூறு சாவேஸ் ஆதரவாளர்களையும் காவல்துறையினரையும் நோக்கி,  ஆயுதமேந்திய ஆயிரக்கணக்கான எதிர்கட்சியினர் சுட்ட காட்சியினை அக்கேமராக்கள் வேண்டுமென்றே படம்பிடிக்கவில்லை. கூடியிருந்த சில அரசின் ஆதரவாளர்கள் தற்காப்புக்காக திருப்பித் தாக்கியதைப் படமாக்கி, அதனை தங்கள் தொலைக்காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பிக்கொண்டே இருந்தனர். 'எந்த ஆயுதமுமில்லாமல் அமைதியான முறையில் போராட்டம் நடத்துகிறவர்களை சாவேஸ் ஆதரவாளர்கள் எப்படி தாக்குகிறார்கள் பாருங்கள்' என்று தனியார் தொலைக்காட்சிகளிகள் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தனர்.
(தனியார் தொலைகாட்சியொன்றின் தலைமைச் செய்தி தயாரிப்பாளராக இருந்த ஆண்ட்ரஸ் இஸாரா சொன்னவை இவை. அதற்கான வீடியோ ஆதாரமும் காண்பிக்கப்படுகிறது இத்திரைப்படத்தில்)

எல்லாமே திட்டமிட்டபடி நடந்தமையால், இதற்காகவே காத்துக்கொண்டிருந்த முதலாளிகள் சங்கத்தலைவர் "கார்லோஸ் ஓர்தேகா", சாவேஸ் பதவி விலகவேண்டுமென்று தனியார் தொலைக்காட்சியில் பேசத்துவங்கிவிட்டார். தொடர் தொலைகாட்சி செய்திகள், பேட்டிகள் இவையெல்லாம் சேர்ந்து ஒரு மக்களிடையே ஒரு பொதுக்கருத்தை எட்ட வைக்க முயற்சி செய்துகொண்டிருந்தன. இதற்கிடையே கப்பற்படைத் தலைவரும் சாவேஸ் அரசிற்கு தனது ஆதரவை விலக்கிகொள்வதாக ஒரு தனியார் தொலைக்காட்சியில் அறிவிக்கிறார்.

அதிபர் மாளிகைக்காவலாளிகளுக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. அதிபர் மாளிகைக்குள்ளே அமைச்சர்களுடன் நிலைமையினை ஆராய்ந்துகொண்டிருக்கிறார் சாவேஸ். அதற்குள் கலவரக்காரர்கள் அரசு தொலைக்காட்சியான "சேனல் 8" யும் ஆக்கிரமித்துவிட்டார்கள்.

அதிபர் மாளிகையே முழுவதுமாக முற்றுகையிட்டுவிட்டனர் கலவரக்காரர்கள். ஆக்கிரமிக்கப்பட்ட "சேனல் 8" அரசு தொலைக்காட்சியிலும், சாவேசை பதவி விலகச்சொல்லி வலியுறுத்திக்கொண்டே இருக்கின்றனர் கலவரக்காரர்கள். இரவு பத்து மணியளவில் இராணுவ உயர் அதிகாரி அதிபர் மாளிகையில் சாவேசின் அறைக்குள் நுழைந்து சாவேசை பதிவிலகச் சொல்கிறார். சாவேஸ் பதவி விலகவில்லையென்றால் அதிபர் மாளிகையையே குண்டு வீசி தகர்க்கப்போவதாகவும் தெரிவிக்கிறார்.

அடுத்து என்ன நிகழப்போகிறது என்று அதிபர் மாளிகைக்குள் இருந்த ஒவ்வொரு கண்களும் கலங்கிப்போயிருந்தன. அதிகாலை 3.30 மணிக்கு, சுற்றுச்சூழல் அமைச்சர் மூலமாக சாவேஸ் தன்னுடைய முடிவினை அறிவிக்கிறார்.

சுற்றுச்சூழல் அமைச்சர் : "இது ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு சதியென்பது நிரூபணமாகிவிட்டது. அதிபர் மாளிகையினை தகர்க்காமல் தடுக்க, சாவேஸ் ஒரு முடிவினை எடுத்திருக்கிறார். சாவேஸ் பதவி விலக மறுத்துவிட்டார். வேண்டுமென்றால் தன்னை கைது செய்துகொள்ளுமாறு கூறியிருக்கிறார். இது உலகத்துக்கு தெரியட்டும். இது ஒரு சதி... சாவேசை விரும்பிய மக்களுக்கு எதிரான ஒரு மாபெரும் சதி என்பது உலகத்துக்கு தெரியட்டும்." 
என்று அவர் அறிவித்து முடிக்கையில், அங்கிருந்தவர்கள் அனைவரும் கண்ணீர்மல்க "ஹூகோ...ஹூகோ" என்று முழங்கிக்கொண்டே கைத்தட்டினர்.

அதிபர் மாளிகையினை தகர்க்க இராணுவ உயரதிகாரிகள் கொடுத்த கெடு முடிவதற்கு ஐந்து நிமிடம் முன்னதாக சாவேசை கைது செய்ய வருகிறார்கள்.
"நான் எங்கேயும் போகல... நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்.. நான் நிச்சயம் திரும்ப வருவேன்" என்று சொல்லிக்கொண்டே இருக்கையில், சாவேஸ் அழைத்துச்செல்லப்படுகிறார்.

"மக்கள் நம்முடன்தான் இருக்கிறார்கள். நீங்கள் பார்த்துக்கொண்டே இருங்கள்.. மக்கள் நிச்சயம் சாவேசை மீட்பார்கள்.."
என்கிற அழுகுரல் கூட்டத்திலிருந்து கேட்கிறது.

சாவேசை இராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கப்போவதாகவும், அந்த நிமிடத்திலிருந்து மாற்று அரசு அமைகிறதென்றும், வெனிசுவெல்லாவின் புதிய அதிபர் தான் தானென்றும் முதலாளிகள் சங்கத்தலைவர் "கார்லோஸ் ஓர்தேகா" தனியார் தொலைக்காட்சியில் அறிவிக்கிறார்.

அன்றைய காலை விடிந்ததும், தனியார் தொலைக்காட்சிகள் ஒன்றுக்கொன்று நன்றி சொல்லிக்கொள்கின்றன. ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக்காட்டியிருக்கிறோம் என்று பெருமிதம் கொண்டன. ஒட்டுமொத்த சதியும் எவ்வாறு, யாரால் எங்கிருந்து தீட்டப்பட்டது என்று விளக்கி நிகழ்சிகள் நடத்தினர் தனியார் தொலைக்காட்சியினர்.

அன்று (12 - ஏப்ரல், 2002) மாலையே "கார்லோஸ் ஓர்தேகா" புதிய அதிபராக முறைப்படி பதவியேற்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை, தேசிய வங்கி, தேசிய தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவையும் கலைக்கப்படுகிறது.

வென்றது எது? மக்களின் அன்பா! பொய்யும் புரட்டும் கலந்த சதியா!

சாவேசுக்கு ஆதரவாக யாரும் பேசக்கூடாது, எந்த ஊடகமும் சாவேசின் ஆதரவாளர்களைக் காண்பிக்கக்கூடாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. சாவேஸ் ஆதரவாளர்கள் மீது இராணுவமும் முடுக்கிவிடப்படுகிறது.

இதற்கிடையே சாவேஸ் ஆதரவாளர்கள், 'சாவேஸ் பதிவிலகவில்லை. கலவரக்காரர்கள்தான் அவரை கைது செய்து வைத்திருக்கின்றனர்' என்ற உண்மையினை வெனிசுவெல்லாவுக்கு வெளியே இருக்கும் உலகத் தொலைகாட்சி சேனல்களுக்கு தெரிவித்துவிட்டனர். அத்துடன் இவ்வுண்மையினை வெனிசுவெல்லா மக்களுக்கும் கொண்டு சேர்த்தனர்.

மறுநாள் மக்கள் தெருவினில் இறங்கி சாவேசை விடுதலை செய்யவேண்டுமென்று முழங்கினர்...
"சாவேஸ்! மக்கள் நாங்கள் உங்களோடுதான் இருக்கிறோம்"
"மக்கள் நாங்கள் நினைத்தால்மட்டும்தான் உங்களை பதவி விலக வைக்கமுடியும்... நீங்கள் தான் எங்கள் அதிபர்..."
"எங்களுக்கு சாவேஸ் வேண்டும். மீண்டுமொரு சர்வாதிகார ஆட்சி வேண்டாம்"
முழக்கங்கள் எழுப்பிக்கொண்டே அதிபர் மாளிகையினை நோக்கி மக்கள் ஊர்வலமாகச் சென்றனர். மதியம் ஒரு மணியளவில், அதிபர் மாளிகை முன்னர் லட்சக்கணக்கான மக்கள் கூடி சாவேசை விடுவிக்கக்கோரி முழக்கங்கள் எழுப்பினர். அதிபர் மாளிகைக் காவலர்களும் கூடியிருந்த மக்களுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். காவலர்கள் அனைவரும் திட்டமிட்டு முனைப்புடன் செயல்பட்டு, "கார்லோஸ் ஓர்தேகா" மற்றும் அவரது புதிய அமைச்சர்களையும் அதிபர் மாளிகைக்குள்ளேயே சிறைவைத்தனர். மாளிகையின் உச்சியில் நின்று, மக்களின் வெற்றியினை தங்கள் நாட்டுக்கொடியினை உயர்த்திக்காண்பித்தனர். அதிபர் மாளிகைக்கு சாவேஸ் அரசில் அங்கம் வகித்த அமைச்சர்கள் அனைவரும் மக்களோடு வந்தனர்.

இலட்சக்கணக்கான மக்களின் முயற்சியில் அதிபர் மாளிகை மீட்டெடுக்கப்பட்ட செய்தி எந்தத்தனியார் தொலைகாட்சி சேனல்களிலும் காட்டப்படவே இல்லை. தொழிற்நுட்ப கோளாறு காரணமாக அரசு தொலைக்காட்சியும் உபயோகத்தில் இல்லை. கடும் முயற்சிக்குப் பிறகு, அரசு தொலைகாட்சி அன்றிரவு வேலைசெய்யத்துவங்கியது. மக்களுக்கு நம்பிக்கை வரும்விதமாக துணை அதிபர், அமைச்சர்கள் மற்றும் சில இராணுவ ஜெனரல்கள் அரசு தொலைக்காட்சியில் தோன்றி "சாவேஸ்தான் நமது அதிபர்" என்று அறிவிக்கிறார்கள்.

சாவேசை எப்படியாவது மீட்டுவரவேண்டும் என்பதுதான் அப்போதைய கவலையாக இருந்தது அனைவருக்கும். சாவேசை ஒரு தீவினில் வைத்திருப்பதாகத் தகவல் வருகிறது. அமெரிக்காவின் விமானம் ஒன்று வெனிசுவெல்லாவிற்குள் நுழைகிறது. அவ்விமானம் மூலமாக சாவேசை அமெரிக்க அரசிடம் ஒப்படைக்கவிருப்பதாகவும் செய்திகள் கிடைக்கிறது.

இராணுவ உயரதிகாரிகளுக்கு உத்தரவிட அதிபர் வேண்டுமென்பதால், அரசியலமைப்புச்சட்டத்தின்படி  துணை அதிபரையே தற்காலிக அதிபராக முடிவெடுக்கிறார்கள் சாவேஸ் அமைச்சர்கள். தற்காலிக அதிபராகப் பதிவியேற்றதும், உயரதிகாரிகளுடனான முக்கிய கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறார். கூட்டத்தில், சாவேசை எங்கிருந்தாலும் கொண்டுவருமாறு முப்படைத்தளபதிகளுக்கு ஆணைபிறப்பிக்கிறார்.

தற்காலிக அதிபரின் ஆணைக்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் பணிந்து, சாவேசை விடுதலை செய்ய இராணுவ உயரதிகாரி ஒப்புக்கொண்டு அரசு தொலைக்காட்சியிலேயே அதனை அறிவிக்கிறார். இரவு 2.30 மணிக்கு பல இலட்சக்கணக்கான மக்களுக்கு நடுவே, ஹெலிகாப்டரில் அதே சிரித்த முகத்துடன் வந்து இறங்குகிறார் சாவேஸ்.

அரசின் அரசியல் ஆலோசகர் சாவேசைக் கட்டித்தழுவி,
"நீ வரலாறு படைத்திருக்கிறாய்! நம் மக்கள் வரலாறு படைத்திருக்கிறார்கள்!" 
என்கிறார்.

அமெரிக்க சி.ஐ.ஏ., பெருமுதலாளிகள், தனியார் தொலைகாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றின் பெரும் கூட்டு சதியினை மக்களின் அன்பு ஒன்றே வீழ்த்தியது. மீண்டு வந்த சாவேஸ், மக்களின் முன்பு பேசியபோது,
சாவேஸ் : "எல்லோரும் உங்களுடைய வீட்டிற்கு சென்று ஓய்வெடுங்கள். நமக்கு இப்போதைய தேவை அமைதியும் ஓய்வும்தான். என்னை எதிர்க்கிறவர்களிடம் சொல்லிக்கொள்வதெல்லாம், என்னை எதிர்த்துக்குரல் கொடுங்கள்... பரவாயில்லை... என்னால் உங்களுடைய மனதை மாற்றமுடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அதேவேளையில் உங்களின் மனதில் நஞ்சேற்றத்துடிக்கிறது ஒரு கூட்டம். அவர்களின் பொய்களில் நீங்கள் நஞ்சாகிவிடாதீர்கள்..."

இயற்கை வளங்கள் மக்களுக்கானது என்று வெனிசுவெல்லாவில் துவங்கியது, இன்று பொலிவியா மற்றும் அர்ஜெண்டினா வரை எண்ணை வளங்களை நாட்டுடைமையாக்குவது தொடர்கிறது...

-இ.பா.சிந்தன்

 

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)